Sunday 28 June 2009

[பாடம்-10] பாங்கு

பாங்கின் ஆரம்பம்

370. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் ஒன்று கூடி நேரத்தை முடிவு செய்து கொள்வார்கள். ஒரு நாள் இது பற்றி எல்லோரும் கலந்தாலோசித்தனர். அப்போது சிலர், கிறித்தவர்களைப் போன்று மணி அடியுங்கள் என்றனர். வேறு சிலர் யூதர்கள் வைத்திருக்கிற கொம்பைப் போன்று நாமும் கொம்பூதலாமே என்றனர். அப்போது உமர்(ரலி) 'தொழுகைக்காக அழைக்கிற ஒருவரை ஏற்படுத்தக் கூடாதா?' என்றனர். உடனே பிலால்(ரலி) அவர்களிடம் 'பிலாலே! எழுந்து தொழுகைக்காக அழையும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.

பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகச் சொல்ல வேண்டும்.


371. அனஸ்(ரலி) அறிவித்தார். பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் 'கத்காமதிஸ்ஸலாத்' என்பதைத் தவிர உள்ள இகாமத்தின் வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லுமாறு பிலால்(ரலி) கட்டளையிடப்பட்டார்கள்.

பாங்கு சொல்வதன் சிறப்பு.

372. தொழுகைக்காக (பாங்கு என்ற) அழைப்புக் கொடுக்கப்படும்போது, பாங்கு சப்தத்தைக் கேட்கக் கூடாது என்பதற்காகச் சப்தமாகக் காற்றுப் பிரிந்தவனாக ஷைத்தான் புறமுதுகு காட்டி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடிந்ததும் திரும்பி வருகிறான். தொழுகைக்கு இகாமத் கூறும் போதும் ஓடுகிறான். இகாமத் சொல்லி முடிந்ததும் முன்னோக்கி வந்து தொழுகையாளிக்கும் அவரின் மனதிற்குமிடையில் இருந்து கொண்டு தொழுகையாளி அதற்கு முன்பு வரை நினைத்திராத விஷயங்களையெல்லாம் அவருக்கு நினைவூட்டி, 'இதை நீ நினைத்துப் பார்; அதை நீ நினைத்துப் பார்,' என்று சொல்லிக் கொண்டு இருப்பான். தொழுகையாளி தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்று சந்தேகம் ஏற்படும் அளவிற்கு ஷைத்தான் அவ்வாறு செய்து கொண்டிருப்பான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

உரத்த குரலில் பாங்கு சொல்வது.

373. அப்துல்லாஹ் இப்னு அப்திர் ரஹ்மான் அறிவித்தார். அபூ ஸயீதுல் குத்ரீ(ரலி) என்னிடம் 'நீர் ஆடுகளை மேய்ப்பதிலும் காட்டுப் புறங்களுக்குச் செல்வதிலும் ஆசைப்படுவதை காண்கிறேன். நீர் ஆடுகளுடன் சென்றால் அல்லது காட்டுப் புறம் சென்றால் தொழுகைக்காக பாங்கு சொல்லும்போது குரல் உயர்த்திச் சொல்வீராக! காரணம், முஅத்தினுடைய பாங்கு சப்தத்தைக் கேட்கிற ஜின்னாக இருந்தாலும் மனிதனாக இருந்தாலும் வேறு எதுவாக இருந்தாலும் அவருக்காக மறுமை நாளில் பரிந்துரை செய்வார்கள்' எனக் கூறிவிட்டு, இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் சொல்ல, கேட்டேன் என்றும் கூறினார்கள்.

பாங்கின் மூலம் உயிரைக் காத்துக்கொள்ளல்.

374. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் எந்தக் கூட்டத்தினரோடாவது போரிடுவதாக இருந்தால் களத்தில் ஸுபுஹ் நேரம் வரும் வரை எங்களைப் போரில் ஈடுபடுத்த மாட்டார்கள். ஸுபுஹ் நேரம் வந்ததும் கவனிப்பார்கள். எதிர் தரப்பிலிருந்து பாங்கு சொல்லும் சப்தம் கேட்டால் தாக்காமலிருப்பதும் கேட்கவில்லையானால் திடீர்த் தாக்குதல் நடத்துவதும் நபி(ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்தது. இந்நிலையில் நாங்கள் கைபரை நோக்கிப் புறப்பட்டோம். இரவு நேரத்தில் அந்த இடத்தைச் சென்றடைந்தோம். ஸுபுஹ் நேரம் வந்ததும் பாங்கு சப்தம் கேட்காததால் நபி(ஸல்) அவர்கள் வாகனத்தில் ஏறினார்கள். நான் அபூ தல்ஹாவுக்குப் பின்னால் அவரின் வாகனத்தில் ஏறிக் கொண்டேன். என்னுடைய பாதம் நபி(ஸல்) அவர்களின் பாதத்தில் (அடிக்கடி) படும் (அளவுக்கு நெருக்கமாகச் சென்றோம்), அப்போது கைபர் வாசிகள் தங்களின் மண் வெட்டிகளையும் தானியம் அளக்கும் (மரக்கால் போன்ற) அளவைகளையும் எடுத்துக் கொண்டு எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும் (கிலியுடன்) 'அல்லாஹ்வின் மீது ஆணையாக அதோ முஹம்மத்! அவரின் படை!' என்றனர். நபி(ஸல்) அவர்கள், அம்மக்களைக் கண்டதும் 'அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! கைபர் வீழ்ந்தது! நாம் ஒரு கூட்டத்தினரைத் தாக்கினால், அவர்களின் காலைப்போழுது கெட்டதாயிருக்கும்'' என்றார்கள்.

பாங்கு சொல்வதைக் கேட்டால் கூற வேண்டியவை.

375. ''பாங்கு சொல்லப்படுவதை நீங்கள் செவியுற்றால் முஅத்தின் சொல்வது போல் நீங்களும் சொல்லுங்கள் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.

376. ஈஸா இப்னு தல்ஹா அறிவித்தார். முஆவியா(ரலி) ஒரு நாள் பாங்கு சப்தத்தைச் செவியுற்றபோது 'அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்' என்பது வரை முஅத்தின் சொல்வது போன்றே கூறினார்கள்.முஅத்தின் 'ஹய்ய அலஸ்ஸலாத்' என்று கூறும்போது அதைச் செவியுறுபவர் 'லாஹவ்ல வலா குவ்வத இல்லாபில்லாஹ்' என்று சொல்ல வேண்டும். இவ்வாறுதான் உங்கள் நபியவர்கள் சொல்லக் கேட்டுள்ளேன் என முஆவியா(ரலி) கூறினார்.

பாங்கு முடிந்த பின் கூறும் துஆ

377. 'பாங்கு சொல்வதைக் கேட்ட பின், 'பூரணமான இந்த அழைப்பின் இரட்சகனான அல்லாஹ்வே! நிலையான தொழுகைக்குரியவனே! முஹமமது நபி(ஸல்) அவர்களுக்கு வªலா என்ற அந்தஸ்தையும் சிறப்பையும் வழங்குவாயாக! நீ வாக்களித்தவாறு புகழுக்குரிய இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!' என்ற துஆவை ஓதுகிறவருக்கு மறுமை நாளில் என்னுடைய பரிந்துரை கிடைத்து விடுகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

பாங்கு சொல்வதற்காகப் போட்டி போடுவது.

378. ''பாங்கு சொல்வதற்குரிய நன்மையையும் முதல் வரிசையில் நின்று (தொழுவதற்குரிய) நன்மையையும் மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக் குலுக்கியெடுக்கப்படும் நிலையேற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர். தொழுகையை ஆரம்ப நேரத்தில் நிறைவேற்றுவதிலுள்ள நன்மையை அறிவார்களானால் அதற்காக விரைந்து செல்வார்கள். ஸுபுஹ் தொழுகையிலும் இஷா (அதமா)த் தொழுகையிலும் உள்ள நன்மையை அறிவார்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

தொழுகையின் நேரத்தை அறிவிக்கிற உதவியாளர் இருந்தால் பார்வையிழந்த வரும் பாங்கு சொல்லாம்.


379. ''பிலால் இரவி(ன் கடைசியி)ல் பாங்கு சொல்வார். அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ஸுப்ஹுக்கு) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள். ''இதை அறிவிக்கும் இப்னு உமர்(ரலி) 'அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் கண்பார்வை இல்லாதவராக இருந்தார். அவரிடம் ஸுபுஹ்நேரம் வந்துவிட்டது என்று கூறப்பட்டால்தான் பாங்கு சொல்வார்' என்று கூறினார்கள் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என இப்னு உமர்(ரலி)அறிவித்தார்.

ஃபஜர் நேரம் வந்த பின் பாங்கு சொல்வது.


380. ஹப்ஸா(ரலி) அறிவித்தார். அதிகாலை வெண்மை தோன்றி முஅத்தின் ஸுப்ஹுக்கு பாங்கு கூறியதற்கும் இகாமத் கூறுவதற்கும் இடையே நபி(ஸல்) அவர்கள் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.

ஸுப்ஹ் நேரத்துக்கு முன் பாங்கு சொல்வது.

381. ''நீங்கள் ஸஹர் உணவு உண்ணுவதிலிருந்து பிலாலின் பாங்கு உங்களைத் தடை செய்து விடவேண்டாம். இரவில் தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்புவதற்காகவும் தொழுது கொண்டிருப்பவர்கள் திரும்பி வருவதற்காகவும் தான் பிலால் பாங்கு சொல்கிறாரே தவிர ஸுப்ஹு நேரம் வந்துவிட்டது என்பதை அறிவிப்பதற்காக அன்று' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் ''இவ்வாறு கூறிவிட்டுத் தம் கை விரலை மேலும் கீழுமாக உயர்த்தி சைகை செய்தார்கள் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் எவ்வளவு இடைவெளி இருக்கவேண்டும்? இகாமத் சொல்வதற்காக யாரை எதிர்பார்க்க வேண்டும்?


382. ''ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் ஒரு தொழுகை உண்டு'' என்று நபி(ஸல்) அவர்கள் இரண்டு முறை கூறிவிட்டு மூன்றாம் முறை 'விரும்பியவர்கள் தொழலாம்'' என்றார்கள்.

பிராயாணத்தின்போது ஒரே முஅத்தின் பாங்கு சொல்ல வேண்டும்.

383. மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார். நான் எங்கள் கூட்டத்தினர் சிலருடன் நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்களுடன் இருபது நாள்கள் தங்கியிருந்தோம். அவர்கள் இரக்க குணமுடையவர்களாகவும் மென்மையானவர்களாகவும் இருந்தார்கள். எங்கள் குடும்பத்தாரிடம் நாங்கள் செல்ல வேண்டுமென்ற எங்கள் ஆர்வத்தைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் சென்று அவர்களுடன் தங்கி அவர்களுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுங்கள். தொழுங்கள். தொழுகையின் நேரம் வந்து விடுமானால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் பெரியவர் இமாமாக இருக்கட்டும்'' என்று கூறினார்கள்.

384. மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார். பயணத்தை மேற்கொள்ள விரும்பிய இருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது அவர்களிடம் 'நீங்கள் இருவரும் பயணம் புறப்பட்டுச் சென்றால், தொழுகைக்காக பாங்கு சொல்லிப் பின்னர் இகாமத்தும் சொல்லுங்கள். பின்னர் உங்களில் பெரியவர் இமாமாக நின்று தொழுகை நடத்தட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பயணிகள் கூட்டமாகச் செல்லும்போது பாங்கு, இகாமத் சொல்வது.

385. நாஃபிவு அறிவித்தார். மக்காவை அடுத்துள்ள 'ளஜ்னான்' என்ற ஊரில் மிகக் குளிரான ஓர் இரவில் இப்னு உமர்(ரலி) பாங்கு கூறினார்கள். அதன் கடைசியில் 'உங்களுடைய கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்' என்றும் கூறினார்கள். மேலும் 'பயணத்தின்போது, குளிரான இரவிலும் மழைபெய்யும் இரவிலும் முஅத்தின் பாங்கு சொல்லும்போது அதன் கடைசியில் 'உங்களுடைய கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்' என்று சொல்லுமாறு முஅத்தினுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடுவார்கள் என்றும் இப்னு உமர்(ரலி) கூறினார்:

'
தொழுகை எங்களுக்குத் தவறிவிட்டது' என ஒருவர் சொல்லாம்.

386.
அபூ கதாதா(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் சிலர் வேகமாக வரும் சப்தத்தைச் செவியுற்றார்கள். தொழுகையை முடித்ததும் 'உங்களுக்கு என்ன? (இவ்வளவு வேகமாக வந்தீர்கள்)'' என்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு '(ஜமாஅத்) தொழுகைக்காக விரைந்து வந்தோம்' என்று பதில் கூறினர். 'அவ்வாறு செய்யாதீர்கள். தொழுகைக்கு வரும்போது அமைதியான முறையில் வாருங்கள். உங்களுக்குக் கிடைத்த ரக்அத்தை ஜமாஅத்துடன் தொழுங்கள். உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தொழுகைக்கு இகாமத் சொல்லும்போது இமாம் வருவதைக் கண்டால் மக்கள் எப்போது எழுந்திருக்க வேண்டும்?


387.
''தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் என்னை நீங்கள் பார்க்கும் வரை எழுந்திருக்க வேண்டாம' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.

இகாமத் சொன்ன பின் இமாமுக்கு ஏதாவது தேவை ஏற்படுவது.


388. அனஸ்(ரலி) அறிவித்தார். தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பின் நபி(ஸல்) அவர்கள் பள்ளியின் பக்கத்தில் ஒரு மனிதரோடு அந்தரங்கமாக உரையாடிக் கொண்டிருந்தார்கள். தொழுகைக்கு வராமல் நீண்ட நேரம் அவர்கள் பேசிக் கொண்டிருந்ததால் மக்கள் தூங்கிவிட்டனர்.

ஜமாஅத் தொழுகையின் அவசியம்.

389. ''என்னுடைய உயிர் எவனுடைய கரத்திலிருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! விறகுகளைக்கொண்டு வருமாறு நான் கட்டளையிட்டு அதன் படி விறகுகள் கொண்டு வரப்பட்டுப் பின்னர் தொழுகைக்கு அழைக்குமாறு நான் உத்தரவிட்டு, அதன்படி அழைக்கப்பட்டுப் பின்னர் ஒருவரை மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கட்டளையிட்டு, அதன் படி அவர் தொழுகை நடத்திப் பின்னர் தொழுகைக்கு வராமலிருக்கிற ஆண்களின் வீடுகளுக்குச் சென்று வீட்டோடு அவர்களை எரிப்பதற்கு நான் நினைத்ததுண்டு. என்னுடைய உயிர் யாருடைய கையில் இருக்கிறதோ அவரின் மீது ஆணையாகப் பள்ளியில் ஒரு துண்டு இறைச்சி, அல்லது ஆட்டுக் குளம்பு கொடுக்கப்படுகிறது என்று அவர்கள் எவரேனும் அறிவார்களானால் நிச்சயமாக இஷாத் தொழுகைக்காக ஜமாஅத்திற்கு வந்து விடுவார்கள் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஜமாஅத்தாகத் தொழுவதன் சிறப்பு.

390. ''தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

ஸுப்ஹுத் தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுவதன் சிறப்பு.

391. ''ஒருவர் தனியாகத் தொழுவதைவிடக் கூட்டாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறப்புடையதாகும். ஸுப்ஹுத் தொழுகையின்போது பகல் நேர வானவர்களும் இரவு நேர வானவர்களும் ஒன்று சேருகிறார்கள் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''இதை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்துவிட்டு, நீங்கள் விரும்பினால் 'நிச்சயமாக ஸுப்ஹு நேரத்தில் ஓதப்படும் குர்ஆன், சாட்சி கூறக்கூடியதாக இருக்கிறது'' (திருக்குர்ஆன் 17:78) என்ற வசனத்தை ஓதுங்கள் என்றார்கள்.

392. 'யார் நீண்ட தூரத்திலிருந்து நடந்து தொழுகைக்கு வருகிறார்களோ அவர்களுக்கு மற்ற எல்லோரையும் விட அதிகம் நன்மை உண்டு. ஜமாஅத் தொழுகையை எதிர்பார்த்திருந்து இமாமுடன் தொழுகிறவருக்குத் தனியாகத் தொழுதுவிட்டுத் தூங்கி விடுபவரை விட அதிகம் நன்மையுண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

லுஹர் தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவதன் சிறப்பு.

393. ''ஒருவர் (தொழுவதற்காக) நடந்து வரும் பாதையில் ஒரு முள் மரக்கிளை கிடப்பதைக் கண்டு, அதை அந்தப் பாதையைவிட்டும் அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்பணி அவரை (ஆரம்ப நேரத்தில் தொழுவதைவிட்டும்) பிற்படுத்திவிட்டது. இப்படிப்பட்ட அந்த மனிதருக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறான். அவருக்குப் பாவமன்னிப்பும் அளிக்கிறான் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'.மேலும் ''இறைவழியில் குத்திக் கொல்லப்படுபவன், வயிற்றுப் போக்கில் இறப்பவன், தண்ணீரில் மூழ்கி மரிப்பவன், இடிபாடுகளுக்கிடையில் சிக்கி இறப்பவன், போரில் கொல்லப்படுபவன் ஆகிய ஐந்து பேர்களும் ஷஹீதுகள் ஆவார்கள். பாங்கு சொல்வதிலும் தொழுகையின் முதல்வரிசையிலும் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்காகப் போட்டி போட்டு முந்தி வந்து, அதன் விளைவாக அவர்களிடையில் சீட்டுக் குலுக்கி எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டாலும் அதற்கும் அவர்கள் தயாராகி விடுவார்கள் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அதிகமான காலடிகளின் மூலம் நன்மையை நாடுவது.

394. அனஸ்(ரலி) அறிவித்தார். பனூ ஸலமா கூட்டத்தினர் தங்கள் இல்லங்களை நபி(ஸல்) அவர்களின் சமீபத்தில் அமைத்துத் தங்க நினைத்தனர். மதீனாவில் வீடுகளைக் காலி செய்வதை நபி(ஸல்) அவர்கள் வெறுத்தார்கள். 'நீங்கள் அதிகமாகக் காலடிகள் எடுத்து வைத்து(த் தொழ வருவதன் மூலம்) நன்மையைப் பெற வேண்டாமா?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இஷாத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவதன் சிறப்பு.

395. ''ஸுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட முனாஃபிக் (வேடதாரி)களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை. அந்த இரண்டு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்) தொழுவதிலுள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள். இகாமத் சொல்லுமாறு முஅத்தினுக்கு நான் கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை இமாமாக நின்று தொழுகை நடத்துமாறு கூறி, அதன் பின்பு எவரேனும் தொழுகைக்கு வராமல் இருந்தால் அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த நான் நினைத்தேன் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

தொழுகையை எதிர் பார்த்துப் பள்ளிவாசலில் உட்கார்ந்திருப்பதும் பள்ளி வாசல்களின் சிறப்பும்.

396.
''அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்கள்; நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளி வாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திய ஒருவர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள், உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோது, 'நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்' என்று சொல்லும் மனிதர், தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

காலையிலும் மாலையிலும் பள்ளிவாயிலுக்குச் செல்பவரின் சிறப்பு.

397. பள்ளிவாசலுக்கு ஒருவர் காலையிலோ மாலையிலோ சென்றால், அவர் காலையிலும் மாலையிலும் செல்லும் போதெல்லாம் சுவர்க்கத்தில் அவருக்கு உரிய இடத்தை அல்லாஹ் தயார் செய்கிறான் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் கடமையான தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை.


398. அப்துல்லாஹ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இகாமத் சொல்லப்பட்ட பின்னர் ஒருவர் இரண்டு ரக்அத்கள் தொழுவதை நபி(ஸல்) அவர்கள் கண்டார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த பின்னர் மக்கள் அம்மனிரைச் சூழ்ந்தனர். 'ஸுப்ஹு நான்கு ரக்அத்களா? ஸுப்ஹு நான்கு ரக்அத்களா?' என்று அம்மனிதரைப் பார்த்து நபி(ஸல்) அவர்கள் (கோபமாகக்) கேட்டார்கள்.

ஜமாஅத்தை விட்டு விடுதற்குரிய நோய்கள்.

399. அஸ்வத் கூறினார்: ஒரு முறை நாங்கள் ஆயிஷா(ரலி) அவர்களிடம் தொழுகையை விடாமல் தொழுவது பற்றியும் தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுப்பது பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஆயிஷா(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்குச் சில நாள்களுக்கு முன் நோய்வாய்ப் பட்டிருந்தார்கள். தொழுகையின் நேரம் வந்த பொழுது பாங்கும் சொல்லப்பட்டது. அப்பொழுது ''மக்களுக்குத் தொழுகை நடத்தும் படி அபூ பக்கரிடம் சொல்லுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு அபூ பக்ர் மென்மையான உள்ளமுடையவர்; உங்களுடைய இடத்தில் நின்று தொழுகை நடத்த அவரால் முடியாது' என்று சொல்லப்பட்டது. திரும்பவும் நபி(ஸல்) அவர்கள் முதலில் கூறியவாறே கூறினார்கள். திரும்பவும் அவர்களுக்கு அதே பதிலே சொல்லப்பட்டது. மூன்றாவது முறையும் அவ்வாறே நடந்தது. அப்போது, 'நீங்கள் நபி யூஸுபின் (அழகைக் கண்டு கையை அறுத்த) பெண்களைப் போன்று இருக்கிறீர்கள். மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு அபூ பக்ரிடம் சொல்லுங்கள்!'' என நபி(ஸல்) அவர்கள் மீண்டும் கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) வெளியே வந்து தொழுகை நடத்தினார்கள். நபி(ஸல்) அவர்கள் தமக்குச் சிறிது சுகம் கிடைத்ததை உணர்ந்தபோது, இரண்டு ஸஹாபாக்களின் தோள்களின் மீது இரண்டு கைகளையும் போட்டவாறு, கால்களைத் தரையில் கோடிட்டவாறு புறப்பட்டதை பார்த்தேன். நபி(ஸல்) அவர்களைக் கண்ட அபூ பக்ர்(ரலி) இமாமுடைய இடத்திலிருந்து பின்வாங்க முயன்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் கையினால், 'உங்கள் இடத்திலேயே இருங்கள்' என்று சைகை செய்தார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் கொண்டு வரப்பட்டு அபூ பக்ர்(ரலி)யின் பக்கத்தில் அமர்த்தப் பட்டார்கள்' என்று கூறினார்கள்.நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். அவர்களின் தொழுகையைப் பின்பற்றி அபூ பக்ரும் அபூ பக்ருடைய தொழுகையைப் பின்பற்றி மக்களும் தொழுதார்களா? என்று அஃமஷ் இடம் கேட்கப் பட்டபோது 'ஆம்' எனத் தம் தலையை அசைத்துப் பதில் கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில் நபி(ஸல்) அவர்கள் வந்து அபூ பக்ர்(ரலி) உடைய இடப்பக்கமாக அமர்ந்தார்கள். அபூ பக்ர்(ரலி) நின்று தொழுதார்கள் எனக் காணப்படுகிறது.

400. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் நோய் அதிகமாகி அதனால் வேதனை கடுமையானபோது, என்னுடைய வீட்டில் தங்கிச் சிகிச்சை பெறுவதற்காக மற்ற மனைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களும் அனுமதி வழங்கினர். அவர்கள் வெளியில் வரும்பொழுது இரண்டு பேர்களுக்கிடையில் தொங்கியவாறு வந்தார்கள். அப்போது அவர்களின் கால் விரல்கள் பூமியில் கோடிட்டுக் கொண்டிருந்தன. நபி(ஸல்) அவர்கள் அப்பாஸ்(ரலி) அவர்களுக்கும் வேறு ஒரு மனிதருக்கும் இடையில்தான் தொங்கிக் கொண்டு வந்தார்கள். இந்த விஷயத்தை உபைதுல்லாஹ், இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கூறியபோது, 'ஆயிஷா(ரலி) பெயர் குறிப்பிடாத அந்த இரண்டாவது மனிதர் யார் என்று உமக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். 'இல்லை' என உபைதுல்லாஹ் பதிலளித்தார். 'அவர் தாம் அலீ இப்னு அபீ தாலிப்' என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

பள்ளிக்கு வந்திருப்பவர்களுடன் (வராதவர்களை விட்டுவிட்டு) இமாம் தொழுகை நடத்தலாமா? மழைக் காலத்தில் ஜும்ஆப் பிரசங்கம் செய்ய வேண்டுமா?

401. அப்துல்லாஹ் இப்னு ஹாரிஸ் கூறினார்: மழையினால் சேறு ஏற்பட்டிருந்த ஒரு நாளில் இப்னு அப்பாஸ்(ரலி) ஜும்ஆப் பிரசங்கம் செய்தார்கள். பாங்கு சொல்பவர் 'ஹய்ய அலஸ் ஸலாஹ்' என்று சொல்ல ஆரம்பித்தபோது 'உங்கள் கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்' என்று மக்களுக்கு அறிவிக்கமாறு கட்டளையிட்டார்கள். அப்போது அங்கிருந்தவர்கள் ஒருவருக்கொருவர் ஆச்சரியமாகப் பார்த்தனர். 'இந்த பாங்கு சொல்பவரை விடவும் சிறந்தவர்களான நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ கட்டாயமானதாக இருந்தும் கூட அவ்வாறு செய்திருக்கிறார்கள்' என இப்னு அப்பாஸ் கூறினார்கள்.'(மழைக் காலங்களில் பள்ளியில் தொழுமாறு உங்களுக்கு நான் கூறிக்) கஷ்டம் கொடுத்து நீங்களும் பள்ளிக்கு வந்து உங்களுடைய கால் மூட்டுகளால் மண்ணை மிதிக்கச் செய்வதை நான் வெறுக்கிறேன்' என்றும் இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

402. அனஸ்(ரலி) அறிவித்தார். அன்ஸாரிகளில் ஒருவர் தம் உடல் பருமனாக இருந்த காரணத்தினால், 'என்னால் உங்களுடன் தொழ முடியவில்லை' எனக் கூறி, நபி(ஸல்) அவர்களுக்காக உணவு சமைத்து அவர்களைத் தம் வீட்டிற்கு அழைத்தார். நபி(ஸல்) அவர்கள் அவரின் வீட்டிற்கு வந்தபோது, ஒரு பாயை விரித்து அதில் சிறிது தண்ணீர் தெளித்துப் பதப்படுத்தினார். அப்பாயில் நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். ஜாருத் குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் 'நபி(ஸல்) அவர்கள் லுஹா தொழுகை தொழுதார்களா?' என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு 'அன்றைய தினத்தைத் தவிர அவர்கள் லுஹா தொழுததை நான் பார்க்கவில்லை' என அனஸ்(ரலி) அறிவித்தார்.

உணவு முன்னே இருக்கும்போது தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால்...


403. ''இரவு நேர உணவு தயாராகி விடுமானால் மஃரிபுத் தொழுகையைத் தொழுவதற்கு முன்னால் இரவு உணவை அருந்துங்கள். உங்கள் உணவை(த் தொழுகையை விட) முற்படுத்துங்கள் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அனஸ்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் தம் வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருக்கும்போது இகாமத் சொல்லப் பட்டால் என்ன செய்வது.


404.
அஸ்வத் கூறினார்: நபி(ஸல்) அவர்கள் தங்களின் வீட்டில் என்ன செய்வார்கள் என ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்குத் தம் குடும்பத்திற்கு வீட்டு வேலைகளில் ஒத்தாசை செய்வார்கள்; தொழுகை நேரம் வந்ததும் தொழுகைக்காக வெளியே செல்வார்கள்' என ஆயிஷா(ரலி) கூறினார்.

நபி(ஸல்) அவர்களின் தொழுகையையும் அவர்களின் வழிமுறையையும் கற்றுக் கொடுக்க வேண்டுமென்ற நோக்கத்தில் மக்களுக்குத் தொழுகை நடத்துவது.

405.
அபூ கிலாபா கூறினார்: எங்களுடைய பள்ளி வாசலுக்கு மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) வந்து 'இப்போது நான் தொழ விரும்பாவிட்டாலும்) நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு தொழக் கண்டேனோ அவ்வாறு உங்களுக்கு நான் தொழுகை நடத்துகிறேன்'' என்று கூறினார்கள். நான் அபூ கிலாபாவிடம் 'நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுதார்கள்' என்று கேட்டேன். '(அதற்கு அம்ர் இப்னு ஸலாமா என்ற) இந்த முதியவர் தொழுதது போன்று தொழுதார்கள்' எனக் கூறினார்கள். அந்த மனிதர் வயதானவராக இருந்தார். முதல் ரக்அத்திலிருந்து இரண்டாவது ரக்அத்திற்காக ஸுஜுதிலிருந்து எழும்போது இருப்பில் அமர்ந்து பின்னர் நிலைக்கு வருவார் என்று அய்யூப் அறிவித்தார்.

அறிவு ஞானமும் சிறப்பும் உடையவர் தாம் இமாமத் செய்வதற்குத் தகுதியுடையவர்.


406. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நோயுற்றிருந்தபோது 'மக்களுக்குத் தொழுகை நடத்தும் படி அபூ பக்ரிடம் கூறுங்கள்' எனக் கூறினார்கள். அதற்கு, அபூ பக்ர் உங்களுடைய இடத்தில் நின்று தொழுகை நடத்துவார்களானால், அவர்கள் அழுவதன் காரணத்தினால் மக்களுக்குக் குர்ஆனைக் கேட்கச் செய்ய அவர்களால் முடியாது. எனவே, உமர் மக்களுக்குத் தொழுகை நடத்தட்டும் என நான் நபி(ஸல்) அவர்களிடம் கூறினேன். மேலும், 'அபூ பக்ர் உங்கள் இடத்தில் நின்று தொழுகை நடத்தினால் அதிகம் அவர் அழுவதனால் மக்களுக்குக் குர்ஆனைக் கேட்கச் செய்ய அவரால் முடியாது. எனவே, தொழுகை நடத்தும்படி உமருக்குக் கட்டளையிடுங்கள்' என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறும் படி ஹப்ஸா(ரலி)விடமும் கூறினேன். அவ்வாறே ஹப்ஸா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கூறியபோது, 'நிறுத்து! நிச்சயமாக நீங்கள் தாம் நபி யூஸுஃபின் (அழகைக் கண்டு கையை அறுத்த) தோழிகள் போன்றவர்கள்; மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு அபூ பக்ரிடம் கூறுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஹப்ஸா(ரலி) என்னிடம் 'உன்னால் நான் எந்த நன்மையும் அடையவில்லை' எனக் கூறினார்கள்.

407.
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் மரண நோயின்போது அபூ பக்ர்(ரலி) மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். திங்கட்கிழமை அன்று தொழுகையில் வரிசையாக நின்று தொழுது கொண்டிருந்தபோது, நபி(ஸல்) அவர்கள் நின்றவாறு தங்கள் அறையின் திரையை நீக்கி எங்களைப் பார்த்தார்கள். அப்போது அவர்களின் முகம் புத்தகத்தின் காகிதம் போன்று பிரகாசித்தது. பின்னர் அவர்கள் புன்னகை செய்து சிரித்தார்கள். நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததனால் ஏற்பட்ட மகிழ்ச்சியின் காரணமாக நாங்கள் சோதிக்கப்பட்டு விடுவோமோ என்று அஞ்சினோம். நபியைப் பார்த்த அபூ பக்ர்(ரலி), நபியவர்கள் தொழுகைக்கு வருகிறார்கள் எனக் கருதித் தமக்குப் பின்னாலுள்ள வரிசையில் சேர்வதற்காகப் பின் வாங்கினார்கள்.அப்போது நபி(ஸல்) அவர்கள் 'உங்களுடைய தொழுகையைப் பூர்த்தி செய்யுங்கள்' என்று சைகை செய்துவிட்டு அறையின் உள்ளே சென்று திரையைப் போட்டுவிட்டார்கள். அன்றைய தினத்தில்தான் நபி(ஸல்) அவர்கள் மரணமடைந்தார்கள்.

ஒருவர் மக்களுக்கு இமாமத் செய்ய முன் சென்றபோது முதல் இமாம் வந்துவிட்டால் முன் சென்ற இமாம் பின் வாங்கினாலும் பின்வாங்காவிட்டாலும் தொழுகை கூடிவிடும்.


408. ஸஹ்ல் இப்னு ஸஃது அஸ்ஸாயிதி(ரலி) அறிவித்தார். அம்ர் இப்னு அவ்ப் குடும்பத்தாரிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் சென்றிருந்தபோது, அங்கு தொழுகையின் நேரம் வந்துவிட்டது. அப்போது முஅத்தின்,அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் சென்று, 'நான் இகாமத் சொல்லட்டுமா! நீங்கள் தொழுகை நடத்துகிறீர்களா?' என்று கேட்டதற்கு அபூ பக்ர்(ரலி) 'ஆம்!' என்று கூறிவிட்டுத் தொழுகை நடத்த ஆரம்பித்தார்கள். மக்கள் தொழுது கொண்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் வந்துவிட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் வரிசைகளை விலக்கிக் கொண்டு முன் வரிசையில் வந்து நின்றார்கள். இதைக் கண்ட மக்கள் (இமாமுக்கு நினைவூட்டுவதற்காக) கை தட்டினார்கள். இமாமாக நின்ற அபூ பக்ர்(ரலி) தம் தொழுகையில் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். மக்கள் அதிகமாகக் கை தட்டியபோது திரும்பிப் பார்த்தார்கள். அங்கே நபி(ஸல்) அவர்களைக் கண்டார்கள். நபி(ஸல்) அவர்கள், அபூ பக்ர்(ரலி)யைப் பார்த்து, 'உங்களுடைய இடத்திலேயே நில்லுங்கள்' என்று சைகை செய்தார்கள். தமக்கு நபி(ஸல்) அவர்கள் இந்த அனுமதியை வழங்கியதற்காக அபூ பக்ர்(ரலி) தம் கைகளை உயர்த்தி அல்லாஹ்வுக்கு நன்றி செல்லுத்தினார்கள். பின்னர் அபூ பக்ர்(ரலி), பின்வாங்கி முன் வரிசையில் நின்றார்கள். நபி(ஸல்) அவர்கள் முன்னே சென்று தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும், 'அபூ பக்ரே! நான் உங்களுக்குக் கட்டளையிட்ட பின்னரும் நீங்கள் ஏன் உங்கள் இடத்தில் நிற்காமல் பின் வாங்கி விட்டீர்கள்'' என்று கேட்டார்கள். அதற்கு, 'அபூ குஹாபாவின் மகனான அபூ பக்ர் அல்லாஹ்வின் தூதரின் முன் நின்று தொழுகை நடத்துவது சரியில்லை' என அபூ பக்ர்(ரலி) கூறினார். பின்னர் நபி(ஸல்) அவர்கள் மக்களைப் பார்த்து, 'நீங்கள் எதற்காக அதிகமாகக் கை தட்டினீர்கள்? ஒருவருக்கு அவரின் தொழுகையில் சந்தேகம் ஏற்படுமானால் அவர் சுப்ஹானல்லாஹ் என்று கூறட்டும். அவ்வாறு தஸ்பிஹ் சொல்லும்போது சொன்னவர் பக்கம் (இமாம்) திரும்பிப் பார்க்க வேண்டும். கை தட்டுவது பெண்களுக்குத் தான்'' என்று கூறினார்கள்.

இமாம் ஏற்படுத்தப்படுவது பின்பற்றப்பட வேண்டுமென்பதற்காகவே.

409. உபைதுல்லாஹ் கூறினார்: நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்று 'நபி(ஸல்) அவர்கள் நோயுற்றபோது நடந்த நிகழ்ச்சியை எனக்குச் சொல்வீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் 'ஆம்! நபி(ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையானபோது 'மக்கள் தொழுதுவிட்டார்களா?' என்று கேட்டார்கள். இல்லை, அவர்கள் உங்களை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினோம். அப்போது 'பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்' என்றார்கள். அவ்வாறே நாங்கள் தண்ணீர் வைத்தோம். அதில் அவர்கள் குளித்துவிட்டு எழுந்திருக்க முயன்றார்கள். அப்போது அவர்கள் மயங்கி விழுந்துவிட்டார்கள். பின்னர் அவர்களின் மயக்கம் தெளிந்தபோது, 'மக்கள் தொழுதுவிட்டார்களா?' என்று கேட்டார்கள். இல்லை. அவர்கள் உங்களை எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்று சொன்னோம்.அப்போது 'பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்'' என்றார்கள். அவ்வாறே நாங்கள் தண்ணீர் வைத்தோம். அவர்கள் உட்கார்ந்து குளித்துவிட்டு எழுந்திருக்க முயன்றார்கள். அப்போது அவர்கள் மயங்கி விழுந்துவிட்டார்கள். பின்னர் அவர்களின் மயக்கம் தெளிந்தபோது, 'மக்கள் தொழுதுவிட்டார்களா?' என்று கேட்டார்கள். இல்லை. அவர்கள் உங்களை எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்று சொன்னோம். அப்போது 'பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்'' என்றார்கள். அவ்வாறே நாங்கள் தண்ணீர் வைத்தோம். அவர்கள் உட்கார்ந்து குளித்துவிட்டு எழுந்திருக்க முயன்றார்கள். அப்போது அவர்கள் மயங்கி விழுந்துவிட்டார்கள். பின்னர் அவர்களின் மயக்கம் தெளிந்தபோது, 'மக்கள் தொழுதுவிட்டார்களா?' என்று கேட்டார்கள். இல்லை இறைத்தூதர் அவர்களே! அவர்கள் உங்களை எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்றோம். அப்போது மக்கள் பள்ளிவாசலில் இஷாத் தொழுகைக்காக நபி(ஸல்) அவர்களை எதிர்பார்த்திருந்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், ஒருவரை அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் அனுப்பி மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறினார்கள். அம்மனிதர் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் வந்து 'நபி(ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு உங்களுக்குக் கட்டளையிட்டார்கள்' என்றார்கள். அபூ பக்ர்(ரலி) இளகிய உள்ளமுடையவர்களாக இருந்தார்கள். எனவே உமர்(ரலி) அவர்களிடம், 'உமரே! நீங்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துங்கள்' என்றார்கள். அதற்கு, நீங்கள் தாம் தகுதியனாவர்கள்' என்று உமர்(ரலி) கூறிவிட்டார்கள். அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்கள் நோயுற்ற அந்த நாட்களிலே மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்களுக்குக் கொஞ்சம் சுகம் கிடைத்தபோது, அப்பாஸ்(ரலி) மற்றும் ஒருவரின் உதவியோடு லுஹர் தொழுகைக்காக வெளியே வந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) மக்களுக்குத் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் வருவதைக் கண்ட அபூ பக்ர்(ரலி) தம் இடத்திலிருந்து பின் வாங்கினார்கள். அப்போது 'பின் வாங்க வேண்டாம்' என அவர்களுக்கு சைகை செய்தார்கள். தம்மை அழைத்து வந்த இருவரிடமும், 'என்னை அபூ பக்ரின் அருகில் அமர்த்துங்கள்' எனக் கூறினார்கள். அவ்வாறே அவர்கள் உட்காரவும் வைத்தார்கள். நபி(ஸல்) அவர்களைப் பின்தொடர்ந்து அபூ பக்ர்(ரலி) தொழுதார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களைப் பின்தொடர்ந்து மக்கள் தொழுதார்கள். நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுதார்கள். நான் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் சென்றிருந்தபோது, நபி(ஸல்) அவர்கள் நோயுற்றிருந்ததைப் பற்றி ஆயிஷா(ரலி) எனக்கு அறிவித்ததை நான் உங்களுக்குக் கூறவா? என்று கேட்டேன். 'அதற்கு சொல்லுங்கள்' என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். அப்போது ஆயிஷா(ரலி) சொன்னதை அறிவித்தேன். அதில் எதையும் அவர்கள் மறுக்கவில்லை என்றாலும், 'அப்பாஸ்(ரலி) உடன் நபி(ஸல்) அவர்களை அழைத்துச் சென்ற இன்னொரு மனிதரின் பெயரை ஆயிஷா(ரலி) சொன்னார்களா?' என்று கேட்டார்கள். இல்லை என்றேன். 'அவர் தாம் அலீ(ரலி)' எனக் கூறினார்கள்.

410. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நோயுற்றபோது, தங்கள் வீட்டிலேயே உட்கார்ந்து தொழுதார்கள். அவர்களின் பின்னால் சிலர் நின்றவாறே தொழுதார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், அமரும் படி சைகை செய்தார்கள் அவர்கள் தொழுது முடித்த பின்னர் இமாம் பின்பற்றப்படுவதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ருகூவு செய்தால் நீங்களும் ருகூவு செய்யுங்கள்; அவர் தலையை உயர்த்தினால் நீங்களும் தலையை உயர்த்துங்கள்; அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள்'' எனக் கூறினார்கள்.

இமாமுக்கு பின்னால் நிற்பவர் எப்போது சுஜூது செய்ய வேண்டும்.

411. பராவு(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஸமி அல்லாஹு லிமன் ஹமிதா என்று சொல்லி முடித்து ஸுஜூதுக்குச் சென்று தலையைப் பூமியில் வைப்பது வரை எங்களில் யாரும் ஸுஜூதுக்காகத் தம் முதுகை வளைக்க மாட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் ஸுஜூதுக்குச் சென்ற பின்புதான் நாங்கள் ஸுஜூது செய்வோம்.

இமாமுக்கு முந்தித் தம் தலையை உயர்த்துவது குற்றமாகும்.


412. ''உங்களில் ஒருவர் தொழுகையில் இமாமை முந்தித் தம் தலையை உயர்த்துவதால் அவரின் தலையைக் கழுதையுடைய தலையாகவோ அல்லது அவரின் உருவத்தைக் கழுதையுடைய உருவமாகவோ அல்லாஹ் ஆக்கி விடுவதை அஞ்ச வேண்டாமா? ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அடிமையும் விடுதலை செய்யப்பட்ட அடிமையும் இமாமத் செய்வது.

413. ''உங்களுக்குத் தலைவராக நியமிக்கப்படுபவர் கருப்பு நிறமுடைய (நீக்ரோவான) உலர்ந்த திராட்சைப் பழம் போன்ற தலையை உடையவராக இருந்தாலும் அவருக்குக் கட்டுப்படுங்கள். அவர் சொல்வதைக் கேட்டு நடங்கள் என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.

இமாமாகத் தொழுகை நடத்துபவர் முழுமையாகத் தொழவில்லையானால் பின்னால் நிற்பவர் முழுமைப் படுத்த வேண்டும்.


414. ''(இமாமாக நியமிக்கப் படுகின்ற) அவர்கள் உங்களுக்குத் தொழுகை நடத்து வார்கள்; அவர்கள் சரியாகத் தொழுவார்களானால் உங்களுக்கும் அதன் நன்மை கிடைக்கும்; அவர்கள் தவறு செய்வார்களானால் அதற்குரிய தீமை அவர்களுக்கு உண்டு. உங்களுக்கு நீங்கள் செய்ததற்குரிய நன்மை கிடைக்கும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஒருவர் இமாமுடைய இடப்பக்கம் நிற்கும்போது இமாம் (தொழுகையில் இருந்தவாறே) அந்த மனிதரைத் தம் கையால் வலப்பக்கமாக நிறுத்துவதனால் இருவரின் தொழுகையும் பாழாகி விடாது.

415.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். என் சிறிய தாயார் மைமூனா(ரலி) வீட்டில் நான் தங்கியிருந்த இரவில் நபி(ஸல்) அவர்கள் இஷாத் தொழுதார்கள். பின்னர் (வீட்டிற்கு) வந்து நான்கு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் தூங்கி எழுந்தார்கள். நான் சென்று அவர்களின் இடப்புறம் நின்றேன். என்னைத் தம் வலப்புறமாக்கினார்கள். ஐந்து ரக்அத்கள் தொழுது, பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவர்களின் குறட்டையொலியை நான் கேட்குமளவுக்கு (ஆழ்ந்து) உறங்கினார்கள். பின்னர் (ஸுபுஹ்) தொழுகைக்குச் சென்றார்கள்.

இமாம் தொழுகையை நீட்டித் தொழும்போது, அவசியத் தேவையுள்ளவர்கள் இமாமைவிட்டு விலகித் தனித்துத் தொழுதல்.

416. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். முஆத் இப்னு ஜபல்(ரலி) நபி(ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுத் தம் குழுவினரிடம் சென்று அவர்களுக்கு இமாமாகத் தொழுகை நடத்துவது வழக்கம். (ஒரு முறை) இஷாத் தொழுகை நடத்தும்போது 'அல்பகரா' அத்தியாயத்தை ஓதினார்கள். அப்போது ஒருவர் (தொழுகையை) விட்டும் விலகிச் சென்றார். (தொழுது முடித்ததும்) முஆத் இப்னு ஜபல்(ரலி) அவரைக் கண்டித்தார்கள். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிய வந்தபோது '(நீரென்ன) குழப்பவாதியா?' என்று மும்முறை நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி)ஜ நோக்கிக் கூறினார்கள். மேலும், நடுத்தரமான இரண்டு அத்தியாயங்களை ஓதித் தொழுமாறு அவருக்குக் கட்டளையிட்டார்கள்.

இமாம் தொழுகையில் குறைந்த நேரம் நிற்றலும் ருகூவு ஸஜ்தாக்களைப் பூரணமாக நிறைவேற்றலும்.


417.
அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்)! இந்த மனிதர் எங்களுக்குத் தொழுகையை நீட்டுவதால் நான் ஃபஜ்ருத் தொழுகையின் ஜமாஅத்துக்குச் செல்வதில்லை' என்று ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கூறினார். இதைக் கேட்டதும் நபி(ஸல்) அவர்கள் முன் எப்போதும் அடைந்திராத கோபத்தை அன்றைய தினம் அடைந்தார்கள். '(வணக்க வழிபாடுகளில்) வெறுப்பை ஏற்படுத்துபவர்களும் உங்களிலுள்ளனர். உங்களில் எவரேனும் மக்களுக்குத் தொழுகை நடத்தினால் சுருக்கமாக நடத்தட்டும்! ஏனெனில் மக்களில் பலவீனர்கள், முதியோர், அலுவல்கள் உள்ளவர்கள் இருக்கிறார்கள்'' என்று அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
418. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். ஒருவர் (தண்ணீர் இறைப்பதற்குரிய) இரண்டு கமலைகளை எடுத்துக் கொண்டு இருள் சூழ்ந்த நேரத்தில் வந்தார். முஆத்(ரலி) (இஷாத்) தொழுகை நடத்திக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் தம் கமலைகளை வைத்துவிட்டு முஆத்(ரலி) உடன் தொழுகையில் சேர்ந்தார். முஆத்(ரலி) 'பகரா' அல்லது 'நிஸா' அத்தியாயத்தை ஓதலானார்கள். உடனே அந்த மனிதர் (தொழுகையை)விட்டுவிட்டுச்) சென்றார். இது பற்றி முஆத்(ரலி) குறை கூறியது அந்த மனிதருக்குத் தெரியவந்தபோது, நபி(ஸல்) அவர்களிடம் வந்து இது பற்றி முறையிட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'முஆதே! நீர் குழப்பம் ஏற்படுத்துபவரா?' என்று மும்முறை கேட்டார்கள். 'ஸப்பிஹிஸ்மரப்பி', வஷ்ஷம்ஸி வளுஹாஹா வல்லைலி இதாயக்ஷா' ஆகிய அத்தியாயங்களை ஓதி நீர் தொழுகை நடத்தக் கூடாதா? நிச்சயமாக உமக்குப் பின்னால் முதியவர்கள், பலவீனர்கள், அலுவலுடையவர்கள் உள்ளனர்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தொழுகையைச் சுருக்கமாகவும் (அதே சமயம்) பூரணமாகவும் தொழுவது.

419. அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தொழுகையைச் சுருக்கமாகவும் (எந்த ஒன்றும் விடுபடாமல்) பூரணமாகவும் தொழுபவர்களாக இருந்தனர்.

குழந்தையின் அழுகுரலைக் கேட்கும்போது தொழுகையைச் சுருக்கமாகத் தொழுவது.

420. ''நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.

இகாமத் கூறும் போதும் அதன் பின்னரும் வரிசைகளை ஒழுங்கு படுத்துவது.

421.
''உங்களின் வரிசைகளை நேராக அமைத்துக் கொள்ளுங்கள்! இல்லையெனில் அல்லாஹ் உங்கள் முகங்களை மாற்றி விடுவான் என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.

வரிசைகளை ஒழுங்கு படுத்தும்போது இமாம், மக்கள் பக்கம் முன்னோக்குவது.

422. அனஸ்(ரலி) அறிவித்தார். தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் எங்கள் பக்கம் முன்னோக்கி, 'வரிசைகளை நேராக்குங்கள்! நெருக்கமாக நில்லுங்கள்! ஏனெனில் என் முதுகுக்குப் பின்புறமாகவும் உங்களை நான் காணுகிறேன்'' என்றார்கள்.

இமாமுக்கும் மக்களுக்குமிடையே சுவர் அல்லது திரை இருக்கலாமா?


423. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இரவில் தம் அறையில் தொழுபவர்களாக இருந்தனர். அவர்களின் தலையை மக்கள் பார்க்கும் அளவுக்கு அந்த அறையின் சுவர் குட்டையாக இருந்தது. மக்கள் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள். மறுநாள் காலையில் மக்கள் இதுபற்றிப் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். இரண்டாம் நாளில் நபி(ஸல்) அவர்கள் தொழுதபோது மக்களம் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள். இவ்வாறு இரண்டு மூன்று இரவுகள் செய்யலானார்கள். அதன்பின்னர் நபி(ஸல்) அவர்கள் தொழவராமல் உட்கார்ந்து விட்டார்கள். காலையில் மக்கள் இது பற்றிப் பேசிக் கொள்ளலானார்கள். 'இரவுத் தொழுகை உங்களின் மீது கடமையாக்கப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சினேன்; (அதனாலேயே வரவில்லை.)'' என்று கூறினார்கள்.

இரவுத் தொழுகை

424. ஸைத் பின் ஸாபித்(ரலி)கூறியதாவது: நபி(ஸல்)அவர்கள் ரமலான் மாதத்தில் பாயினால் ஒரு அறையை அமைத்துக்கொண்டார்கள். சில இரவுகள் அதனுள் தொழுதார்கள். அவர்களது தோழர்களில் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள். இதைப் பற்றி அறிந்த நபி(ஸல்)அவர்கள் (அந்த அறைக்கு வராமல்)உட்கார்ந்து விட்டார்கள். பின்பு மக்களை நோக்கி வந்து உங்களது செயல்களை நான் கண்டேன். மக்களே! உங்களது இல்லங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்! கடமையான தொழுகை தவிர மற்ற தொழுகைகளைத் தமது வீட்டில் தொழுவதே சிறப்பாகும் என்று கூறினார்கள்.

தொழுகையைத் ஆரம்பிக்கும்போது முதல் தக்பீரில் இரண்டு கைகளையும் உயர்த்துவது.

425. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தொழுகையைத் ஆரம்பிக்கும் போதும் ருகூவுக்காகத் தக்பீர் கூறும் போதும் ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தம் தோள்களுக்கு நேராகத்; தம் கைகளை உயர்த்துவார்கள். ருகூவிலிருந்து உயரும்போது 'ஸமி அல்லாஹு லிமன் ஹமிதா, ரப்பனா வலகல் ஹம்து' என்று கூறுவார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லும்போது இவ்வாறு செய்ய மாட்டார்கள்.

வலக்கையை இடக்கையின் மேல் வைப்பது.

426.
ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) அறிவித்தார். தொழும்போது ஒருவர் தம் வலக் கையை இடது குடங்கை மீது வைக்க வேண்டுமெனக் கட்டளையிடப் பட்டிருந்தார்கள்.

தக்பீர் கூறிய பிறகு ஓத வேண்டியவை.

427. அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) உமர்(ரலி) ஆகியோரும் 'அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்' என்றே தொழுகையைத் துவக்குபவர்களாக இருந்தனர்.

428. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையே சற்று நேரம் மவுனமாக இருப்பார்கள். இறைத்தூதர் அவர்களே! என் தந்தை தாய் தங்களுக்கு அர்ப்பணம். தக்பீருக்கும் கிராஅத்துக்குமிடையே நீங்கள் மவுனமாக இருக்கும் சமயத்தில் என்ன கூறுவீர்கள்? என்று கேட்டேன். 'இறைவா! கிழக்குக்கும் மேற்குக்குமிடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப் போல், எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப் படுத்தப்படுவது போல் என் தவறுகளை விட்டும் என்னைத் தூய்மைப் படுத்துவாயாக! தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவுவாயாக! என்று நான் கூறுவேன்'' என்றார்கள்.

429. அஸ்மா பின்த் அபூ பக்ர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் சூரிய கிரகணத் தொழுகையைத் தொழுதார்கள். அப்போது நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். பின்னர் ருகூவை நீட்டினார்கள். (ருகூவிலிருந்து எழுந்து) நிற்கும் போதும் நீண்ட நேரம் நின்றார்கள். பின்னர் (மற்றொரு) ருகூவு செய்தார்கள். அதையும் நீட்டினார்கள். பின்பு ருகூவிலிருந்து உயர்ந்து, பின்னர் ஸஜ்தாச் செய்தபோது ஸஜ்தாவை நீட்டினார்கள். பின்னர் ஸஜ்தாவிலிருந்து எழுந்தார்கள். பின்பு (மற்றொரு) ஸஜ்தாச் செய்தபோது அதையும் நீட்டினார்கள். பின்பு (இரண்டாம் ரக்அத்துக்காக) எழுந்து நீண்ட நேரம் நின்றார்கள். (ருகூவிலிருந்து எழுந்து) நீண்ட நேரம் நின்றார்கள். பின்னர் (மற்றொரு) ருகூவை நீட்டினார்கள். பின்பு ருகூவிலிருந்து உயர்ந்து, பின்னர் ஸஜ்தாச் செய்தபோது அதையும் நீட்டினார்கள். பின்னர் ஸஜ்தாவிலிருந்து எழுந்தார்கள். பின்பு (மற்றொரு) ஸஜ்தாச் செய்த போதும் நீட்டினார்கள்.

430. நபி(ஸல்) அவர்கள் கிரகணத்தொழுகையை நிறைவேற்றிய பின்னர் தொழுகையை முடித்துவிட்டு, 'சுவர்க்கம் என் அருகில் தென்பட்டது எனக்குச் சக்தி இருந்திருக்குமானால் அதன் குலைகளில் ஒன்றை உங்களிடம் தந்திருப்பேன். 'இறைவா! நானும் இவர்களுடனே இருந்து விடுவேனோ?' என்று நான் எண்ணும் அளவுக்கு நரகம் என் அருகில் நெருங்கியது. அந்த நரகத்தில் ஒரு பெண்ணைப் பூனை ஒன்று பிராண்டிக் கொண்டிருந்தது. 'இவள் இந்த நிலையை அடைந்திடக் காரணம் என்ன?' என்று கேட்டேன். 'இவள் இந்தப் பூனையைக் கட்டி வைத்துவிட்டாள். தானும் அதற்கு உணவளிக்கவில்லை; பூமியிலுள்ள சிறு உயிரினங்களை உண்ணட்டும் என்று அதை இவள் அவிழ்த்து விடவுமில்லை. அப்பூனை பசியால் இறந்துவிட்டது' என்று (வானவர்கள்) கூறினார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அஸ்மா(ரலி) அறிவித்தார்கள்.

தொழும்போது இமாமை நோக்கிப் பார்வையைத் திருப்பலாமா?

431. அபு மஃமர் கூறினார்: 'நபி(ஸல்) அவர்கள் லுஹரிலும் அஸரிலும் (எதையேனும்) ஓதுவார்களா?' என்று கப்பாப்(ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கவர் 'ஆம்' என்றார். 'நீங்கள் அதை எப்படி அறிந்து கொண்டீர்கள்?' என்று நாங்கள் கேட்டோம். 'நபி(ஸல்) அவர்களின் தாடி அசைவதிலிருந்து இதை அறிந்து கொள்வோம்' என்று கப்பாப்(ரலி) பதிலளித்தார்.

தொழும்போது வானத்தை பார்ப்பது.

432. ''தொழும்போது தங்கள் பார்வைகளை வானத்தில் உயர்த்துகிறவர்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது?இதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர்களின் பார்வை பறிக்கப்பட்டு விடும் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

தொழுகையில் திரும்பிப் பார்ப்பது.

433. ஆயிஷா(ரலி) அறிவித்தார். தொழுகையில் திரும்பிப் பார்ப்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். 'ஓர் அடியானுடைய தொழுகையை ஷைத்தான் அதன் மூலம் பறித்துச் செல்கிறான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பயணத்தின் போதும் ஊரிலிருக்கும் போதும் தொழும் எல்லாத் தொழுகைகளிலும் இமாமும் மஃமூம்களும் அவசியம் (குர்ஆன்) ஓதியாக வேண்டும் என்பதும் எந்தெந்தத் தொழுகைகளில் சப்தமிட்டு ஓத வேண்டும்? எந்தெந்தத் தொழுகைகளில் சப்தமின்றி ஓத வேண்டும்? என்பதும்.


434. ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) அறிவித்தார். (கூஃபாவில் அதிகாரியாக இருந்த) ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) மீது கூபா வாசிகளில் சிலர் உமர்(ரலி) அவர்களிடம் புகார் கூறினார்கள். அவர் முறையாகத் தொழுகை நடத்துவதில்லை என்பதும் அவர்களின் புகார்களில் ஒன்றாக இருந்தது. உடனே உமர்(ரலி) அவரை நீக்கிவிட்டு அம்மார்(ரலி)ஜ அதிகாரியாக நியமித்தார்கள். ஸஃதை (மதீனாவுக்கு) வரவழைத்து 'அபூ இஸ்ஹாக்! நீங்கள் முறையாகத் தொழுகை நடத்துவதில்லை என்று கூஃபா வாசிகளில் சிலர் கூறுகின்றனரே! என்று கேட்டார்கள். அதற்கு ஸஃது(ரலி) 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி(ஸல்) அவர்கள் தொழுது காட்டிய முறைப்படியே தொழுகை நடத்தினேன். அதில் எந்தக் குறையும் வைக்கவில்லை. இஷாவுடைய முதல் இரண்டு ரக்அத்களில் நீண்ட நேரம் ஓதியும் பின் இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓதியும் தொழுகை நடத்துகிறேன்' என்று பதிலளித்தார்கள். 'உம்மைப் பற்றி நம்முடைய கருத்தும் அதுவே' என்று உமர்(ரலி) கூறினார். அதன் பின்னர் ஒரு நபரை அல்லது சில நபர்களை ஸஃது(ரலி) உடனே கூஃபாவுக்கு அனுப்பி, ஸஃதைப் பற்றிக் கூஃபா வாசிகளிடம் விசாரிக்கச் சொன்னார்கள். விசாரிக்கச் சென்றவர் ஒரு பள்ளிவாசல் விடாமல் அவரைப் பற்றி விசாரித்தபோது அனைவரும் ஸஃதைப் பற்றி நல்ல விதமாகவே கூறினார்கள். 'பனூஅபஸ்' கூட்டத்தாரின் பள்ளி வாசலில் விசாரித்தபோது, அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த அபூ ஸஃதா எனப்படும் உஸாமா இப்னு கதாதா என்பவர் எழுந்து, 'நீங்கள் விசாரிப்பதால் நான் சொல்கிறேன். ஸஃது அவர்கள் தமது படையிலுள்ளவர்களிடம் எளிமையாக நடப்பதில்லை. (பொருட்களை) சமமாகப் பங்கிடுவதில்லை. தீர்ப்பு வழங்குவதில் நீதியாக நடப்பதில்லை' என்று புகார் கூறினார். இதைக் கேட்ட ஸஃது(ரலி) 'அல்லாஹ்வின் மேல் ஆணையாக! மூன்று பிரார்த்தனைகளை (உமக்கெதிராக) நான் செய்யப் போகிறேன்' என்று கூறிவிட்டு, 'இறைவா! உன்னுடைய இந்த அடியார் (அவரின் புகாரில்) பொய்யராகவும் புகழ் விரும்பிப் புகார் கூறுபவராகவும் இருந்தால் அவரின் ஆயுளை அதிகப் படுத்துவாயாக! அவரின் வறுமையையும் அதிகப் படுத்துவாயாக! அவரைப் பல சோதனைகளுக்கு ஆளாக்குவாயாக!' என்று பிரார்த்தனை செய்தார்கள். இதன் பிறகு அந்த மனிதரிடம் எவரேனும் நலம் விசாரித்தால் 'சோதனைக்காளான முதுபெரும் வயோதிகனாகி விட்டேன். ஸஃதின் பிரார்த்தனை என் விஷயத்தில் பலித்துவிட்டது' எனக் கூறக் கூடியவராகி விட்டார். ஜாபிர்(ரலி) வழியாக இதை அறிவிக்கும் அப்துல் மலிக் இப்னு உமைர் 'அதன் பிறகு நானும் அவரைப் பார்த்திருக்கிறேன்; முதுமையினால் அவரின் புருவங்கள் அவரின் கண்களை மறைத்திருந்தன. பாதைகளில் நடந்து செல்லும் பெண்களின் மீது (பார்வை பறி போனதால்) மோதிக் கொள்வார்; இந்த நிலையில் அவரை பார்த்திருக்கிறேன்' என்று குறிப்பிட்டார்.

435. ''திருக்குர்ஆனின் தோற்றுவாயை (அல்ஹம்து சூராவை) ஓதாதவருக்குத் தொழுகை கூடாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' இதை உபாதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார்.

436. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்தார்கள். ஒரு மனிதரும் (அந்த நேரத்தில்) பள்ளிக்கு வந்து தொழலானார். (தொழுது முடித்ததும்) நபி(ஸல்) அவர்களுக்கு அவர் ஸலாம் கூறினார். நபி(ஸல்) அவர்கள் பதில் ஸலாம் கூறினார்கள். அந்த மனிதர் முன்பு தொழுதது போன்றே மீண்டும் தொழுதுவிட்டு வந்து நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். 'திரும்பவும் தொழுவீராக! நீர் தொழவே இல்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு மூன்று முறை நடந்தது. அதன் பிறகு அந்த மனிதர் 'சத்திய மார்க்கத்துடன் உங்களை அனுப்பியுள்ள இறைவன் மீது ஆணையாக இவ்வாறு தொழுவதைத் தவிர வேறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை! எனவே எனக்குக் கற்றுத் தாருங்கள்!' என்று கேட்டார். ''நீர் தொழுகைக்காக நின்றதும் தக்பீர் கூறும்! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதும்! பின்னர் அமைதியாக ருகூவு செய்வீராக! பின்னர் ருகூவிலிருந்து எழுந்து சரியான நிலைக்கு வருவீராக! பின்னர் நிதானமாக ஸஜ்தா செய்வீராக! ஸஜ்தாவிலிருந்து எழுந்து நிதானமாக உட்கார்வீராக! இவ்வாறே உம்முடைய எல்லாத் தொழுகையிலும் செய்து வருவீராக! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

லுஹரில் ஓத வேண்டியவை.

437. அபூ கதாதா(ரலி) அறிவித்தார். லுஹர் தொழுகையின் முதலிரண்டு ரக்அத்களில் 'அல்ஹம்து' அத்தியாயத்தையும் வேறு இரண்டு அத்தியாயங்களையும் நபி(ஸல்) அவர்கள் ஓதுவார்கள். (அந்த இரண்டு ரக்அத்களில்) முதல் ரக்அத்தில் நீண்ட அத்தியாயத்தையும் இரண்டாம் ரக்அத்தில் சிறிய அத்தியாயத்தையும் ஓதுவார்கள். சில சயமங்களில் சில வசனங்களை எங்களுக்குக் கேட்குமாறும் ஓதுவார்கள். அஸர் தொழுகையில் (முதல் இரண்டு ரக்அத்களில்) 'அல்ஹம்து' அத்தியாயத்தையும் வேறு இரண்டு அத்தியாயங்களையும் ஓதுவார்கள். ஸுபுஹ் தொழுகையின் முதல் ரக்அத்தில் நீண்ட நேரம் ஓதுவார்கள். இரண்டாம் ரக்அத்தில் குறைந்த நேரம் ஓதுவார்கள்.

மக்ரிப் தொழுகையில் ஓத வேண்டியவை.

438. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நான் 'வல்முர்ஸலாதி உர்பன்' என்ற அத்தியாயத்தை ஓதும்போது அதனைச் செவியுற்ற (என் தாயார்) உம்முல் ஃபழ்லு(ரலி), 'அருமை மகனே! அல்லாஹ்வின் மீது ஆணையாக, மக்ரிப் தொழுகையில் நபி(ஸல்) அவர்கள் இந்த அத்தியாயத்தை ஓதியதுதான் நான் அவர்களிடமிருந்து கடைசியாக செவியுற்றதாகும். நீ அதை ஓதியதன் மூலம் எனக்கு நினைவு படுத்திவிட்டாய்' என்று கூறினார்.

439. மர்வான் இப்னு அல்ஹகம் கூறினார்: மக்ரிப் தொழுகையில் சிறிய அத்தியாயங்களை நீங்கள் ஓதுகிறீர்களா? நபி(ஸல்) அவர்கள் இரண்டு பெரிய அத்தியாயங்களில் மிகவும் பெரிய அத்தியாயத்தை ஓத செவியுற்றுள்ளேன்' என என்னிடம் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) கூறினார்.

மக்ரிப் தொழுகையில் சப்தமாக ஓதுதல்.


440. ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்ரிப் தொழுகையில் 'தூர்' அத்தியாயத்தை ஓதும்போது செவியுற்றேன்.

இஷாத் தொழுகையில் சப்தமாக ஓதுவது. இஷாத் தொழுகையில் ஸஜ்தாவுடைய ஆயத்தை ஓதுவது.

441. அபூ ராஃபிவு கூறினார்: அபூ ஹுரைரா(ரலி) உடன் நான் இஷாத் தொழுதபோது 'இதஸ்ஸமாவுன் ஷக்கத்' என்ற அத்தியாயத்தை ஓதி (அதில் ஸஜ்தாவுடைய இடம் வந்ததும்) ஸஜ்தாச் செய்தார்கள். இது பற்றி அவர்களிடம் நான் கேட்டபோது, நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் (இந்த அத்தியாயத்திற்காக) நான் ஸஜ்தாச் செய்திருக்கிறேன். (மறுமையில்) அவர்களைச் சந்திக்கும் வரை (அதாவது மரணிக்கும் வரை) நான் அதை ஓதி ஸஜ்தாச் செய்து கொண்டுதானிருப்பேன்' என்று கூறினார்கள்.

442. பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்தின்போது இஷாத் தொழுகையின் ஒரு ரக்அத்தில் 'வத்தீனி வஸ்ஸைத் தூனி' என்ற அத்தியாயத்தை ஓதினார்கள்.

ஃபஜ்ருத் தொழுகையில் ஓத வேண்டியவை.

443. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். எல்லாத் தொழுகைகளிலும் ஓதப்பட வேண்டும். நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கேட்கும் விதமாக ஓதியவற்றை உங்களுக்கக் கேட்கும் விதமாக ஓதுகிறோம். நபி(ஸல்) அவர்கள் சப்தமின்றி ஓதியதை நாங்களும் சப்தமின்றி ஓதுகிறோம். 'அல்ஹம்து' அத்தியாயத்தை மட்டும் ஓதினால் அது போதுமாகும். அதை விட அதிகமாக ஓதினால் அது சிறந்ததாகும்.

ஃபஜ்ருத் தொழுகையில் சப்தமிட்டு ஓதுவது.

444.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களில் சிலரும் 'உக்காழ்' எனும் சந்தையை நோக்கிப் புறப்பட்டனர். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கு வானுலகச் செய்திகள் தெரிவது தடுக்கப்பட்டுவிட்டது. (ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்களின் மீது தீப்பந்தங்கள் எறிய பட்டன. (ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்கள் தம் தலைவர்களிடம் (ஒரு செய்தியும் கிடைக்காமல்) திரும்பியபோது 'உங்களுக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். 'வானத்துச் செய்திகள் எங்களுக்குத் தடுக்கப்பட்டுவிட்டன. எங்களின் மீது தீப்பந்தங்கள் எறியப்படுகின்றன' என்று அந்த ஷைத்தான்கள் கூறினர். 'புதியதொரு நிகழ்ச்சி ஏதேனும் ஏற்பட்டிருக்க வேண்டும். அதன் காரணமாகவே தடுக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே நீங்கள் கீழ்த்திசை, மேல்த்திசை எங்கேனும் சென்று என்னவென்று ஆராயுங்கள்! என்று தலைவர்கள் கூறினர். ஷைத்தான்கள் 'திஹாமா' எனும் பகுதியை நோக்கிச் சென்றனர். 'உக்காழ்' சந்தைக்குச் செல்லும் வழியில் பேரீச்ச மரங்களுக்கு அருகில் நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்கு ஃபஜ்ருத் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். அதில் ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை அந்த ஷைத்தான்கள் கேட்டபோது, 'வானத்துச் செய்திகள் தடுக்கப்பட இந்தக் குர்ஆனே காரணம்' என்று கூறிக் கொண்டு தம் தலைவர்களிடம் சென்று, 'எங்கள் சமுதாயமே! நிச்சயமாக நாங்கள் ஆச்சரியமான ஒரு வேதத்தைச் செவிமடுத்தோம். அது நேர்வழியைக் காட்டுகின்றது. எனவே அதை நாங்கள் நம்பினோம். எங்கள் இறைவனுக்கு நாங்கள் இணை வைக்கவே மட்டோம்' என்று கூறினர். உடனே அல்லாஹ் 'ஜின்' எனும் அத்தியாயத்தை இறக்கியருளினான். நபி(ஸல்) அவர்களுக்கு அந்த அத்தியாயத்தில் அறிவிக்கப்படுவது ஜின்கள் கூறியதைப் பற்றியே. (ஷைத்தான்கள் கூறியதைப் பற்றி அல்ல.)

445. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இறைவன் உத்தரவுக்கேற்பவே (சில தொழுகைகளில்) சப்தமிட்டு ஓதினார்கள். இறைவன் உத்தரவுக்கேற்ப (சில தொழுகைகளில்) சப்தமின்றி ஓதினார்கள். (ஏனெனில்) 'உம்முடைய இறைவன் மறப்பவனல்ல'' (திருக்குர்ஆன் 19:64) என்றும் 'அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உண்டு'' (திருக்குர்ஆன் 33:21) என்றும் அல்லாஹ் கூறினான்.

ஒரு ரக்அத்தில் இரண்டு அத்தியாயங்களை ஓதுவதும் அத்தியாயத்தின் கடைசி வசனங்களை மட்டும் ஓதுவதும் அத்தியாயங்களை முன் பின்னாக ஓதுவதும் ஓர் அத்தியாயத்தின் ஆரம்பப் பகுதியை மட்டும் ஓதுவதும்.


446. அபூ வாயில்(ரலி) அறிவித்தார். ஒருவர் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் வந்து 'நான் முஃபஸ்ஸல்' அத்தியாயங்களை ஒரு ரக்அத்தில் ஓதினேன்' என்றார். (முஃபஸ்ஸல் என்பது 'காஃப்' அத்தியாயம் முதல் குர்ஆனின் கடைசி வரை உள்ள இவ்வளவு அத்தியாயங்களாகும். இவ்வளவு அத்தியாயங்களையும் ஒரே ரக்அத்தில் ஓதியதாகக் கூறிவிட்டு இது சரியா? என்று அவர் கேள்வி கேட்டார்.)'கவிதைகளைப் படிப்பது போல் அவசரம் அவசரமாகப் படித்தீரா? நபி(ஸல்) அவர்கள் 'முஃபஸ்ஸல்' அத்தியாயங்களில் ஒரே மாதிரியான அளவில் அமைந்த இரண்டிரண்டு அத்தியாயங்களை ஒரே ரக்அத்தில் ஒதியதை நான் அறிந்துள்ளேன்' என்று இப்னு மஸ்வூத்(ரலி) கூறிவிட்டு நபி(ஸல்) அவர்கள் சேர்த்து ஓதிய முஃபஸ்ஸல் அத்தியாயங்களில் இருபது அத்தியாயங்களையும் குறிப்பிட்டார்கள்.

பிந்திய இரண்டு ரக்அத்களிலும் பாத்திஹா அத்தியாயத்தை ஓத வேண்டும்.


447. அபூ கதாதா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையின் முதலிரண்டு ரக்அத்களில் 'அல்ஹம்து' அத்தியாயத்தையும் துணை அத்தியாயங்களிரண்டையும் ஓதுவார்கள். பிந்திய இரண்டு ரக்அத்களில் 'அல்ஹம்து' அத்தியாயத்தை ஓதுவார்கள். ஒரு சில வசனங்களை எங்களுக்குக் கேட்குமளவுக்கும் ஒதுவார்கள். இரண்டாவது ரக்அத்தை விட முதல் ரக்அத்தில் நீளமாக ஓதுவார்கள். இவ்வாறே அஸரிலும் ஸுபுஹிலும் செய்வார்கள்.

இமாம் சப்தமிட்டு 'ஆமின்' கூறுவது.

448. ''இமாம் ஆமின் கூறும்போது நீங்களும் ஆமின் கூறுங்கள்! ஒருவர் கூறும் ஆமீன் வானவர்கள் கூறும் ஆமினுடன் ஒத்து வருமாயின் அவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஆமீன் கூறுவதன் சிறப்புகள்

449. ''உங்களில் யாரேனும் ஆமீன் கூறினால் வானுலகத்தில் வானவர்களும் ஆமீன் கூறுகின்றனர். இவ்வாறு வானவர்கள் கூறும் ஆமினுடன் எவருடைய ஆமீன் ஒத்து வருகிறதோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றனஎன இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஆமீன் என்று கூறுபவர்களாக இருந்தார்கள் என இப்னு ஷிஹாப் குறிப்பிடுகிறார்.

வரிசையில் சேர்வதற்கு முன்பே ருகூவு செய்யலாமா?

450. அபூ பக்கரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும்போது ருகூவு செய்தார்கள். நான் வரிசையில் வந்து சேர்வதற்கு முன்பே ருகூவு செய்து விட்டேன். இது பற்றிப் பிறகு நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, 'அல்லாஹ் உன்னுடைய ஆர்வத்தை அதிகப் படுத்துவானாக! இனிமேல் இப்படிச் செய்யாதே!'' என்று கூறினார்கள்.

ருகூவுவின்போது தக்பீரை முழுமையாகக் கூறுவது.

451. முதர்ரிஃப் அறிவித்தார். 'பஸரா' நகரில் அலீ(ரலி)யைப் பின்பற்றி இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) தொழுதார்கள். (அலீ(ரலி) நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் தொழுத தொழுகையை நினைவு படுத்தும் வகையில் தொழுகை நடத்துகிறார்! நபி(ஸல்) அவர்கள் குனியும் போதும் தாழும் போதும் 'தக்பீர்' கூறுபவர்களாக இருந்தனர்' என்று குறிப்பிட்டார்கள்.

ஸஜ்தாவிலிருந்து எழும்போது தக்பீர் கூறுவது.

452. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தொழுகையைத் ஆரம்பிக்கும்போது தக்பீர் கூறுவார்கள். ருகூவிலிருந்து முதுகை நிமிர்ததும்போது 'ஸமிஅல்லாஹுலிமன் ஹமிதா' என்று கூறுவார்கள். பின்பு நிலைக்கு வந்து 'ரப்பனா லகல் ஹம்து' மற்றோர் அறிவிப்பில் 'வலகல் ஹம்து' என்பார்கள். பின்பு (ஸஜ்தாவுக்காகக்) குனியும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு தலையை (ஸஜ்தாவிலிருந்து) உயர்த்தும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு (இரண்டாவது) ஸஜ்தாச் செய்யும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு அதிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு அதிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தக்பீர் கூறுவார்கள். இவ்வாறே தொழுகையின் எல்லா ரக்அத்களிலும் செய்வார்கள். இரண்டாம் ரக்அத்திலும் எழும் போதும் தக்பீர் கூறுவார்கள்.

ருகூவின்போது உள்ளங்கைகளை மூட்டுக் கால்களின் மீது வைப்பது.


453. முஸ்அப் இப்னு ஸஃது அறிவித்தார். நான் என்னுடைய தந்தையின் விலாப் பக்கமாக நின்று தொழுதேன். அப்போது ருகூவின்போது என்னுடைய இரண்டு கைகளையும் இரண்டு தொடைகளின் இடுக்கில் வைத்துக் கொண்டேன். இதை என் தந்தை தடுத்து, 'நாங்கள் இவ்வாறு செய்து கொண்டிருந்தோம். அதைவிட்டும் நாங்கள் தடுக்கப்பட்டு எங்கள் கைகைள மூட்டுக்கால்களின் மீது வைக்குமாறு உத்தரவிடப் பட்டோம்' என்றார்.

ருகூவில் குனிவதற்கும் நிமிர்வதற்கும் உரிய வரம்பு.


454. பரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் ருகூவும் அவர்களின் ஸஜ்தாவும் இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையிலான இடைவெளியும் ருகூவிலிருந்து எழுந்து நிமிர்தலும் நிற்றல், உட்கார்தல் நீங்கலாக அனைத்தும் ஏறத்தாழ சமஅளவில் அமைந்திருந்தன.

ருகூவில் துஆக் கேட்பது.

455. 'நபி(ஸல்) அவர்கள் தங்களின் ருகூவிலும் ஸஜ்தாவிலும் 'இறைவா! நீ தூயவன்; உன்னைப் புகழ்கிறேன்; என்னை மன்னித்து விடு!'' என்று கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ருகூவிலிருந்து எழுந்ததும் இமாமும் பின்தொடர்பவர்களும் கூற வேண்டியவை.


456. 'நபி(ஸல்) அவர்கள் 'ஸமிஅல்லாஹுலிமன் ஹமிதா' எனக் கூறியபின் 'அல்லாஹும்ம ரப்பனா வ லகல்ஹம்து' என்றும் கூறுவார்கள். மேலும் ருகூவு செய்யும் போதும் ருகூவிலிருந்து உயரும் போதும் தக்பீர் கூறுவார்கள். இரண்டு ஸஜ்தாக்களை முடித்து எழும்போதும் 'அல்லாஹு அக்பர்' எனக் கூறுவார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அல்லாஹும்ம ரப்பனா லகல்ஹம்து என்று கூறுவதன் சிறப்பு.


457. 'இமாம் 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா' என்று கூறும்போது நீங்கள் 'அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்து' எனக் கூறுங்கள்! யாருடைய இந்தக் கூற்று வானவர்களின் கூற்றுடன் ஒத்து அமைகிறதோ அவரின் முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

458. அபூ ஸலமா அறிவித்தார். அபூ ஹுரைரா(ரலி) லுஹர், இஷா, ஸுபுஹ் தொழுகைகளின் கடைசி ரக்அத்துகளில் 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா' என்று கூறிய பிறகு குனூத் ஓதுவார்கள். அதில் இறை நம்பிக்கையாளர்களுக்காக பிரார்த்திப்பார்கள். இறை மறுப்பாளர்களைச் சபிப்பார்கள்.

459. அனஸ்(ரலி) அறிவித்தார். மக்ரிப், ஃபஜ்ர் ஆகிய தொழுகைகளில் குனூத் ஓதுதல் நபி(ஸல்) காலத்தில் இருந்தது.

460.
ரிஃபாஆ இப்னு ராஃபிவு(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களின் பின்னே ஒரு நாள் தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்தியபோது 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா' எனக் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்த ஒருவர் 'ரப்பனா வ லகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி' என்று கூறினார். தொழுது முடித்ததும் 'இந்த வார்த்தைகளைக் கூறியவர் யார்?' என்று நபி(ஸல்) கேட்டார்கள். அந்த மனிதர் 'நான்' என்றார். 'முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் இதைப் பதிவு செய்வதில் போட்டி போட்டதை கண்டேன்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.

ருகூவிலிருந்து தலையை உயர்த்தும்போது நிதானத்தை மேற்கொள்ளல்.


461. ஸாபித் அறிவித்தார். அனஸ்(ரலி) எங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுதது போல் தொழுது காட்டினார்கள். அத்தொழுகையில் ருகூவிலிருந்து தம் தலையை உயர்த்தியதும் மறந்து விட்டார்களோ என்று நாங்கள் பேசிக் கொள்ளும் அளவுக்கு நிற்பார்கள்.

ஸஜ்தாச் செய்யும்போது தக்பீர் கூறுதல்.

462. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா ரப்பனா வலகல் ஹம்து' என்று கூறிய பின் சில மனிதர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களுக்காக துஆச் செய்வார்கள். 'இறைவா! வலீத் இப்னு அல்வலீத், ஸலமா இப்னு ஹிஷாம், அய்யாஷ் இப்னு அபீ ரபீஆ மற்றும் இறைநம்பிக்கையாளர்களில் பலவீனர்களை நீ காப்பாற்றுவாயாக! இறைவா! 'முளர்' கூட்டத்தின் மீது உன்னுடைய பிடியை இறுக்குவாயாக! யூஸுஃப்(அலை) அவர்களின் காலத்தில் ஏற்பட்ட (பஞ்சமான ஆண்டுகளைப் போல் இவர்களுக்கும்) பஞ்சத்தை ஏற்படுத்துவாயாக!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறுவார்கள். (மதீனாவுக்கு) மேல்த் திசையில் வாழ்ந்த 'முளர்' கூட்டத்தினர் அன்றைய தினம் நபி(ஸல்) அவர்களுக்கு எதிரிகளாய் இருந்தனர்.

ஸஜ்தாவின் சிறப்பு.

463. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர் அவர்களே! கியாமத் நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண முடியுமா? என்று சிலர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'மேகம் மறைக்காத முழு நிலவைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா?' என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் 'இறைத்தூதர் அவர்களே! இல்லை' என்றார்கள். மீண்டும் நபி(ஸல்) அவர்கள், 'மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கும் நபித்தோழர்கள் 'இல்லை' என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'இதே போல்தான் நீங்கள் உங்களின் இறைவனைக் காண்பீர்கள்' என்று கூறினார்கள். தொடர்ந்து, 'கியாமத் நாளில் மக்களெல்லாம் ஒன்று திரட்டப் பட்டதும் யார் எதனை வணங்கினார்களோ அதைப் பின்பற்றிச் செல்லட்டும்' என்று இறைவன் கூறுவான். சிலர் சூரியனைப் பின்பற்றுவர். வேறு சிலர் சந்திரனைப் பின்பற்றுவர். மற்றும் சிலர் தீய சக்திகளைப் பின்பற்றுவர். இந்த சமூகம் முனாஃபிக்குகள் உட்பட அதே இடத்தில் நிற்பர். அப்போது இறைவன் அவர்களை நோக்கி 'நானே உங்களுடைய இறைவன்' என்பான்! அதற்கு அவர்கள் 'எங்கள் இறைவன் எங்களிடம் வரும்வரை நாங்கள் இங்கேயே இருப்போம்; எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்து கொள்வோம்' என்பார்கள். பின்னர் அல்லாஹ் அவர்களிடம் வந்து 'நானே உங்களுடைய இறைவன்' என்பான். அதற்கு அவர்கள் 'நீயே எங்களின் இறைவன்' என்பார்கள். பின்பு அவர்களை இறைவன் அழைப்பான். நரகத்தின் மேற்பரப்பில் பாலம் ஒன்று ஏற்படுத்தப்படும். நபிமார்கள் தத்தம் சமுதாயத்தினருடன் அதைக் கடப்பார்கள். அவ்வாறு அதைக் கடப்பார்கள். அவ்வாறு கடந்து செல்பவர்களில் நானே முதல் நபராக இருப்பேன். அன்றைய தினத்தில் இறைத் தூதர்களைத் தவிர எவரும் பேச மாட்டார்கள். 'இறைவா காப்பாற்று! இறைவா காப்பாற்று!' என்பதே அன்றைய தினம் இறைத்தூதர்களின் பேச்சாக இருக்கும். (மேலும் தொடர்ந்து) நரகத்தில் கருவேல மரத்தின் முள்ளைப் பார்த்திருக்கிறீர்களா?' என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் 'ஆம்' என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நிச்சயமாக அது கருவேல மரத்தின் முள் போன்றே இருக்கும். என்றாலும் அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அறியமாட்டார்கள். அது மனிதர்களின் (தீய) செயல்களுக்கேற்ப அவர்களை இழுக்கும். நல்லறங்கள் முழுவதும் அழிக்கப் பட்டவர்களும் அவர்களில் இருப்பர். கடுகளவு அமல்கள் எஞ்சியிருந்து அதனால் (முடிவில்) வெற்றி பெற்றவர்களும் அவர்களில் இருப்பர். நரகவாசிகளில் அல்லாஹ் நாடுபவர்களுக்கு அருள் செய்ய எண்ணும்போது, அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தவர்களை நரகிலிருந்து வெளியேற்றுமாறு வானவர்களுக்கு உத்தரவிடுவான். வானவர்கள் அவர்களை வெளியேற்றுவார்கள். ஸஜ்தாச் செய்த அடையாளத்தை வைத்து இவர்களை வானவர்கள் அடையாளம் காண்பார்கள். ஸஜ்தாச் செய்ததனால் (ஏற்பட்ட) வடுக்களை நரகம் தீண்டுவதை நரகத்திற்கு அல்லாஹ் ஹராமாக ஆக்கிவிட்டான். அவர்கள் நரகிலிருந்து வெளியேற்றப் படுவார்கள். ஸஜ்தாவின் வடுவைத் தவிர மனிதனின் முழு உடம்பையும் நரகம் சாப்பிட்டு விடும். நரகிலிருந்து கரிந்தவர்களாக வெளியேறுவார்கள். அவர்களின் மீது உயிர்த் தண்ணீர் (மாவுல் ஹயாத்) தெளிக்கப்படும். ஆற்றோரத்தில் தானியம் வளர்வது போல் அவர்கள் செழிப்பாவார்கள். பின்னர் அடியார்களுக்கிடையே அல்லாஹ் தீர்ப்பை முடித்து வைப்பான். முடிவில் ஒரு மனிதன் சுவர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே தங்குவான். நரக வாசிகளில் கடைசியாக இவன்தான் சுவர்க்கம் செல்பவன். நரக வாசிகளில் கடைசியாக இவன்தான் சுவர்க்கம் செல்பவன். அவனுடைய முகம் நரகை நோக்கிய நிலையில் இருப்பான். அப்போது அந்த மனிதன் 'இறைவா! என் முகத்தை நரகத்தை விட்டும் திருப்புவாயாக! அதனுடைய காற்று என்னை வெளுகச் செய்துவிட்டது. அதனுடைய சூடு என்னைக் கரித்துவிட்டது' என்பான். அதற்கு இறைவன் 'இவ்வாறு செய்தால் வேறு எதனையும் நீ கேட்காதிருப்பாயா?' என்று கேட்பான். அதற்கு அம்மனிதன் 'உன் கண்ணியத்தின் மேல் ஆணையாக வேறு ஒன்றையும் கேட்க மாட்டேன்' என்பான். அல்லாஹ் அவனிடம் இது பற்றி உறுதி மொழியும் ஒப்பந்தமும் செய்து அவன் நாடியதைக் கொடுப்பான். அவனுடைய முகத்தை நரகத்தை விட்டும் திருப்பி விடுவான். சுவர்க்கத்தின் பால் அவனுடைய முகத்தைத் திருப்பியதும் அம்மனிதன் சுவர்க்கத்தின் செழிப்பைக் காண்பான். நீண்ட நேரம் மவுனமாக இருப்பான். நீண்ட நேரம் மவுனமாக இருப்பான். பிறகு 'இறைவா! என்னைச் சுவர்க்கத்தின் வாசலுக்கு அருகில் கொண்டு செல்வாயாக! என்று கேட்பான். அதற்கு இறைவன் 'முன்பு கேட்டதைத் தவிர வேறு எதனையும் கேட்க மாட்டேன் என்று என்னிடம் நீ உறுதி மொழி அளிக்கவில்லையா?' என்று கேட்பான். அதற்கு அம்மனிதன் 'இறைவா! உன்னுடைய படைப்பினங்களில் நான் மிகவும் துர்பாக்கியசாலியாக ஆகாமலிருக்க வேண்டும்' என்பான். அதற்கு இறைவன் 'நீ கேட்டதைக் கொடுத்துவிட்டால் வேறு எதனையும் கேட்காமலிருப்பாயா?' என்று கேட்பான். அம்மனிதன் 'கேட்க மாட்டேன். உன்னுடைய கண்ணியத்தின் மேல் ஆணையாக வேறு எதனையும் கேட்க மாட்டேன்' என்பான். இது பற்றி அவனிடம் உறுதிமொழியும் ஒப்பந்தமும் எடுத்துக் கொண்டு அவன் நாடியதைக் கொடுப்பான். அவனைச் சுவர்க்கத்தின் வாசலுக்கருகில் கொண்டு செல்வான். வாசலுக்கு அம்மனிதன் சென்றதும் அதன் கவர்ச்சியையும் அதிலுள்ள செழிப்பையும் மகிழ்ச்சியையும் காண்பான். நீண்ட நேரம் மவுனமாக இருப்பான். அதன்பின்னர் 'இறைவா! என்னைச் சுவர்க்கத்தின் உள்ளே கொண்டு செல்வாயாக!' என்பான். 'ஆதமுடைய மகனே! ஏன் வாக்கு மாறுகிறாய்? முன்பு கொடுத்ததைத் தவிர வேறு எதனையும் கேட்க மாட்டேன் என்று என்னிடம் நீ உறுதி மொழி எடுக்கவில்லையா?' என்று இறைவன் கேட்பான்.

அதற்கு அம்மனிதன் 'இறைவா! உன்னுடைய படைப்பினங்களில் மிகவும் துர்பாக்கியசாலியாக என்னை ஆக்கி விடாதே!' என்பான். இம்மனிதன்னுடைய நிலை கண்டு இறைவன் சிரிப்பான். பின்பு சுவர்க்கத்தில் நுழைவதற்கு அவனுக்கு இறைவன் அனுமதி அளிப்பான்.

அதன்பின்னர் இறைவன் அம்மனிதனை நோக்கி 'நீ விரும்பக் கூடியதையெல்லாம் விரும்பு' என்பான். அம்மனிதன் விரும்பக் கூடியதை எல்லாம் விரும்புவான். அவன் விருப்பத்தை(க் கூறி) முடித்த பின் இறைவன் அம்மனிதனுக்கு (அவன் கேட்க மறந்ததையெல்லாம்) நினைவு படுத்தி 'இதை விரும்பு, அதை விரும்பு' என்று (இறைவனே) சொல்லிக் கொடுப்பான். முடிவில் அவனுடைய ஆசைகளைச் சொல்லி முடித்தவின் 'நீ கேட்டதும் அது போல் இன்னொரு மடங்கும் உனக்கு உண்டு' என இறைவன் கூறுவான்'' என்றார்கள்.

இச்செய்தியை அறிவித்த அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம் அபூ ஸயீத்(ரலி) உனக்கு நீ கேட்டதும் அது போன்ற பத்து மடங்கும் கிடைக்கும்' என்று இறைவன் கூறுவதாக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஆட்சேபித்தார்கள்.

அதற்கு அபூ ஹுரைரா(ரலி) 'ஒரு மடங்கு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றுதான் நினைக்கிறேன் என்றார்கள். அதற்கு அபூ ஸயீத்(ரலி) 'பத்து மடங்கு' என்று நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன் என்றார்கள்.

ஏழு உறுப்புகள் தரையில் படுமாறு ஸஜ்தாச் செய்தல்.

464. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நெற்றி, இரண்டு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு கால்கள் ஆகிய ஏழு உறுப்புகள் படுமாறு ஸஜ்தாச் செய்யும் படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடப் பட்டார்கள். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது என்றும் கட்டளையிடப் பட்டார்கள்.

இரண்டு ஸஜ்தாக்களுக்கும் இடைப்பட்ட நேரம்.

465. ஸாபித் அறிவித்தார். 'நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடத்தியது போல் நான் உங்களுக்குத் தொழுகை நடத்துவதில் எந்த குறையும் வைக்க மாட்டேன்' என்று அனஸ்(ரலி) கூறினார். அவர்கள், ருகூவிலிருந்து தலையை உயர்த்தி, அவர்கள் மறந்துவிட்டார்களோ என்று கூறுமளவு நிற்பார்கள். மேலும் இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையில் அவர்கள் மறந்துவிட்டார்களோ என்று நினைக்குமளவு அமர்ந்திருப்பார்கள். அனஸ்(ரலி) செய்தது போல் உங்களிடம் நான் காணவில்லை.

ஸஜ்தாவின்போது கைகளை விரிக்கலாகாது.

நபி(ஸல்) அவர்கள் கைகளை விரித்துக் கொள்ளாமலும் மூடிக் கொள்ளாமலும் ஸஜ்தாச் செய்தார்கள் என்று அபூ ஹுமைத்(ரலி) குறிப்பிட்டார்கள்.

466. ''ஸஜ்தாவில் நடுநிலையைக் கடைபிடியுங்கள். உங்களில் எவரும் நாய் விரிப்பதைப் போல் கைகளை விரிக்கக் கூடாது என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்

ஒற்றையான ரக்அத்களை முடித்ததும் உட்கார்ந்துவிட்டு எழுவது.


467. மாலிக் இப்னு அல்ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தொழுததை பார்த்திருக்கிறேன். அவர்கள் தொழுகையின் ஒற்றைப் படையிலான ரக்அத்களின்போது உட்காராமல் (அடுத்த ரக்அத்துக்காக) எழமாட்டார்கள்.

இரண்டாம் ஸஜ்தாவிலிருந்து எழும்போது தக்பீர் கூற வேண்டும்.

468. ஸயீத் இப்னு அல்ஹாரிஸ் கூறினார்: எங்களுக்கு அபூ ஸயீத்(ரலி) தொழுகை நடத்தினார்கள். அப்போது ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் ஸஜ்தாச் செய்யும் போதும் ஸஜ்தாவிலிருந்து எழும் போதும் இரண்டாம் ரக்அத்திலிருந்து எழும் போதும் சப்தமாகத் தக்பீர் கூறினார்கள். மேலும் 'நபி(ஸல்) அவர்கள் இவ்வாறே செய்ததை நான் பார்த்துள்ளேன்' என்றும் குறிப்பிட்டார்கள்.

தஷஹ்ஹுதின்போது உட்காரும் முறை.

469. அப்துல்லாஹ் அறிவித்தார். (என்னுடைய தந்தை) இப்னு உமர்(ரலி) தொழுகையில் உட்காரும்போது சம்மணமிட்டு உட்காருவதை பார்த்தேன். சிறு வயதினனாக இருந்த நானும் அவ்வாறே உட்கார்ந்தேன். இதைக் கண்ட இப்னு உமர்(ரலி) 'தொழுகையில் உட்காரும் முறை என்னவென்றால் உன் வலது காலை நாட்டி வைத்து இடது காலைப் படுக்கை வசமாக வைப்பது தான்' என்று கூறினார்கள். அப்படியானால் நீங்கள் மட்டும் சம்மணமிட்டு அமர்கிறீர்களே என்று கேட்டேன். அதற்கு இப்னு உமர்(ரலி) 'என் கால்கள் என்னைத் தாங்காது' என்று விடையளித்தார்கள்.

470. முஹம்மத் இப்னு அம்ர் கூறினார்: நான் சில நபித் தோழர்களுடன் அமர்ந்திருந்தேன். நபி(ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றி அப்போது பேசிக் கொண்டோம். அங்கிருந்த அபூ ஹுமைத் அஸ்ஸாயிதீ(ரலி) 'நபி(ஸல்) அவர்களின் தொழுகை பற்றி உங்களில் நான் மிகவும் அறிந்திருக்கிறேன். நபி(ஸல்) அவர்கள் தக்பீர் கூறும்போது தம் இரண்டு கைகளையும் தம் தோள் புஜங்களுக்கு நேராக உயர்த்துவார்கள். ருகூவு செய்யும்போது இரண்டு கைகளையும் மூட்டுக் கால்களின் மீது படியச் செய்வார்கள். பின்னர் தம் முதுகை (வளைவு இன்றி) நேராக்குவார்கள். (ருகூவிலிருந்து) தலையை உயர்த்தும்போது ஒவ்வொரு மூட்டும் அதனுடைய இடத்துக்கு வரும் அளவுக்கு நிமிர்வார்கள். அவர்கள் ஸஜ்தாச் செய்யும்போது தம் கைகளை விரிக்காமலும் மூடிக் கொள்ளாமலும் வைப்பார்கள். தம் கால் விரல்களின் முனைகளைக் கிப்லாவை நோக்கச் செய்வார்கள். இரண்டாவது ரக்அத்தில் அமரும்போது இடது கால் மீது அமர்ந்து வலது காலை நாட்டி வைப்பார்கள். கடைசி ரக்அத்தில் உட்காரும்போது இடது காலை (வலப் புறமாகக்) கொண்டு வந்து, வலது காலை நாட்டி வைத்துத் தம் இருப்பிடம் தரையில் படியுமாறு உட்கார்வார்கள்' எனக் கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் இரண்டாம் ரக்அத்தில் உட்காரமலே எழுந்துவிட்டு மீண்டும் உட்காரவில்லை. எனவே முதல் இருப்பு கட்டாயமானதல்ல.

471. அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை லுஹர் தொழுகை நடத்தினார்கள். அப்போது இரண்டாம் ரக்அத்தில் உட்காராமலே எழுந்து விட்டார்கள். மக்களும் அவர்களுடன் எழுந்து விட்டார்கள். தொழுகையை முடிக்கும் தருணத்தில், நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுக்கப் போகிறார்கள் என்று மக்கள் எதிர்பார்த்திருந்தபோது, உட்கார்ந்த நிலையிலேயே தக்பீர் கூறினார்கள். ஸலாம் கொடுப்பதற்கு முன் இரண்டு ஸஜ்தாக்கள் செய்துவிட்டுப் பின்னர் ஸலாம் கொடுத்தார்கள்.

கடைசித் தஷஹ்ஹுத்.

472. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நாங்கள்நபி(ஸல்) அவர்களின் பின்னால் தொழும்போது 'அஸ்ஸலாமு அலா ஜிப்ரீல், வமீகாயீல், அஸ்ஸலாமு அலா ஃபுலான்' என்று கூறுபவர்களாக இருந்தோம். நபி(ஸல்) அவர்கள் எங்களை நோக்கித் திரும்பி, 'நிச்சயமாக அல்லாஹ்தான் 'ஸலாம்' ஆக இருக்கிறான். உங்களில் ஒருவர் தொழும்போது 'காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுக்களும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்களின் மீது ஸலாமும் அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரகத்தும் ஏற்படட்டுமாக! எங்களின் மீது அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் ஸலாம் உண்டாகட்டும்' என்று கூறட்டும். இதை நீங்கள் கூறினால் வானம் பூமியிலுள்ள அனைத்து நல்லடியார்களுக்கும் ஸலாம் கூறினார்கள் என அமையும். 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று உறுதியாக நம்புகிறேன். மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாக இருக்கிறார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்' என்றும் கூறட்டும்' எனக் கூறினார்கள்.

ஸலாம் கொடுப்பதற்கு முன் ஓத வேண்டிய துஆ.

473. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ''இறைவா! கப்ருடைய வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும் மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். பாவங்களைவிட்டும் கடனைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் துஆச் செய்தவார்கள். 'தாங்கள் கடனைவிட்டும் அதிமாகப் பாதுகாப்புத் தேடும் காரணம் என்ன?' என்று ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது 'ஒரு மனிதன் கடன் படும்போது பொய் பேசுகிறான்; வாக்களித்துவிட்டு அதை மீறுகிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள்.

474. அபூ பக்ர்(ரலி) அறிவித்தார். என்னுடைய தொழுகையில் நான் கேட்பதற்கு ஒர துஆவை எனக்குக் கற்றுத் தாருங்கள் என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது 'இறைவா! எனக்கு நான் பெருமளவு அநீதி இழைத்து விட்டேன். உன்னைத் தவிர பாவங்களை எவரும் மன்னிக்க முடியாது. எனவே மன்னிப்பு வழங்குவாயாக! மேலும் எனக்கு அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ மன்னிப்பவனும் அருள் புரிபவனுமாவாய் என்று சொல்வீராக' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தஷஹ்ஹுதுக்குப் பின் விரும்பிய துஆவைக் கேட்டுக் கொள்ளலாம்; அது கட்டாயமில்லை.

475. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருக்கும்போது 'அடியார்கள் சார்பாக அல்லாஹ்வுக்கு ஸலாம் உண்டாகட்டும். இன்னின்னாருக்கு ஸலாம் உண்டாகட்டுமாக' என்று கூறிக் கொண்டிருந்தோம். (இதனை அறிந்த நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வின் மீது ஸலாம் உண்டாகட்டுமாக என்று கூறாதீர்கள். ஏனெனில் அல்லாஹ்வே ஸலாமாக இருக்கிறான். எனினும் 'காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்களின் மீது ஸலாமும் அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரகத்தும் ஏற்படட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரகத்தும் ஏற்படட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் ஸலாம் உண்டாகட்டும்' என்று கூறட்டும். இதை நீங்கள் கூறினால் வானம் பூமியிலுள்ள அனைத்து நல்லடியார்களுக்கும் ஸலாம் கூறினார்கள் என அமையும்.

'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று உறுதியாக நம்புகிறேன். மேலும் முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாக இருக்கிறார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்' என்று கூறுங்கள். இவ்வாறு கூறும்போது வானம் பூமியிலுள்ள எல்லா அடியாருக்கும் நீங்கள் ஸலாம் கூறியவர்களாவீர்கள். இதன் பிறகு உங்களுக்கு விருப்பமாக துஆவைத் தேர்ந்தெடுத்து அதன் மூலம் பிரார்த்தியுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஸலாம் கொடுப்பது.


476. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்தவுடன் பெண்கள் எழுந்து விடுவார்கள். நபி(ஸல்) அவர்கள் எழுவதற்கு முன் சற்று நேரம் அமர்ந்திருந்தார்கள்.பெண்கள் ஆண்களைச் சந்திக்காத வகையில் திரும்பிச் செல்வதற்காக நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு தங்கியிருந்ததாக கருதுகிறேன் என்று இப்னு ஷிஹாப் குறிப்பிடுகிறார்.

இமாம் ஸலாம் கொடுக்கும் போதே மற்றவர்களும் ஸலாம் கொடுப்பது.


477. இத்பான்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுவோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுக்கும்போது நாங்களும் ஸலாம் கொடுப்போம்.

தொழுகைக்குப் பின் ஓத வேண்டிய திக்ருகள்.

478. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். மக்கள் கடமையான தொழுகையை முடிக்கும்போது சப்தமாகத் திக்ரு செய்யும் நடைமுறை நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இருந்தது. இந்த திக்ரின் சப்தத்தைக் கேட்டு மக்கள் தொழுகையை முடித்துவிட்டார்கள் என்பதை நான் அறிந்து கொள்வேன்.

479. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஏழை மக்கள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'பொருளாதாரச் செல்வம் பெற்றவர்கள் உயர்வான பதவிகளையும் நிலையான பாக்கியத்தையும் பெற்றுக் கொள்கிறார்கள். நாங்கள் தொழுவது போன்றே அவர்களும் தொழுகிறார்கள். மேலும் நாங்கள் நோன்பு வைப்பது போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆயினும் அவர்களுக்குப் பொருளாதாரச் சிறப்பு இருப்பதனால் தங்கள் பொருளாதாரத்தின் மூலம் ஹஜ் செய்கின்றனர்; உம்ராச் செய்கின்றனர்; அறப்போரிடுகின்றனர்; தர்மமும் செய்கின்றனர். (ஏழைகளாகிய நாங்கள் இவற்றைச் செய்ய முடிவதில்லை)' என்று முறையிட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நான் உங்களுக்கு ஒரு காரியத்தைக் கற்றுத் தருகிறேன். அதை நீங்கள் செய்து வந்தால் உங்களை முந்திவிட்டவர்களை நீங்களும் பிடித்து விடுவீர்கள். உங்களுக்குப் பிந்தி வருபவர்கள் உங்களைப் பிடிக்க இயலாது. நீங்கள் எந்த மக்களுடன் வாழ்கிறீர்களோ அவர்களும் அந்தக் காரியத்தைச் செய்தால் தவிர அவர்களில் நீங்கள் மிகச் சிறந்தவராவீர்கள். (அந்த காரியமாவது) ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33முறை இறைவனைத் துதியுங்கள்; 33 முறை இறைவனைப் புகழுங்கள்; 33 முறை இறைவனைப் பெருமைப படுத்துங்கள்' என்று கூறினார்கள். நாங்கள் இது விஷயத்தில் பலவாறாகக் கூறிக் கொண்டோம். சிலர் ஸுப்ஹானல்லாஹ் 33 முறையும், அல்ஹம்துலில்லாஹ் 33 முறையும் அல்லாஹு அக்பர் 33 முறையும் கூறலானோம். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று இது பற்றிக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஸுப்ஹானல்லாஹி வல் ஹம்து லில்லாஹி வல்லாஹு அக்பர்'' என்று 33 முறை கூறுங்கள். இதனால் ஒவ்வொரு வார்த்தையையும் 33 முறை கூறியதாக அமையும்' என்று விளக்கம் தந்தார்கள்.

480. முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார். ''வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவன் ஏகன், அவனுக்கு நிகராக எவருமில்லை. ஆட்சி அவனுக்கு உரியது. புகழும் அவனுக்கு உரியது. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன். இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவன் இல்லை. நீ தடுத்தலைக் கொடுப்பவன் இல்லை. எந்த மதிப்புடையவனும் உன்னிடம் எந்த பயனுமளிக்க முடியாது'' என்று நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும் கூறக்கூடியவர்களாக இருந்தனர்.

ஸலாம் கொடுத்ததும் இமாம் மக்களை நோக்கித் திரும்புவது.


481. ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் எங்களை நேராக நோக்கித் திரும்புவார்கள்.

482. ஸைத் இப்னு காலித் அல்ஜுஹனீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் 'ஹுதைபிய்யா' எனுமிடத்தில் எங்களுக்கு ஸுபுஹ் தொழுகை நடத்தினார்கள். அன்றிரவு மழை பெய்திருந்தது. தொழுது முடித்ததும் மக்களை நோக்கி, 'உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டார்கள். 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே இதைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்' என்று நாங்கள் கூறினோம். ''என்னை விசுவாசிக்கக் கூடியவர்களும் என்னை நிராகரிக்கக் கூடியவர்களுமான என் அடியார்கள் இரண்டு பிரிவுகளாக ஆனார்கள். அல்லாஹ்வின் கருணையினாலும் அவனுடைய அருட்கொடையினாலும் நமக்கும் மழை பொழிந்தது எனக் கூறுபவர்கள் என்னை நம்பி, நட்சத்திரங்களை மறுத்தவர்களாவர். இந்த நட்சத்திரத்தினால் எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறுபவர்கள் என்னை நிராகரித்து, நட்சத்திரங்களை விசுவாசித்தவர்களாவர் என்று இறைவன் கூறினான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தொழுகை நடத்திவிட்டு, ஏதேனும் தேவை நினைவுக்கு வந்தவுடன் மக்களைத் தாண்டி இமாம் செல்வது.


483. உக்பா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றி மதீனாவில் நான் அஸர் தொழுதேன். அவர்கள் ஸலாம் கொடுத்ததும் மக்களைத் தாண்டி தம் மனைவியரில் ஒருவரின் இல்லத்துக்கு வேகமாகச் சென்றார்கள். அவர்களின் விரைவைக் கண்டு மக்கள் திடுக்குற்றனர். உடனே நபி(ஸல்) அவர்கள் திரும்ப வந்து, தாம் விரைவாகச் சென்றது பற்றி மக்கள் வியப்பில் ஆழ்ந்திருப்பதைக் கண்டார்கள். 'என்னிடம் இருந்த (ஜகாத் நிதியான) வெள்ளிக் கட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. அது என் கவனத்தைத் திருப்பி விடுவதை நான் விரும்பவில்லை. அதைப் பங்கீடு செய்யுமாறு கூறிவிட்டு வந்தேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தொழுது முடித்த பின் வலப்புறமாகவும் இடப்புறமாகவும் திரும்பி அமர்ந்து கொள்வது.


484. இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். வலப்புறம் தான் திரும்ப வேண்டும் என்று எண்ணிக் கொள்வதன் மூலம் தன்னுடைய தொழுகையில் ஷைத்தானுக்குச் சிறிதளவும் இடமளித்திட வேண்டாம். நபி(ஸல்) அவர்கள் பல சமயங்களில் தம் இடப்புறம் திரும்பக் கூடியவர்களாக இருந்தனர்.

பச்சை வெங்காயம், பூண்டு போன்றவற்றை உண்ணுதல்.


485. ஜாபிர்(ரலி) அறிவித்தார். ''இந்த (வெங்காயச்) செடியிலிருந்து சாப்பிடுகிறவர் நம்முடைய பள்ளிக்கு வர வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை ஜாபிர்(ரலி) வாயிலாக அறிவிக்கும் அதாஃ இடம் 'எதனால் இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்?' என்று இப்னு ஜுரைஜ் கேட்டதற்கு 'சமைக்கப் படாத பச்சை வெங்காயத்தையே நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும்' என்று அதாஃ விளக்கமளித்தார். மற்றோர் அறிவிப்பில் 'அதன் துர்வாடையையே நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும்' என்று அதாஃ கூறினார்கள் எனக் காணப்படுகிறது.

486. ஜாபிர்(ரலி) அறிவித்தார். ''பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிடுகிறவர் நம்முடைய பள்ளியைவிட்டு விலகி அவரின் இல்லத்திலேயே அமர்ந்து கொள்ளட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் பல விதமான துர்வாடையுடைய தாவரங்கள் கொண்டு வரப்பட்டன. அது பற்றி நபி(ஸல்) அவர்கள் விபரம் கேட்டபோது அதிலுள்ள கீரை வகைகள் பற்றி விளக்கம் தரப்பட்டது. தம்முடன் இருந்த ஒரு தோழருக்கு அதைக் கொடுக்குமாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தத் தோழர் சாப்பிட விரும்பாமலிருப்பதைக் கண்டபோது 'நீர் உண்ணுவீராக! நீர் சந்திக்காத (பல விதமான) மக்களிடம் நான் தனிமையில் உரையாட வேண்டியுள்ளது. (இதன் காரணமாகவே நான் சாப்பிடவில்லை.)' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

487. அப்துல் அஜீஸ் அறிவித்தார். ஒருவர் அனஸ்(ரலி) அவர்களிடம் 'வெங்காயம் பற்றி நபி(ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்' என்று கேட்டதற்கு அனஸ்(ரலி) 'அச்செடியிலிருந்து (விளைவதை) உண்ணுகிறவர் நம்மை நெருங்க வேண்டாம்' அல்லது 'நம்முடன் தொழ வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' எனக் குறிப்பிட்டார்கள்.

சிறுவர்கள் உளூச் செய்வதும் உளூவும் குளிப்பும் கடமையாவதும் ஜமாஅத், பெருநாள்கள், ஜனாஸா ஆகிய தொழுகைகளில் அவர்கள் பங்கெடுப்பதும் அவர்கள் அணி வகுத்து நிற்பதும்.

488. ஸுலைமான் ஷைபானி கூறினார்: 'நபி(ஸல்) அவர்கள் தனியாக இருந்த ஒரு கப்ருக்கருகே சென்று (ஜனாஸாவுக்காகத்) தொழுகை நடத்தினார்கள். மக்களும் அணி வகுத்து நின்றனர் என்று நபி(ஸல்) அவர்களுடன் அப்போது சென்றிருந்த ஒருவர் எனக்குக் கூறினார்' என்று ஷஃபீ சொன்னார். அவரிடம் நான் அபூ அம்ரே உமக்கு இதைக் கூறியவர் யார்? என்று கேட்டேன். 'இப்னு அப்பாஸ்(ரலி)' என்று அவர் பதில் கூறினார்.

489. ''ஜும்ஆ நாளில் குளிப்பது, பருவம் அடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும் என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்; என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

490. அப்துர் ரஹ்மான் இப்னு ஆபிஸ் கூறினார்: 'நபி(ஸல்) அவர்களுடன் (பெருநாள் தொழுகைக்காக வெளியில்) நீங்கள் சென்றதுண்டா?' என்று ஒருவர் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) 'ஆம்! எனக்கு அவர்களுடன் நெருக்கமான உறவு இல்லாதிருந்தால் சிறு வயதுடைய நான் அதில் கலந்து கொண்டிருக்க முடியாது. கஷீர் இப்னு ஸல்த்(ரலி) உடைய இல்லத்தினருகில் உள்ள மேடைக்கு நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். பின்னர், சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். பின்னர் பெண்கள் பகுதிக்கு வந்து அவர்களுக்கப் போதனை செய்தார்கள். தர்மம் செய்யுமாறு அவர்களுக்கு வலியுறுத்தினார்கள். பெண்கள் தம் ஆபரணங்களை எடுத்து, பிலால்(ரலி) (ஏந்திய) ஆடையில் போடலானார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்களும் பிலாலும் இல்லம் திரும்பினார்கள் என்று விடை அளித்தார்கள்.

இரவிலும் இருட்டிலும் பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்வது.


491. ' ''உங்களிடம், பெண்கள் இரவில் பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கோரினால் அவர்களுக்கு அனுமதி வழங்குங்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

Monday 22 June 2009

[பாடம்-9] தொழுகை நேரங்கள்.

தொழுகையின் சிறப்பும் அவற்றின் நேரங்களும்.

325. ஸுஹ்ரி அறிவித்தார். உமர் இப்னு அப்தில் அஜீஸ் ஒரு நாள் தொழுகையைத் தாமதப் படுத்திவிட்டார்கள். அப்போது உர்வா இப்னு ஸுபைர் அவரிடம் வந்து பின்வரும் நிகழ்ச்சியைக் கூறி (அவரின் செயலைக் கண்டிக்கலா)னார்கள்.

இராக்கில் இருக்கும்போது ஒரு நாள் முகீரா இப்னு ஷுஅபா(ரலி) தொழுகையைத் தாமதப் படுத்திவிட்டார்கள். அப்போது அபூ மஸ்வூத் அல் அன்ஸாரி(ரலி), அவரிடம் வந்து, 'முகீராவே! இது என்ன? ஜிப்ரீல்(அலை) அவர்கள் இறங்கி (ஃபஜ்ருத்) தொழ, நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (லுஹர்) தொழ, நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (அஸர்) தொழ நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (மக்ரிப்) தொழ நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின் இஷா தொழ, நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்னர் நபியிடம் ''இந்நேரங்களில் தொழ வேண்டும் என்றே உமக்குக் கட்டளையிடப் பட்டுள்ளது' என்றும் ஜிப்ரீல்(அலை) அவர்கள் கூறினார்கள். இதை நீர் அறியவில்லையா?' என்று கேட்டார்கள்.

தொழுகை (பாவங்களின்) பரிகாரம்.

326. ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். நாங்கள் உமர்(ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது, 'நபி(ஸல்) அவர்கள் ஃபித்னாவைப் பற்றிக் கூறியதை உங்களில் அறிந்திருப்பவர் யார்? என்று கேட்டார்கள். (ஃபித்னா என்ற வார்த்தைக்குச் சோதனைகள், துன்பங்கள் என்று பொருளும் குழப்பங்கள் என்ற பொருளும் உண்டு.) நபி(ஸல்) அவர்கள் கூறிய மாதிரியே நான் அதை அறிந்திருக்கிறேன் என்றேன். அதற்கு உமர்(ரலி) 'நீர் அதற்குத் தகுதியானவர் தாம்' என்றனர். ஒரு மனிதன் தம் குடும்பத்தினரிடமும் தம் சொத்துக்களிலும் தம் குழந்தைகளிடமும் தம் அண்டை வீட்டாரிடமும் (அளவு கடந்த நேசம் வைப்பதன் மூலம்) ஃபித்னாவில் (சோதனையில்) ஆழ்த்தப்படும்போது, தொழுகை, நோன்பு, தர்மம், (நல்லதை) ஏவுதல், (தீமையை) விலக்குதல் ஆகிய காரியங்கள் அதற்குப் பரிகாரமாகும் என்றும் நான் விடையளித்தேன்.அதற்கு உமர்(ரலி), 'நான் இதைக் கருதவில்லை' என்றனர். 'கடலலை போல் அடுக்கடுக்காக ஏற்படும் (நபிகளால் முன்னறிவிக்கப்பட்ட) ஃபித்னா (குழப்பங்கள்) பற்றியே கேட்கிறேன்' என்று கூறினார்கள். இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அந்தக் குழப்பங்களுக்கும் உங்களுக்கும் யாதொரு சம்மந்தமுமில்லை. உங்களுக்கும் அந்தக் குழப்பங்களுக்கு மிடையே மூடப்பட்ட கதவு உள்ளது என கூறினேன். 'அக்கதவு திறக்கப்படுமா? உடைக்கப்படுமா?' என உமர்(ரலி) கேட்டார்கள். நான் உடைக்கப்படும் என்றேன். 'அப்படியாயின் அது ஒருக்காலும் மூடப்படாது' என்று உமர்(ரலி) கூறினார்.ஷகீக் கூறினார். அந்தக் கதவு எதுவென உமர்(ரலி) அறிவார்களா? என்று ஹுதைஃபா(ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். 'ஆம்! பகலுக்குப் பின்னர் இரவு என்பதை அறிவது போல் அதை உமர்(ரலி) அறிவார்கள். பொய்கள் கலவாத செய்தியையே நான் அவர்களுக்கு அறிவித்தேன்' என்று ஹுதைஃபா(ரலி) கூறினார். அந்தக் கதவு எதுவென ஹுதைஃபா(ரலி) அவர்களிடம் கேட்க நாங்கள் அஞ்சி, மஸ்ரூக்கைக் கேட்கச் செய்தோம். அதற்கு ஹுதைஃபா(ரலி) 'அந்தக் கதவு உமர்(ரலி) தாம்' என்றார்கள்.

327. இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ஒருவர் அன்னியப் பெண்ணை முத்தமிட்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்து (பரிகாரம் கேட்டு) இந்த விபரத்தைக் கூறினார். 'பகலின் இரண்டு ஓரங்களிலும் இரவின் ஒரு பகுதியிலும் தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக நல்ல காரியங்கள் தீய காரியங்களை அகற்றிவிடும்'' (திருக்குர்ஆன் 11:114) என்ற வசனத்தை இறைவன் அருளினான். அப்போது அந்த மனிதர் 'இறைத்தூதர் அவர்களே! இது எனக்கு மட்டுமா?' என்று கேட்டதற்கு 'என் சமுதாயம் முழுமைக்கும்'' என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

328. இப்னு மஸ்ஊத்(ரலி) கூறினார். ஒருவர் (அன்னியப்) பெண் ஒருத்தியை முத்தமிட்டுவிட்டார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் வந்து (பரிகாரம் கேட்டு), இந்த விவரத்தைக் கூறினார். அப்போது 'பகலின் இரண்டு ஓரங்களிலும் இரவின் நிலைகளிலும் தொழுகையை நிலை நாட்டுங்கள். திண்ணமாக, நன்மைகள் தீமைகளைக் களைந்து விடுகின்றன. அல்லாஹ்வை நினைவு கூர்கிறவர்களுக்கு இது ஒரு நினைவூட்டி ஆகும்'' எனும் (திருக்குர்ஆன் 11:114 வது) இறைவசனம் அருளப்பட்டது. அந்த மனிதர், 'இது எனக்கு மட்டுமா? (அல்லது அனைவருக்குமா?)'' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'என் சமுதாயத்தினரில் இதன்படி செயல்படும் அனைவருக்கும்தான்'' என்று பதிலளித்தார்கள்.

தொழுகையை உரிய நேரத்தில் தொழுவதன் சிறப்பு.

329. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, 'தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்'' என்று பதில் கூறினார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். 'பெற்றோருக்கு நன்மை செய்தல்'' என்றார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். 'இறைவழியில் அறப்போர் புரிதல்'' என்றனர். எனக்கு இவற்றை நபி(ஸல்) அவர்கள் அறிவித்தனர். (கேள்வியை) மேலும் நான் அதிகப்படுத்தியிருந்தால் நபி(ஸல்) அவர்களும் மேலும் சொல்லியிருப்பார்கள்.

ஐவேளைத் தொழுகைகள் பாவங்களின் பரிகாரங்களாகும்.

330. அபூஹுரைரா (ரலி) அறிவித்தார். ''உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள்'' என்று தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது' என நபித் தோழர்கள் கூறினர். 'இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தொழுபவர் தம் இறைவனுடன் உரையாடுகிறார்.

331. ''ஸஜ்தாவில் நடுநிலையைக் கடைப்பிடியுங்கள்! கைகளை நாய் விரிப்பது போல் விரிக்கலாகாது! துப்பும்போது தமக்கு முன்புறமோ தம் வலப்புறமோ துப்பலாகாது! ஏனெனில் அவர் தம் இறைவனுடன் தனிமையில் உரையாடிக் கொண்டிருக்கிறார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''என அனஸ்(ரலி) அறிவித்தார்.

கடுமையான வெப்பத்தில் லுஹரைத் தாமதப் படுத்துவது.

332. ''வெப்பம் கடுமையாகும்போது (வெப்பம் தணியும் வரை) லுஹரைத் தாமதப் படுத்துங்கள்! ஏனெனில் கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்படாகும். ''இறைவா! என்னுடைய ஒரு பகுதி, மறுபகுதியைச் சாப்பிட்டு விட்டது என்று நரகம் இறைவனிடம் முறையிட்டது. கோடையில் ஒரு மூச்சு விடுவதற்கும் குளிரில் ஒரு மூச்சு விடுவதற்கும் இறைவன் அதற்கு அனுமதி வழங்கினான். கோடை காலத்தில் நீங்கள் காணும் கடுமையான வெப்பமும் குளிர் காலத்தில் நீங்கள் உணரும் கடும் குளிரும் அதன் வெளிப்பாடுகள் தாம் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

பயணத்தில் லுஹரைத் தாமதப் படுத்துவது.

333. அபூதர் (ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்திலிருந்தோம். முஅத்தின் லுஹருக்கு பாங்கு சொல்ல முனைந்தபோது, 'கொஞ்சம் பொறு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் மீண்டும் பாங்கு சொல்ல அவர் முனைந்தபோது 'கொஞ்சம் பொறு' என்றனர். மணல் திட்டுகளின் நிழலை நாங்கள் பார்க்கும்வரை தாமதப்படுத்தினார்கள். 'கடுமையான வெப்பம், நரக வெப்பத்தின் வெளிப்பாடாகும். எனவே வெப்பம் கடுமையாகும்போது (லுஹர்) தொழுகையைத் தாமதப் படுத்துங்கள்! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

சூரியன் சாய்ந்த பின்பே லுஹர் நேரம் ஆரம்பமாகிறது.

334.
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் சூரியன் சாய்ந்தபோது வெளியே வந்து லுஹர் தொழுதார்கள். மிம்பர் (மேடை) மீது ஏறி உலக முடிவு நாள் பற்றியும் குறிப்பிட்டார்கள். அந்நாளில் பயங்கரமான பல காரியங்கள் நிகழும் என்றும் குறிப்பிட்டார்கள். 'எதைப் பற்றியேனும் எவரேனும் கேட்க விரும்பினால் அவர் என்னிடம் கேட்கலாம். இந்த இடத்தில் நான் இருக்கும் வரை நீங்கள் எதைப் பற்றிக் கேட்டாலும் உங்களுக்கு அறிவிக்காதிருக்க மாட்டேன்'' என்றும் குறிப்பிட்டார்கள். மக்கள் மிகுதியாக அழலானார்கள். நபி(ஸல்) அவர்கள் 'என்னிடம் கேளுங்கள்'' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஹுதாபா' என்பவரின் மகன் அப்துல்லாஹ் என்பவர் எழுந்து 'என் தந்தை யார்?' என்று கேட்டார். 'உன் தந்தை ஹுதாபா'' என்று நபி(ஸல்) கூறிவிட்டு 'என்னிடம் கேளுங்கள்'' என்று மிகுதியாகக் குறிப்பிட்டார்கள். (இந்நிலையைக் கண்ட) உமர்(ரலி) மண்டியிட்டமர்ந்து 'அல்லாஹ்வை இரட்சகனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத்(ஸல்) அவர்களை நபி என்றும் நாங்கள் திருப்தியுடன் ஏற்றோம்' என்று கூறியதும் நபி(ஸல்) அவர்கள் மவுனமானார்கள். பின்னர் 'சற்று முன் இந்தச் சுவற்றின் நடுவில் சுவர்க்கமும் நரகமும் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டன. (அவ்விடத்தில் கண்டது போல்) நல்லதையும் கெட்டதையும் நான் கண்டிருக்கவில்லை'' என்றார்கள்.

335. அபூ பர்ஸா(ரலி) அறிவித்தார். எங்களில் ஒருவர் தம் அருகிலிருப்பவரை அறிந்து கொள்ளும் (அளவில் வெளிச்சம் ஏற்படும்) சமயத்தில் நபி(ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுபவர்களாக இருந்தனர். அறுபது (வசனங்கள்) முதல் நூறு வரை ஸுப்ஹில் ஓதுவார்கள். சூரியன் (உச்சியிலிருந்து) சாயும்போது லுஹர் தொழுபவர்களாக இருந்தனர். அஸரையும் தொழுவார்கள். (அஸர் தொழுகையை நிறைவேற்றிய) எங்களில் ஒருவர் மதீனாவின் கடைக் கோடிக்குச் சென்றுவிட்டுத் திரும்பி வந்தால் சூரியன் உயிருடன் (அதாவது ஒளி குன்றாமல்) இருந்து கொண்டிருக்கும். இந்த ஹதீஸை அபூ பர்ஸாவிடமிருந்து அறிவிக்கும் அபுல் மின்ஹால், 'மக்ரிப் பற்றி அபூ பர்ஸா(ரலி) கூறியதை நான் மறந்து விட்டேன். இஷாவை இரவின் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்வரை அல்லது இரவின் பாதிவரை தாமதப் படுததுவது பற்றிப் பெருட்படுத்த மாட்டார்கள் என அபூ பர்ஸா(ரலி) குறிப்பிட்டார்கள்' என்கிறார்.

லுஹரை அஸர் வரை தாமதப் படுத்துவது.

336. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் மக்ரிப், இஷாவை ஏழு ரக்அத்களாகவும் லுஹர் அஸரை எட்டு ரக்அத்களாகவும் தொழுகை நடத்தினார்கள்.

அஸர் நேரம்.

337. ஸய்யார் இப்னு ஸலாமா கூறினார். நானும் என்னுடைய தந்தையும் அபூ பர்ஸா(ரலி) அவர்களிடம் சென்றோம். 'கடமையான தொழுகையை நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுவார்கள்?' என்று என் தந்தை கேட்டார். நீங்கள் முதல் தொழுகை என்று கூறக்கூடிய நண்பகல் தொழுகையை (நடுவானிலிருந்து) சூரியன் சாயும்போது நபி(ஸல்) அவர்கள் தொழுவார்கள். எங்களில் ஒருவர் (அஸர் தொழுதுவிட்டு) மதீனாவின் கடைக் கோடியிலுள்ள தம் இடத்திற்குத் திரும்பும்போது சூரியன் உயிருடன் (ஒளி குன்றாமல்) இருந்து கொண்டிருக்கும்' என்றார்கள். மக்ரிப் பற்றி அபூ பர்ஸா(ரலி) கூறியதை நான் மறந்து விட்டேன். 'கடைசித் தொழுகை என்று நீங்கள் குறிப்பிடக் கூடிய இஷாவைப் பிற்படுத்துவதை விரும்புபவர்களாக நபி(ஸல்) அவர்கள் இருந்தனர். இஷாவுக்குப் பின் பேசிக் கொண்டிருப்பதையும் நபி(ஸல்) அவர்கள் வெறுப்பவர்களாக இருந்தனர். அறுபது முதல் நூறு வசனங்கள் வரை ஓதி நபி(ஸல்) அவர்கள் வைகறைத் தொழுகையைத் தொழுது முடிக்கும்போது ஒருவர் தம் அருகில் அமர்ந்திருப்பவரை அறிந்து கொள்ள முடியும்' என அபூ பர்ஸா(ரலி) கூறினார்.

338. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நாங்கள் அஸர் தொழுதுவிட்டு, மதீனாவிலுள்ள (குபா-பகுதியில் இருந்த) பனூ அம்ர் இப்னு அவ்பு குலத்தாரிடம் சென்றால் அவர்கள் அஸர் தொழுது கொண்டிருப்பதைக் காண்போம்.

339. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். சூரியன் உயரத்தில் ஒளி வீசிக் கொண்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுபவர்களாக இருந்தனர். மேட்டுப் பாங்கான பகுதிக்குச் செல்பவர் அங்கே சென்றடையும்போது சூரியன் உயரத்திலேயே இருக்கும். சில மேட்டுப் பாங்கான பகுதிகள் மதீனாவிலிருந்து நான்கு மைல் அல்லது கிட்டததட்ட அந்த அளவு தூரத்தில் அமைந்திருந்தன.

அஸர் தொழுகை தவறி விட்டவனின் பாவம்.

340. ''யாருக்கு அஸர் தொழுகை தவறிவிட்டதோ அவன் குடும்பமும் சொத்துக்களும் அழிக்கப் பட்டவனைப்போன்று இருக்கிறான' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

அஸர் தொழுகையை விட்டவனின் நிலை.

341. அபுல் மலீஹ் அறிவித்தார். மேகம் சூழ்ந்த ஒரு நாளில் புரைதா(ரலி)வுடன் ஒரு போரில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். அப்போது அவர்கள், 'அஸர் தொழுகையை முன் வேளையில் நிறைவேற்றுங்கள். ஏனெனில் 'அஸர் தொழுகையை விட்டு விடுகிறவரின் செயல்கள் நிச்சயமாக அழிந்து விடுகின்றன'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்' என்று குறிப்பிட்டார்கள்.

அஸர் தொழுகையின் சிறப்பு.

342. ஜரீர்(ரலி) அறிவித்தார். நாங்கள் முழு நிலவுள்ள இரவில் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் முழு நிலவை நோக்கி 'இந்த நிலவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பது போல் நிச்சயமாக உங்களுடைய இறைவனைக் காண்பீர்கள்! சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்!'' என்று கூறிவிட்டு, 'சூரியன் உதிக்கும் முன்னரும் மறையும் முன்னரும் உம்முடைய இறைவனின் புகழைத் துதிப்பீராக!'' (திருக்குர்ஆன் 50:39) என்ற இறைவசனத்தையும் ஓதிக் காண்பித்தார்கள்.

343. ''இரவு நேரத்து வானவர்களும் பகல் நேரத்து வானவர்களும் தொடர்ந்து உங்களிடம் ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருப்பார்கள். பஜ்ருத் தொழுகையிலும் அஸர் தொழுகையிலும் இரண்டு சாராரும் சந்திக்கின்றனர். பின்னர் உங்களுடன் இரவு தங்கியவர்கள் மேலேறிச் செல்கின்றனர். 'என் அடியார்களை எந்த நிலையில்விட்டு வந்தீர்கள்?' என்று அவர்களிடம் இறைவன் இதுபற்றி தெரிந்து கொண்டே விசாரிப்பான். 'அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போதே அவர்களிடம் சென்றோம். அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போதே அவர்களை விட்டுவிட்டு வருகிறோம்'' என்று அவர்கள் விடையளிப்பார்கள' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

சூரியன் மறையும் முன் அஸர் தொழுதல்.

344. சூரியன் மறைவதற்கு முன் அஸர் தொழுகையில் ஒரு ஸஜ்தாவை (ஒரு ரக்அத்தை) அடைந்தால் அவர் தம் தொழுகையை முழுமைப் படுத்தட்டும்! ஸுப்ஹுத் தொழுகையில் ஒரு ஸஜ்தாவை (ஒரு ரக்அத்தை) சூரியன் உதிக்கு முன் அடைந்தால் அவர் தம் தொழுகையை முழுமைப்படுத்திக் கொள்ளட்டும்!''என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

345. ''உங்களுக்கு முன் சென்ற சமுதாயத்துடன் நீங்கள் வாழும் காலத்தை ஒப்பிடும்போது நீங்கள் (இவ்வுலகில்) வாழ்ந்து அஸரிலிருந்து சூரியன் மறையும்வரை உள்ள நேரம் போன்றதேயாகும். தவ்ராத்திற்குரியவர்கள் தவ்ராத் வழங்கப்பட்டார்கள். நடுப்பகல் வரை அவர்கள் வேலை செய்து ஓய்ந்தார்கள். (ஒவ்வொருவரும்) ஒவ்வொரு 'கீராத்' கூலி கொடுக்கப்பட்டார்கள். பின்னர் இஞ்ஜீல் உடையவர்கள் இஞ்ஜீல் வழங்கப்பட்டார்கள். அவர்கள் (நண்பகலிலிருந்து) அஸர் வரை வேலை அவர்களும் ஓய்ந்தார்கள். அவர்களும் ஒவ்வொரு 'கீராத்' கூலி வழங்கப்பட்டார்கள். பின்னர் நாம் குர்ஆன் வழங்கப்பட்டோம். (அஸரிலிருந்து) சூரியன் மறையும்வரை நாம் வேலை செய்தோம். இரண்டிரண்டு 'கீராத்' வழங்கப்பட்டோம்.'எங்கள் இறைவா! இவர்களுக்கு மாத்திரம் இரண்டிரண்டு 'கீராத்'கள் வழங்கியுள்ளாய். எங்களுக்கோ ஒவ்வொரு 'கீராத்' வழங்கி இருக்கிறாய். நாங்கள் அவர்களை விடவும் அதிக அளவு அமல் செய்திருக்கிறோமே! என்று இரண்டு வேதக்காரர்களும் கேட்பார்கள். அதற்கு இறைவன் 'உங்களின் கூலியில் எதையும் நான் குறைத்திருக்கிறேனா?' என்று கேட்பான். அவர்கள் 'இல்லை' என்பர். 'அது என்னுடைய அருட்கொடை! நான் விரும்பியவர்களுக்கு அதனை வழங்குவேன்' என்று இறைவன் விடையளிப்பான் என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

(குறிப்பு: கீராத்' என்பது உஹது மலையளவு தங்கம்; என்று வேறு ஹதீஸ்களில் விளக்கம் கூறப்படுகிறது.)

மஃரிபு நேரம் பற்றியது.

346. ராபிவு இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுடன் மஃரிபைத் தொழுதுவிட்டு எங்களில் ஒருவர் திரும்பி அம்பு எய்தால் அவர் அம்பு விழும் இடத்தைப் பார்க்க முடியும். (அதாவது அந்த அளவு வெளிச்சம் இருக்கும்.)

347. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார். ''நபி(ஸல்) அவர்கள் நண்பகலில் லுஹர் தொழுவார்கள். சூரியன் தெளிவாக இருக்கும்போது அஸர் தொழுவார்கள். சூரியன் மறைந்ததும் மக்ரிப் தொழுவார்கள். இஷாவை சில நேரம் முன்னேரத்திலும் சில நேரம் பின்னேரத்திலும் தொழுவார்கள். அதாவது மக்கள் ஒன்று சேர்ந்துவிட்டால் முற்படுத்துவார்கள். மக்கள் வருவதற்கு தாமதமானால் தாமதப் படுத்துவார்கள். ஸுப்ஹைக் காலை வெளிச்சம் வருவதற்கு முன்னால் தொழுபவர்களாக இருந்தனர்.

மக்ரிப் தொழுகையை இஷாத் தொழுகை எனக் கூறலாகாது.

348. 'மக்ரிப் தொழுகையை இஷா (இரவுத் தொழுகை) என நாட்டுப்புற அரபிகள் குறிப்பிடுகின்றனர். நீங்கள் மக்ரிப் எனக் கூறும் விஷயத்தில் உங்களை அவர்கள் வென்று விட வேண்டாம் என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார் என அப்துல்லாஹ் அல்முஸ்னீ(ரலி) அறிவித்தார்.

இஷாவின் சிறப்பு.

349. ஆயிஷா(ரலி) அறிவித்தார். இஸ்லாம் நன்கு பரவுவதற்கு முன்னர் நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவு இஷாவைப் பிற்படுத்தினார்கள். 'பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர்' என உமர்(ரலி) தெரிவிக்கும் வரை நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்த வரவில்லை. அதன் பின்னர் வந்து பள்ளியிலுள்ளவர்களை நோக்கி 'இப்பூமியிலுள்ளவர்களில் உங்களைத் தவிர வேறு எவரும் இதை எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை'' என்றார்கள்.

350. அபூ மூஸா(ரலி) அறிவித்தார். நானும் என்னுடன் கப்பலில் வந்த என் தோழர்களும் 'புத்ஹான்' எனும் தோட்டத்தில் தங்கினோம். நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் இருந்தனர். ஒவ்வொரு இரவும் இஷாத் தொழுகைக்கு எங்களில் ஒரு (சிறு) கூட்டத்தினர் முறை வைத்து நபி(ஸல்) அவர்களிடம் செல்பவர்களாக இருந்தோம். நானும் என் தோழர்களும் (எங்கள் முறையின் போது) நபி(ஸல்) அவர்களைச் சந்தித்தோம். அவர்கள் தங்களின் காரியத்தில் ஈடுபட்டிருந்ததால் நள்ளிரவு நேரம் வரும்வரை இஷாவைத் தாமதப் படுத்தினார்கள். பின்னர் புறப்பட்டு வந்து மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் வந்திருந்தோரை நோக்கி 'அப்படியே இருங்கள்! இந்த நேரத்தில் உங்களைத் தவிர வேறு எவரும் தொழவில்லை. இது அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடைகளில் ஒன்றாகும்' எனக் குறிப்பிட்டார்கள். நபி(ஸல்) அவாகளிடமிருந்து இதைக் கேட்டதனால் நாங்கள் மகிழ்வுற்றோம்.

இஷாவுக்கு முன்னர் தன்னை மீறி உறங்குதல்.

351. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.நபி(ஸல்) அவர்கள் இஷாவைத் தாமதப் படுத்தினார்கள். 'சிறுவர்களும் பெண்களும் உறங்கிவிட்டனர்; தொழுகை நடத்த வாருங்கள் என்று உமர்(ரலி) அழைக்கும் வரை நபி(ஸல்) அவர்கள் வரவில்லை. பிறகு வந்து 'உங்களைத் தவிர இப்பூமியிலுள்ளவர்களில் வேறு எவரும் இந்தத் தொழுகைக்காகக் காத்துக் கொண்டிருக்கவில்லை' எனக் குறிப்பிட்டார்கள். அன்றைய தினத்தில் மதீனாவைத் தவிர வேறு எங்கும் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருக்கவில்லை. செம்மேகம் மறைந்தது முதல் இரவின் மூன்று பாகத்தில் முந்திய பகுதி முடியும் வரை இஷாத் தொழுபவர்களாக இருந்தனர்.

இப்னு அப்பாஸ்(ரலி)அவர்கள் அறிவிக்கும் மற்றொரு நபிமொழியில் நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவு இஷாவைத் தாமதப் படுத்தினார்கள். மக்கள் எல்லாம் உறங்குவதும் விழிப்பதும் மீண்டும் உறங்குவதும் விழிப்பதுமாக இருந்தனர். அப்போது உமர்(ரலி) எழுந்து 'தொழுகை' எனக் கூறினார்கள். உடன் நபி(ஸல்) அவர்கள் தலையிலிருந்து நீர் சொட்டத் தம் கையைத் தலையில் வைத்தவர்களாகப் புறப்பட்டதை இன்று பார்ப்பது போலுள்ளது. 'என் சமுதாயத்திற்குச் சிரமமாகாது என்றால் அவர்களை இந்த நேரத்தில் தொழுமாறு கட்டளையிட்டிருப்பேன்'' என்று அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

352. நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு தம் கைகளைத் தலையில் வைத்தார்கள் என்று நான் 'அதா' அவர்களிடம் விளக்கம் கேட்டபோது அவர்கள் தம் விரல்களைச் சற்று விரித்து, விரல்களின் முனைகளைத் தலை உச்சியில் வைத்து அவர்களின் பெருவிரல், காது ஓரங்கள், நெற்றிப் பொட்டு, தாடியின் ஓரங்கள் ஆகியவற்றில் படுமாறு அழுத்தித் தடவி, இப்னு அப்பாஸ்(ரலி) செய்து காட்டியது போல் செய்து காட்டினார்கள் என்று இப்னு ஜுரைஜ் குறிப்பிடுகிறார்.

இஷா நேரம் பாதி இரவு வரை உள்ளது.

353. அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையைப் பாதி இரவுவரை பிற்படுத்தினார்கள். பின்பு தொழுதுவிட்டு உறங்கிவிட்டனர். தொழுகைக்காகக் காத்துக் கொண்டிருக்கும் வரை நீங்கள் தொழுகையிலேயே இருக்கிறீர்கள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அன்றிரவு அவர்கள் அணிந்திருந்த மோதிரத்தின் பிரகாசத்தை இப்போது பார்ப்பது போலுள்ளது.

ஃபஜ்ருத் தொழுகையின் சிறப்பு.

354. 'பகலின் வெப்பம் குறைந்த இரண்டு நேரத் தொழுகைகளை (அதாவது பஜ்ரு, அஸர் தொழுகைகளை முறையாகத்) தொழுகிறவர் சுவர்க்கத்தில் நுழைவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

ஃபஜ்ருடைய நேரம்.

355. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் ஸஹர் செய்துவிட்டுப் பின்னர் (ஃபஜ்ர்) தொழுகைக்குத் தயாரானோம்.) 'ஸஹருக்கும் தொழுகைக்குமிடையே எவ்வளவு இடைவெளி இருக்கும்?' என்று கேட்டேன். அதற்கு ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ஐம்பது அல்லது அறுபது வசனங்கள் (ஓதும்) நேரம்' என்று பதிலளித்தார்கள் என அனஸ்(ரலி) கூறினார்.

356. ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) அறிவித்தார். நான் என் இல்லத்தில் ஸஹர் செய்துவிட்டு, நபி(ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் கலந்து கொள்வதற்காக அவசரமாகப் புறப்படுபவனாக இருந்தேன்.

சூரியன் உதிக்கும் வரை ஃபஜ்ருக்குப் பின் தொழலாகாது.

357. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஸுப்ஹுக்குப் பிறகிலிருந்து சூரியன் உதிக்கும் வரை தொழுவதையும் அஸருக்குப் பிறகிலிருந்து சூரியன் மறையும் வரை தொழுவதையும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என நம்பிக்கைக்குரிய பலர் என்னிடம் கூறியுள்ளனர். அவர்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர் உமர்(ரலி) ஆவார்.

358. ''சூரியன் உதிக்கும் நேரத்தையோ மறையும் நேரத்தையோ உங்கள் தொழுகைக்காக நாடாதீர்கள் என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

359. ''சூரியன் உதிக்கத் துவங்கும்போது அது (முழுமையாக) உயரும் வரை தொழுவதைத் தாமதப்படுத்துங்கள்! சூரியன் மறையத் துவங்கும்போது அது முழுமையாக மறையும் வரை தொழுகையைப் பிற்படுத்துங்கள்! ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

360. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இரண்டு வியாபாரங்களை விட்டும் ஆடை அணியும் இரண்டு முறைகளை விட்டும் இரண்டு தொழுகைகளை விட்டும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள். (இரண்டு தொழுகைகளாவன) ஃபஜ்ருக்குப் பிறகிலிருந்து சூரியன் உதிக்கும்வரை தொழுவதையும் அஸருக்குப் பிறகிலிருந்து சூரியன் மறையும்வரை தொழுவதையும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள். (ஆடை அணியும் இரண்டு முறைகளாவன) ஓர் ஆடை மட்டும் உள்ளபோது தம் கைகள் உள்ளே இருக்குமாறு சுற்றி அதை அணிந்து கொள்வதையும் மர்ம உறுப்பு வானுக்குத் தெரியுமாறு ஓர் ஆடையை முழங்காலைச் சுற்றிக் கட்டிக் கொள்வதையும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள். 'முனாபதா', 'முலாமஸா' என்ற இரண்டு வியாபாரங்களை விட்டும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

(குறிப்பு: இந்தக் கல் எந்தப் பொருளின் மீது விழுகிறதோ அந்தப் பொருளை இவ்வளவு விலைக்குத் தருகிறேன் என்று கூறி விற்பது முனாபதா எனப்படும். குவிக்கப்பட்ட பொருட்களைப் பிரித்துப் பார்க்கவிடாமல் அதைத் தொட்டுப் பார்க்க மட்டுமே அனுமதிக்கும் வியாபாரம் முலாமஸா எனப்படும்)

சூரியன் மறையும் முன் தொழுவதை நாடலாகாது.

361. முஆவியா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் தோழமை கொண்டிருந்தோம். அவர்கள் தொழுது நாங்கள் பார்க்காத ஒரு தொழுகையை நீங்கள் தொழுகிறீர்கள். நபி(ஸல்) அவர்கள் அதைத் தடுத்துமிருக்கிறார்கள். அதுதான் அஸருக்குப் பின் இரண்டு ரக்அத்கள்.

விடுபட்ட தொழுகைகள் போன்றவற்றை அஸருக்குப் பின் தொழலாம்.

362. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களைக் கொண்டு சென்றவன் மேல் ஆணையாக! அஸருக்குப் பின் இரண்டு ரக்அத்களை இறைவனைச் சந்திக்கும்வரை நபி(ஸல்) அவர்கள்விட்டு விடவில்லை. தொழுவதற்குச் சிரமப்படும் நிலையை அடைந்த பிறகே மரணம் அடைந்தார்கள். அஸருக்கு பின்னுள்ள இரண்டு ரக்அத்களை பெரும்பாலும் உட்கார்ந்தே தொழுபவர்களாக இருந்தனர். தம் உம்மத்தினருக்குச் சிரமத்தை ஏற்படுத்துவதை அஞ்சிப் பள்ளியில் அந்த இரண்டு ரக்அத்களை தொழ மாட்டார்கள். தம் உம்மத்தினருக்கு இலேசானதையே நபி(ஸல்) அவர்கள் விரும்புவார்கள்.

363. ஆயிஷா(ரலி) அறிவித்தார். இரண்டு தொழுகைகளை இரகசியமாகவோ பகிரங்கமாகவோ நபி(ஸல்) அவர்கள் விட்டதேயில்லை. அவை ஸுப்ஹுத் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள், அஸர் தொழுகைக்குப் பின் இரண்டு ரக்அத்கள்.

நேரம் சென்ற பிறகும் பாங்கு சொல்வது.

364. அபூ கதாதா(ரலி) அறிவித்தார். நாங்கள் இரண்டு இரவு நபி(ஸல்) அவர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது சிலர் 'இறைத்தூதர் அவர்களே! எங்களைச் சற்று இளைப்பாறச் செய்யலாமே!'' என்று கேட்டனர். 'நீங்கள் தொழுகையைவிட்டும் உறங்கி விடுவீர்களோ என அஞ்சுகிறேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது பிலால் 'நான் உங்களை எழுப்பி விடுகிறேன்' என்று கூறியதும் அனைவரும் படுத்தனர். பிலால்(ரலி) தம் முதுகைத் தம் கூடாரத்தின் பால் சாய்த்தார். அவரையும் மீறி உறங்கிவிட்டார். சூரியனின் ஒரு பகுதி உதித்த பின்பே நபி(ஸல்) அவர்கள் விழித்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'பிலாலே! நீர் சொன்னது என்னவாயிற்று?' என்று கேட்டார்கள். 'இது போன்ற தூக்கம் எனக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை' என்று பிலால்(ரலி) கூறினார். 'நிச்சயமாக இறைவன் உங்கள் உயிர்களை அவன் விரும்பியபோது கைப்பற்றிக் கொள்கிறான்; அவன் விரும்பியபோது திரும்பவும் ஒப்படைக்கிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு (பிலாலை நோக்கி) 'பிலாலே! எழுந்து தொகைக்கு பாங்கு சொல்வீராக!'' என்றார்கள். (பின்னர்) உளூச் செய்துவிட்டுச் சூரியன் உயர்ந்து பிரகாசம் ஏற்பட்டபோது தொழுதார்கள்.

தொழுகை நேரம் முடிந்த பிறகு மக்களுக்கு ஜமாஅத் தொழுகை நடத்துவது.

365. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். அகழ்ப்போரின்போது சூரியன் மறைந்த பின் உமர்(ரலி) குரை»க் இறைமறுப்பாளர்களை ஏசிக் கொண்டே வந்து 'இறைத்தூதர் அவர்களே! சூரியன் மறையும் வரை நான் அஸர் தொழவில்லையே' என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக நானும் அஸர் தொழவில்லை'' என்று கூறினார்கள். நாங்கள் 'புத்ஹான்' எனும் பள்ளத்தாக்கை நோக்கிச் சென்றோம். நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுகைக்காக உளூச் செய்தார்கள். நாங்களும் அதற்காக உளூச் செய்தோம். சூரியன் மறைந்த பின் அஸர் தொழுதார்கள். அதன் பின்னர் மக்ரிப் தொழுதார்கள்.

ஒரு தொழுகையை ஒருவன் மறந்துவிட்டால் நினைவு வந்ததும் அதைத் தொழ வேண்டும். அந்தத் தொழுகையைத் தவிர (கூடுதலாக) வேறு எதையும் தொழ வேண்டியதில்லை.

366. ''யாரேனும் ஒரு தொழுகையை மறந்துவிட்டால் நினைவு வந்ததும் அவர் அதைத் தொழட்டும்! இதைத் தவிர அதற்கு வேறு பரிகாரம் எதுவுமில்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''என்னைத் தியானிப்பதற்காகத் தொழுகையை நிலை நிறுத்துவீராக'' (திருக்குர்ஆன் 20:14) என்ற வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.

367. 'நாங்கள் ஓர் இரவு நபி(ஸல்) அவர்களை எதிர்பார்த்துக கொண்டிருந்தோம். பாதி இரவாகும்போது நபி(ஸல்) அவர்கள் வந்து எங்களுக்கு (இஷா) தொழுகை நடத்தினார்கள். பிறகு எங்களுக்குச் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். 'அறிந்து கொள்க! மக்களெல்லாம் தொழுதுவிட்டு உறங்கிவிட்டனர். தொழுகையை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் வரை நீங்கள் தொழுகையிலே இருக்கிறீர்கள்'' என்றும் குறிப்பிட்டார்கள். இதை அனஸ்(ரலி) அறிவித்ததாக ஹஸன் குறிப்பிட்டார். 'நன்மையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் மக்கள் நன்மையிலே இருக்கின்றனர்' என்றும் ஹஸன் குறிப்பிட்டார்.

368. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தம் கடைசிக் காலத்தில் இஷாத் தொழுகை நடத்தினார்கள். ஸலாம் கொடுத்ததும் நபி(ஸல்) அவர்கள் எழுந்து 'இந்த இரவைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? (இன்றிலிருந்து) நூறாம் ஆண்டின் துவக்கத்தில் இன்று பூமியில் இருக்கும் எவரும் எஞ்சியிருக்க மாட்டார்கள்'' என்று குறிப்பிட்டார்கள். நூறு ஆண்டுகளுக்குப் பின் நடப்பது பற்றி (உலகம் அழிந்து விடுமோ என்று) தவறான முறையில் மக்கள் விளங்கினர். நபி(ஸல்) அவர்கள் கூறியது இன்று பூமியில் இருப்பவர்களில் எவரும் நூறு ஆண்டுகளுக்குப் பின் இருக்க மாட்டார்கள் என்பதைத் தான். இதன் மூலம் அன்று இருந்த சமுதாயம் நூறு ஆண்டுகளுக்குள் முடிந்து போவர் என்பதையே நபி(ஸல்) அவர்கள் கருதினார்கள்.

விருந்தினருடனும் குடும்பத்தினருடன் இரவில் பேசிக் கொண்டிருத்தல்.

369. அப்துர்ரஹ்மான் இப்னு அபீ பக்ரு(ரலி) அறிவித்தார். திண்ணைத் தோழர்கள் ஏழ்மை வயப்பட்ட மனிதர்களாக இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் 'இருவருக்குரிய உணவு யாரிடம் உள்ளதோ அவர் மூன்றாமவ(ராக திண்ணைத் தோழர் ஒருவ)ரை அழைத்துச செல்லட்டும்! நான்கு பேருக்குரிய உணவு இருந்தால் ஐந்தாவது, ஆறாவது நபர்களாக திண்ணைத் தோழர்களை அழைத்துச் செல்லட்டும்!' எனக் கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) மூன்று நபர்களை அழைத்துச் சென்றனர். நபி(ஸல்) அவர்கள் பத்து நபர்களை அழைத்துச் சென்றனர். (வீட்டில்) நானும் என் தந்தை (அபூ பக்ரும்) தாயும் என்னுடைய வீட்டிற்கும் (என் தந்தை) அபூ பக்ருடைய வீட்டிற்கும் கூட்டாகப் பணி செய்து வரும் வேலையாளும இருந்தோம் என் மனைவியும் என்று அவர் குறிப்பிட்டாரா இல்லையா என்று அடுத்த அறிவிப்பாளர் சந்தேகம் தெரிவிக்கிறார்.அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களுடன் இரவு உணவு அருந்திவிட்டு, இஷாத் தொழும் வரை அங்கேயே தங்கிவிட்டு இரவில் அல்லாஹ் நாடிய அளவு கழிந்த பின் (வீட்டிற்கு) வந்தனர்.'உங்கள் விருந்தினரைவிட்டுவிட்டு எங்கே தங்கி விட்டீர்?' என்று அவர்களின் மனைவி கேட்டனர். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'அவர்களுக்கு இன்னும் நீ இரவு உணவு அளிக்கவில்லையா?' என்று திருப்பிக் கேட்டார்கள். 'உணவை முன் வைத்த பின்பும் நீங்கள் வருவது வரை அவர்கள் உண்ண மறுத்துவிட்டனர்' என்று மனைவி கூறினார். (என் தந்தை கோபிப்பார் என்பதை அறிந்த) நான் சென்று ஒளிந்து கொண்டேன்.

'அறிவிலியே!' 'மூக்கறுபடுவாய்!' என ஏசினார்கள். பிறகு மகிழ்வற்ற நிலையில் 'சாப்பிடுங்கள்! அல்லாஹ்வின் மேல் ஆணையாக ஒருபோதும் நான் சாப்பிட மாட்டோம்' என்று (தம் குடும்பத்தினரை நோக்கிக்) கூறினார்கள்.நாங்கள் உணவின் ஒவ்வொரு கவளத்தையும் எடுத்துச் சாப்பிடும்போது அதன் அடிப்புறத்திலிருந்து அதை விட அதிகமாக வளர்ந்து கொண்டே இருந்தது. அனைவரும் வயிறு நிரம்ப உண்டார்கள். அதற்கு முன்னிருந்ததை விட உணவு அதிகமாக இருந்தது. முன்பிருந்த அளவு அல்லது அதை விட அதிகமாக உணவு இருப்பதைக் கண்ட அபூ பக்ரு(ரலி) 'பனூ ஃபிராஸ் சகோதரியே! இது என்ன?' என்று (தம் மனைவியிடம்) வினவினார்கள்.அதற்கவர் 'என் கண் குளிர்ச்சியின் மேல் ஆணை! இதன் காரணம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் முன்பிருந்ததை விட மூன்று மடங்கு இப்போது அதிகமாக உணவு உள்ளது என்றார். பிறகு அபூ பக்ரும் சாப்பிட்டார்கள். சாப்பிட மாட்டேன் என்று சத்தியம் செய்தது ஷைத்தானிடமிருந்து ஏற்பட்டுவிட்டது ஒரு கவளத்தை எடுத்து உண்டார்கள். பின்பு நபி(ஸல்) அவர்களிடம் எஞ்சிய உணவை எடுத்துச் சென்றார்கள். காலை வரை அது அங்கேயே இருந்தது.

எங்களுக்கும் ஒரு கூட்டத்தினருக்குமிடையே உடன் படிக்கை ஒன்று இருந்தது. அந்தக் கெடு முடிந்துவிட்டது. (அது சம்பந்தமாக நபி(ஸல்) அவர்களிடம் வந்திருந்தவர்களை) பன்னிரெண்டு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு தலைவரின் கீழ் அமைத்தோம். அவர்களில் ஒவ்வொருவருடனும் எத்தனை பேர் இருந்தனர் என்பதை அல்லாஹ்வே அறிவான். அவர்கள் அனைவரும் அந்த உணவிலிருந்து சாப்பிட்டார்கள்.