Monday 31 August 2009

[பாடம்-36] ஷுஃஆ.

பிறருக்கு விற்பதற்கு முன், பங்காளிக்கு அறிவிக்கவேண்டும்.

1052. அம்ர் இப்னு ஷரீத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நான், ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம் தங்கியிருந்தேன். அப்போது மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) வந்து, தம் கையை என்னுடைய தோள் புஜங்களில் ஒன்றில் வைத்தார்கள். அப்போது (அடிமையாயிருந்து) நபி(ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அபூ ராஃபிஉ(ரலி) வந்து, 'ஸஅதே! உம்முடைய வீட்டிலுள்ள எனக்குச் சொந்தமான இரண்டு அறைகளை என்னிடமிருந்து வாங்கிக் கொள்வீராக!' எனக் கூறினார்கள். அதற்கு ஸஅத்(ரலி) 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவற்றை நான் வாங்க மாட்டேன்!'' என்றார்கள். அருகிலிருந்த மிஸ்வர்(ரலி) அவர்கள், ஸஅத்(ரலி) அவர்களிடம் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீர் வாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்!'' என்றார்கள். அப்போது ஸஅத்(ரலி), 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! தவணை அடிப்படையில் நாலாயிரம் வெள்ளிக் காசைத் தவிர உமக்கு அதிகமாகத் தரமாட்டேன்!'' என்று கூறினார்கள். அதற்கு அபூ ராஃபிவு(ரலி), 'ஐநூறு தங்கக் காசுகளுக்கு அது கேட்கப்பட்டுள்ளது. அண்டை வீட்டில் இருப்பவர் அண்மையில் இருப்பதால் அவரே அதிகம் உரிமை படைத்தவர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றிராவிட்டால் ஐநூறு தங்கக் காசுக்கு கேட்கப்பட்டதை நாலாயிரம் வெள்ளிக்காசுக்கு உமக்கு விற்க மாட்டேன்' என்று கூறிவிட்டு ஸஅதுக்கே விற்றார்.

அண்டை வீட்டாரில் நெருக்கமானவர் யார்?

1053. ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர் அவர்களே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர்; அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது? என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இருவரில் யார் வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு'' என்றார்கள்.

Saturday 29 August 2009

[பாடம்-35] ஸலம்.

ஸலமில் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் கூற வேண்டும்.

1049. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, மக்கள் ஒரு வருடம், இரண்டு ஆண்டுகளில் (பொருளைப்) பெற்றுக் கொள்வதாக, பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுத்து வந்தனர். நபி(ஸல்) அவர்கள், 'ஒருவர், (குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பெற்றுக் கொள்வதாக) பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுத்தால் குறிப்பிட்ட எடைக்காகவும் குறிப்பிட்ட அளவுக்காகவும் கொடுக்கட்டும்!'' என்று கூறினார்கள்.
''ஒரு வருடம், இரண்டு ஆண்டுகளில்'' என்றோ, 'இரண்டு ஆண்டுகள் அல்லது மூன்று ஆண்டுகளில்'' என்றோ தனக்கு அறிவிக்கப்பட்டதாக அறிவிப்பாளர் இஸ்மாயீல் இப்னு உலய்யா(ரஹ்) சந்தேகத்துடன் கூறுகிறார்கள்.

ஸலமில் நிர்ணயிக்கப்பட்ட எடையைக் கூற வேண்டும்.

1050. இப்னு அபில் முஜாலித்(ரலி) அறிவித்தார். ''அப்துல்லாஹ் இப்னு ஷத்தாத் (ரலி) அவர்களும் அபூ புர்தா(ரலி) அவர்களும் ஸலம் விஷயத்தில் கருத்து வேறுபட்டார்கள். அப்போது, என்னை இப்னு அபீ அஃவ்பா(ரலி) அவர்களிடம் அனுப்பினார்கள். அவர்களிடம் சென்று நான் இது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள், 'நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்திலும் கோதுமை வாற்கோதுமை, உலர்ந்த திராட்சை, உலர்ந்த பேரீச்சை ஆகியவற்றிற்காக முன்பணம் கொடுத்து வந்தோம்!'' என்றார்கள். பிறகு இப்னு அப்ஸா(ரலி) அவர்களிடம் கேட்டேன்; அவர்களும் இவ்வாறே கூறினார்கள்!''

தோட்டம் துரவு மற்றும் விவசாய நிலம் இல்லாதவர்களிடம் விளைபொருட்களுக்காக முன்பணம் கொடுத்தல்.

1051. முஹம்மத் இப்னு அபில் முஜாலித்(ரலி) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு ஷத்தாத் (ரலி) அவர்களும், அபூ புர்தா(ரலி) அவர்களும் என்னை அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அவர்களிடம் அனுப்பி, 'நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் கோதுமைக்காக முன்பணம் கொடுத்திருக்கிறார்களா?' என்று கேள்!'' என்றனர். (அவ்வாறே நான் கேட்டபோது) அப்துல்லாஹ் இப்னு அபீ அஃவ்பா(ரலி), 'கோதுமை, வாற்கோதுமை, ஸைத்தூன் (ஆலிவ்) எண்ணெய் ஆகியவற்றிற்காக அளவும் தவணையும் குறிப்பிட்டு, ஷாம் வாசிகளான 'நபீத்' எனும் குலத்தாரிடம் நாங்கள் முன்பணம் கொடுத்து வந்தோம்! என்றார். 'தோட்டம் துரவும் விவசாய நிலமும் யாரிடம் இருக்கிறதோ அவரிடமா?' என்று கேட்டேன். அதற்கவர்கள், 'நாங்கள் அதுபற்றி விசாரிக்க மாட்டோம்!'' என்றார்கள். பிறகு, அவ்விருவரும் என்னை அப்துர் ரஹ்மான் இப்னு அப்ஸா(ரலி) அவர்களிடம் அனுப்ப, அவர்களிடம் சென்று நான் கேட்டபோது, 'நபி(ஸல்) அவர்களின் காலத்தில் நபித்தோழர்கள் பொருட்களுக்கு முன்பணம் கொடுத்து வந்தனர்; (முன்பணம் பெறுபவர்களிடம்) 'அவர்களுக்குத் தோட்டம் துரவு அல்லது விவசாய நிலம் இருக்கிறதா' என்று நாங்கள் கேட்க மாட்டோம்!'' என்று கூறினார்கள்.

Thursday 27 August 2009

[பாடம்-34] வியாபாரம்.

984. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார். முஹாஜிர்களான நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னையும் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி) அவர்களையும் சகோர்களாக ஆக்கினார்கள். ஸஅத்(ரலி) 'நான் அன்ஸாரிகளில் அதிகச் செல்வமுடையவன். எனவே, என் செல்வத்தில் பாதியை உமக்குப் பிரித்துத் தருகிறேன். என்னுடைய இரண்டு மனைவியரில் நீர் யாரை விரும்புகிறீர் என்று பாரும்! அவரை உமக்காக விவாகரத்துச் செய்கிறேன். அவரின் இத்தா முடிந்ததும் அவரை உமக்கு மணம் முடித்துத் தருகிறேன்!'' என்று கூறினார். அப்போது நான், 'இது எனக்குத் தேவையில்லை! வியாபாரம் நடைபெறுகிற கடைவீதி ஏதும் (இங்கு) இருக்கிறதா?' எனக் கேட்டேன். அவர், 'கைனுகா என்னும் கடை வீதி இருக்கிறது!' என்றார். நான் அங்கே சென்று பாலாடைக் கட்டியையும் நெய்யையும் (லாபமாகக்) கொண்டு வந்தேன். மறுநாளும் தொடர்ந்து சென்றேன். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் (மஞ்சள்) கறையுடன் நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். நபி(ஸல்) அவர்கள், 'நீ மண முடித்துவிட்டாயா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்!'' என்றேன். 'யாரை?' என்றார்கள். 'ஓர் அன்ஸாரிப் பெண்ணை!'' என்றேன். 'எவ்வளவு மஹ்ர் கொடுத்தாய்?' என்று கேட்டார்கள். 'ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்!'' என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'ஓர் ஆட்டையேனும் மணவிருந்தாக அளிப்பாயாக!'' என்றார்கள்.

அனுமதிக்கப்பட்டது தெளிவானது. விலக்கப்பட்டதும் தெளிவானது. அவ்விரண்டிற்குமிடையே சந்தேகத்திற்கிடமானதும் உள்ளது.

985. ''ஹலால் எனும் அனுமதிக்கப்பட்டது தெளிவானது. ஹராம் எனும் விலக்கப்பட்டதும் தெளிவானது. அவ்விரண்டிற்குமிடையே சந்தேகத்திற்கிடமான காரியங்கள் உள்ளன. பாவம் எனச் சந்தேகப்படுபவற்றைவிட்டு விடுகிறவர் பாவம் என்று தெளிவாகத் தெரிவதை நிச்சயம்விட்டு விடுவார்;. பாவம் எனச் சந்தேகப்படுபவற்றைச் செய்யத் துணிகிறவர் தெளிவான பாவங்களிலும் வீழ்ந்து விடக் கூடும். பாவங்கள் அல்லாஹ் போட்ட வேலிகளாகும். வேலியைச் சுற்றி மேய்கிறவர் அதற்குள்ளும் சென்று விடக்கூடும் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.

986. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ''ஸம்ஆ'' என்பவரின் அடிமைப் பெண்ணுடைய மகன் எனக்குப் பிறந்தவன். எனவே, அவனை நீ கைப்பற்றிக் கொள்!'' என்று உத்பா இப்னு அபீ வக்காஸ்(ரலி) (தம் மரண வேளையில்) தம் சகோதரர் ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம் உறுதிமொழி வாங்கினார். மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டு ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அந்தச் சிறுவனைப் பிடித்துக் கொண்டு, 'இவன் என் சகோதரரின் மகன்! என்னிடம் அவர் உறுதிமொழி வாங்கியிருக்கிறார்!' எனக் கூறினார். அப்போது ஸம்ஆவின் மகன் அப்து(ரலி), 'இவன் என் சகோதரன்; என் தந்தையின் அடிமைக்குப்பிறந்தவன்; என் தந்தையின் ஆதிக்கத்தில் இவனுடைய தாயார் இருக்கும்போது பிறந்தவன்!' எனக் கூறினார். இருவரும் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது ஸஅத்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! இவன் என் சகோதரரின் மகன். இவனைப் பற்றி என் சகோதரர் உறுதிமொழி வாங்கியிருக்கிறார்' எனக் கூறினார். அதற்கு ஸம்ஆவின் மகன் அப்து(ரலி) 'இவன் என் சகோதரன்! என் தந்தையின் ஆதிக்கத்தில் இவனுடைய தாய் இருக்கும்போது என் தந்தைக்குப் பிறந்தவன்! எனக் கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள்,''ஸம்ஆவின் மகன் அப்தே! இவன் உமக்குரியவனே! எனக் கூறினார்கள். பின்னர் '(தாய்) யாருடைய ஆதிக்கத்தில் இருக்கும்போது குழந்தை பிறக்கிறதோ அவருக்கே அக்குழந்தை உரியது! விபச்சாரம் செய்தவருக்கு இழப்புதான் உரியது! எனக் கூறினார்கள். பின்னர், தம் மனைவியும் ஸம்ஆவின் மகளுமான ஸவ்தா(ரலி) அவர்களிடம் 'ஸவ்தாவே! நீ இவரிடம் ஹிஜாபைப் பேணிக் கொள்!'' என்றார்கள். ('அவர் ஸம்ஆவின் மகன்தான்! என்று நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தாலும்) உத்பாவின் தோற்றத்தில் அவர் இருந்ததால்தான் இவ்வாறு நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அதன் பிறகு அவர் அன்னை ஸவ்தா(ரலி) அவர்களை மரணிக்கும்வரை சந்திக்கவில்லை.

அடிப்படை இல்லாத மனக் குழப்பங்கள் சந்தேகத்திற்குரியவைகளில் சேராது.

987. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 'இறைத்தூதர் அவர்களே! ஒரு கூட்டத்தினர் எங்களிடம் இறைச்சியைக் கொண்டு வருகின்றனர். அதன் மீது (அறுக்கும் போது) அல்லாஹ்வின் பெயர் கூறினார்களா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியவில்லை' என்று ஒரு கூட்டத்தினர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் அதன்மீது அல்லாஹ்வின் பெயர் கூறி உண்ணுங்கள்'' என்றார்கள்.

'எவ்வாறு பொருள் ஈட்டினோம்' என்பது பற்றிப் பொருட்படுத்தாதவர்.

988. ''தாம் சம்பாதித்தது ஹலாலா ஹராமா என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் (இனி) வரும்! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நாணய மாற்று வியாபாரம்.

989. அபுல் மின்ஹால்(ரஹ்) அறிவித்தார். ''நான் நாணய மாற்று வியாபாரம் செய்து வந்தேன்; அது பற்றி(ய மார்க்கச் சட்டத்தை) ஸைத் இப்னு அர்கம்(ரலி), பராஉ இப்னு ஆஸிப்(ரலி) ஆகியோரிடம் கேட்டேன். அதற்கவர்கள், 'நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் வியாபாரிகளாக இருந்தோம்; அவர்களிடம் நாணயமாற்று வியாபாரம் பற்றிக் கேட்டோம். அதற்கு 'உடனுக்குடன் மாற்றினால் அதில் தவறில்லை; தவணையுடன் இருந்தால் அது கூடாது!'' என அவர்கள் பதிலளித்தார்கள்!' என்றார்கள்!''

வியாபாரத்திற்காக வெளியே செல்லுதல்.

990. உபைத் இப்னு உமைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். உமர்(ரலி) (கலீஃபாவாக இருந்த காலத்தில்) அபூ மூஸா(ரலி) வந்து, உள்ளே வர அனுமதி கோரினார்கள். உமர்(ரலி) அலுவலில் ஈடுபட்டிருந்ததால் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உடனே அபூ மூஸா(ரலி) திரும்பிவிட்டார்கள். அலுவலை முடித்த உமர்(ரலி), 'அபூ மூஸாவின் குரலை நான் கேட்டேனே! அவருக்கு அனுமதி அளியுங்கள்!'' என்றார்கள். 'அவர் திரும்பிச் சென்றார்!'' என்று கூறப்பட்டது. உடனே உமர்(ரலி) அபூ மூஸா(ரலி) அவர்களை அழைத்து வரச் செய்தார்கள். (''ஏன் திரும்பிச் சென்றுவிட்டீர்?' என்று உமர்(ரலி) கேட்டபோது) அபூ மூஸா(ரலி), 'இவ்வாறே நாங்கள் கட்டளையிடப்பட்டிருந்தோம்!' எனக் கூறினார்கள். உமர்(ரலி) 'இதற்குரிய சான்றை நீர் என்னிடம் கொண்டுவாரும்!' எனக் கேட்டார்கள். உடனே, அபூ மூஸா(ரலி) அன்ஸாரிகளின் அவைக்குச் சென்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கவர்கள், 'நம்மில் இளையவரான அபூ ஸயீத் அல்குத்ரீயைத் தவிர வேறு யாரும் இந்த விஷயத்தில் உமக்கு சாட்சி சொல்ல மாட்டார்கள்!'' என்றனர். அபூ மூஸா(ரலி) அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறியதை உறுதிப்படுத்தியதும்) உமர்(ரலி), 'நபி(ஸல்) அவர்களின் இந்தக் கட்டளை எனக்குத் தெரியாமல் போய்விட்டதா? நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (வெளியே சென்று) கடைவீதிகளில் நான் வியாபாரம் செய்து கொண்டிருந்தது என் கவனத்தை திசைதிருப்பிவிட்டது போலும்!'' என்று கூறினார்கள்.

செல்வ வளத்தை ஒருவர் விரும்பினால்...?

991. ''ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தம் வாழ்நாள் அதிகரிக்கப்படவேண்டும்'' என்று விரும்பினால் அவர் தம் உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் பொருட்களைக் கடனாக வாங்கியது.

992. அனஸ்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் தீட்டப்படாத கோதுமையில் தயாரிக்கப்பட்ட ரொட்டியையும் வாசனை நீங்கிய உருக்கப்பட்ட கொழுப்பையும் கொண்டு சென்றேன். நபி(ஸல்) அவர்கள் தங்களின் கவசத்தை மதீனாவில் உள்ள ஒரு யூதரிடம் அடமானமாக வைத்து அவரிடமிருந்து தம் குடும்பத்தினருக்காகத் தீட்டப்படாத கோதுமையை வாங்கியிருந்தார்கள். 'முஹம்மதின் குடும்பத்தினரிடம் தீட்டிய கோதுமையில் ஒரு ஸாவு, பிற தானியத்தில் ஒரு ஸாவு இருந்ததில்லை.'' அந்த நேரத்தில் அவர்களுக்கு ஒன்பது மனைவியர் இருந்தனர்.

993. ''ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி (அலை)அவர்கள் தங்களின் கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிக்தாம்(ரலி) அறிவித்தார்.

விற்கும்போதும் வாங்கும் போதும் தாராளமாக நடந்து கொள்ளுதல்.

994. வாங்கும் பொழுதும் விற்கும் பொழுதும் வழக்குரைக்கும் பொழுதும் பெருந்தன்மையாக நடந்து கொள்ளும் மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

(கடனைத் தீர்க்க) வசதி படைத்தவர்களுக்கும் அவகாசம் அளித்தல்.

995. ''உங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதரின் உயிரை வானவர்கள் கைப்பற்றி, அவரிடம் 'நீர் ஏதேனும் நல்லது செய்திருக்கிறீரா?' எனக் கேட்டனர். அதற்கு அம்மனிதர், 'வசதியானவருக்கு அவகாசம் அளிக்கும்படியும் (அவர் கடனைத் திருப்பிச் செலுத்த தாமதம் செய்வதை) கண்டு கொள்ளாமல் விட்டுவிடும்படியும் நான் என்னுடைய ஊழியர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன்!'' என்று கூறினார். உடனே, 'அவரின் தவறுகளைக் கண்டு கொள்ளாமல்விட்டு விடுங்கள்!' என்று அல்லாஹ் வானவர்களுக்குக் கட்டளையிட்டான்! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.மற்றோர் அறிவிப்பில், 'சிரமப்படுபவருக்கு நான் அவகாசம் அளிப்பவனாகவும் வசதியானவரிடம் மிருதுவாக நடப்பவனாகவும் இருந்தேன்!' என்று அவர் கூறினார் என இடம் பெற்றுள்ளது.மற்றோர் அறிவிப்பில், 'வசதியானவருக்கு அவகாசம் வழங்கியும், சிரமப்படுபவரின் கடனைத் தள்ளுபடி செய்தும் வந்தேன்!'' என்று கூறினார் என இடம் பெற்றுள்ளது.இன்னொரு அறிவிப்பில், 'வசதியானவரிடமிருந்து கடனைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, சிரமப்படுபவரின் கடனைத் தள்ளுபடி செய்து வந்தேன்!'' என்று கூறினார்; என இடம் பெற்றுள்ளது.

விற்பவரும் வாங்குபவரும் பொருட்களில் உள்ள குறைகளை மறைக்காமல் தெளிவுபடுத்தி வியாபாரம் செய்தல்.

996. ''விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக்குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் (அருள் வளம்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார்.

(பலரகப் பேரீச்சங்கனிகளும் கலந்திருக்கும்) பேரீச்சம் பழக் கலவையை விற்கலாமா?

997. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். பலதரப்பட்ட பேரீச்சம் பழங்களின் கலவை எங்களுக்கு வழங்கப்படும்; அதை ஒரு ஸாவுக்கு இரண்டு ஸாவு என்ற அடிப்படையில் நாங்கள் விற்பனை செய்வோம். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'ஒரு ஸாவுக்கு இரண்டு ஸாவும் கூடாது. இரண்டு திர்ஹங்களுக்கு ஒரு திர்ஹமும் கூடாது!'' என்று கூறினார்கள்.

வட்டி கொடுப்பவர்.

998. அவ்ன் இப்னு அபீ ஜுஹைஃபா(ரஹ்) அவர்கள் கூறினார்: இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுப்பதைத் தொழிலாகக் கொண்ட ஓர் அடிமையை என் தந்தை (அபூ ஜுஹைஃபா(ரலி)) விலைக்கு வாங்கினார்கள். (பிறகு, அவரின் தொழில் கருவிகளை உடைத்துவிட்டார்கள்.) இது தொடர்பாக அவர்களிடம் நான் (விளக்கம்) கேட்க, அவர்கள் 'நபி(ஸல்) அவர்கள் நாய் விற்ற கிரயத்தையும் இரத்தத்தின் கிரயத்தை (இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுப்பதற்குப் பெறுகிற கூலியை)யும் தடை செய்தார்கள்; பச்சை குத்துவதையும், பச்சை குத்திக் கொள்வதையும் தடை செய்தார்கள்; வட்டி உண்பதையும் வட்டி கொடுப்பதையும் தடை செய்தார்கள்! மேலும், உருவம் வரைபவனைச் சபித்தார்கள்!'' என்று பதிலளித்தார்கள்.

999. ''(பொய்) சத்தியம் செய்வது சரக்கை (சுலபமாக) விற்பனை செய்ய உதவும்; ஆனால், பரக்கத் (எனும் அருள் வளத்)தை அது அழித்துவிடும்! 'என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பொற்கொல்லரும் கருமானும்.

1000. கப்பாப்(ரலி) அறிவித்தார். நான் அறியாமைக் காலத்தில் கருமானாக இருந்தேன். ஆஸ் இப்னு வாயில் என்பவன் எனக்குக் கடன் தர வேண்டியிருந்தது. அதை வாங்குவதற்காக அவனிடம் நான் சென்றேன். அப்போது அவன், 'நீ முஹம்மதை நிராகரிக்காமல் (ஏற்றுக் கொண்டு) இருக்கும்வரை (உன்னிடம் வாங்கிய கடனை) உனக்குத் (திருப்பித்) தர மாட்டேன்!'' என்றான். நான் 'அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்து, திரும்ப நீ எழுப்பப்படும் வரை நான் முஹம்மதை நிராகரிக்க மாட்டேன்!' எனக் கூறினேன். அதற்கவன் 'நான் மரணித்து எழுப்பப்படும் வரை என்னை விட்டுவிடு! அப்போது பொருட் செல்வமும் குழந்தைச் செல்வமும் எனக்கு வழங்கப்படும்; அப்போது உன் கடனை நான் தீர்த்து விடுகிறேன்!'' என்றான். அப்போதுதான் 'நம்முடைய வசனங்களை நிராகரித்து, '(மறுமையிலும்) எனக்கு நிச்சயமாக பொருட் செல்வமும் குழந்தைச் செல்வமும் வழங்கப்படும்!' என்று கூறியவனை (நபியே!) நீர் பார்த்தீரா? (பின்னர் நடக்கவிருக்கும்) மறைவான விஷயத்தை அவன் முன்கூட்டியே தெரிந்து கொண்டானா? அல்லது (இப்படியெல்லாம் தனக்கு வழங்கப்படவேண்டுமென்று) கருணையாளான இறைவனிடத்திலிருந்து உறுதிமொழி (ஏதேனும்) பெற்றிருக்கிறானா?' என்ற (திருக்குர்ஆன் 19:77, 78) இறைவசனம் அருளப்பட்டது!''

தையல்காரன்.

1001. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ''ஒரு தையல்காரர் தாம் தயாரித்த விருந்துக்காக நபி(ஸல்) அவர்களை அழைத்தார். நானும் நபி(ஸல்) அவர்களுடன் அந்த விருந்துக்குச் சென்றேன். அவர் ரொட்டியையும் உலர்த்தி போடப்பட்ட குழம்பையும் நபி(ஸல்) அவர்களின் முன்னே வைத்தார்; நபி(ஸல்) அவர்கள் தட்டின் ஓரங்களில் சுரைக்காயைத் தேடுவதை பார்த்தேன். அன்றிலிருந்து நான் சுரைக்காயை விரும்பக் கூடியவனாகி விட்டேன்!''

கழுதை மற்றும் கால்நடைகளை வாங்குதல்.

1002. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போரில் (பங்கெடுத்துவிட்டுத் திரும்பிக் கொண்டு) இருந்தேன்; அப்போது என்னுடைய ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது. நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்து. 'ஜாபிரா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்!' என்றேன். 'என்ன விஷயம் (ஏன் பின்தங்கி விட்டீர்)?' என்று கேட்டார்கள். 'என் ஒட்டகம் களைந்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது; அதனால் நான் பின்தங்கி விட்டேன்!' என்றேன். நபி(ஸல்) அவர்கள் கீழே இறங்கி தலைப்பகுதி வளைந்த ஒரு கைத்தடியால் என்னுடைய ஒட்டகத்தை தட்டி (எழுப்பி)னார்கள். பிறகு 'ஏறுவீராக!' என்றார்கள். நான் (வாகனத்தில்) ஏறினேன். நபி(ஸல்) அவர்களை விட என்னுடைய ஒட்டகம் முந்தாதவாறு அதைக் கட்டுப்படுத்தினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள். 'நீர் மணமுடித்து விட்டீரா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்!' என்றேன். 'கன்னியையா? ஏன்று கேட்க வாழ்ந்த அனுபவமுள்ள பெண்ணைத்தான்!' என்றேன். நபி(ஸல்) அவர்கள்,நீ 'கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? அவள் உம்முடனும் நீர் அவளுடனும் விளையாடலாமே!' என்று கூறினார்கள். நான், 'எனக்குச் (சிறிய வயதுடைய) சகோதரிகள் உள்ளனர்! அவர்களை அரவணைத்து, அவர்களுக்குத் தலைவாரி, அவர்களைப் பராமரிக்கக் கூடிய ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்று விரும்பினேன்!' என்றேன். நபி(ஸல்) அவர்கள் 'இப்போது ஊருக்கு செல்லப் போகிறீர்! ஊர் சென்றதும் நிதானத்துடன் நடந்து கொள்வீராக!' என்று கூறிவிட்டு பின்னர். 'உம்முடைய ஒட்டகத்தை எனக்கு விற்று விடுகிறீரா?' என்றார்கள். நான் 'சரி (விற்று விடுகிறேன்!)' என்றேன். அவர்கள் என்னிடமிருந்து, ஓர் ஊக்கியா எடை (தங்கத்து)க்குப் பகரமாக அதை வாங்கினார்கள். பிறகு, எனக்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) சென்றார்கள். நான் மறுநாள் சென்றடைந்தேன். நாங்கள் பள்ளிவாசலுக்கு வந்தபோது அதன் நுழைவாயிலில் நபி(ஸல்) அவர்கள் நின்றிருந்தார்கள். 'இப்போதுதான் வருகிறீரா? என்று அவர்கள் (என்னைப் பார்த்துக்) கேட்டார்கள். நான் 'ஆம்!' என்றேன். 'உம்முடைய ஒட்டகத்தை விட்டுவிட்டு உள்ளே சென்று இரண்டு ரக்அத்துகள் தொழுவீராக!' என்றார்கள். அவ்வாறே, நான் உள்ளே சென்று தொழுதேன். நபி(ஸல்) அவர்கள் எனக்காக ஓர் ஊக்கியா (தங்கத்தை) எடை போடுமாறு பிலால்(ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். எனக்காக பிலால்(ரலி) எடை போட்டுச் சற்று தாரளமாகவே நிறுத்தார்கள். பிறகு நான் திரும்பிச் சென்று விட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'ஜாபிரை என்னிடம் அழைத்து வாரும்!' என்றார்கள். நான் (மனத்திற்குள்) 'இப்போது என் ஒட்டகம் திருப்பித் தரப்பட்டு விடும் அதைவிட எனக்கு வெறுப்பானது வேறொன்றுமில்லை' என்று கூறிக் கொண்டேன். நபி(ஸல்) அவர்கள் 'உம்முடைய ஒட்டகத்தை எடுத்துக் கொள்வீராக! அதனுடைய விலையையும் நீரே வைத்துக் கொள்வீராக!' எனக் கூறினார்கள்.

1003. அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அறிவித்தார். இங்கே (மக்காவில்) நவ்வாஸ் என்ற பெயருடைய ஒருவர் இருந்தார். அவரிடம் அடங்காத் தாகமுடைய ஓர் ஒட்டகம் இருந்தது. இப்னு உமர்(ரலி) அந்த ஒட்டகத்தை நவ்வாஸுடைய கூட்டாளி ஒருவரிடமிருந்து வாங்கினார்கள். அந்தக் கூட்டாளி நவ்வாஸிடம் சென்று 'அந்த ஒட்டகத்தை நாம் விற்றுவிட்டோம்!'' என்றார். நவ்வாஸ் 'யாரிடம் விற்றீர்?' என்று கேட்டதற்கு அவர், 'இன்ன பெரியாரிடம் விற்றேன்!'' என்றார். அதற்கு நவ்வாஸ் 'உமக்குக் கேடு உண்டாகட்டும்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அந்தப் பெரியவர் இப்னு உமர்(ரலி) தாம்!'' என்று கூறிவிட்டு இப்னு உமர்(ரலி) அவர்களிடம் சென்றார். 'என்னுடைய பங்காளி அடங்காத் தாகமுள்ள ஒட்டகத்தை உங்களிடம் விற்றுவிட்டார்;. அவர் உங்களை யாரென்று அறியவில்லை!'' என்று கூறினார். அதற்கு இப்னு உமர்(ரலி) 'அப்படியானால், அதை ஓட்டிச் செல்வீராக!'' என்றார்கள். அவர் அதை ஓட்டிச் செல்ல முயன்றதும். இப்னு உமர்(ரலி) 'அதை விட்டுவிடுவீராக! 'தொற்று நோய் கிடையாது!' என்ற நபி(ஸல்) அவர்களின் தீர்ப்பை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்! (இந்த நோயுள்ள ஒட்டகத்தினால் என்னுடைய ஏனைய ஒட்டகங்களுக்கு பாதிப்பு ஏற்படாது!)'' என்றார்கள்.

இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுப்பவர்.

1004. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ''அபூ தைபா என்பவர் நபி(ஸல்) அவர்களுக்கு இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுத்தார்; அவருக்கு நபி(ஸல்) அவர்கள் ஒரு ஸாவு பேரீச்சம் பழம் கொடுக்குமாறு உத்தரவிட்டார்கள். (இரத்தம் குத்தி (உறிஞ்சி) எடுத்த அபூ தைபா (அடிமையாக இருந்ததால்) அவரின் எஜமானர்களிடம் அவரின் நிலவரியைக் குறைக்குமாறு உத்தரவிட்டார்கள்!''

1005. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ''நபி(ஸல்) அவர்கள் (ஒருவரிடம்) இரத்தம் குத்தி எடுத்தார்கள். இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுத்தவருக்குக் (கூலி) கொடுத்தார்கள். அது ஹராமாக (தடை செய்யப்பட்டதாக) இருந்திருந்தால் (அவ்வாறு கூலி) கொடுத்திருக்க மாட்டார்கள்!.

1006. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நான் உருவங்கள் வரையப்பட்ட ஒரு தலையணையை விலைக்கு வாங்கினேன். அதை நபி(ஸல்) அவர்கள் பார்த்துவிட்டு வீட்டிற்குள் வராமல் வாசலில் நின்றுவிட்டார்கள். அவர்களின் முகத்தில் அதிருப்தியை நான் உணர்ந்தேன். அப்போது நான் 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்! நான் என்ன குற்றம் செய்தேன்?' என்று வினவினேன். நபி(ஸல்) அவர்கள் 'இது என்ன தலையணை?' என்று கேட்டார்கள். 'நீங்கள் இதன் மேல் அமர்வதற்காகவும் தலைக்கு வைத்துக் கொள்வதற்காகவும் உங்களுக்காக நான் இதை வாங்கினேன்!'' என்றேன். நபி(ஸல்) அவர்கள், 'இந்த உருவங்களை வரைந்தவர்கள் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள்; 'நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்படும். எந்த வீட்டில் உருவங்கள் இருக்கின்றனவோ அங்கே வானவர்கள் வர மாட்டார்கள்!'' எனக் கூறினார்கள்.

1007. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம்; நான் (என் தந்தை) உமர்(ரலி) அவர்களுக்குச் சொந்தமான முரட்டு ஒட்டகத்தின் மீது இருந்தேன். அது என்னை மீறிக் கூட்டத்தினருக்கு முன்னால் சென்றது. உமர்(ரலி) அதை அதட்டிப் பழைய இடத்திற்குத் திருப்பியனுப்பினார்கள். மீண்டும் அது முன்னே சென்றது. அப்போதும் உமர்(ரலி) அதை அதட்டிப் பழைய இடத்திற்குத் திருப்பியனுப்பினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் உமர்(ரலி) அவர்களிடம், 'இதை எனக்கு விற்று விடுவீராக!' என்றார்கள். உமர்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! இது தங்களுக்கு உரியது!' என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், 'எனக்கு இதை விலைக்குத் தாரும்!'' என்றார்கள். உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களுக்கு அதை விற்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்) 'உமர் மகன் அப்துல்லாஹ்வே! இது உமக்குரியது! நீர் விரும்பியவாறு இதைப் பயன்படுத்திக் கொள்!'' என்றார்கள்.

வியாபாரத்தில் மோசடி கூடாது.

1008. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் தாம் வியாபாரத்தின்போது ஏமாற்றப்படுவதாகக் கூறினார்; அதற்கு நபி(ஸல்) அவர்கள். 'நீர் எதையேனும் விற்றால் அல்லது வாங்கினால் 'ஏமாற்றுதல் இருக்கக் கூடாது!'' என்று கூறி விடுவீராக! (ஏமாற்றியது தெரியவந்தால் உமக்கு வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமையுண்டு!)'' என்றார்கள்.

1009. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ''ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள்; வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும்போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர்வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர்வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கே அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே!'' என கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை புதையுண்டு போகத்தான் செய்வார்கள்; எனினும் (அதற்குப்) பின்னர் அவரவரின் எண்ணத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள்!'' என்றார்கள்.

1010. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் கடைவீதியில் இருந்தார்கள். அப்போது ஒருவர் 'அபுல் காஸிமே! (காஸிமின் தந்தையே!)'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கித் திரும்பினார்கள். அவர், (வேறொருவரைச் சுட்டிக் காட்டி) 'இவரைத்தான் அழைத்தேன்! (உங்களை அழைக்கவில்லை!)'' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள். 'என் பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள்! என்னுடைய குன்யத்தை ('அபுல் காஸிம்' என்னும் என்னுடைய குறிப்புப் பெயரை) சூட்டிக் கொள்ளாதீர்கள்!'' என்று கூறினார்கள்.

1011. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு பகல் நேரத்தில் புறப்பட்டார்கள். அவர்கள் என்னுடன் பேசவில்லை. நானும் அவர்களுடன் பேசவில்லை. 'பனூ கைனுகா' கடைவீதிக்கு அவர்கள் வந்ததும் ஃபாத்திமா(ரலி) அவர்களின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தார்கள். 'இங்கே அந்தப் பொடிப்பையன் இருக்கிறானா?' என்று கேட்டார்கள். ஃபாத்திமா(ரலி) தம் மகனைச் சற்று நேரம் தாமதப்படுத்தினார். 'அவர் தம் மகனுக்கு நறுமண மாலையை அணிவித்துக் கொண்டிருக்கிறார்' என்றோ அல்லது 'மகனைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறார்' என்றோ நான் நினைத்தேன். அப்போது ஃபாத்திமா(ரலி) அவர்களின் மகன் (ஹஸன்(ரலி)) ஓடிவந்தார். உடனே, நபி(ஸல்) அவர்கள் அவரைக் கட்டியணைத்து முத்தமிட்டார்கள். 'இறைவா! இவனை நீ நேசி! இவனை நேசிப்பவர்களையும் நீ நேசி!'' என்று கூறினார்கள்.

1012. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ''நபி(ஸல்) அவர்களின் காலத்தில் மக்கள் உணவுப் பொருட்களைச் சந்தைக்குக் கொண்டுவரும் வியாபாரிகளிடம் வழிமறித்து வாங்கிக் கொண்டிருந்தனர். 'உணவுப் பொருட்களை, விற்பனை செய்யப்படும் இடத்திற்கு (சந்தைக்கு) கொண்டு சென்ற பின்புதான் விற்க வேண்டும். வாங்கிய இடத்திலேயே அவற்றை விற்கக் கூடாது!' என்று வியாபாரிகளைத் தடுப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் ஆட்களை அனுப்பி வைத்தார்கள்!.''உணவுப் பொருளை வாங்கினால், அது (முழுமையாக) கைக்கு வந்து சேருவதற்கு முன்பு அதை விற்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்!''

கடைத்தெருவில் கத்திப்பேசி சச்சரவு செய்வது வெறுப்புக் குரியதாகும்.

1013. அதா இப்னு யஸார்(ரஹ்) அறிவித்தார். நான் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அவர்களைச் சந்தித்து, 'தவ்ராத்தில் நபி(ஸல்) அவர்களைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் வர்ணனையை எனக்குச் சொல்லுங்கள்!'' என்றேன். அவர்கள், 'இதோ சொல்கிறேன்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! குர்ஆனில் கூறப்படும் அவர்களின் சில பண்புகள் தவ்ராத்திலும் கூறப்பட்டுள்ளன. 'நபியே! நிச்சயமாக உம்மை சாட்சி அளிப்பவராகவும், நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிப்பவராகவும், எழுதப் படிக்கத் தெரியாத பாமரர்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பியிருக்கிறோம்! நீர் என்னுடைய அடிமையும் என்னுடைய தூதருமாவீர்! தம் எல்லாக் காரியங்களிலும் இறைவனையே நம்பியிருப்பவரென்று உமக்கு நான் பெயரிட்டுள்ளேன்!'' (இவ்வாறெல்லாம் கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்களின் அடையாளங்களைக் கூறும் விதத்தில்) 'அவர் கடின சித்தம் கொண்டவராகவோ, முரட்டுத்தனமுடையவராகவோ, கடைவீதிகளில் கத்திப் பேசி சச்சரவு செய்பவராகவோ இருக்க மாட்டார்! தீமைக்கு பதிலாகத் தீமையைச் செய்யமாட்டார்; மாறாக, மன்னித்து கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்! அவர் மூலம் வளைந்த மார்க்கத்தை நிமிர்த்தும்வரை அல்லாஹ் அவ(ரின் உயி)ரைக் கைப்பற்ற மாட்டான்! மக்கள் 'லாயிலாஹ இல்லல்லாஹு' என்று கூறுவார்கள்; அதன் மூலம் குருட்டுக் கண்களும், செவிட்டுக் காதுகளும், மூடப்பட்ட உள்ளங்களும் திறக்கப்படும்!' என்று அதில் அவர்களைக் குறித்து வர்ணிக்கப்பட்டுள்ளது!'' என பதிலளித்தார்கள்.

1014. ஜாபிர்(ரலி) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஹராம்(ரலி)தான் கடன்பட்ட நிலையில் மரணித்துவிட்டார்கள். அவருக்குக் கடன் கொடுத்தவர்கள் அவரின் கடனில் சிறிது தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதற்காக நபி(ஸல்) அவர்களின் உதவியை நாடினேன். நபி(ஸல்) அவர்கள் (கடனைத் தள்ளுபடி செய்யுமாறு) கோரியபோது அவர்கள் அதைச் செய்யவில்லை. அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'நீர் சென்று உம்முடைய பேரீச்சம் பழத்தில் அஜ்வா எனும் ரகத்தைத் தனியாகவும் இப்னு ஸைத் எனும் ரகத்தைத் தனியாகவும் ஒவ்வொரு ரகத்தையும் தனித்தனியாகவும் வகைப்படுத்துவீராக! பிறகு என்னிடம் அனுப்புவீராக!'' என்றனர். அவ்வாறு நான் செய்து நபி(ஸல்) அவர்களிடம் அனுப்பினேன். நபி(ஸல்) அவர்கள் வந்து அதன் மேற்புறத்திலோ நடுப்புறத்திலோ அமர்ந்தார்கள். பிறகு என்னிடம் '(கடன் கொடுத்த) இக்கூட்டத்தினருக்கு அளந்து கொடுப்பீராக!'' என்றார்கள். அவர்களுக்குக் கொடுக்க வேண்டியதை முழுமையாக நான் அளந்து கொடுத்தேன். என்னுடைய பேரீச்சம் பழத்தில் எதுவும் குறையாமல் அப்படியே மீதமிருந்தது. மற்றோர் அறிவிப்பில் 'பேரீச்சம் குலையை வெட்டிக் கடனை நிறைவேற்று!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உள்ளது.

அளப்பது விரும்பத்தக்கது.

1015. ''உங்கள் உணவுகளை அளந்து கொள்ளுங்கள்; உங்களுக்கு பரக்கத் செய்யப்படும் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிக்தாம் இப்னு மஃதீ கரிப் அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த ஸாவு, முத்து ஆகியவற்றில் பரக்கத் உள்ளது.

1016. ''இப்ராஹீம்(அலை) மக்காவைப் புனித நகராக்கினார்கள். அதற்காக பிரார்த்தித்தார்கள். இப்ராஹீம்(அலை) மக்காவைப் புனித நகராக்கியது போல் நான் மதீனாவைப் புனித நகராக்கினேன். இப்ராஹீம்(அலை) மக்காவிற்காக பிரார்த்தித்தது போல் நான் மதீனாவிற்காக அதன் ஸாவு, முத்து ஆகியவற்றில் (பரக்கத்துக்காக) பிரார்த்தித்தேன் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.

உணவுப் பொருட்களை விற்பதும் பதுக்குவதும்.

1017. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ''குத்துமதிப்பாக உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த மக்கள், அவற்றைத் தம் இருப்பிடங்களுக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு முன்பு. வழியிலேயே விற்றதற்காக நபி(ஸல்) அவர்களின் காலத்தில் அடிக்கப்பட்டதை நான் பார்த்துள்ளேன்!''

1018. தாவூஸ்(ரஹ்) அறிவித்தார். 'உணவுப் பொருள் கைக்கு வந்து சேர்வதற்கு முன்பு அதை விற்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்!'' என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். 'அது எவ்வாறு?' என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) 'உணவுப் பொருள் அதை வாங்கியவரின் கைக்குப் போய்ச் சேராத (நிலையில் விற்கப்படுவ)தால் இது (உண்மையில்) காசுக்குக் காசை விற்பதாகும்'' என்று பதிலளித்தார்கள்.

1019.
''தங்கத்திற்கு வெள்ளியை மாற்றிக் கொள்வது, உடனுக்குடன் மாற்றினாலே தவிர, வட்டியாகும்! தீட்டிய கோதுமைக்குத் தீட்டிய கோதுமையை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றினாலே தவிர! பேரீச்சம் பழத்திற்குப் பேரீச்சம் பழத்தை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும். உடனுக்குடன் மாற்றினாலே தவிர! வாற்கோதுமைக்கு வாற்கோதுமையை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றினாலே தவிர! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உமர்(ரலி) அறிவித்தார்.

1020. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 'கிராமத்திலிருந்து (விற்பனைக்காகச் சரக்கு கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்! வாங்கும் எண்ணமின்றி விலை எற்றி விடுவதற்காக அதிக விலைக்குக் கேட்க வேண்டாம்! (விலை உயர்த்தி விற்பதற்காக, அதிக விலைக்குக் கேட்க வேண்டாம்! (விலை உயர்த்தி விற்பதற்காக, ஆளை ஏற்பாடு செய்து, அதிக விலைக்குக் கேட்கச் செய்வதும் கூடாது!) ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது, தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிட வேண்டாம்! ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரர் பெண் பேசிக் கொண்டிருக்கும்போது, இடையில் குறுக்கிட்டுப் பெண் பேச வேண்டாம்! ஒரு பெண், தன் சகோதரியை தலாக் (விவாகரத்து செய்து) விடுமாறு (கணவனிடம்) கேட்டுத் தன்னுடைய பாத்திரத்தை நிரப்பிக் கொள்ள வேண்டாம்!'' என்று நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்!''

ஏலத்தில் விற்பது.

1021. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். ஒருவர் தமக்குச் சொந்தமான அடிமை தம் மரணத்திற்குப் பின் விடுதலையாவார் என்று கூறியிருந்தார். அம்மனிதருக்குப் பொருள் தேவை ஏற்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் அந்த அடிமையைப் பெற்று, 'இவரை என்னிடமிருந்து வாங்கிக் கொள்பவர் யார்?' என்று கேட்டார்கள். அவரை நுஅய்கி இப்னு அப்தில்லாஹ்(ரலி) இன்ன விலைக்கு வாங்கினார்கள். நபி(ஸல்) அவர்கள், அவரிடம் அந்த அடிமையைக் கொடுத்தார்கள்.

தன் கட்டுப்பாட்டில் இல்லாதவற்றையும், தன் உடைமையல்லாதவற்றையும் அளவோ, தரமோ, தன்மையோ தெரியாதவற்றையும் விற்பதும் பிறக்காத உயிரினத்தை விற்பதும்.

1022. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ''நபி(ஸல்) அவர்கள் பிறக்காத உயிரினத்தை விற்பதற்குத் தடை விதித்தார்கள். அறியாமைக் கால மக்கள் இத்தகைய வியாபாரம் செய்து வந்தனர்! 'இந்த ஒட்டகம் குட்டி போட்டு, அந்தக் குட்டிக்குப் பிறக்கும் குட்டியை நான் வாங்கிக் கொள்கிறேன்! (அல்லது விற்கிறேன்!)' என்று செய்யப்படும் வியாபாரமே இது!''

மடி கனக்கச் செய்யப்பட்ட பிராணியை வாங்கியவர் விரும்பினால் அதைத் திருப்பிக் கொடுத்து விடலாம்; ஆனால், (திருப்பித் தரும்போது) கறந்த பாலுக்காக ஒரு ஸாவு பேரீச்சம் பழம் கொடுக்க வேண்டும்.

1023. ''மடி கனக்கச் செய்யப்பட்ட ஆட்டை யாரேனும் வாங்கினால் அதில் பால் கறந்து பார்த்துத் திருப்தியடைந்தால் வைத்துக் கொள்ளலாம்; திருப்தியடையாவிட்டால் கறந்த பாலுக்காக ஒரு ஸாவு பேரீச்சம் பழம் கொடுக்க வேண்டும்! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

விபச்சாரம் செய்யும் அடிமையை விற்பது.

1024. ''ஓர் அடிமைப் பெண் விபச்சாரம் செய்து, அது நிரூபணமானால் அவளுக்கு. எஜமானன் கசையடி கொடுக்கட்டும்! (அவளை தண்டித்து விட்டதால்) குற்றம் சொல்ல வேண்டாம்! பிறகு மறுபடியும் அவள் விபச்சாரம் செய்தால் அவளுக்குக் கசையடி கொடுக்கட்டும்! குற்றம் சொல்ல வேண்டாம்! மூன்றாம் முறையும் விபச்சாரம் செய்தால் அவளை (அவளுடைய எஜமானன்) முடியாலான ஒரு கயிற்றுக்காகவாவது விற்று விடட்டும்! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1025. ''(சந்தைக்கு வரும்) வணிகர்களை இடைமறித்து வாங்காதீர்கள்! கிராமத்தி லிருந்து (சரக்கு கொண்டு) வருபவர்களுக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்!' 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். கிராமத்திலிருந்து வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்!'' என்பதன் பொருள் என்ன?' என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன்; அதற்கு அவர்கள் 'இடைத் தரகராக ஆகக்கூடாது! (என்பதுதான் அதன் பொருள்!)' என பதிலளித்தார்கள்'' என்று தாவூஸ்(ரஹ்) கூறினார்.

1026. ''ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடக் கூடாது. மேலும் விற்பனைப் பொருள்கள் சந்தைக்கு வந்து இறங்கு முன் வாங்காதீர்கள் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்; என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

உலர்ந்த திராட்சைக்கு உலர்ந்த திராட்சையை விற்பதும் உணவுப் பொருளுக்கு உணவுப் பொருளை விற்பதும்.

1027. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ''நபி(ஸல்) அவர்கள் 'முஸாபனா எனும் வியாபாரத்தைத் தடை செய்தார்கள். 'முஸாபனா' என்பது (மரத்திலுள்ள) பேரீச்சம் பழத்தை அளக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சம் பழத்திற்கு விற்பதும் (கொடியிலுள்ள) திராட்சைப் பழத்தை அளக்கப்பட்ட உலர்ந்த திராட்சைக்கு விற்பதுமாகும்!''

வாற்கோதுமைக்கு வாற்கோதுமை விற்பது.

1028. மாலிக் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவித்தார். நான் நூறு தீனார்களை (திர்ஹமாக) மாற்றித் தருமாறு கேட்டேன். தல்ஹா இப்னு உபைதில்லாஹ்(ரலி) என்னை அழைத்தார்கள். அவர்களிடம் வியாபாரம் பேசியதும் என்னிடமிருந்து தங்க நாணயங்களைப் பெற்றுக் கொண்டு கையில் வைத்துக் குலுக்கினார்கள். பிறகு 'ஃகாபாவிலிருந்து நம்முடைய கருவூலக் காப்பாளர் வரும்வரை சில்லறை தர முடியாது!'' என்றார்கள். இதை உமர்(ரலி) கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவரிடமிருந்து சில்லறையைப் பெறாமல் நீர் பிரியக் கூடாது. ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் 'தங்கத்திற்குத் தங்கத்தை மாற்றிக் கொள்வது வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றினாலே தவிர! கோதுமைக்கு கோதுமையை மாற்றிக் கொள்வது வட்டியாகும் உடனுக்குடன் மாற்றிக் கொள்வது தவிர. பேரீச்சம் பழத்திற்குப் பேரீச்சம் பழத்தை மாற்றிக் கொள்வது வட்டியாகும். உடனுக்குடன் மாற்றினாலே தவிர!'' என்று கூறினார்கள்!'' என்று உமர்(ரலி) சொன்னார்கள்.

தங்கத்திற்கு தங்கம்.

1029. ''சரிக்குச் சரியாகவே தவிர, தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்! சரிக்குச் சரியாகவே தவிர. வெள்ளிக்கு வெள்ளியை விற்காதீர்கள்! தங்கத்திற்கு வெள்ளியையும் வெள்ளிக்குத் தங்கத்தையும் விரும்பியவாறு விற்றுக் கொள்ளுங்கள் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1030. ''சரிக்குச் சரியாகவே தவிர, தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்! ஒன்றை விட மற்றொன்றை அதிகமாக்கி விடாதீர்கள்! சரிக்கச் சரியாகவே தவிர வெள்ளிக்கு வெள்ளியை விற்காதீர்கள்! ஒன்றை விட மற்றொன்றை அதிகமாக்காதீர்கள்! ஒன்று ரொக்கமாகவும் மற்றொன்று தவணையாகவும் இருக்கும் நிலையில் விற்காதீர்கள்! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.

தங்க நாணயத்திற்குத் தங்க நாணயத்தைக் கடனுக்கு விற்றல்.

1031. அபூ ஸாலிஹ் அஸ் ஸய்யாத்(ரலி) அறிவித்தார். ''தங்க நாணயத்திற்கு (தீனாருக்கு)த் தங்க நாணயத்தையும் வெள்ளி நாணயத்திற்கு (திர்ஹத்திற்கு) வெள்ளி நாணயத்தையும் விற்கலாம்!' என அபூ ஸயீத்(ரலி) கூறினார். அவரிடம் நான் இப்னு அப்பாஸ்(ரலி) இவ்வாறு கூறுவதில்லையே எனக் கேட்டேன். அதற்கு அபூ ஸயீத்(ரலி) 'நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் நீங்கள் இதை நபி(ஸல்) அவர்கள் வழியாகச் செவியுற்றீர்களா? அல்லது அல்லாஹ்வின் வேதத்தில் பார்த்தீர்களா? என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) அவ்வாறு நான் கூறவில்லை. என்னைவிட நீங்கள் அல்லாஹ்வின் தூதரைப் பற்றி நன்கறிந்தவர் என்றாலும், கடனில் தவிர வட்டி ஏற்படாது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உஸாமா எனக்கு கூறினார் என்று விடையளித்தார் எனப் பதிலளித்தார்.

தங்கத்திற்கு வெள்ளியைக் கடனாக விற்றல்.

1032. அபுல் மின்ஹால் அறிவித்தார். பராஉ இப்னு ஆஸிப்(ரலி), ஸைத் இப்னு அர்கம்(ரலி) ஆகியோரிடம் நாணயமாற்று பற்றிக் கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் கடனாக வெள்ளிக்குத் தங்கத்தை விற்பதைத் தடை செய்தார்கள் என அவ்விருவரும் பதில் கூறினார். பிறகு இருவரும் மற்றவரைச் சுட்டிக் காட்டி, 'இவர் என்னைவிடச் சிறந்தவர்' என்றனர்.

'முஸாபனா' எனும் வியாபாரம்.

மரத்திலுள்ள பேரீச்சம் பழத்தை உலர்ந்த பேரீச்சம் பழத்திற்கு விற்பதும் கொடியிலுள்ள திராட்சையை உலர்ந்த திராட்சைக்கு விற்பதும் அராயா எனும் வியாபாரமும் முஸாபனா எனப்படும்.

நபி(ஸல்) அவர்கள் முஸாபனா முஹாகலா (பயிர் முற்றுவதற்கு முன்பே விற்பனை செய்தல்) ஆகிய வியாபாரங்களைத் தடை செய்ததாக அனஸ்(ரலி) கூறினார்.

1033. ''மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையும்வரை விற்க வேண்டாம்! மேலும், உலர்ந்த (கொய்யப்பட்ட) கனிகளுக்காக மரத்திலுள்ள கனிகளையும் விற்க வேண்டாம்! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள். 'இதன் பிறகு நபி(ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகளுக்கு உலர்ந்த அல்லது செங்காயான பேரீச்சங்கனிகளை விற்பதற்கு 'அராயா'வில் அல்லாதவற்றில் அனுமதிக்கவில்லை!' என ஸைத் இப்னு ஸாபித்(ரலி) கூறினார்.

மரத்திலுள்ள கனிகளைத் தங்கம் அல்லது வெள்ளிக்கு விற்பது.

1034. ஜாபிர்(ரலி) அறிவித்தார். மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையும்வரை விற்பதற்கு நபி(ஸல்) தடை செய்தார்கள். மேலும், அவற்றில் எதையும் தீனார், திர்ஹம் ஆகியவற்றிற்கே தவிர விற்கக் கூடாது அராயாவைத் தவிர என்று கூறினார்கள்.

1035. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் அராயாவில் ஐந்து வஸக் அல்லது அதைவிடக் குறைந்த அளவிற்கு அனுமதி அளித்தார்கள்.

பலன் உறுதிப்படும் நிலையை அடைவதற்கு முன் மரத்திலுள்ள கனிகளை விற்றல்.

1036. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மக்கள் மரத்திலுள்ள கனிகளை விற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். பழங்களைப் பறித்து வாங்குபவரிடம் ஒப்படைக்கும் நேரம் வந்ததும் வாங்கியவர், 'இது அழுகிவிட்டது. இது நோயால் தாக்கப்பட்டிருக்கிறது. இது செங்காயாக இருக்கிறது. இன்னும் பல குறைகள் இருக்கின்றன' எனக் கூறி சச்சரவு செய்வார். நபி(ஸல்) அவர்களிடம் இத்தகைய புகார்கள் பெருத்தபோது 'மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையும்வரை விற்காதீர்கள்!'' என்று ஆலோசனை போல் கூறினார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி), ஸுரையா எனும் நட்சத்திரம் (தோன்றக் கூடிய, பேரீச்சம் பழம் கனியும் பருவமான இளவேனிற்காலம்) வரும்வரை தம் தோட்டத்திலுள்ள மரங்களின் கனிகளை விற்க மாட்டார்.'அப்பருவத்தில் செங்காய் எது? பழுத்தது எது? என்று அடையாளம் தெரியும்' என அவரின் மகன் காரிஜா கூறுகிறார்.

1037. ஸயீத் இப்னு மீனா அறிவித்தார். 'மரத்திலுள்ள கனிகள் பக்குவம் அடையும் வரை விற்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்' என்று ஜாபிர்(ரலி) கூறினார். அவரிடம் 'பக்குவமாகுதல் என்றால் என்ன?' என்று கேட்கப்பட்டது. அதற்கவர், 'உண்பதற்கு ஏற்றவாறு சிவப்பாகவோ மஞ்சளாகவோ மாறுவது' என விடையளித்தார்.

பலன் உறுதிப்படும் நிலையை அடைவதற்கு முன் பழங்களை விற்று, அதற்கேதும் ஆபத்து ஏற்பட்டால் விற்றவரே அதற்கு பொறுப்பாளி ஆவார்.

1038. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். மரத்திலுள்ள கனிகள் பக்குவம் அடைவதுவரை விற்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். நபி(ஸல்) அவர்களிடம் 'பக்குவமடைவது என்றால் என்ன?' என்று கேட்கப்பட்டதற்கு 'சிவக்கும்வரை'' என்று விடையளித்துவிட்டு, 'அல்லாஹ் மரத்திலுள்ள கனிகளை அழித்துவிட்டால்...? எந்த அடிப்படையில் உங்களில் ஒருவர் தம் சகோதரரின் பொருளை எடுத்துக் கொள்ள முடியும்?' எனக் கேட்டார்கள். ஒருவர் மரத்திலுள்ள கனிகளைப் பலன் உறுதிப்படும் நிலையை அடைவதற்கு முன் வாங்கி அதற்கேதேனும் தீங்கு ஏற்பட்டால் மரத்தின் உரிமையாளரே அதற்குப் பொறுப்பாளி ஆவார் என்று இப்னு ஷிஹாப் கூறுகிறார். ''பலன் உறுதிப்படும் நிலை அடையும்வரை மரத்திலுள்ள கனிகளை விற்காதீர்கள்; மரத்திலுள்ள கனிகளை உலர்ந்த கனிகளுக்கு விற்காதீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

மட்டமான பேரீச்சம் பழத்தை அதைவிடச் சிறந்த பேரீச்சம் பழத்திற்கு விற்பது.

1039. அபூ ஸயீத்(ரலி), அபூ ஹுரைரா(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரைக் கைபரின் ஆளுநராக நியமித்தார்கள். அவர் நபி(ஸல்) அவர்களிடம் உயர்ரகப் பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்தார். நபி(ஸல்) அவர்கள், 'கைபரில் உள்ள பேரீச்சம் பழங்கள் அனைத்துமே இதே தரத்திலமைந்தவையா?' என்று கேட்டார்கள். அதற்கவர், அல்லாஹ்வின் மீது ஆணையாக! 'இல்லை. இறைத்தூதர் அவர்களே! மட்டமான பேரீச்சம் பழத்தில் இரண்டு ஸாவுக்கு இந்தத் தரமான பேரீச்சம் பழத்தில் ஒரு ஸாவையும், மட்டமான பேரீச்சம் பழத்தில் மூன்று ஸாவுக்கு இந்தப் பேரீச்சம் பழத்தில் இரண்டு ஸாவையும் நாங்கள் வாங்குவோம்' எனக் கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'இவ்வாறு செய்யாதீர்! மட்டமான பேரீச்சம் பழத்தைக் காசுக்கு விற்று, அந்தக் காசின் மூலம் தரமான பேரீச்சம் பழத்தை வாங்குவீராக!'' எனக் கூறினார்கள்.

முஃகாளரா வியாபாரம். (பலன் உறுதிப்படும் நிலையை அடைவதற்கு முன்பே கனிகளையும் காய்கறிகளையும் விற்பது.)

1040. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். முஹாகலா, முஃகாளரா, முலாமஸா முனாபதா, முஸாபனா ஆகிய வியாபாரங்களை நபி(ஸல்) அவர்கள் தடுத்தனர்.

1041. ஆயிஷா(ரலி) அறிவித்தார். முஆவியா(ரலி) அவர்களின் தாயார் ஹிந்த்(ரலி), நபி(ஸல்) அவர்களிடம், '(என் கணவர்) அபூ சுஃப்யான் கஞ்சராக இருக்கிறார்; அவரின் பொருளை அவருக்குத் தெரியாமல் நான் எடுத்தால் என் மீது அது குற்றமாகுமா?' எனக் கேட்டார்கள். அதற்கு, 'உனக்குப் போதுமானதை நியாயமான முறையில் நீயும் உன் மக்களும் எடுத்துக் கொள்ளுங்கள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

இருவருக்குச் சொந்தமான சொத்தை இருவரில் ஒருவர் மற்றவருக்கு விற்றல்.

1042. ஜாபிர்(ரலி) அறிவித்தார். ''பங்காளிக்குத்தான் விற்க வேண்டும் என்ற நிலை பிரிக்கப்படாத ஒவ்வொரு சொத்திலும் உள்ளது. எல்லைகள் வகுக்கப்பட்டுப் பாதைகள் குறிக்கப்பட்டிருந்தால் பங்காளிக்குத்தான் விற்கவேண்டும் என்ற நிலை இல்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விதித்தார்கள்.

எதிரிகளிடமிருந்து அடிமைகளை விலைக்கு வாங்குவதும் அன்பளிப்புச் செய்வதும் அந்த அடிமைகளை விடுதலை செய்வதும்.

1043. ''இப்ராஹீம்(அலை) அவர்கள் ஸாராவுடன் நாடு துறந்தார்கள். மன்னன் ஒருவன் அல்லது கொடுங்கோலன் ஒருவன் - ஆட்சி புரிந்த ஓர் ஊருக்குள் இருவரும் நுழைந்தனர். 'அழகான ஒரு பெண்ணுடன் இப்ராஹீம் வந்திருக்கிறார்!'' என்று (மன்னனிடம்) கூறப்பட்டது. மன்னன், இப்ராஹீம்(அலை) அவர்களை அழைத்துவரச் செய்து, 'இப்ராஹீமே! உம்முடன் இருக்கும் இந்தப் பெண் யார்?' எனக் கேட்டான். இப்ராஹீம்(அலை) 'என் சகோதரி' என்றார்கள். பிறகு ஸாராவிடம் திரும்பிய இப்ராஹீம்(அலை), 'நீ என் கூற்றைப் பொய்யாக்கி விடாதே! நீ என் சகோதரி என்று நான் அவர்களிடம் கூறியிருக்கிறேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! உன்னையும் என்னையும் தவிர இந்தப் பூமியில் இறைநம்பிக்கையாளர் யாரும் இல்லை' என்றார்கள். பிறகு ஸாராவை மன்னனிடத்தில் அனுப்பினார்கள். அவன், அவரை நோக்கி எழுந்தான். ஸாரா எழுந்து உளூச் செய்து தொழுதுவிட்டு, 'இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால், என்னுடைய பெண்மையைக் கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றியிருந்தால் இந்தக் காஃபிரை என்னை ஆட்கொள்ள விடாதே!' என்று பிரார்த்தித்தார். உடனே அவன் கீழே விழுந்து (வலிப்பினால்) கால்களால் உதைத்தான். மன்னனின் நிலையைக் கண்ட ஸாரா, 'இறைவா! இவன் செத்துவிட்டால் நானே இவனைக் கொன்றேன் என்று மக்கள் கூறுவர்' என்று கூறியவுடன் மன்னன் பழைய நிலைக்கு மீண்டு மறுபடியும் ஸாராவை நெருங்கினான். சாரா எழுந்து உளூச் செய்து தொழுதுவிட்டு, 'இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால், என்னுடைய பெண்மையைக் கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றியிருந்தால் இந்தக் காஃபிரை என்னை ஆட்கொள்ள விடாதே!' என்று பிரார்த்தித்தார். உடனே அவன் கீழே விழுந்து கால்களால் உதைத்தான். மன்னனின் நிலையைக் கண்ட ஸாரா, 'இறைவா! இவன் செத்துவிட்டால் நானே இவனைக் கொன்றேன் என்று மக்கள் கூறுவர் என்று பிரார்த்தித்தார். இப்படி மன்னன் இரண்டு அல்லது மூன்று முறை வீழ்ந்து எழுந்து, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னிடம் ஒரு ஷைத்தானைத்தான் அனுப்பியிருக்கிறீர்கள். எனவே, இவரை இப்ராஹீமிடம் அழைத்துச் செல்லுங்கள். இவருக்கு (பணிப்பெண்ணான) ஆஜரைக் கொடுங்கள்' என்று (அவையோரிடம்) சொன்னான். ஸாரா இப்ராஹீம்(அலை) இடம் திரும்பி வந்து, அல்லாஹ் இந்தக் காஃபிரை வீழ்த்தி, நமக்குப் பணிபுரிய ஓர் அடிமைப் பெண்ணையும் தந்துவிட்டான் என்பது உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டார் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பன்றிகளைக் கொல்வது.

1044. ''என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! மர்யமுடைய மகன் (ஈஸா) உங்களிடம் நேர்மையான (தீர்ப்பு சொல்லும்) நீதிபதியாக இறங்கவிருக்கிறார்! அவர் சிலுவையை முறிப்பார்! பன்றியைக் கொல்வார்! ஜிஸ்யாவை (வரியை) நீக்குவார்! (அந்நாளில்) வாங்குவதற்கு ஆளில்லாத அளவிற்குச் செல்வம் பெருக்கெடுத்து ஓடும்! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

உயிரில்லாதவற்றின் உருவங்களை விற்பதும் விற்கத்தகாத உருவங்களும்.


1045. ஸயீத் இப்னு அபில் ஹஸன் அறிவித்தார். நான் இப்னு அப்பாஸ்(ரலி) உடன் இருந்தபோது ஒருவர் வந்து, 'அப்பாஸின் தந்தையே! நான் கைத்தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் ஒரு மனிதன். நான் உருவங்களை வரைகிறேன்' எனக் கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி), 'நபி(ஸல்) அவர்களிடம் நான் செவியுற்றதையே உமக்கு அறிவிக்கிறேன். 'யாரேனும் ஓர் உருவத்தை வரைந்தால் வரைந்தவர் அதற்கு உயிர் கொடுக்கும்வரை அல்லாஹ் அவரை வேதனை செய்வான்; அவர் ஒருக்காலும் அதற்கு உயிர் கொடுக்க முடியாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன்' என்றார். கேட்டவர் அதிர்ச்சியுடன் பெருமூச்சுவிட்டார். அவரின் முகம் (பயத்தால்) மஞ்சள் நிறமாக மாறியது. அப்போது இப்னு அப்பாஸ்(ரலி), 'உமக்குக் கேடு உண்டாகட்டும்! நீர் உருவம் வரைந்துதான் தீர வேண்டும் என்றால் மரம் மற்றும் உயிரற்றவற்றை வரைவீராக!' என்றார்.

சுதந்திரமானவரைப் பிடித்து விற்பது குற்றமாகும்.


1046. ''மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன்' என்று அல்லாஹ் கூறினான். ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்துவிட்டு, அதில் மோசடி செய்தவன்; இன்னொருவன் சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; மூன்றாமவன் ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

செத்தவற்றையும் உருவச் சிலைகளையும் விற்பது.

1047. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது, நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்!'' என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன. தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகிறது. மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; எனவே, அதைப் பற்றிக் கூறுங்கள்!' எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'கூடாது! அது விலக்கப்பட்டது!' எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, 'அல்லாஹ் யூதர்களை சபிப்பானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கியபோது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தை சாப்பிட்டார்கள்!'' என்று கூறினார்கள்.

நாய் விற்ற காசு.

1048. அபூ மஸ்வூத் அன்ஸாரி(ரலி) அறிவித்தார். ''நபி(ஸல்) அவர்கள் நாய் விற்ற காசையும் விபச்சாரியின் கூலியையும் சோதிடரின் தட்சணையையும் தடை செய்தார்கள்!.

Monday 24 August 2009

[பாடம்-33] இஃதிகாஃப்.

978. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ''நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்; அவர்களுக்குப் பின், அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தனர்!''.

இஃதிகாஃப் இருப்பவர் தேவை இருந்தால் தவிர வீட்டிற்குச் செல்லக்கூடாது.

979. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பள்ளியிலிருந்து தம் தலையை நீட்டுவார்கள்; நான் அதை வாருவேன், இஃதிகாஃப் இருக்கும்போது தேவையிருந்தால் தவிர வீட்டிற்குள் வரமாட்டார்கள்.

ஓர் இரவு மட்டும் இஃதிகாஃப் இருப்பது.

980. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 'மஸ்ஜிதுல் ஹராமில் ஓர் இரவு இஃதிகாஃப் இருப்பதாக அறியாமைக் காலத்தில் நான் நேர்ச்சை செய்திருந்தேன்' என்று உமர்(ரலி) நபி (ஸல்) அவர்களிடம் கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உம்முடைய நேர்ச்சையை நிறைவேற்றும்'' என்றார்கள்.

பெண்கள் இஃதிகாஃப் இருப்பது.

981. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ரமலானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். நான் அவர்களுக்காக (பள்ளியில்) ஒரு கூடாரத்தை அமைப்பேன். ஸுப்ஹுத் தொழுதுவிட்டு அதற்குள் நுழைந்து விடுவார்கள். ஹஃப்ஸா(ரலி) என்னிடம் தமக்கொரு கூடாரம் அமைக்க அனுமதி கேட்டார். அவருக்கு நான் அனுமதி கொடுத்தேன். அவர் ஒரு கூடாரத்தை அமைத்தார். இதை ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) பார்த்தபோது அவர் மற்றொரு கூடாரத்தை அமைத்தார். நபி(ஸல்) அவர்கள் காலையில் எழுந்தபோது பள்ளியினுள் பல கூடாரங்களைக் கண்டு, 'இவை என்ன?' என்று கேட்டார்கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'இதன் மூலம் நீங்கள் நன்மையைத்தான் நாடுகிறீர்களா?' என்று கேட்டுவிட்டு, அந்த மாதம் இஃதிகாஃப் இருப்பதை விட்டுவிட்டார்கள். பிறகு ஷவ்வால் மாதம் பத்து நாள்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.

இஃதிகாப் இருப்பவர் தம் தேவைக்களுக்காகப் பள்ளியின் வாசல்வரை செல்லலாமா?

982. ஸஃபிய்யா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ரமலானில் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருக்கும்போது அவர்களைச் சந்திக்க நான் செல்வேன். சற்று நேரம் அவர்களுடன் பேசிவிட்டு எழுவேன். அப்போது நபி(ஸல்) அவர்களும் என்னுடன் எழுந்து பள்ளியின் வாசல்வரை வருவார்கள். உம்மு ஸலமா(ரலி)வின் வாசலை அடைந்தபோது அன்ஸாரிகளைச் சார்ந்த இருவர் நடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள், 'நில்லுங்கள்; இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த் ஹுயை ஆவார்'' எனக் கூறினார்கள். அவ்விருவரும் (ஆச்சரியத்துடன்) 'ஸுப்ஹானல்லாஹ்' என்றனர். இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியது அவ்விருவருக்கும் உறுத்தியது. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஊடுருவியிருக்கிறான்; உங்கள் உள்ளங்களில் தவறான எண்ணத்தை அவன் போட்டு விடுவான் என நான் அஞ்சுகிறேன்'' எனக் கூறினார்கள்.

ரமலானின் நடுப்பத்தில் இஃதிகாஃப் இருப்பது.

983. அபூஹுரைரா (ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமலானிலும் பத்து நாட்களே இஃதிகாஃப் இருப்பார்கள். அவர்கள் மரணித்த ஆண்டில் இருபது நாள்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.

Saturday 22 August 2009

[பாடம்-32] தராவீஹ் தொழுகை.

இரவுத் தொழுகை.

972. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நள்ளிரவில் பள்ளிக்குச் சென்று தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள். விடிந்ததும் மக்கள் இதுபற்றிப் பேசிக் கொண்டார்கள். (மறுநாள்) முதல்நாளை விட அதிகமான மக்கள் திரண்டு நபி(ஸல்) அவர்கள் பின்னால் நின்று தொழுதார்கள். விடிந்ததும் மக்கள் இதுபற்றிப் பேசிக் கொண்டார்கள். இந்த மூன்றாம் இரவில் பள்ளிவாசலுக்கு நிறையப் பேர் வந்தனர். நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழுதார்கள்; அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதனர். நான்காம் இரவில், பள்ளிவாசல் கொள்ளாத அளவுக்கு மக்கள் திரண்டனர்; ஆனால், நபி(ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுகைக்குத்தான் வந்தார்கள். ஸுப்ஹுத் தொழுகையை முடித்தும் மக்களை நோக்கி, தஷஹ்ஹுத் மொழிந்து, 'நான் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து கூறுகிறேன்; நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமலில்லை. எனினும், இது உங்களின் மீது கடமையாக்கப்பட்டு, அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடுமோ என்று நான் அஞ்சினேன்!' எனக் கூறினார்கள்.''நிலைமை இப்படி இருக்க, (ரமளானின் இரவுத் தொழுகையை மக்கள் தனித் தனியாகவே தொழுது கொண்டிருக்க) நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள்!'' என்று அறிவிப்பாளர் இமாம் ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

லைலத்துல் கத்ர் இரவை (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் தேடுதல்.

973. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபித்தோழர்களில் சிலருக்கு, (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் (வந்த) கனவில் லைலத்துல் கத்ர்(இரவு) காட்டப்பட்டது. அப்போது, நபி(ஸல்) அவர்கள் 'உங்கள் கனவுகள் கடைசி ஏழு நாள்களில் (லைலத்துல் கத்ரைக் கண்ட விஷயத்தில்) ஒத்து அமைந்திருப்பதை காண்கிறேன்! எனவே, அதைத் தேடுபவர். (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் அதைத் தேடட்டும்!'' என்று கூறினார்கள்.

974. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ரமளானின் நடுப்பக்கத்தில் இஃதிகாஃப் இருந்தோம். அவர்கள் இருபதாம் நாள் காலையில் வெளியே வந்து எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) 'எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர், அது எனக்கு மறக்கடிக்கப்பட்டு விட்டது. எனவே, நீங்கள் கடைசிப் பத்து நாள்களின் ஒற்றைப் படை இரவுகளில் அதைத் தேடுங்கள்! நான் (லைலத்துல் கத்ரில்) ஈரமான களி மண்ணில் ஸஜ்தா செய்வது போல் (கனவு) கண்டேன்! எனவே, யார் என்னோடு இஃதிகாஃப் இருந்தாரோ அவர் திரும்பவும் வரட்டும்!'' என்றார்கள். நாங்கள் திரும்பச் சென்றோம். வானத்தில் ஒரு மெல்லிய மேகப் பொதியைக் கூட அப்போது நாங்கள் காணவில்லை. திடீர் என ஒரு மேகம் தோன்றி மழை பொழிந்தது. அதனால், பள்ளிவாசலின் கூரையில் தண்ணீர் ஒழுகியது. அந்தக் கூரை பேரீச்சை மட்டையிலினால் அமைந்திருந்தது. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும் நபி(ஸல்) அவர்களை ஈரமான களிமண்ணில் ஸஜ்தா செய்யும் நிலையில் கண்டேன். அவர்களின் நெற்றியில் களிமண்ணின் அடையாளத்தை பார்த்தேன்.

975. ''ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள்! 'லைலத்துல் கத்ரை இருபத்தொன்றாவது இரவில், இருபத்து மூன்றாவது இரவில், இருபத்து ஐந்தாவது இரவில் தேடுங்கள்! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

976. ''லைலத்துல் கத்ர் இரவு கடைசிப் பத்து நாள்களில் உள்ளது. அது இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ உள்ளது! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ரமளானின் கடைசிப்பத்தில் புரிய வேண்டிய வணக்கம்.

977. ஆயிஷா(ரலி) அறிவித்தார். (ரமளானின் கடைசிப்) பத்து நாள்கள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்; (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள்!''.

Thursday 20 August 2009

[பாடம்-31] நோன்பு.

நோன்பின் சிறப்பு.

919. ''நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் 'நான் நோன்பாளி!' என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்! (மேலும்) 'எனக்காக நோன்பாளி தம் உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டு விடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!'' (என்று அல்லாஹ் கூறினான்) 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

(சொர்க்கத்திலுள்ள) 'ரய்யான்' எனும் வாசல் நோன்பாளிகளுக்குரியது.

920. ''சொர்க்கத்தில் 'ரய்யான்' என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! 'நோன்பாளிகள் எங்கே?' என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டு விடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸஹ்ல்(ரலி) அறிவித்தார்.

921. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ''ஒருவர் இறைவழியில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிருந்து, 'அல்லாஹ்வின் அடியாரே! இது (பெரும்) நன்மையாகும்! (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்!)' என்று அழைக்கப்படுவார். (தம் உலக வாழ்வின் போது) தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; அறப்போர் புரிந்தவர்கள் 'ஜிஹாத்' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; நோன்பாளிகளாய் இருந்தவர்கள் 'ரய்யான்' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; தர்மம் செய்தவர்கள் 'சதகா' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே! எனவே, எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'ஆம்! நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நம்புகிறேன்!'' என்றார்கள்.

922. ''ரமலான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

923. ''ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

924. ''நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள்; (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள்; உங்களுக்கு (வானில்) மேகம் தென்பட்டால் நாள்களை எண்ணிக் கொள்ளுங்கள் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். மற்றோர் அறிவிப்பில் 'ரமலான் பிறை'' என்று உள்ளது.

நோன்பு நோற்றும் பொய் மற்றும் தீச்செயல்களை விடாது இருத்தல்.

925. ''பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஏசப்படுபவர் 'நான் நோன்பாளி!'' என்று கூறலாமா?

926. ''நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்!'' என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் 'நான் நோன்பாளி!'' என்று அவர் சொல்லட்டும்! முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான்; தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

விபச்சாரத்தை அஞ்சுபவர் நோன்பு நோற்கவேண்டும்.

927. ''உங்களில், திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்திபெற்றவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.

927. ''ரமலான் பிறையை நீங்கள் காணும்வரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

928. ''ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும். எனவே பிறையைக் காணாமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் முப்பது நாள்களாக எண்ணிக்கையை முழுமைப் படுத்துங்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

929. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் 'ஒரு மாதம் தம் மனைவியருடன் சேர்வதில்லை' என்று சத்தியம் செய்திருந்தார்கள். இருபத்தி ஒன்பது நாள்கள் முடிந்தும் (இல்லம்) திரும்பினார்கள். அவர்களிடம் 'நீங்கள் ஒருமாதம் (வீட்டிற்கு) வரமாட்டீர்கள் என்று சத்தியம் செய்திருந்தீர்களே! என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது நாள்களாகவும் அமையும்!'' என்றார்கள்.

இரண்டு பெருநாள்களின் மாதங்கள் (சேர்ந்தால்போல்) குறையாது.

930. ''துல்ஹஜ், ரமலான் ஆகிய பெருநாள்களுக்குரிய இரண்டு மாதங்கள் சேர்ந்தால் போல் குறையாது 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.

931. நாம் உம்மி சமுதாயமாவோம். எழுதுவதை அறிய மாட்டோம்; விண் கலையையும் அறிய மாட்டோம். மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும்; அதாவது சில வேளை இருபத்தொன்பது நாள்களாகவும் சில வேளை முப்பது நாள்களாகவும் இருக்கும்! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

ரமளானுக்கு முந்திய நாளும் அதற்கு முந்திய நாளும் நோன்பு நோற்கக் கூடாது.

932. ''ரமளானுக்கு முந்திய நாளும் அதற்கு முந்திய நாளும் உங்களில் எவரும் நோன்பு நோற்கக் கூடாது. அந்நாள்களில் வழக்கமாகத் நோற்கும் நோன்பு அமைந்தாலே தவிர! அவ்வாறு அமைந்தால் அந்நாளில் நோன்பு நோற்கலாம்! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

933. பராஉ(ரலி) அறிவித்தார். (ஆரம்ப காலத்தில்) நபித்தோழர்கள் நோன்பு நோற்று, நோன்பை நிறைவு செய்யும் நேரம் வந்து, அதற்கு முன்பே உறங்கி விட்டிருந்தால் அன்றைய இரவிலும் (தொடர்ந்து) பகலிலும் மாலைவரை எதையும் உண்ண மாட்டார்கள். (ஒரு முறை) கைஸ் இப்னு ஸிர்மா(ரலி) நோன்பு நோற்றிருந்தார்; நோன்பு நிறைவு செய்யும் நேரம் வந்ததும் தம் மனைவியிடம் வந்து, 'உன்னிடம் உணவு ஏதும் உள்ளதா?' என்று கேட்டார்; அவரின் மனைவி, 'இல்லை! எனினும் நான் சென்று உமக்காக (உணவைத்) தேடி வருகிறேன்!'' என்றார். கைஸ் இப்னு ஸிர்மா(ரலி) அன்றைய தினம் கூலி வேலை செய்துவிட்டு வந்ததால் அவருக்கு உறக்கம் மேலிட்டு விட்டது. அவரின் மனைவி வந்து அவரைக் கண்டபோது, 'உமக்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டது' என்றார். நண்பகலானதும் கைஸ்(ரலி) மூர்ச்சையுற்றார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டபோது, 'நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற வசனமும் 'இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும்வரை உண்ணுங்கள், பருகுங்கள் என்ற வசனமும் இறங்கின. இதனால் நபித்தோழர்கள் அதிக மகிழ்ச்சியடைந்தார்கள்.

934. அதீ இப்னு ஹாதிம்(ரலி) அறிவித்தார். 'கருப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு தெளிவாகும் வரை' என்ற (திருக்குர்ஆன் 02:187) இறைவசனம் அருளப்பட்டபோது, நான் ஒரு கருப்புக் கயிற்றையும் வெள்ளைக் கயிற்றையும் எடுத்து என் தலையணையில் வைத்துக் கொண்டேன்; இரவில் அதைப் பார்க்கலானேன்; எனக்கு எதுவும் தெளிவாகவில்லை! விடிந்ததும் நபி(ஸல்) அவர்களிடம் சென்று இதுபற்றிக் கூறினேன்; அதற்கு நபி(ஸல்) அவர்கள் '(கருப்புக் கயிறு என்பதின் கருத்து) இரவின் கருமையும் (வெள்ளைக் கயிறு என்பதின் கருத்து) விடியலின் வெண்மையும் தான்!'' என்று பதிலளித்தார்கள்.

ஸஹ்ருக்கும் ஃபஜ்ருத் தொழுகைக்கும் இடையே எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும்?

935. அனஸ்(ரலி) அறிவித்தார். ''நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஸஹ்ர் செய்தோம்; பின்னர், தொழுகைக்கு அவர்கள் தயாராகி விட்டார்கள்!'' என்று ஸைத் இப்னு ஸாபித்(ரலி) கூறினார்; நான் 'பாங்குக்கும் ஸஹ்ருக்குமிடையே எவ்வளவு நேரம் இருந்தது?' என்று கேட்டேன். அதற்கவர் 'ஐம்பது வசனங்கள் (ஓதும்) நேரம் இருந்தது!'' என்று பதிலளித்தார்.

936. ''நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள்; நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பரக்கத் இருக்கிறது! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நோன்பு நோற்பதாக பகலில் தீர்மானிப்பது.

937. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஆஷுரா தினத்தில் 'யார் சாப்பிட்டு விட்டாரோ அவர் (நோன்பாக) இருக்கட்டும்!' என்று ஒருவரை அனுப்பி மக்களுக்கு அறிவிக்கச்செய்தார்கள்.

938. அபூ பக்ர் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார். ''நபி(ஸல்) அவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு, குளிப்பு கடமையானவர்களாக ஃபஜ்ரு (அதிகாலை) நேரத்தை அடைவார்கள்; பின்னர் குளித்துவிட்டு நோன்பைத் தொடர்வார்கள்!' என்று ஆயிஷா(ரலி), உம்மு ஸலமா(ரலி) ஆகியோர் அறிவித்ததாக அன்றைய தினம் மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வானிடம் என் தந்தை அப்துர் ரஹ்மான் கூறினார். மர்வான், என் தந்தையிடம், 'இதன் வாயிலாக (இதை எடுத்துரைத்து), அபூ ஹுரைராவை நீர் எச்சரிக்க வேண்டும் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்!' என்று கூறினார். பின்னர் நாங்கள் 'துல்ஹுலைஃபா' என்னும் இடத்தில் ஒன்று சேர்வதாக முடிவு செய்யப்பட்டது. அங்கு அபூ ஹுரைரா(ரலி) அவர்களுக்கு ஒரு நிலம் இருந்தது. (நாங்கள் அங்கு சென்றபோது இருந்தார்;) என் தந்தை அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம், 'நான் உம்மிடம் ஒரு செய்தியைக் கூறவிருக்கிறேன்: மர்வான், இது தொடர்பாக (உம்மிடம் கூறும்படி) சத்தியம் செய்து என்னை வற்புறுத்தியிருக்காவிட்டால் இதை நான் உம்மிடம் கூறப்போவதில்லை!' என்று கூறிவிட்டு, ஆயிஷா(ரலி), உம்மு ஸலமா(ரலி) ஆகியோர் கூறியதை அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம் கூறினார். அதற்கு அபூ ஹுரைரா(ரலி) 'அது (ஃபஜ்ருக்கு முன்பே குளித்ததாக வேண்டும் என்பது) போல்தான் ஃபள்ல் இப்னு அப்பாஸ்(ரலி) எனக்குக் கூறினார்கள்: (நபியின் மனைவியரான) அவர்கள்தாம் இது பற்றி நன்கு அறிந்தவர்கள்!' என்று பதிலளித்தார்.

நோன்பாளி மனைவியை அணைத்துக் கொள்ளுதல்.

939. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ''நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியரைக்) கட்டியணைப்பார்கள்; முத்தமிடுவார்கள்! தம்(உடல்) உணர்ச்சியை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக அவர்கள் இருந்தார்கள்!.

நோன்பாளி மறதியாக உண்டால், பருகினால்...?

944. ''ஒருவர் மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால் அவர் தம் நோன்பை முழுமைப்படுத்தட்டும். ஏனெனில் அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ரமலானில் சில நாள்கள் நோன்பு நோற்றுவிட்டுப் பின்னர் பயணம் செய்தால்...?

945. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ''நபி(ஸல்) அவர்கள் ரமளானில் மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள்; அப்போது அவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். 'கதீத்' எனும் இடத்தை அடைந்ததும் நோன்பை விட்டார்கள்; மக்களும் நோன்பை விட்டனர்!''

946. அபூ தர்தா(ரலி) அறிவித்தார். ''நாங்கள் நபி(ஸல்) அவர்களின் பயணமொன்றில் வெயில் மிகுந்த ஒரு நாளில் அவர்களுடன் சென்றோம். கடும் வெப்பத்தின் காரணமாக சிலர் தம் கையைத் தம் தலையில் வைத்தனர். அப்பயணத்தில் நபி(ஸல்) அவர்களையும் தவிர எங்களில் வேறு எவரும் நோன்பு நோற்றிருக்கவில்லை!''

947. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்கள் அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தபோது, ஒருவர் நிழலில் தங்க வைக்கப்பட்டு மக்கள் (அவரைச் சுற்றிலும்) குழுமியிருந்ததைக் கண்டார்கள். 'இவருக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். 'இவர் நோன்பு நோற்றிருக்கிறார்!'' என்று மக்கள் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் '(பலவீனமான நிலையில் உள்ளவர்கள்) பயணத்தில் நோன்பு நோற்பது நற்செயலில் சேராது!'' என்று கூறினார்கள்.

பயணத்தில் நோன்பு நோற்பதையும் நோன்பை விடுவதையும் நபித்தோழர்கள் குறை கூறியதில்லை.

948. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் பயணத்தில் செல்வோம். நோன்பு நோற்றவரை நோற்காதவரும் நோற்காதவரை நோற்றவரும் குறை கூறமாட்டார்கள்.

களாவான நோன்புள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால்...?

949. ''களாவான நோன்புள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் சார்பாக அவரின் பொறுப்பாளர் நோன்பு நோற்பார் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

950. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் மரணித்துவிட்டார். அவர் சார்பாக அதை நான் நிறைவேற்றலாமா?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம்! அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது'' என்றார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'என் சகோதரி மரணித்துவிட்டார்...' என்று கூறினார்கள் என இந்த ஹதீஸ் துவங்குகிறது. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் இன்னொரு அறிவிப்பில் ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'என் தாய் இறந்துவிட்டார்...' என்று கூறினார்கள் என இந்த ஹதீஸ் துவங்குகிறது. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், 'நேர்ச்சை நோன்பு என் தாயாருக்குக் கடமையாக இருந்த நிலையில் என் தாய் இறந்துவிட்டார்...' என்று ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள் என இந்த ஹதீஸ் துவங்குகிறது. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் இன்னொரு அறிவிப்பில், 'என் தாய் மீது பதினைந்து நோன்புகள் கடமையாக இருந்த நிலையில் இறந்துவிட்டார்' என்று ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள் என இந்த ஹதீஸ் துவங்குகிறது.

951. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்திலிருந்தோம். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். சூரியன் மறைந்ததும் கூட்டத்தில் ஒருவரிடம், 'இன்னாரே! எழுந்து நமக்காக மாவு கரைப்பீராக!'' என்றார்கள். அதற்கவர் 'இறைத்தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே!'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக! எனறார்கள். அதற்கவர் 'இறைத்தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டும்!'' என்றார். நபி(ஸல்) அவர்கள். 'இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக!'' என்றார்கள். அதற்கவர், 'இறைத்தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே!'' என்றார். மீண்டும் நபி(ஸல்) அவர்கள், 'இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக!'' என்று கூறினார்கள். அதற்கவர் 'பகல் (வெளிச்சம்) இன்னும் (எஞ்சி) இருக்கிறதே?' என்று கேட்டதற்கும் நபி(ஸல்) அவர்கள் 'இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!'' என்று கூறினார்கள். உடனே அவர் இறங்கி, அவர்களுக்காக மாவு கரைத்தார். அதை நபி(ஸல்) அவர்கள் அருந்திவிட்டு, 'இரவு இங்கிருந்து (கிழக்கிலிருந்து) முன்னோக்கி வந்துவிட்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்!'' என்றார்கள்.

விரைவாக நோன்பை நிறைவு செய்தல்.

952. ''நோன்பை நிறைவு செய்வதை விரைவுபடுத்தும்வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள்! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் இதை ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

நோன்பை நிறைவு செய்த பின் சூரியன் உதித்தால்...?

953. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மேகம் சூழ்ந்த ஒரு நாளில் நாங்கள் நோன்பை நிறைவு செய்த பின்னர் சூரியன் தென்பட்டது.''அவர்கள் களா செய்யுமாறு கட்டளையிடப்பட்டார்களா?' என்று ஹிஷாம்(ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் 'களா செய்வது அவசியமில்லாமல் போகுமா?' என்று கேட்டார். ('களா செய்வது அவசியமாகும்!' என்பது இதன் பொருள்.)''அவர்கள் களா செய்தார்களா? இல்லையா என்பது எனக்குத் தெரியாது!'' என்று ஹிஷாம்(ரஹ்) கூறினார்கள் என மஃமர் கூறுகிறார்.

சிறுவர்கள் நோன்பு நோற்றல்.

954. ருபைய்யிவு பின்த் முஅவ்வித்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஆஷுரா தினத்தில் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுககு ஆளனுப்பி, 'யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்துவிட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்!'' என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம். எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டும் அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும்வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.

955. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் தொடர் நோன்பு நோற்காதீர்கள்; உங்களில் யாரேனும் தொடர் நோன்பு நோற்க நாடினால் ஸஹ்ர் வரை அவ்வாறு செய்யட்டும்'' என்று கூறினார்கள். நபித்தோழர்கள், 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே!' என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான் உங்களைப் போன்றவன் அல்லன்;. எனக்கு (ஆன்மீக ரீதியாக) உணவளிக்கவும் பருகத்தரவும் ஒருவன் இருக்கிறான். இந்நிலையில் நான் இரவுப் பொழுதைக் கழிக்கிறேன்'' என்றார்கள்.

956. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தொடர் நோன்பைத் தடுத்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?' என்று முஸ்லிம்களில் ஒருவர் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் என்னைப் போன்றவர் யார் இருக்கிறார்? என் இறைவன் எனக்கு உண்ணவும் பருகவும் தரும் நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்?' என்றார்கள். தொடர் நோன்பிலிருந்து மக்கள் விலகிக் கொள்ள மறுத்தபோது ஒருநாள் அவர்களைத் தொடர் நோன்பு நோற்கச் செய்தார்கள். பிறகு (அடுத்த மாதத்தின்) பிறையை மக்கள் கண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இம்மாதம் இன்னும் தாமதமாக முடிந்திருந்தால் (தொடர் நோன்பை) இன்னும் உங்களுக்கு நான் அதிகப்படுத்தியிருப்பேன்'' என்று மக்கள் தொடர் நோன்பிலிருந்து விலகிக் கொள்ள மறுத்ததைக் கண்டிப்பதைப் போல் கூறினார்கள். மற்றொரு அறிவிப்பில் ''தொடர் நோன்பு வைப்பது குறித்து உங்களை எச்சரிக்கிறேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் இரண்டு முறை கூறினார்கள். 'நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், 'என் இறைவன் எனக்கு உண்ணவும் பருகவும் தரக்கூடிய நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்; எனவே நீங்கள் அமல்களில் உங்கள் சக்திக்கு உட்பட்டுச் சிரமம் எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று விடையளித்தார்கள்.

உபரியான நோன்பை விடுமாறு ஒருவர் மற்றவரை வற்புறுத்துதல்.

957. அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஸல்மான்(ரலி), அபூ தர்தா(ரலி) இருவரையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸல்மான் அபூ தர்தாவைச் சந்திக்கச் சென்றபோது (அபூ தர்தாவின் மனைவி) உம்மு தர்தாவை அழுக்கடைந்த ஆடை அணிந்திருக்கக் கண்டார். 'உமக்கு என்ன நேர்ந்தது?' என்று அவரிடம் ஸல்மான் கேட்டதற்கு உம்மு தர்தா(ரலி), 'உம் சகோதரர் அபூ தர்தாவுக்கு இவ்வுலகில் எந்தத் தேவையுமில்லை'' என்று விடையளித்தார். (சற்று நேரத்தில்) அபூ தர்தா வந்து ஸல்மானுக்காக உணவு தயாரித்தார். ஸல்மான் அபூ தர்தாவிடம், 'உண்பீராக!' என்று கூறினார். அதற்கு அபூ தர்தா, 'நான் நோன்பு வைத்திருக்கிறேன்' என்றார். ஸல்மான், 'நீர் உண்ணாமல் உண்ணமாட்டேன். என்று கூறியதும் அபூ தர்தாவும் உண்டார். இரவானதும் அபூ தர்தா(ரலி) நின்று வணங்கத் தாயரானார். அப்போது ஸல்மான்(ரலி), 'உறங்குவீராக' என்று கூறியதும் உறங்கினார். பின்னர் நின்று வணங்கத் தயாரானார். மீண்டும் ஸல்மான், 'உறங்குவீராக' என்றார். இரவின் கடைசி நேரம் வந்ததும் ஸல்மான்(ரலி), 'இப்போது எழுவீராக!' என்று கூறினார். இருவரும் தொழுதனர். பிறகு அபூ தர்தாவிடம் ஸல்மான்(ரலி), 'நிச்சயமாக உம் இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன. உமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன. உம் குடும்பத்தினருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன. அவரவருக்குரிய கடமைகளை நிறைவேற்றுவீராக'' என்று கூறினார்கள். இதுகுறித்து அபூ தர்தா(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் வந்து இந்த விஷயத்தைத் கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஸல்மான் உண்மையையே கூறினார்!'' என்றார்கள்.

ஷஅபான் மாதத்தில் நோன்பு நோற்பது.

958. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ''(இனி) நோன்பை விடவே மாட்டார்கள்' என்று நாங்கள் கூறுமளவுக்கு நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பார்கள்: '(இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள்' என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பைவிட்டு விடுவார்கள்! ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்த தில்லை. ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை!.

959. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தை விட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. ஷஅபானில் (சில ஆண்டுகளில்) முழு மாதமும் நோன்பு நோற்பார்கள். 'உங்களால் இயன்ற அளவுக்கு நீங்கள் அமல்கள் (வணக்கங்களைச்) செய்யுங்கள்! நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் சலிப்படைய மாட்டான்!'' என்றும் கூறுவார்கள். குறைவாக இருந்தாலும் தொடர்ந்து தொழும் தொழுகையை அவர்கள் தொழுதால் அதைத் தொடர்ந்து தொழுவார்கள்.

960. அனஸ்(ரலி) அறிவித்தார். ''நபி(ஸல்) அவர்களை ஒரு மாதத்தில் நோன்பாளியாக நான் பார்க்க விரும்பினால் அவ்வாறே அவர்களை நான் பார்ப்பேன். அவர்கள் நோன்பை விட்ட நிலையில் பார்க்க விரும்பினால் அவ்வாறே நான் அவர்களைப் பார்ப்பேன்; இரவில் தொழுக கூடியவர்களாக அவர்களைப் பார்க்க விரும்பினால் அவ்வாறே நான்அவர்களைப் பார்ப்பேன்; அவர்களைத் தூங்குபவர்களாகப் பார்க்க விரும்பினால் அவ்வாறே நான் அவர்களைப் பார்ப்பேன்! நபி(ஸல்) அவர்களின் கையை விட மிருதுவான எந்தப் பட்டையும் நான் தீண்டியதில்லை. நபி(ஸல்) அவர்களின் நறுமணத்தை விட நல்ல நறுமணத்தை நான் முகர்ந்ததுமில்லை!''

நோன்பு நோற்றிருக்கும்போது விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமை.

961. அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, 'உம்முடைய விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கு இருக்கின்றன. உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கு இருக்கின்றன!'' என்றார்கள். 'தாவூத் நபி(அலை) அவர்களின் நோன்பு எவ்வாறு இருந்தது?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'வருடத்தில் பாதி நாள்கள்!'' என்றார்கள்.

நோன்பு நோற்றிருக்கும்போது உடலுக்குச் செய்ய வேண்டிய கடமை.

962. அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'அப்துல்லாஹ்வே! நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே!'' என்று கேட்டார்கள். நான் 'ஆம்! இறைத்தூதர் அவர்களே!'' என்றேன். நபி(ஸல்) அவர்கள் 'இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாள்கள்) நோன்பு வையும்; (சில நாள்கள்) விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன. உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன. உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன. உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன! ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!'' என்று கூறினார்கள். நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக் கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டு விட்டது! 'இறைத்தூதர் அவர்களே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்!'' என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'தாவூத் நபி(அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதை விட அதிகமாக்க வேண்டாம்!'' என்றார்கள். தாவூத் நபி(அலை)யின் நோன்பு எது? என்று கேட்டேன். 'வருடத்தில் பாதி நாள்கள்!'' என்றார்கள்.''அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) வயோதிகம் அடைந்த பின் 'நபி(ஸல்) அவர்களின் சலுகையை நான் ஏற்காமல் போய் விட்டேனே' என்று (வருத்தத்துடன்) கூறுவார்!'' என அபூ ஸலமா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

நோன்பு வைத்திருக்கும்போது குடும்பத்தினருக்குச் செய்ய வேண்டிய கடமை.

963. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். நான் தொடர்ந்து நோன்பு வைப்பதாகவும் இரவெல்லாம் தொழுவதாகவும் நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிய வந்தது. அவர்கள் என்னை அழைத்து வரச் சொல்லியிருக்க வேண்டும்; அல்லது நானாக அவர்களைச் சந்தித்திருக்க வேண்டும்! (அவர்கள் என்னை அழைத்து வரச் சொன்னார்களா? நானாகச் சென்று அவர்களைச் சந்தித்தேனா என்பது எனக்கு நினைவில்லை!) நபி(ஸல்) அவர்கள் 'நீர் விடாமல் நோன்பு நோற்பதாகவும் தூங்காமல் தொழுவதாகவும் என்னிடம் கூறப்படுகிறதே! எனவே, நோன்பு வைப்பீராக! அதை விட்டுவிடவும் செய்வீராக! (இரவில் எழுந்து நின்று வணங்குவீராக! தூங்கவும் செய்வீராக! ஏனெனில், உம்முடைய கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன. உமக்கும் உம்முடைய குடும்பத்தினருக்கும் நீர் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன!'' என்று கூறினார்கள். நான், 'இதற்கு எனக்கு சக்தி உள்ளது!'' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள் 'நீர் தாவூத் நபியின் நோன்பை நோற்பீராக!'' என்றார்கள். 'அது எவ்வாறு?' என்று கேட்டேன். 'தாவூத் நபி(அலை) அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்பார்; ஒரு நாள் விட்டுவிடுவார்! மேலும், (போர்க்களத்தில் எதிரிகளைச்) சந்திக்கும்போது பின்வாங்க மாட்டார்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! இந்த (வீரம் நிறைந்த) பண்புக்கு எனக்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்!'' என்றேன்.''காலமெல்லாம் நோன்பு நோற்பது பற்றி நபி(ஸல்) அவர்கள் (இந்த சம்பவத்துக்கிடையே) எப்படிக் கூறினார்கள் என்பதை நான் அறியமாட்டேன். என்றாலும் 'காலமெல்லாம் நோன்பு நோற்றவர் நோன்பு நோற்றவரல்லர்!'' என்று நபி(ஸல்) அவர்கள் இருமுறை கூறினார்கள் (என்பது மட்டும் எனக்கு நினைவிருக்கிறது!)'' என்று அதா(ரஹ்) கூறினார்.

ஒரு கூட்டத்தினரிடம் சென்று, அங்கு நோன்பை முறிக்காமல் இருத்தல்.

964. அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (என் தாயார்) உம்மு ஸுலைம்(ரலி) அவர்களிடம் சென்றார்கள். அவர்கள் பேரீச்சம் பழங்களையும் நெய்யையும் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் 'உங்கள் நெய்யை அதற்குரிய (தோல்) பாத்திரத்திலேயே ஊற்றுங்கள்; உங்கள் பேரீச்சம் பழங்களை அதற்குரிய பையில் போடுங்கள்; ஏனெனில், நான் நோன்பு நோற்றிருக்கிறேன்!'' என்றார்கள். பிறகு வீட்டின் ஒரு மூலையில் நின்று கடமையல்லாத தொழுகையைத் தொழுதார்கள். உம்மு ஸுலைம்(ரலி) அவர்களுக்காகவும் அவர்களின் குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தித்தார்கள். அப்போது உம்மு ஸுலைம்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! எனக்கு விருப்பமான ஒன்று உள்ளது''! என்றார். நபி(ஸல்) அவர்கள், 'அது என்ன?' என்று கேட்டார்கள் 'உங்கள் ஊழியர் அனஸ்தான்!'' என்று உம்மு ஸுலைம்(ரலி) கூறினார். இம்மை மறுமையின் எந்த நன்மையையும் விட்டு விடாமல் (எல்லா நன்மைகளையும்) கேட்டு. எனக்காக நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். 'இறைவா! இவருக்குப் பொருட் செல்வத்தையும் குழந்தைச் செல்வத்தையும் வழங்கு! இவருக்கு பரக்கத் செய்!'' என்று பிரார்த்தித்தார்கள். இன்று நான் அன்ஸார்களிலேயே அதிகச் செல்வந்தனாக இருக்கிறேன்! எனக்குப் பிறந்த நூற்றியிருபதுக்கும் அதிகமான பிள்ளைகள் இறந்து, ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃப்) பஸராவுக்கு வந்த காலத்தில் அடக்கம் செய்யப்பட்டு விட்டனர் என்று என் மகள் உமைனா எனக்குக் கூறினார்.

மாதத்தின் கடைசியில் நோன்பு நோற்றல்.

965. முதர்ரிஃப்(ரஹ்) அறிவித்தார். இம்ரான் இப்னு ஹுசைன்(ரலி) அவர்களிடமோ, அவர்கள் செவிமடுத்துக் கொண்டிருக்க வேறொருவரிடமோ நபி(ஸல்) அவர்கள் 'இம்மாதத்தின் இறுதியில் நீர் நோன்பு நோற்கவில்லையா?' என்று கேட்டார்கள். அம்மனிதர் 'இல்லை! இறைத்தூதர் அவர்களே!'' என்றார். நபி(ஸல்) அவர்கள் 'நீர் நோன்பை விட்டுவிட்டால் இரண்டு நாள்கள் நோன்பு நோற்பீராக!'' என்று கூறினார்கள்.

வெள்ளிக்கிழமை நோன்பு நோற்றல்.

966. முஹம்மத் இப்னு அப்பாத் அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை நோன்பு வைப்பதைத் தடை செய்தார்களா என்று ஜாபிர்(ரலி) அவர்களிடம் கேட்டேன். 'ஆம்' என்றார். மற்றோர் அறிவிப்பில் வெள்ளிக்கிழமை மட்டும் தனித்து நோன்பு வைக்க நபி(ஸல்) அவர்கள் தடை செய்ததாகக் கூறப்படுகிறது.

967. ஜுவைரிய்யா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், நான் வெள்ளிக்கிழமை நோன்பு வைத்திருந்தபோது என்னிடம் வந்தார்கள். 'நேற்று நோன்பு வைத்தாயா?' என்று கேட்டார்கள். நான் 'இல்லை!'' என்றேன். 'நாளை நோன்பு நோற்க விரும்புகிறாயா?' என்று கேட்டார்கள். அதற்கும் 'இல்லை!'' என்றேன். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள் 'அப்படியானால் நோன்பை முறித்து விடு!'' என்றார்கள்.''நபி(ஸல்) அவர்களின் கட்டளைப்படி நான் நோன்பை முறித்து விட்டேன்'' என்று ஜுவைரிய்யா(ரலி) கூறினார் என அபூ அய்யூப்(ரஹ்) அறிவித்தார்.

சில நாள்களை மட்டும் குறிப்பாக தேர்ந்தெடுத்து, அவற்றில் நோன்பு நோற்கலாமா?

968. அல்கமா(ரஹ்) அறிவித்தார். ''நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்ட சில நாள்களை வணக்கத்திற்காகத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்களா?' என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் 'இல்லை! அவர்களின் அமல் (வணக்கம்) நிரந்தரமானதாக இருக்கும்! நபி(ஸல்) அவர்களால் செய்ய முடிந்த (வணக்கத்)தை உங்களில் யார்தான் செய்ய முடியும்?' என்று கூறினார்கள்.

969. ஆயிஷா(ரலி) இப்னு உமர்(ரலி) ஆகியோர் கூறினார்கள்: ''பலியிடும் பிராணி கிடைக்காதவர் தவிர மற்றவர்கள் தஷ்ரீக்குடைய நாள்களில் நோன்பு நோற்க அனுமதிக்கப்படவில்லை!''.

ஆஷூரா நோன்பு.

970. ஆயிஷா(ரலி) அறிவித்தார். அறியாமைக் காலக் குறைஷியர் ஆஷுரா நாளில் நோன்பு நோற்றனர்; நபி(ஸல்) அவர்களும் நோற்றனர். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, தாமும் அந்நாளில் நோன்பு நோற்று மக்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷுரா நோன்பை விட்டுவிட்டனர். விரும்பியவர் நோன்பு நோற்றனர். விரும்பாதவர் விட்டுவிட்டனர்.

971. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது யூதர்கள் ஆஷுரா நாளில் நோன்பு நோற்றதைக் கண்டார்கள். 'இது என்ன நாள்?' என்று கேட்டார்கள். யூதர்கள் 'இது நல்ல நாள், இஸ்ரவேலர்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள்; இதற்காக மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'உங்களைவிட மூஸாவுக்கு அதிக உரிமை படைத்தவன் நான்'' என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையும் இட்டார்கள்.

Tuesday 18 August 2009

[பாடம்-30] மதீனாவின் சிறப்புகள்.

மதீனா புனிதமானது.

902. ''மதீனா நகர் இங்கிருந்து இதுவரை புனிதமானதாகும்! இங்குள்ள மரங்கள் வெட்டப்படக் கூடாது. இங்கே (மார்க்கத்தின் பெயரால்) புதியது எதுவும் உருவாக்கப்படக் கூடாது! (மார்க்கத்தின் பெயரால்) புதிய (செயல் அல்லது கொள்கை) ஒன்றை ஏற்படுத்துகிறவர் மீது அல்லாஹ்வின், வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும்! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.

903. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ''மதீனாவின் இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதி என் நாவினால் (என் வாயிலாக) புனிதமானதாக ஆக்கப்பட்டுவிட்டது!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பனூ ஹாரிஸா குலத்தினரிடம் நபி(ஸல்) அவர்கள் சென்று, 'பனூ ஹாரிஸா குலத்தினரிடம்! நீங்கள் ஹரம் எல்லைக்கு வெளியே இருக்கிறீர்கள்!'' என்றார்கள். பின்னர் திரும்பிப் பார்த்துவிட்டு. 'இல்லை! நீங்கள் ஹரம் எல்லைக்குள்தான் இருக்கிறீர்கள்!'' என்றார்கள்.

904. அலீ(ரலி) அறிவித்தார். ''அல்லாஹ்வின் வேதத்தையும் நபியவர்களிடமிருந்து கிடைத்த இந்த ஏட்டையும் தவிர (எழுத்து வடிவிலான மார்க்கச் சட்டம்) வேறு எதுவும் (நபியின் குடும்பத்தாரான) எங்களிடம் இல்லை! (இந்த ஏட்டில் உள்ளதாவது); 'ஆயிர் என்ற மலையிலிருந்து இன்ன இடம் வரை மதீனா புனிதமானதாகும். இதில் யாரேனும் (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக ஒன்றை ஏற்படுத்தினால் அல்லது அவ்வாறு ஏற்படுத்துபவருக்கு அடைக்கலம் தந்தால், அல்லாஹ்வின் - வானவர்களின் மற்றும் மக்கள் அனைவரின் சாபம் அவன் மீது ஏற்படும்! அவன் செய்த கடமையான வணக்கம். உபரியான வணக்கம் எதுவுமே ஏற்றுக் கொள்ளப்படாது! முஸ்லிம்களில் எவர் அடைக்கலம் தந்தாலும் அது ஒன்றே! (அது, மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானதாகக் கருதப்படவேண்டியதே)யாகும்! ஒரு முஸ்லிம் கொடுத்த அடைக்கலத்தை யாரேனும் முறித்தால் அவன் மீது அல்லாஹ், வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபம் ஏற்படும்! அவனிடமிருந்து அவன் செய்த கடமையான வணக்கம், உபரியான வணக்கம் எதுவுமே ஏற்றுக் கொள்ளப்படாது! விடுதலை செய்யப்பட்ட அடிமை ஒருவன், தன்(னை விடுதலை செய்த எஜமானர்களான) காப்பாளர்களின் அனுமதியின்றி, பிறரைத் தன் காப்பாளராக ஆக்கினால் அவன் மீதும் அல்லாஹ்வின், வானவர்களின் மற்றும் மக்கள் அனைவரின் சாபம் ஏற்படும்! அவன் செய்த கடமையான வணக்கம், உபரியான வணக்கம் எதுவுமே ஏற்றுக் கொள்ளப்படாது!''

மதீனாவின் சிறப்பும் தீயவர்களை அது வெளியேற்றிவிடும் என்பதும்.

905. ''யத்ரிபு என்று மக்கள் கூறக்கூடிய, எல்லா ஊர்களையும் மிகைக்கக் கூடிய ஓர் ஊருக்கு (ஹிஜ்ரத் செய்து செல்லுமாறு) நான் கட்டளையிடப்பட்டேன்! அதுதான் மதீனா! இரும்பின் துருவை உலை நீக்கிவிடுவதைப் போல் மதீனா நகர் தீயவர்களை வெளியேற்றிவிடும்! என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

மதீனாவுக்கு 'தாபா' என்ற பெயரும் உண்டு.

906. அபூ ஹுமைத்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தபூக்கிலிருந்து (யுத்தம் முடிந்து) திரும்பினோம். மதீனாவை நெருங்கியதும். 'இது 'தாபா!' (நலம் மிக்கது!)' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மதீனாவைப் புறக்கணித்தல்.

907. ''மதீனா வளமிக்க நகராக இருக்கும் நிலையில், இரைதேடக் கூடிய பறவைகளும் விலங்குகளும் மட்டுமே நாடி வரக்கூடியதாக அதை மக்கள் விட்டு(ச் சென்று) விடுவார்கள்! மறுமை நாளில், இறுதியாக எழுப்பப்பட இருப்பவர்கள் முஸைனா குலத்தைச் சேர்ந்த இரண்டு இடையர்களே ஆவர்! (அவர்களின் மரணம் எப்படி நிகழுமெனில்) அவர்கள் இருவரும் தம் ஆடுகளை (இடையர்களின் பாணியில்) அதட்டி அழைத்த வண்ணம் மதீனாவை நாடிச் செல்வார்கள். (மதீனாவைச் சென்றடைந்ததும்) அதை (மனித சஞ்சாரமற்ற) மிருகங்களின் வசிப்பிடமாகக் காண்பார்கள்: இறுதியில் 'வதா' (எனும்) மலைக்குன்றை அடைந்தவுடன் முகம் குப்புற மூர்ச்சையுற்று விழுந்து (இறந்து) விடுவார்கள்! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹூரைரா(ரலி) அறிவித்தார்.|

908. ''யமன் வெற்றி கொள்ளப்படும். உடனே, ஒரு கூட்டத்தினர் ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு, தம் குடும்பத்தினரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் அழைத்துக் கொண்டு (யமன் நாட்டிற்குச்) செல்வார்கள்! ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது! இதை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா? பின்னர் 'ஷாம்' வெற்றி கொள்ளப்படும். உடனே, ஒரு கூட்டத்தினர் ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு, 'தம் குடும்பத்தினரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் அழைத்துக் கொண்டு அங்கே செல்வார்கள்; ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது! இதை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா? பின்னர் இராக் வெற்றி கொள்ளப்படும்; உடனே, ஒரு கூட்டத்தினர் ஒட்டகங்களை ஓட்டிக்கொண்டு, தம் குடும்பத்தினரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் அழைத்துக் கொண்டு அங்கே செல்வார்கள்! ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது! இதை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா? 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என சுப்யான்(ரலி) அறிவித்தார்.

ஈமான் மதீனாவில் அபயம் பெறும்.

909. ''பாம்பு தன் புற்றில் (சென்று) அபயம் பெறுவது போல் ஈமான் எனும் இறை நம்பிக்கை மதீனாவில் அபயம் பெறும்! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

மதீனா வாசிகளுக்கு எதிராக சூழ்ச்சி செய்வது குற்றம்.

910. ''மதீனாவாசிகளுக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் எவரும் தண்ணீரில் உப்பு கரைவது போல் கரைந்து போவார்கள்! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸஅத்(ரலி) அறிவித்தார்.

மதீனாவின் கோட்டைகள்.

911. உஸாமா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனாவின் கோட்டைகளில் ஒரு கோட்டையின் மீதிருந்து நோட்டமிட்டார்கள். பிறகு, 'நான் பார்ப்பதை நீங்கள் பார்க்கிறீர்களா? நான் உங்கள் வீடுகள் நெடுகிலும் (வருங்காலத்தில்) குழப்பங்கள் விளையக் கூடிய இடங்களை மழைத்துளிகள் விழும் இடங்களைப் (பார்ப்பதைப்) போன்று பார்க்கிறேன்!'' என்று கூறினார்கள்.

தஜ்ஜால் மதீனாவில் நுழைய முடியாது.

912. ''தஜ்ஜாலைப் பற்றிய அச்சம் மதீனாவுக்குள் நுழையாது! அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு வாசல்கள் இருக்கும்! ஒவ்வொரு வாசலிலும் இரண்டு வானவர்கள் இருப்பார்கள்! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ பக்ர்(ரலி) அறிவித்தார்.

913. ''மதீனாவின் வாசல்களில் வானவர்கள் இருப்பர்! மதீனாவிற்குள் (பிளேக் போன்ற) கொள்கை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாது! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

914. ''மக்கா, மதீனா தவிர தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இராது! மதீனாவின் எந்தவொரு வாசலானாலும் அங்கே வானவர்கள் அணிவகுத்து அதைக் காப்பார்கள். பின்னர் மதீனா, தன் குடிமக்களுடன் மூன்று முறை நிலநடுக்கத்திற்குள்ளாகும். அப்போது ஒவ்வொரு காஃபிரையும் முனாஃபிக்கையும் (இறைமறுப்பாளனையும் நயவஞ்சகனையும்) அல்லாஹ் (மதீனாவிலிருந்து) வெளியேற்றி விடுவான்! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

915. தஜ்ஜால் (மதீனாவை நோக்கி) வருவான்; மதீனாவின் வாசல்களில் நுழைவது அவனுக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, (மதீனாவுக்கு வெளியே), மதீனாவின் உவர் நிலத்தில் அவன் தங்குவான்;. அவனை நோக்கி மக்களில் சிறந்த ஒருவர் அன்று புறப்படுவார்; அவர் அவனிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அடையாளம்) சொல்லிய தஜ்ஜால் நீதான் என்று உறுதியாகக் கூறுகிறேன்!'' என்பார். அப்போது தஜ்ஜால் (மக்களை நோக்கி), 'நான் இவனைக் கொன்று, பிறகு உயிர்ப்பித்தால் (என்) விஷயத்தில் நீங்கள் சந்தேகம் கொள்வீர்களா?' என்று கேட்பான். மக்கள் 'கொள்ள மாட்டோம்!'' என்பார்கள். உடனே, அவன் அவரைக் கொன்று, பின்னர் உயிர்ப்பிப்பான். அப்போது, அந்த நல்ல மனிதர் உயிர்ப்பிக்கப்பட்டதும், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! இன்றைய தினத்தை விடத் தெளிவாக உன்னைப் பற்றி நான் (இதற்கு முன்) ஒருபோதும் அறிந்திருக்கவில்லை!'' என்று கூறுவார். தஜ்ஜால் 'நான் இவரைக் கொல்வேன்!'' என்பான். ஆனால், அவனால் அவரைக் கொல்ல முடியாது! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். தஜ்ஜால் பற்றி நபி(ஸல்) அவர்கள் நீண்ட விளக்கம் தரும்போது இதைக் கூறினார்கள் என்றும் அறிவித்தார்.

மதீனா தீயவர்களை வெளியேற்றும்.

916. ஜாபிர்(ரலி) அறிவித்தார். ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்பதாக உறுதி மொழி கொடுத்தார். மறுநாள் முதல் அவர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டார். '(இஸ்லாத்தை ஏற்கும் ஒப்பந்தத்திலிருந்து) என்னை நீக்கி விடுங்கள்!'' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை அதை மறுத்தார்கள். 'மதீனா (துருவை நீக்கித் தூய்மைபடுத்தும்) உலையைப் போன்றதாகும்! அது தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றி விடும். அதிலுள்ள நல்லவர்கள் தூய்மை பெற்றுத் திகழ்வார்கள்!'' என்று கூறினார்கள்.

917. ''இறைவா! மக்காவில் நீ ஏற்படுத்திய பரக்கத்தைப் போல் இரண்டு மடங்கை மதீனாவில் ஏற்படுத்துவாயாக! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.

918. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது அபூ பக்ர்(ரலி), பிலால்(ரலி) ஆகியோருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. அபூ பக்ர்(ரலி) தமக்குக் காய்ச்சல் ஏற்படும்போது, 'மரணம் தன்னுடைய செருப்பு வாரை விடச் சமீபத்தில் இருக்கும் நிலையில் ஒவ்வொரு மனிதனும் தன் குடும்பத்தாருடன் காலைப் பொழுதை அடைகிறான்!'' என்ற கவிதையைக் கூறுவார்கள். பிலால்(ரலி) காய்ச்சல் நீங்கியதும் வேதனைக் குரலை உயர்த்தி, 'இத்கிர், ஜலீல் எனும் புற்கள் என்னைச் சூழ்ந்திருக்க, ஒரு பள்ளத்தாக்கில் ஓர் இராப் பொழுதையேனும் நான் கழிப்பேனா? 'மஜின்னா' எனும் (சுனையின்) நீரை நான் அருந்துவேனா? ஷாமா, தஃபீல் எனும் இரண்டு மலைகள் (அல்லது இரண்டு ஊற்றுகள்) எனக்குத் தென்படுமா?' என்ற கவிதையைக் கூறுவார்கள். மேலும், பிலால்(ரலி) 'இறைவா! ஷைபா இப்னு ரபிஆ, உத்பா இப்னு ரபீஆ, உமய்யா இப்னு கலஃப் ஆகியோர் எங்கள் நாட்டிலிருந்து எங்களை (அப்புறப்படுத்தி) இந்த நோய்ப் பிரதேசத்திற்கு விரட்டியது போல், அவர்களை நீ உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்தி (சபித்து) விடுவாயாக!'' என்று கூறுவார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! நாங்கள் மக்காவை நேசித்தது போல் அல்லது அதைவிட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்கு! இறைவா! எங்களுடைய (அளவைகளான) ஸாவு, முத்து ஆகியவற்றில் (எங்கள் உணவில்) எங்களுக்கு நீ பரக்கத் செய்! இவ்வூரை எங்களுக்கு ஆரோக்கியமானதாக ஆக்கு! இங்குள்ள காய்ச்சலை 'ஜுஹ்ஃபா' எனும் பகுதிக்கு இடம் பெயரச் செய்!'' என்று பிரார்த்தித்தார்கள். நாங்கள் மதீனாவிற்கு வந்தபோது, அது அல்லாஹ்வின் பூமியிலேயே நோய் நொடிகள் அதிகமான (பிரதேசமாக இருந்தது. (ஏனெனில்) 'புத்ஹான்' எனும் ஓடையில் மோசமான (கெட்டுப்போன) தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது!

Saturday 15 August 2009

[பாடம்-29] இஹ்ராம் அணிந்த நிலையில் தவறாக வேட்டையாடியதன் பரிகாரம்.

இஹ்ராம் அணியாதவர் வேட்டையாடி, இஹ்ராம் அணிந்தவருக்கு அன்பளிப்பாக அதை வழங்கினால் அவர் உண்ணலாம்.

884. அபூ கதாதா(ரலி) அறிவித்தார். நான் ஹுதைபிய்யா ஆண்டில் (மக்காவுக்குப்) புறப்பட்டேன். என்னுடைய தோழர்கள் இஹ்ராம் அணிந்தனர்; நான் இஹ்ராம் அணியவில்லை. எதிரிகள் நபி(ஸல்) அவர்களின் மீது படையெடுத்து வரவிருக்கிறார்கள் என்ற செய்தி நபி(ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது. நபி(ஸல்) அவர்கள் அந்தப் படையை எதிர்கொள்ள முன்னே புறப்பட்டார்கள். நான் மற்ற நபித்தோழர்களுடன் சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துச் சிரிக்கலாயினர்.''அப்போது நான் என் முன்னே ஒரு காட்டுக் கழுதையைக் கண்டு, அதைத் தாக்கி ஈட்டியால் குத்திப் பிடித்தேன். என் தோழர்களிடம் உதவி வேண்டினேன். (இஹ்ராம் அணிந்திருந்ததால்) அவர்கள் எனக்கு உதவ மறுத்துவிட்டனர். பிறகு அதன் மாமிசத்தை நாங்கள் சாப்பிட்டோம். நாங்கள் நபி(ஸல்) அவர்களைப் பிரிந்து விடுவோமோ என்று அஞ்சினோம். நபி(ஸல்) அவர்களைத் தேடி என் குதிரையைச் சிறிது நேரம் விரைவாகவும் சிறிது நேரம் மெதுவாகவும் ஓட்டிச் சென்றேன். நள்ளிரவில் நான் பனூகிஃபார் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரைச் சந்தித்து, 'நபி(ஸல்) அவர்களை எங்கேவிட்டு வந்தீர்?' என்று கேட்டேன். அதற்கவர் 'அவர்கள் 'சுக்யா' எனும் இடத்திற்குச் சென்று மதிய ஓய்வு கொள்ள எண்ணியிருந்த வேளையில், 'தஃஹின்' எனும் இடத்தில் அவர்களைவிட்டு வந்தேன்!'' என்றார். (நான் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து), 'இறைத்தூதர் அவர்களே! உங்கள் தோழர்கள் உங்களின் மீது ஸலாம் (இறை சாந்தி) மற்றும் இறைகருணை பொழிந்திடப் பிரார்த்திக்கிறார்கள்! உங்களைப் பிரிந்து விடுவோமோ என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்! எனவே (அவர்கள் வரும்வரை) அவர்களுக்காக நீங்கள் காத்திருங்கள்! இறைத்தூதர் அவர்களே! நான் காட்டுக் கழுதையை வேட்டையாடினேன். அதில் சிறிதளவு என்னிடம் மீதம் உள்ளது!'' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள் மக்களிடம் 'உண்ணுங்கள்!'' என்றார்கள். (அப்போது) மக்கள் அனைவரும் இஹ்ராம் அணிந்திருந்தார்கள்.

இஹ்ராம் அணியாதவர் வேட்டையாடும்போது இஹ்ராம் அணிந்தவர் உதவக் கூடாது.

885. அபூ கதாதா(ரலி) அறிவித்தார். நாங்கள் மதீனாவுக்கு மூன்று (கல்) தொலைவிலுள்ள காஹா எனும் இடத்தில் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். எங்களில் இஹ்ராம் அணிந்தவர்களும் இஹ்ராம் அணியாதவர்களும் இருந்தனர். என் தோழர்கள் எதையோ பார்க்கலானார்கள். நான் கூர்ந்து பார்த்தபோது ஒரு காட்டுக் கழுதை தென்பட்டது. (என் குதிரையில் ஏறியதும்) என்னுடைய சாட்டை கீழே விழுந்தது. (அதை எடுத்துத் தருமாறு என் தோழர்களிடம் நான் கேட்டபோது) என் தோழர்கள் 'நாங்கள் இஹ்ராம் அணிந்திருப்பதால் இந்த விஷயத்தில் உமக்கு எந்த உதவியும் செய்ய மாட்டோம்!'' என்று கூறிவிட்டனர். எனவே, நானே (இறங்கி) அதை எடுத்தேன். பின்னர், ஒரு பாறாங் கல்லின் பின்னாலிருந்து (மறைந்து) கழுதையின் அருகே சென்று அதன் கால்களை வெட்டி (அதை வேட்டையாடி)னேன். என் தோழர்களிடம் அதைக் கொண்டு வந்தேன். சிலர் 'உண்ணுங்கள்!'' என்றனர். மற்றும் சிலர் 'உண்ணாதீர்கள்!'' என்றனர். எங்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்த நபி(ஸல்) அவர்களிடம் நான் சென்று இது பற்றிக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அதை உண்ணுங்கள்! அது அனுமதிக்கப்பட்டதுதான்!' என்று பதிலளித்தார்கள்.

இஹ்ராம் அணியாதவர் வேட்டையாடுவதற்காக இஹ்ராம் அணிந்தவர் வேட்டைப் பிராணியை(க் காட்டிக் கொடுக்க) சைகை செய்யக் கூடாது.

886. அபூ கதாதா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்காகப் புறப்பட்டார்கள். அவர்களுடன் (மக்களும்) புறப்பட்டனர். அவர்களில் என்னையும் சேர்த்து ஒரு சிறு கூட்டத்தை நபி(ஸல்) அவர்கள் வேறு வழியாக அனுப்பி வைத்தார்கள். 'கடலோரமாக நீங்கள் செல்லுங்கள்; நாம் சந்திப்போம்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். கடலோரமாகச் சென்று திரும்பியபோது என்னைத் தவிர அனைவரும் இஹ்ராம் அணிந்தனர்; நான் மட்டும் இஹ்ராம் அணியவில்லை. இவ்வாறு நாங்கள் சென்று கொண்டிருக்கும்போது என் தோழர்கள் காட்டுக் கழுதைகளைக் கண்டனர். நான் அவற்றின் மீது தாக்குதல் நடத்தி, ஒரு பெட்டைக் கழுதையின் கால்களை வெட்டி (வேட்டையாடி)னேன். அனைவரும் ஓரிடத்தில் தங்கி அதன் இறைச்சியை சாப்பிட்டோம். 'நாம் இஹ்ராம் அணிந்திருக்கும் நிலையில் வேட்டையாடப்பட்ட இறைச்சியை உண்ணலாமா?' என்றும் தோழர்கள் (ஒருவரையொருவர்) கேட்டனர். எஞ்சிய இறைச்சியை எடுத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம். என் தோழர்கள் நபி(ஸல்) அவர்களிடம் 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் இஹ்ராம் அணிந்திருந்தோம்; அபூ கதாதா இஹ்ராம் அணியவில்லை. அப்போது காட்டுக் கழுதைகளை நாங்கள் கண்டோம். அபூ கதாதா அவற்றைத் தாக்கி அதில் ஒரு பெட்டைக் கழுதையின் கால்களை வெட்டி (வேட்டையாடி)னார். ஓரிடத்தில் தங்கி அதன் இறைச்சியை நாங்கள் சாப்பிட்டோம்; 'நாம் இஹ்ராம் அணிந்திருக்கும்போது வேட்டையாடப்பட்ட மாமிசத்தை உண்ணலாமா?' என்று நாங்கள் (எங்களுக்குள்) பேசிக் கொண்டோம்; பிறகு, எஞ்சிய மாமிசத்தை எடுத்து வந்திருக்கிறோம்!'' என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் எவராவது அதைத் தாக்குமாறு அவருக்குக் கூறினாரா? அல்லது அதை சுட்டிக் காட்டி சைகை செய்தாரா?' என்று கேட்டார்கள். நபித் தோழர்கள் 'இல்லை!'' என்றனர். 'அப்படியானால் எஞ்சிய மாமிசத்தை உண்ணுங்கள்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இஹ்ராம் அணிந்தவருக்கு காட்டுக் கழுதை உயிருடன் அன்பளிப்புச் செய்யப்பட்டால் அதை அவர் ஏற்கக் கூடாது.

887. ஸஅபு இப்னு ஜஸ்ஸாமா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் அப்வா அல்லது வத்தான் எனும் இடத்தில் இருந்தபோது, நான் அவர்களுக்கு ஒரு காட்டுக் கழுதையை அன்பளிப்பாக வழங்கினேன். அவர்கள் அதை ஏற்க மறுத்தார்கள். என் முகத்தில் ஏற்பட்ட கவலையைக் கண்டதும். 'நாம் இஹ்ராம் அணிந்திருப்பதால்தான் இதை ஏற்க மறுத்தோம்!'' என்று கூறினார்கள்.

இஹ்ராம் அணிந்தவர் கொல்வதற்கு அனுமதிக்கப்பட்ட உயிரினங்கள்.

888. ''ஐந்து உயிரினங்கள் தீங்கு இழைக்கக் கூடியவையாகும்! அவற்றை இஹ்ராம் அணிந்தவர் கொன்றால் அவரின் மீது குற்றமில்லை! அவை காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியனவாகும்! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை இப்னு உமர்(ரலி) ஹஃப்ஸா(ரலி), ஆயிஷா(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்.

889. அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் மினாவிலுள்ள ஒரு குகையிலிருந்தோம். அப்போது 'வல்முர்ஸலாத்'' எனும் அத்தியாயம் அவர்களுக்கு இறங்கியது. அவர்கள் அதை ஓதிக் காட்டினார்கள். நான் அவர்களின் திருவாயிலிருந்து (கேட்டு) அதை மனனம் செய்து கொண்டிருந்தேன். அதை ஓதியதால் அவர்களின் வாய் ஈரமாக இருந்தது. அப்போது ஒரு பாம்பு எங்களை நோக்கிச் சீறியது. உடனே நபி(ஸல்) அவர்கள், 'அதைக் கொல்லுங்கள்!'' என்றார்கள். நாங்கள் அதைக் கொல்ல விரைந்தபோது அது சென்றுவிட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அதன் தீங்கிலிருந்து நீங்கள் தப்பித்ததுபோல் உங்கள் தீங்கிலிருந்து அது தப்பித்தது!'' என்று கூறினார்கள்.

890. ''பல்லி தீங்கிழைக்கக் கூடியது! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் ஆனால், 'அதைக் கொல்லுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டதை நான் செவியுறவில்லை!'' என்று ஆயிஷா(ரலி) கூறினார்.

மக்காவில் போர் புரியக் கூடாது.

891. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ''இனி (மக்காவிலிருந்து) ஹிஜ்ரத் செய்தல் கிடையாது என்றாலும் அறப்போரிடுதல் அதற்காக (வும் மற்ற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் கொள்வதும்தான் இருக்கிறது! நீங்கள் போருக்காக அழைக்கப்பட்டால் புறப்படுங்கள்! வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ் இந்த ஊரைப் புனிதப்படுத்தியிருக்கிறான்; அவன் புனிதப்படுத்திய காரணத்தால் மறுமை நாள்வரை இவ்வூர் புனிமானதாகும்! எனக்கு முன்னர் எவருக்கும் இவ்வூரில் போரிட அனுமதிக்கப்படவில்லை. எனக்குக் கூட பகலில் சிறிது நேரம் (மட்டுமே) அனுமதிக்கப்பட்டது. அல்லாஹ் புனிதப்படுத்தியிருப்பதால், மறுமை நாள் வரை இவ்வூர் புனிதமானதாகும்! இங்குள்ள முட்களை வெட்டக் கூடாது. வேட்டைப் பிராணியை விரட்டக் கூடாது. பிறர் தவறவிட்ட பொருட்களை அதை அறிவிப்பவர் தவிர மற்றவர் எடுக்கக் கூடாது. இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, 'இறைத்தூதர் அவர்களே! இத்கிர் எனும் புல்லைத் தவிரவா? ஏனெனில், அது வீடுகளுக்கும் உலோகத் தொழிலாளர்களுக்கும் பயன்படுகிறது!'' என்று அப்பாஸ்(ரலி) கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'இத்கிரைத் தவிர!'' என்று பதிலளித்தார்கள்.

நறுமணம் இல்லாதவற்றை இஹ்ராம் அணிந்தவர் மருந்தாகப் பயன்படுத்தலாம்.

892. இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார். ''நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்திருந்த நிலையில், 'லஹ்யு ஜமல்' எனுமிடத்தில் தம் தலையின் நடுப்பகுதியில் இரத்தம் குத்தி எடுத்தார்கள்!''

இஹ்ராம் அணிந்தவர் திருமணம் செய்தல்.

893. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ''நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்திருக்கும்போது அன்னை மைமூனா(ரலி) அவர்களை மணந்தார்கள்!''

இஹ்ராம் அணிந்தவர் குளிப்பது.

894. அப்துல்லாஹ் இப்னு ஹுனைன்(ரஹ்) அறிவித்தார். 'அப்வா என்ற இடத்தில் மிஸ்வர் மின் மக்ரமா(ரலி) அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) ஆகிய இருவரும் கருத்து வேறுபட்டனர். 'இஹ்ராம் அணிந்தவர் தலையைக் கழுவலாம்!'' என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். 'இஹ்ராம் அணிந்தவர் தலையக் கழுவக் கூடாது!'' என்ற மிஸ்வர்(ரலி) கூறினார். அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி), என்னை அபூ அய்யூப் அல் அன்ஸாரி(ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். நான் சென்றபோது, அவர்கள் ஊன்றப்பட்ட இரண்டு மரக்கழிகளுக்கிடையே திரையால் மறைக்கப்பட்டுக் குளித்துக் கொண்டிருந்தார்கள். 'நான் அவர்களுக்கு ஸலாம் கூறினேன். 'யார் அது?' என்று கேட்டார்கள். 'நானே அப்துல்லாஹ் இப்னு ஹுனைன்! 'நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்திருக்கும்போது எவ்வாறு தலையைக் கழுவுவார்கள்?' என்று உங்களிடம் கேட்பதற்காக அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) என்னை அனுப்பினார்கள்!'' என்று கூறினேன். அபூ அய்யூப்(ரலி), தம் கையைத் திரையின் மீது வைத்து, அவர்களின் தலை தெரியுமளவிற்குத் திரையை (அசைத்து) இறக்கினார்கள். பிறகு தண்ணீர் ஊற்றுகிற மனிதரிடம் 'தண்ணீர் ஊற்றுவீராக!' என்றார்கள். அவர் தண்ணீர் ஊற்றினார். அபூ அய்யூப்(ரலி), தம் தலையை இரண்டு கைகளாலும் அசைத்துவிட்டு, முன்னும் பின்னுமாகக் கைகளைக் கொண்டு சென்றார்கள்; 'இப்படித்தான் நபி(ஸல்) அவர்கள் செய்யப் பார்த்திருக்கிறேன்!'' என்றும் கூறினார்கள்.

895. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது தலையில் இரும்புத் தொப்பியுடன் (மக்காவினுள்) நுழைந்தார்கள். அதை அவர்கள் கழற்றியபோது ஒருவர் வந்து, 'இப்னு கத்தல் என்பவன் கஅபாவின் திரைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறான்!' எனக் கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள், 'அவனைக் கொன்று விடுங்கள்!'' என்று உத்தரவிட்டார்கள்.

இறந்தவருக்காக ஹஜ் செய்தலும், அவரின் நேர்ச்சையை நிறைவேற்றலும், பெண்களுக்காக ஆண்கள் ஹஜ் செய்தலும்.

896. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஜுஹைனா கூட்டத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்து அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய், உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீ தானே அதை நிறைவேற்றுவாய். எனவே, அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள், கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ் அதிகம் உரிமை படைத்தவன்'' என்றார்கள்.

897. ஸாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார். ''நான் ஏழு வயதுச் சிறுவனாக இருந்தபோது நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்!''

898. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தம் ஹஜ்ஜை முடித்துத் திரும்பியபோது உம்முஸினான் அல் அன்ஸாரியா என்ற பெண்மணியிடம், 'நீ ஹஜ்ஜுக்கு வர என்ன தடை?' என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, 'என் கணவரே காரணம்; அவருக்கு தண்ணீர் இறைக்கும் இரண்டு ஒட்டகங்கள் இருந்தன. ஒன்றில் ஏறி அவர் ஹஜ்ஜுக்குச் சென்றார்; மற்றொன்று எங்களுக்குரிய நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது. (இதுவே காரணம்)' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'ரமலானில் செய்யப்படும் ஓர் உம்ரா என்னோடு ஹஜ்ஜுச் செய்வதற்கு நிகராகும்'' என்றார்கள்.

899. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் நான்கு விஷயங்களைச் செவியுற்றேன். அவை எனக்கு மிகவும் விருப்பமானவை. (அவை:) 'கணவனோ மணமுடிக்கத் தகாதவரோ இல்லாமல் இரண்டு நாள்கள் தொலைவுக்கு ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது! நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு நாள்களில் நோன்பு நோற்கக் கூடாது! அஸருக்குப் பிறகிலிருந்து சூரியன் மறையும் வரையிலும், ஸுப்ஹுக்குப் பிறகிலிருந்து சூரியன் உதிக்கும் வரையிலும் எந்தத் தொழுகையும் தொழக் கூடாது! மஸ்ஜிதுல் ஹராம், என்னுடைய பள்ளிவாசல் மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளி வாசல்களைத் தவிர வேறு பள்ளி வாசல்களுக்கு (அதிக நன்மையை நாடி)ப் பயணம் செய்யக் கூடாது!''.

கஅபா வரை நடந்து செல்வதாக நேர்ச்சை செய்தல்.

900. அனஸ்(ரலி) அறிவித்தார். ஒரு முதியவர் தம் இரண்டு புதல்வர்(கள் தம்மைத் தோள்களில் தாங்கிக் கொண்டிருக்க, அவர்)களிடையே தொங்கியபடி கால்கள் பூமியில் இழுபட வந்து கொண்டிருந்ததைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், 'இவருக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். '(கஅபா வரை) நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்திருக்கிறார்!'' என்று மக்கள் கூறினார்கள், நபி(ஸல்) அவர்கள் 'இவர் தம்மை இவ்விதம் வேதனைப்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது!'' என்று கூறிவிட்டு, அவரை வாகனத்தில் ஏறிச் செல்லுமாறும் உத்தரவிட்டார்கள்.

901. உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார். என் சகோதரி கஅபா வரை நடந்து செல்வதாக நேர்ச்சை செய்தார். அவர், இதுபற்றி நபி(ஸல்) அவர்களிடம் தீர்ப்புப் பெறும்படி எனக்கு உத்தரவிட்டார். நான் நபி(ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர் (சிறிது தூரம்) நடந்துவிட்டு வாகனத்தில் ஏறிக் கொள்ளட்டும்'' என்றார்கள்.