Tuesday 29 September 2009

[பாடம்-49] அன்பளிப்பு.

அன்பளிப்பும் அதன் சிறப்பும்.

1151. முஸ்லீம் பெண்களே ஓர் அண்டை வீட்டுக்காரி பிற அண்டை வீட்டுக்காரிக்கு ஒரு ஆட்டின் குளம்பை அன்பளிப்பாக கொடுத்தாலும் அதைப் பெறுவதை அவர்கள் இழிவாகக் கருத வேண்டாம் என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹூரைரா(ரலி) அறிவித்தார்.

அன்பளிப்பு செய்ய தூண்டுதல்.

1152. உர்வா பின் ஸூபைர் (ரலி) அறிவித்தார் : என்னிடம் ஆயிஷா (ரலி)அவர்கள் என் சகோதரியின் மகனே நாங்கள் பிறை பார்ப்போம். மீண்டும் பிறை பார்ப்போம். பிறகும் பிறை பார்ப்போம். இப்படி இரண்டு மாதங்களில் மூன்று பிறை பார்ப்போம். அப்படியிருந்தும் இறைத்தூதர் அவர்கள் வீட்டில் அடுப்பு நெருப்பு மூட்டப்படாது என்றார்கள். நான் என் சிற்றன்னையே நீங்கள் எதைக் கொண்டுதான் வாழ்க்கை நடத்தினீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இரண்டு கறுப்பு பொருட்கள். ஒன்று பேரீச்சம்பழம் மற்றது தண்ணீர். இவற்றைத் தவிர அல்லாஹ்வின் தூதருக்கு சில அண்டை வீட்டாரான அன்ஸாரிகள் அன்பளிப்பாக வழங்கும் ஒட்டகப் பாலாகும். நபி(ஸல்) அவர்கள் தமக்கு வழங்கப்பட்ட பாலை எங்களுக்கு பருகத் தருவார்கள் எனக் கூறினார்கள்.

சிறிய அன்பளிப்பு.

1153. ஒரு ஆட்டின் விலாவை அல்லது காலை அன்பளிப்பாக பெற்றுக் கொள்ளும்படி நான் அழைக்கப்பட்டாலும் அதை நான் ஏற்றுக்கொள்வேன். எனக்கு ஒரு ஆட்டின் விலா அல்லது கால் அன்பளிப்பாகத் தரப்பட்டாலும் சரி நான் அதைப் பெற்றுக் கொள்வேன் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹூரைரா (ரலி)அறிவித்தார்.

வேட்டைப்பிராணியை அன்பளிப்பு செய்தல்.

1154. மர்ருழ் ழஹ்ரான் என்னுமிடத்தில் நாங்கள் ஒரு முயலை அதன் பொந்திலிருந்து கிளப்பி விரட்டினோம்.மக்கள் அதைப் பிடிக்க முயற்சித்து களைத்து விட்டனர். நான் அதைப் பிடித்து விட்டேன்.அதை எடுத்துக் கொண்டு அபூதல்ஹா (ரலி)அவர்களிடம் வந்தேன். அவர்கள் அதை அறுத்து அதன் பிட்டத்தை அல்லது அதன் தொடைகளை நபி (ஸல்) அவர்களுக்கு அனுப்பினார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அதிலிருந்து நபி(ஸல்) அவர்கள் உண்டார்களா? என்று அனஸ் (ரலி) அவர்களிடம் வினவியதற்கு ஆம் எனப் பதிலளித்தார்கள்.

அன்பளிப்பை ஏற்றுக் கொள்தல்.

1155. என் தாயாரின் சகோதரியான உம்மு ஹூபைத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக பாலாடைக்கட்டி வெண்ணெய் உடும்புகள் ஆகியவற்றை அனுப்பியிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அவற்றிலிருந்து பாலாடைக்கட்டியையும் வெண்ணையையும் சிறிது உண்டார்கள். அவர்களுக்கு அருவருப்பாகத் தோன்றிய உடும்புகளை உண்ணவில்லை. எனினும் உடும்பு நபி(ஸல்) அவர்களின் உணவு விரிப்பின் மீது வைக்கப் பட்டிருந்தது. அது தடை (ஹராம்) செய்யப்பட்டிருந்தால் நபி(ஸல்) அவர்களின் உணவு விரிப்பில் வைத்து உண்ணப்பட்டிருக்காது என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

1156. நபி(ஸல்) அவர்களிடம் ஒரு உணவுப் பொருள் கொண்டு வரப்படும்போது இது அன்பளிப்பா தர்மமா? எனக் கேட்பார்கள். தர்மப் பொருள் எனக் கூறப்பட்டால் தம் தோழர்களிடம் நீங்கள் உண்ணுங்கள் எனக் கூறுவார்கள். தாம் உண்ண மாட்டார்கள். அன்பளிப்பு எனத் தெரிந்தால் தம் கையைத் தட்டிக்கொண்டு விரைந்து தம் தோழர்களுடன் சேர்ந்து தாமும் உண்பார்கள் என அபூஹூரைரா (ரலி) அறிவித்தார்.

1157. நபி (ஸல்)அவரகளிடம் ஒரு இறைச்சி கொண்டு வரப்பட்டது. அது பரீரா (ரலி) அவரகளுக்குத் தர்மமாகக் கிடைத்ததாகும். நபி (ஸல்) அவர்கள் அவ்விறைச்சி பரீரா(ரலி) வுக்குத் தர்மமாகும். நமக்கு அது அன்பளிப்பாகும் எனக் கூறினார்கள் என்று அனஸ் (ரலி) அறிவித்தார்.

அன்பளிப்பு வழங்குபவர் வழங்கப்படுபவரின் இருப்பிடமறிந்து வழங்குதல்.

1158. அல்லாஹ்வின் தூதரின் மனைவிமார்களாகிய நாங்கள் இரு குழுக்களாக இருந்தோம். ஒரு குழவில் நானும் (ஆயிஷா) ஹஃப்ஸா(ரலி) ஸஃபிய்யா(ரலி) ஸவ்தா (ரலி)ஆகியோரும் மற்றொரு குழுவில் உம்மு ஸலமா(ரலி) மற்றும் பிற மனைவிமார்களும் இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் என்னை எவ்வளவு பிரியமாக நேசித்து வந்தார்கள் என்பதை முஸ்லீம்கள் நன்கு அறிந்திருந்தனர். ஆகவே அவர்கள் இறைத்தூதருக்கு அன்பளிப்பு ஏதும் வழங்க விரும்பினால் என் வீட்டில் நபி(ஸல்) அவர்கள் தங்கும் நாள் வரும்போது அதைக் கொடுத்தனுப்புவர். எனவே இது சம்மந்தமாக உம்மு ஸலமா(ரலி) அவர்களின் குழுவினர் தங்களுக்குள் கலந்து பேசினர். பின்னர் அல்லாஹ்வின் தூதர் மக்களிடம் பேசி எவர் தம் அன்பளிப்பை எனக்குத் தர விரும்புகிறாரோ அவர் நான் என் மனைவிமார்களின் வீடுகளில் எங்கிருந்தாலும் அங்கு அனுப்பி வைக்கட்டும் எனக் கூறும்படி இறைத்தூதரைக் கேட்டுக்கொள் என உம்மு ஸலமா(ரலி)அவர்களை மற்ற குழுவைச்சார்ந்த மனைவியர்கள் கூறினர். அவ்வாறே உம்மு ஸலமா(ரலி) அவர்கள் இறைத்தூதரிடம் கூற அதற்கு நபி (ஸல்)அவர்கள் பதிலேதும் கூறவில்லை. பின்னர் குழுவிலுள்ளோர் உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் இறைத்தூதரின் பதிலைப் பற்றி வினவ அவர்கள் பதிலேதும் கூறவில்லை என்று உம்மு ஸலமா(ரலி) அவர்கள் கூறினார். மீண்டும் நபி(ஸல் அவர்களிடம்இது பற்றிப் பேசு எனக் குழவின் பிற மனைவியர் கூறினர். உம்மு ஸலமா(ரலி) அவர்கள் தமது முறை வந்தபோது நபி (ஸல்)அவர்களிடம் பேச அப்போதும் நபி(ஸல்) அவர்கள் பதிலேதும் கூறவில்லை. குழவினர் நபி (ஸல்) அவர்களின் பதில் பற்றி வினவ உம்மு ஸலமா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் பதிலேதும் கூறவில்லை எனக் கூறினார்கள். அதற்கு குழுவினர் நபி(ஸல்) அவர்கள் பதிலளிக்கும்வரை இதுபற்றிக் கேட்டுக் கொண்டேயிரு என உம்மு ஸலமா(ரலி) அவர்களைக் கேட்டுக் கொண்டனர். மீண்டும் உம்மு ஸலமா(ரலி) அவர்களின் முறை வந்த போது நபி(ஸல்) அவர்களிடம் இது குறித்து வினவ நபி (ஸல்) அவர்கள் ஆயிஷாவின் விஷயத்தில் எனக்கு நீ துன்பம் தராதே. ஏனென்றால் ஆயிஷாவின் படுக்கை தவிர வேறு எந்த மனைவியின் படுக்கையில் இருக்கும்போதும் எனக்கு வஹீ வருவதில்லை எனக் கூறினார்கள். உம்மு ஸலமா(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே உங்களுக்குத் துன்பம் தந்ததற்கு அல்லாஹ்விடம் நான் பாவமன்னிப்புக் கோருகிறேன் என்றார்கள். பிறகு அக்குழுவினர் நபி(ஸல்)அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி)அவர்களை அணுகி அல்லாஹ்வின் தூதரிடம் சென்று உங்கள் மனைவிமார்கள் அபூபக்கர்(ரலி)அவர்களின் மகள் ஆயிஷா விஷயத்தில் தாங்கள் நடந்து கொள்வது போன்றே பிற மனைவியரிடமும் நீதமாக நடந்து கொள்ளுமாறு அல்லாஹ்வின் பெயரால் கேட்கிறார்கள் என்று கூறுமாறு சொல்லியனுப்பினார்கள். அவ்வாறே ஃபாத்திமா (ரலி)அவர்களும் நபி(ஸல்)அவர்களிடம் பேசினார்கள். அதற்கு நபி(ஸல்)அவர்கள் என் அன்பு மகளே நான் நேசிப்பதை நீயும் நேசிக்கவில்லையா? என்று கேட்க அதற்கு அவர்கள் நீங்கள் நேசிப்பதை நானும் நேசிக்கிறேன் எனப் பதிலளித்து விட்டுத் திரும்பி விட்டார்கள். பிற மனைவியர்களிடம் நடந்ததைக்கூற அவர்கள் மீண்டும் கூடி நபி(ஸல்)அவர்களிடம் செல்லக்கூறியபோது ஃபாத்திமா (ரலி)அவர்கள் மறுத்துவிட்டனர். எனவே அவர்கள் தம் சார்பாக ஜைனப் பின்த்து ஜஹ்ஸ் (ரலி)அவர்களை நபி(ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தனர். ஜைனப்(ரலி)அவர்கள் நபி (ஸல்)அவர்களிடம் வந்து சற்று கடுமையாகப் பேசி உங்கள் மனைவிமார்கள் அபூகுஹாபாவின் மகனுடைய மகளின் விஷயத்தில் நடந்து கொள்வது போன்றே பிற மனைவியரிடமும் நீதியுடன் நடந்து கொள்ள அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கின்றனர் என்று கூறினார். நான் அங்கு அமர்ந்து கொண்டிருக்க ஜைனப்(ரலி)அவர்களின் குரல் உயர்ந்தது. அவர் என்னைக் குறை கூறித் திட்டினார்.எந்த அளவுக்கென்றால் நபி(ஸல்)அவர்கள் நான் அவருக்குப் பதில் கூறமாட்டேனா என்று எதிர்பார்ப்பது போல் என்னையே உற்று நோக்கியவாறு இருந்தார்கள்.உடனே நான் ஜைனபுக்கு(ரலி) பதில் கூறி இறுதியில் அவரை வாயடைக்கச் செய்து விட்டேன். நபி(ஸல்)அவர்கள் என்னைப் பார்த்து இவள் உண்மையிலேயே அபூபக்கரின் மகள்தான் எனக்கூறினார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.

நிராகரிக்க கூடாத அன்பளிப்பு.

1159. நான் சுமாமா பின் அப்தில்லாஹ்(ரஹ்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் எனக்கு வாசனைத் திரவியங்களைத் தந்து அனஸ்(ரலி) அவர்களிடம் கொடுக்க கூறினார்கள். அனஸ்(ரலி) அவர்கள் வாசனைத் திரவியத்தை எவரேனும் அன்பளிப்பு செய்தால் நபி(ஸல்) அவர்கள் நிராகரிப்பதில்லை என்று கூறினார்கள்.

அன்பளிப்புக்கு ஈடு செய்தல்.

1160. நபி(ஸல்) அவர்கள் அன்பளிப்பை ஏற்று அதற்குப் பகரமாக வேறு எதையாவது கொடுத்து ஈடு செய்து வந்தார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

அன்பளிப்புக்கு சாட்சிகள் வைத்தல்.

1161. நுஃமான் பின் பஷீர் (ரலி)அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டு என் தந்தை அன்பளிப்பு ஒன்றை எனக்குத் தந்தார். என் தாயார் அம்ரா பின்த்து ரவாஹா(ரலி) அவர்கள் என் தந்தையிடம் நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதரை சாட்சியாக ஆக்காதவரை நான் இதை ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறினார்கள். என் தந்தை இறைத் தூதரிடம் சென்று அல்லாஹ்வின் தூதரே நான் அம்ராபின்த் ரவாஹா(ரலி) அவர்களின் வாயிலாக எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்தேன். என் மனைவி அதற்கு உங்களை சாட்சியாக ஆக்கும்படி கேட்கிறார் என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் உங்களின் மற்ற பிள்ளைகளுக்கும் இதே போன்று கொடுத்துள்ளீர்களா? என்று வினவ என் தந்தை இல்லை எனக் கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவ்வாறாயின் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்களின் பிள்ளைகளிடம் நீதமாக நடந்து கொள்ளுங்கள் எனக் கூறினார்கள். இதைச்செவியுற்ற என் தந்தை உடனே திரும்பி வந்து தன் அன்பளிப்பை ரத்து செய்தார்கள் என ஆமிர் பின் ஷர்ஹபீல் (ரஹ்) அறிவித்தார்.

1162. தாம் அன்பளிப்புச் செய்ததை திரும்பப் பெறுபவர் வாந்தி எடுத்த பின் அதை மீண்டும் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

கணவர் அறியாமல் பிறருக்கு அன்பளிப்புச் செய்தல்.

1163. நான் ஒரு அடிமைப் பெண்ணை விடுதலை செய்தேன். ஆனால் நபி(ஸல்) அவர்களிடம் அதற்காக நான் அனுமதி கேட்கவில்லை. என்னிடம் நபி(ஸல்) அவர்கள் தங்கும் முறை வந்தபோது அல்லாஹ்வின் தூதரே அடிமைப் பெண்ணை நான் விடுதலை செய்து விட்டேனே தாங்கள் அறிவீர்களா? எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ விடுதலை செய்து விட்டாயா? எனக்கேட்க நான் ஆம் என்றேன். நபி(ஸல்) அவர்கள் நீ உன் தாயின் சகோதரர்களுக்கு அவளைக் கொடுத்து விட்டிருந்தால் உனக்கு மிகுந்த நற்பலன் கிடைத்திருக்கும் எனக் கூறினார்கள் என்று அன்னை மைமூனா பின்த் ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.

1164. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிரயாணம் செய்ய நாடினால் தம் மனைவிமார்களுக்கிடையில் எவரைத் தம்முடன் அழைத்துச் செல்வது என்று சீட்டு குலுக்கிப் போடுவார்கள். எவரது பெயர் குலுக்கலில் வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு புறப்படுவார்கள். தம் மனைவிமார்களில் ஒவ்வொருவருக்கும் பகலையும் இரவையும் பங்கு வைத்து வந்தார்கள். ஆனால் ஸவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) அவர்கள் மட்டும் தம் பங்குக்குறிய நாளை நபி (ஸல்)அவர்களின் பிரியத்திற்குறிய மனைவியாகிய எனக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள். அதன் வாயிலாக இறைத்தூதரின் திருப்தியை அடைய அவ்வாறு செய்தார்கள் என ஆயிஷா(ரலி)அறிவித்தார்.

அன்பளிப்பில் அடைந்த திருப்தி.

1165. மிஸ்வர் பின் மக்ரமா (ரலி)அவர்கள் அறிவிப்பதாவது: நபி(ஸல்)அவர்கள் சில அங்கிகளைப் பங்கிட்டார்கள். ஆனால் என் தந்தை மக்ரமா (ரலி)வுக்கு ஒன்றும் கொடுக்கவில்லை. என் தந்தை என்னிடம் மகனே என்னுடன் அல்லாஹ்வின் தூதரிடம் வா எனக் கூறினார்கள். நான் அவருடன் சென்றேன். என் தந்தை என்னிடம் நபி(ஸல்) அவர்களை எனக்காக கூப்பிடு எனக்கூற நான் நபி(ஸல்) அவர்களை அழைத்தேன். நபி(ஸல்) அவர்கள் வெளியே வரும்போது அந்த அங்கிகளில் ஒன்றை தோளில் இட்டவாறு வந்தார்கள். இதை நான் உங்களுக்காக எடுத்து வைத்திருந்தேன் எனக்கூறி என் தந்தை மக்ரமா(ரலி)அவர்களிடம் கொடுக்க அவர் அதைக் கண்டு மக்ரமா திருப்தியடைந்தான் என்றார்கள்.

எதை அணிவதை வெறுக்கத் தக்கதோ அதை பிறருக்கு அன்பளிப்பு வழங்குதல்.

1166. இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: நபி(ஸல்)அவர்கள் ஃபாத்திமா (ரலி)அவர்கள் வீட்டுக்கு வந்தார்கள். ஆனால் வீட்டுக்குள் செல்லாமல் திரும்பிப் போய்விட்டார்கள். இதற்கிடையில் அங்கு அலி (ரலி)அவர்கள் வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அலி(ரலி) அவர்களிடம் இவ்விசயத்தைச் சொல்ல அலி(ரலி)அவர்கள் அதை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். நான் ஃபாத்திமாவின் வீட்டு வாசலில் பல வண்ணச் சித்திரங்கள் வரையப்பட்ட திரைச்சீலையொன்றைக் கண்டேன். எனக்கும் இந்த ஆடம்பர உலகுக்கும் என்ன தொடர்பு? அதனால்தான் திரும்பி விட்டேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அலி(ரலி) அவர்கள் ஃபாத்திமா(ரலி)அவர்களிடம் சென்று இறைத்தூதர் கூறியதைச் சொன்னதும் ஃபாத்திமா(ரலி) அவர்கள் அத்திரைச்சீலை விசயத்தில் நபி(ஸல்) அவர்கள் விரும்புவதையே எனக்கு கட்டளையிடட்டும் அதன்படியே நான் செய்கிறேன் எனக்கூறினார்கள். நபி(ஸல்)அவர்கள் அதை இன்னாரின் வீட்டுக்கு அனுப்பி விடு அது அவர்களுக்கு உபயோகமாகும் எனக் கூறினார்கள்.

1167. அலீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் எனக்குப் பட்டு அங்கி ஒன்றை அன்பளிப்புச் செய்தார்கள். அதை நான் அணிந்து கொண்டேன். (அதைக்கண்ட) நபி(ஸல்) அவர்களின் முகத்தில் கோபக் குறியை கண்டேன். எனவே, அதைப் பல துண்டுகளாக்கி எங்கள் (குடும்பப்) பெண்களிடையே பங்கிட்டு விட்டேன்.

1168. அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். நாங்கள் நூற்றி முப்பது பேர் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அவர்கள், 'உங்களில் எவரிடமாவது உணவு இருக்கிறதா?' என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதரிடம் சுமார் ஒரு ஸாவு அளவு உணவு தான் இருந்தது. அது தண்ணீர் கலந்து குழைக்கப்பட்டது. பிறகு, மிக உயரமான (முரட்டு சுபாவம் கொண்ட) தலைவிரிகோலமான இணைவைக்கும் மனிதர் ஒருவர் ஆடுகளை ஓட்டி வந்தார். நபி(ஸல்) அவர்கள் அவரிடம், '(இவை) விற்பதற்காகவா? அன்பளிப்பாகவா?' என்று கேட்டார்கள். அவர், 'இல்லை. விற்பதற்காகத் தான் (கொண்டு வந்துள்ளேன்)'' என்று பதிலளித்தார். அவரிடமிருந்து ஓர் ஆட்டை நபி(ஸல்) அவர்கள் வாங்கினார்கள்; அது அறு(த்து சமை)க்கப்பட்டது. அதன் ஈரலைப் பொறிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். 'அல்லாஹ்வின் மீதாணையாக! எங்கள் நூற்றி முப்பது பேரில் ஒருவர் விடாமல் அனைவருக்குமே அதன் ஈரலில் இருந்து ஒரு துண்டை நபி(ஸல்) அவர்கள் துண்டித்துத் தந்திருந்தார்கள். அங்கிருந்தவருக்கு அதைக் கொடுத்தார்கள். அங்கில்லாதவருக்கு எடுத்து (பாதுகாத்து) வைத்தார்கள். இரண்டு (அகன்ற) தட்டுகளில் அவற்றை வைத்தார்கள். அனைவரும் உண்டார்கள். நாங்களும் வயிறு நிரம்ப உண்டோம். அப்படியிருந்தும் இரண்டு தட்டுகளும் அப்படியே மீதமாகிவிட்டன. அவற்றை நாங்கள் ஒட்டகத்தில் ஏற்றிச் சென்றோம்.

1169. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) கூறினார். என்னிடம், என் தாயார் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் இணைவைப்பவராக இருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம், 'என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என் தாயிடம் அவரின் உறவைப் பேணி நல்லமுறையில் நடந்து கொள்ளட்டுமா?' என்று கூறி மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்'' என்று கூறினார்கள்.

1170. அப்துல்லாஹ் இப்னு உபைதில்லாஹ் இப்னி அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார். இப்னு ஜுத்ஆனால் விடுதலை செய்யப்பட்ட அடிமையான சுஹைப்(ரலி) அவர்களின் மக்கள், தங்கள் தந்தையான சுஹைப்(ரலி) அவர்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் ஆயுட்காலத்தில்) இரண்டு வீடுகளையும் ஓர் அறையையும் (அன்பளிப்பாகக்) கொடுத்ததாகக் கூறினர். '(உங்கள் கூற்று உண்மையானது என்பதற்கு) உங்கள் இருவருக்கும் யார் சாட்சி சொல்வார்?' என்று (ஆளுநர்) மர்வான் கேட்டார். அவர்கள், 'இப்னு உமர் அவர்கள் (எங்களுக்காக சாட்சி சொல்வார்கள்)'' என்று கூறினர். உடனே மர்வான், இப்னு உமர்(ரலி) அவர்களைக் கூப்பிட்டனுப்பினார். இப்னு உமர்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சுஹைப் அவர்களுக்கு இரண்டு வீடுகளையும் ஓர் அறையையும் கொடுத்தது உண்மை தான்'' என்று சாட்சியம் அளித்தார்கள். இப்னு உமர்(ரலி) அவர்களின் சாட்சியத்தை வைத்து சுஹைப்(ரலி) அவர்களின் மக்களுக்குச் சாதகமாக மர்வான் தீர்ப்பளித்தார்.

உம்ராவும் ருக்பாவும்.

1171. ஜாபிர்(ரலி) அறிவித்தார். உம்ராவாக (ஆயுட்கால அன்பளிப்பாக) வழங்கப்பட்ட பொருளைக் குறித்து நபி(ஸல்) அவர்கள், 'அது எவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதோ அவருக்கே உரியது'' என்று தீர்ப்பளித்தார்கள்.

மணமக்களுக்காக திருமணத்தின்போது இரவல் வாங்குதல்.

1172. அய்மன்(ரஹ்) அறிவித்தார். ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் ஐந்து திர்ஹம்கள் விலையுடைய கெட்டியான சட்டை ஒன்றை அணிந்திருந்தார்கள். அவர்கள், 'உன் பார்வையை உயர்த்தி என் அடிமைப் பெண்ணைப் பார். அவள், வீட்டில் கூட இதை அணிய (மறுத்துப்) பெருமை பாராட்டுகிறாள். ஆனால், அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் மற்ற பெண்களிடையே என்னிடம் (மட்டும் தான்) இதுபோன்றதொரு சட்டை இருந்தது. (அப்போது) மதீனாவில் (தங்கள் கணவன்மார்கள் முனபு அழகாகத் தோற்றமளிப்பதற்காக) அலங்கரிக்கப்படுகிற (புதுமணப்) பெண்கள் என்னிடம் அதை இரவல் வாங்குவதற்காக ஆளனுப்பாமல் இருந்ததில்லை'' என்றார்கள்.

1173. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். முஹாஜிர்கள் (மக்காவிலிருந்து) மதீனாவுக்கு வந்தபோது அவர்களின் கையில் (செல்வம்) எதுவும் இருக்கவில்லை. அன்சாரிகள் நிலங்களையும் (பிற) அசையாச் சொத்துக்களையும் வைத்திருந்தார்கள். ஒவ்வோர் ஆண்டும் தங்கள் சொத்துக்களின் விளைச்சல்களை அவர்களுக்கு (குறிப்பிட்ட விகிதத்தில்) கொடுப்பதாகவும் 'எங்களுக்கு பதிலாக நீங்கள் அதில் சிரமப்பட்டு உழைக்க வேண்டும்' என்ற நிபந்தனையின் பேரிலும் அவற்றை முஹாஜிர்களுக்கு (குத்தகை நிலங்களாகப்) பங்கிட்டுக் கொடுத்தார்கள். என்னுடைய தாயார் உம்மு சுலைம் அவர்கள் (என் தாய்வழிச் சகோதரர்) அப்துல்லாஹ் இப்னு அபீ தல்ஹாவின் தாயாராகவும் இருந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதருக்குச் சில பேரீச்ச மரங்களை (அவற்றின் கனிகளை மட்டும் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்பாகக்) கொடுத்திருந்தார்கள். அவற்றை நபி(ஸல்) அவர்கள் தங்களின் அடிமைப் பெண்ணான, உஸாமா இப்னு ஜைத்டைய தாயார் உம்மு அய்மனுக்கு (அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள். கைபர்வாசிகளின் மீது போர் தொடுத்து முடித்து, மதீனாவுக்குத் திரும்பியபோது முஹாஜிர்கள், அன்சாரிகளின் மனீஹாக்களை (இரவலாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்புச் செய்த பேரீச்சந் தோட்டங்களை) அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களும் என் தாயாரிடம் அவரின் பேரீச்ச மரங்களைத் திருப்பித் தந்துவிட்டார்கள். அவற்றுக்கு பதிலாக, உம்மு அய்மன் அவர்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் தோட்டத்திலிருந்து (சில மரங்களை அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள்.

1174. நாற்பது நல்ல காரியங்கள் உண்டு. அவற்றில் ஒன்றை, அதன் நன்மையை நாடியும், அதற்கென வாக்களிக்கப்பட்டுள்ள (சொர்க்கத்)தை உண்மையென நம்பியும் ஒருவர் கடைப்பிடித்து நடப்பாராயின், அதன் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் புகுத்தியே தீருவான். அவற்றில் மிக உயர்ந்தது பெட்டை வெள்ளாட்டைப் பாலுக்காக இரவல் தருவதாகும் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் இதை அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

அறிவிப்பாளர் ஹஸ்ஸான் இப்னு அதிய்யா(ரஹ்) கூறினார்: பெட்டை வெள்ளாட்டைப் பாலுக்காக இரவல் தருவதையடுத்து, அதற்குக் கீழேயுள்ள நல்ல காரியங்களான சலாமுக்கு பதில் சொல்வது, தும்மியவருக்காகப் பிரார்த்திப்பது, பாதையில் கிடக்கும் தொல்லை தரும் பொருளை அகற்றுவது முதலியவற்றை நாம் எண்ணிப் பார்த்தோம். ஆனால், பதினைந்து நற்செயல்களைக் கூட நம்மால் எட்ட முடியவில்லை.

Sunday 27 September 2009

[பாடம்-48] அடிமையை விடுதலை செய்தல்.

அடிமையை விடுதலை செய்வதும் அதன் சிறப்பும்.

1139. அலீ இப்னு ஹுஸைன்(ரஹ்) அவர்களின் தோழரான ஸயீத் இப்னு மர்ஜானா(ரஹ்) அறிவித்தார். ''ஒரு முஸ்லிமான (அடிமை) மனிதரை விடுதலை செய்கிறவரை (விடுதலை செய்யப்பட்ட) அந்த முஸ்லிமின் ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவருடைய) ஓர் உறுப்பை அல்லாஹ் நரகத்திலிருந்து (விடுவித்துக்) காப்பாற்றுவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என என்னிடம் அபூ ஹுரைரா(ரலி) கூறினார். உடனே நான், இந்த நபிமொழியை அலீ இப்னு ஹுஸைன்(ரஹ்) அவர்களிடம் கொண்டு சென்றேன். இதைக்கேட்ட அன்னார் தம் அடிமை ஒருவரை விடுதலை செய்ய விரும்பினார்கள். அந்த அடிமைக்கு (விலையாக) அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் இப்னு அபீதாலிப்(ரலி) பத்தாயிரம் திர்ஹம்களையோ ஆயிரம் தீனாரையோ அன்னாரிடம் கொடுத்திருந்தார்கள். அவ்வாறிருந்தும. (அந்தப் பணத்திற்குப் பொறுப்பேற்றுக் கொண்டு) அந்த அடிமையையே அன்னார் விடுதலை செய்துவிட்டார்கள்.

எந்த அடிமையை விடுதலை செய்வது மிகவும் சிறந்தது.

1140. அபூதர்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம், 'எந்த நற்செயல் சிறந்தது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஈமான் எனும் நம்பிக்கை கொள்வதும் அவனுடைய பாதையில் ஜிஹாத் எனும் போராடுவதுமாகும்'' என்று பதிலளித்தார்கள். நான், 'எந்த அடிமை(யை விடுதலை செய்வது) சிறந்தது'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அவர்களில் அதிக விலை கொண்ட அடிமையும் தன் எஜமானர்களிடம் பெறுமதி மிக்க அடிமையும் (தான் சிறந்தவர்கள்)'' என்று பதிலளித்தார்கள். நான், 'என்னால் அது (அடிமையை விடுதலை செய்வது) இயலவில்லையென்றால்?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'பலவீனருக்கு உதவு. அல்லது உழைத்துச் சம்பாதிக்க இயலாதவனுக்கு நன்மை செய்'' என்று கூறினார்கள். நான், 'இதுவும் என்னால் இயலவில்லை என்றால்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'மக்களுக்குத் தீங்கு செய்யாமல் இரு. ஏனெனில், அதுவும் நீ உனக்கு செய்து கொள்ளும் ஒரு தர்மம் ஆகும்'' என்று கூறினார்கள்.

1141. ஓர் அடிமையில் தனக்குள்ள பங்கை விடுதலை செய்கிறவரிடம் அந்த அடிமையின் (முழு) விலையையும் எட்டுகிற அளவிற்குச் செல்வம் இருந்தால் அந்த அடிமையை ஒத்த மற்றோர் அடிமையின் விலையை மதிப்பிட்டு தன்னுடைய கூட்டாளிகளுக்கு அவர்களின் பங்குக்கான விலையைக் கொடுத்து அந்த அடிமையை (முழுமையாக) விடுதலை செய்து விட வேண்டும். இல்லையென்றால், அவர் எந்த அளவிற்கு விடுதலை செய்தாரோ, அந்த (தன்னுடைய பங்கின்) அளவிற்கே விடுதலை செய்தவராவார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

ஒவ்வொரு மனிதனுக்கும், அவன் எண்ணியதே கிடைக்கும்.

1142. என் உம்மத்தினரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை, அவர்கள் அதன்படி செயல்படாதவரை அல்லது அதை (வெளிப்படுத்தி)ப் பேசாதவரை எனக்காக அல்லாஹ் மன்னித்துவிட்டான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

விடுதலை செய்யும் எண்ணத்தில் ஒருவர் தன் அடிமையை 'இவன் அல்லாஹ்வுக்குரியவன்' என்று கூறினால் (அது செல்லும்.) மேலும், அடிமையை விடுதலை செய்ய சாட்சிகளை ஏற்படுத்துதல்.

1143. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நான் இஸ்லாத்தை ஏற்க விரும்பி (நபி(ஸல்) அவர்களிடம்) சென்று கொண்டிருந்த பொழுது என்னுடன் ஓர் அடிமையும் இருந்தார். (வழியில்) அவர் என்னைப் பிரிந்தும் நான் அவரைப் பிரிந்தும் வழிதவறிச் சென்றுவிட்டோம். அதன் பிறகு, நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்து கொண்டிருந்த பொழுது அவ்வடிமை வந்தார். உடனே நபி(ஸல்) அவர்கள், 'அபூ ஹுரைராவே! இதோ, உங்கள் அடிமை உங்களிடம் வந்திருக்கிறான் (பாரும்)'' என்று கூறினார்கள். நான், '(நபி(ஸல்) அவர்களே!) இந்த அடிமை சுதந்திரமானார் என்பதற்கு நான் தங்களை சாட்சியாக ஆக்குகிறேன்'' என்று கூறினேன். என அறிவிப்பாளர் கைஸ்(ரஹ்) கூறினார். அபூ ஹுரைரா(ரலி) மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா வந்தபோது அவர் பின்வரும் கவிதையைப் பாடிக் கொண்டே வந்த நேரத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. எவ்வளவு நீண்ட களைப்பூட்டுகிற இரவு! ஆயினும் அது இறைமறுப்பு (ஏக இறைவனை ஏற்க மறுக்கும் கொள்கை) ஆட்சி செய்யும் நாட்டிலிருந்து எங்களை விடுதலை செய்துவிட்டது.

இணைவைப்பவர் (தன் அடிமையை) விடுதலை செய்தல்.

1144. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார். ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறியாமைக் காலத்தில் நூறு அடிமைகளை விடுதலை செய்தார்கள்; நூறு ஒட்டகங்களையும் அறுத்து தருமம் செய்தார்கள். இவ்வாறே, அவர்கள் இஸ்லாத்தைத் தழுவியபோது (ஹஜ் செய்த நேரத்தில்) நூறு ஒட்டகங்களை அறுத்து தருமம் (செய்து) நூறு அடிமைகளையும் விடுதலை செய்தார்கள். நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நான் அறியாமைக் காலத்தில் நன்மையை நாடியவனாக செய்து வந்த (தரும) காரியங்களைக் குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னர் செய்த நற்செயல்க(ளுக்கான பிரதிபலன்)களுடனேயே நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுள்ளீர்கள்'' என்று கூறினார்கள்.

1145. இப்னு அவ்ன்(ரஹ்) அறிவித்தார். நான் நாஃபிஉ(ரஹ்) அவர்களுக்குக் கடிதம் எழுதினேன்; அவர்கள் எனக்கு (பதில்) கடிதம் எழுதினார்கள். அதில் அவர்கள் 'நபி(ஸல்) அவர்கள் பனூ முஸ்தலிக் குலத்தார் அசட்டையாக (எச்சரிக்கையின்றி) இருந்தபோது அவர்களின் மீது (திடீர்) தாக்குதல் நடத்தினார்கள்; அப்போது அவர்களின் கால்நடைகள் நீர்நிலை ஒன்றில் தணணீர் புகட்டப்பட்டுக் கொண்டிருந்தன. அவர்களில் போரிடும் திறன் பெற்றவர்களைக் கொன்றார்கள்; அவர்களின் மக்களை (பெண்கள், பிள்ளை குட்டிகளை) போர்க் கைதிகளாக சிறை பிடித்தார்கள்; அன்றுதான் ஜுவைரிய்யா(ரலி) அவர்களைக் கண்டார்கள். இதை அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) எனக்கு அறிவித்தார்கள். அவர்களும் அந்த (முஸ்லிம்) படையில் இருந்தார்கள்' என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

பனூ தமீம் கோத்திரச் சிறப்பு.

1146. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பனூ தமீம் குலத்தார் பற்றிக் கூறிய மூன்று விஷயங்களைக் கேட்டதிலிருந்து நான் அவர்களை எப்போதும் நேசிக்கலானேன். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், 'அவர்கள் (பனூ தமீம் குலத்தார்) என் உம்மத்தினரிலேயே அதிகக் கடுமையுடன் தஜ்ஜாலை எதிர்த்துப் போராடுவார்கள்'' என்று கூறினார்கள். (ஒரு முறை) பனூ தமீம் குலத்தாரின் தருமப் பொருள்கள் வந்தபோது இறைத்தூதர், 'இவை எங்கள் இனத்தாரின் தருமப் பொருள்கள்'' என்று கூறினார்கள். (ஒரு முறை) ஆயிஷா(ரலி) அவர்களிடம் பனூதமீம் குலத்தாரின் பெண் போர்க் கைதி ஒருவர் இருந்தார். நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களிடம், 'நீ இந்தப் பெண்ணை விடுதலை செய்துவிடு. ஏனெனில், இவள் இஸ்மாயீல்(அலை) அவர்களின் சந்ததிகளில் ஒருத்தி'' என்று கூறினார்கள்.

1147. உங்களில் எவரும் 'உன் ரப்புக்கு (அதிபதிக்கு) உணவு கொடு, உன் ரப்புக்கு உளூச் செய்ய உதவு, உன் ரப்புக்கு நீர் புகட்டு' என்று கூற வேண்டாம். 'என் எஜமான்; என் உரிமையாளர்' என்று கூறட்டும் ''என் அடிமை. என் அடிமைப் பெண் என்று உங்களில் எவரும் கூற வேண்டாம். 'என் பணியாள்; என் பணிப்பெண்; என் பையன் என்று கூறட்டும் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

உங்கள் பணியாள் உங்களுக்கு உணவு கொண்டு வந்தால்...

1148. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் உங்களில் ஒருவரிடம் அவரின் பணியாள் அவரின் உணவைக் கொண்டு வந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் (உட்கார வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு) உட்கார வைக்கவில்லை என்றாலும் அவருக்கு ஒரு கவளம் அல்லது இரண்டு கவளங்கள் அல்லது ஒரு வாய் அல்லது இரண்டு வாய்கள் (அந்த உணவிலிருந்து) கொடுக்கட்டும். ஏனெனில், அதைத் தயாரிக்க அந்தப் பணியாள் பாடுபட்டார்.

முகத்தில் தாக்காதே.

1149. உங்களில் ஒருவர் பிறரைத் தாக்கினால் முகத்தில் அடிப்பதைத் தவிர்க்கவும் என்று இறைத்தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள் என அபூஹூரைரா (ரலி) அறிவித்தார்.

விடுதலைப் பத்திரத்தில் இடும் நிபந்தனைகள் பற்றி...

1150. ஆயிஷா (ரலி) கூறியதாவது: பரீரா (ரலி) தன் எஜமானர்களிடமிருந்து எழுதி வாங்கிய விடுதலைப்பத்திரத்தின் தொகையைச் செலுத்த உதவும்படி என்னிடம் வந்தார். அவர் அவ்விடுதலைத் தொகையில் சிறிதளவும் செலுத்தியிருக்கவில்லை. நான் அவரிடம் உன் எஜமானர்களிடம் சென்று அவர்களின் சம்மதத்தை கேள். உன் விடுதலைப் பத்திரப்படியுள்ள தொகையை நான் செலுத்தி உன் வாரிசுரிமையை நான் பெற்றுக்கொள்ளலாமா எனக்கேள். அவர்கள் சம்மதித்தால் தொகையை நானே செலுத்தி விடுகிறேன் என்றேன். பரீரா (ரலி) தம் எஜமானர்களிடம் கேட்க அவர்கள் சம்மதம் தர மறுத்து உன்னை வாங்கி விடுதலை செய்வதன் மூலம் அவர் (ஆயிஷா(ரலி)) இறைவனிடம் நன்மையை நாடினால் அவ்வாறே செய்யட்டும். ஆனால் உன் வாரிசுரிமை எங்களுக்கே உரியது எனக் கூறினர். இதை நான் இறைத்தூதர் (ஸல்)அவர்களிடம் கூற அதற்கவர்கள் நீ அவரை வாங்கி விடுதலை செய்து விடு. ஏனென்றால் விடுதலை செய்பவர்க்கே வாரிசுரிமை உரியதாகும் என்றார்கள். மக்களுக்கு என்னவாயிற்று? அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கிறார்களே. அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத ஒரு நிபந்தனையை ஒருவர் விதித்தால் அது செல்லாததாகும். அவர் நூறு முறை நிபந்தனை விதித்தாலும் சரியே அல்லாஹ்வின் சட்டத்தை ஏற்று பின்பற்றுதல் தகும். அதுவே உறுதியானதும் கட்டுப்படுத்தவல்லதுமாகும் என்றார்கள்.

Friday 25 September 2009

[பாடம்-47] அடைமானம்.

அடைமானம் வைக்கப்பட்ட கால்நடையை வாகனமாகப் பயன்படுத்தலாம்; அதன் பாலைக் கறக்கலாம்.

1137. அடகு வைக்கப்பட்ட பிராணியை, அதற்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக (அடகு வாங்கியவன்) வாகனமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். பால் தரும் பிராணி அடகு வைக்கப்பட்டிருப்பின், அதன் பாலை (அடகு வாங்கியவர்) அருந்தலாம் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அடகு வைப்பவர், அடகு வாங்குபவர் முதலானோர் கருத்து வேறுபட்டால் வாதி ஆதாரத்தைச் சமர்ப்பிப்பதும், பிரதிவாதி சத்தியம் செய்வதும் கடமையாகும்.

1138. இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார். நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுக்கு (ஒரு வழக்கில் விளக்கம் கேட்டு) கடிதம் எழுதினேன். அவர்கள், 'நபி(ஸல்) அவர்கள் பிரதிவாதி (தன் மீதுள்ள வழக்கை மறுப்பதற்கு) சத்தியம் செய்ய வேண்டுமென்று தீர்ப்பளித்தார்கள்'' என்று குறிப்பிட்டு பதில் (கடிதம்) எழுதினார்கள்.

Tuesday 22 September 2009

[பாடம்-46] கூட்டுச் சேருதல்.

உணவிலும் பயணச் செலவிலும் பிற பண்டங்களிலும் கூட்டுச் சேருதல்.

1131. ஸலமா(ரலி) அறிவித்தார். (ஹவாஸின் போரில்) மக்களின் பயண உணவு தீர்ந்து போய்ப் பஞ்சத்திற்குள்ளானார்கள். எனவே, நபி(ஸல்) அவர்களிடம் வந்து, (புசிப்பதற்காகத்) தங்கள் ஒட்டகங்களை அறுக்க அனுமதி கேட்டார்கள். நபி(ஸல்) அவர்களும் அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். (வழியில்) அவர்களை உமர்(ரலி) சந்திக்க, மக்கள் அவர்களுக்கு (நடந்த விஷயத்தை)த் தெரிவித்தார்கள். அதற்கு உமர்(ரலி), 'உங்கள் ஒட்டகங்களை அறுத்து (உண்டு)விட்ட பிறகு நீங்கள் எப்படி உயிர் வாழ்வீர்கள்?' என்று கேட்டார்கள். பிறகு நபி(ஸல்) அவர்களிடம் சென்று, 'இறைத்தூதர் அவர்களே! மக்கள் தங்களின் ஒட்டகத்தை அறுத்து (உண்டு)விட்ட பிறகு அவர்கள் எப்படி உயிர் வாழ்வார்கள்?' என்று கேட்டார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மக்கள் தங்கள் பயண உணவில் எஞ்சியதைக் கொண்டு வரும்படி அவர்களிடையே அறிவிப்புச் செய்யுங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே அறிவிப்புச் செய்யப்பட்டு, மக்கள் தங்கள் எஞ்சிய உணவைக் கொண்டு வந்து போடுவதற்காக ஒரு தோல் விரிப்பு விரித்து வைக்கப்பட்டது. மக்கள் அதில் தங்கள் எஞ்சிய உணவுகளை (குவியலாக) வைத்துவிட்டார்கள். இறைத் தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தித்து அதில் பரக்கத்தை அளிக்கும்படி அல்லாஹ்விடம் வேண்டினார்கள். பிறகு, தங்கள் பாத்திரங்களைக் கொண்டு வரும்படி மக்களை அழைத்தார்கள். மக்கள், தங்கள் இரண்டு கைகளையும் குவித்து (உணவில் தங்களின் பங்கைப்) பெற்றார்கள். அனைவரும் உணவைப் பெற்ற பிறகு நபி(ஸல்) அவர்கள், 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை என்றும் நான் இறைத்தூதர் என்றும் சாட்சி கூறுகிறேன்'' என்றார்கள்.

1132. அஷ்அரீ குலத்தினர் போரின்போது கையிருப்பிலுள்ள பயண உணவு (இருப்பு) குறைந்துவிட்டால் அல்லது மதீனாவில் தங்கள் மனைவி மக்களின் உணவு (இருப்பு) குறைந்து போய்விட்டால் தங்களிடம் (எஞ்சி) இருப்பதை ஒரு துணியில் சேகரித்து, பிறகு, ஒரு பாத்திரத்தைக் கொண்டு சமமாக தங்களுக்கிடையே அதைப் பங்கிட்டுக் கொள்வார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சேர்ந்தவன் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

ஆடுகளைப் பங்கிடுதல்.

1133. ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் துல் ஹுலைஃபாவில் தங்கியிருந்தோம். மக்களுக்குப் பசி எடுத்தது. அவர்கள் போரில் கிடைத்த செல்வங்களிலிருந்து சில ஒட்டகங்களையும் ஆடுகளையும் பெற்றார்கள். நபி(ஸல்) அவர்கள் மக்களின் பின்வரிசையில் இருந்தார்கள். மக்கள் அவசரப்பட்டு (அவற்றைப் பங்கிடுவதற்கு முன்பாகவே) அறுத்துப், பாத்திரங்களை (அடுப்பில்) ஏற்றி (சமைக்கத் தொடங்கி)விட்டனர். நபி(ஸல்) அவர்கள் (இந்த விஷயம் தெரிய வந்தவுடன்) பாத்திரங்களைக் கவிழ்க்கும்படி கட்டளையிட்டார்கள். அவ்வாறே அவை கவிழ்க்கப்பட்டு (அவற்றிலிருந்துஅவை வெளியே கொட்டப்பட்டு)விட்டன. பிறகு, அவற்றை அவர்கள் பங்கிட்டார்கள். பத்து ஆடுகளை ஓர் ஒட்டகத்திற்குச் சமமாக வைத்தார்கள். அப்போது ஓர் ஒட்டகம் மிரண்டு ஓடிவிட்டது. மக்கள் அதைத் தேடிச் சென்றார்கள். அது (அவர்களிடம் அகப்படாமல்) அவர்களைக் களைப்படையச் செய்துவிட்டது. மக்களிடம் குதிரைகள் குறைந்த எண்ணிக்கையில்தான் இருந்தன. ஒருவர் (நபித் தோழர்) அந்த ஒட்டகத்தைக் குறிவைத்து ஓர் அம்பை எறிந்தார். அல்லாஹ் அதை (ஓட விடாமல்) தடுத்து நிறுத்திவிட்டான். பிறகு நபி(ஸல்) அவர்கள், 'காட்டு மிருகங்களில் கட்டுக்கடங்காதவை இருப்பது போல் இந்தப் பிராணிகளிலும் கட்டுக் கடங்காதவை சில உள்ளன. இவற்றில் உங்களை மீறிச் செல்பவற்றை இவ்வாறே செய்யுங்கள் (அம்பெறிந்து தடுத்து நிறுத்துங்கள்)'' என்று கூறினார்கள். நான், '(ஒட்டகத்தை அறுக்க வாட்களை இன்று நாங்கள் பயன்படுத்திவிட்டால், அதன் கூர்முனை சேதமடைந்து) நாளை எங்களிடம் வாட்கள் இல்லாத நிலையில் பகைவர்களை (சந்திக்க நேரிடுமோ என்று) நாங்கள் அஞ்சுகிறோம். எனவே, நாங்கள் (கூரான) மூங்கில்களால் (இந்த ஒட்டகத்தை) அறுக்கலாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்), அவர்கள், 'இரத்தத்தை ஓடச் செய்கிற எந்த ஆயுதத்தால் அறுக்கப்பட்டி ருந்தாலும் (பிராணி அறுக்கப்படும் போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டிருக்கும் பட்சத்தில் அதை உண்ணுங்கள்; பற்களாலும் நகங்களாலும் அறுக்கப்பட்டதைத் தவிர, அதைப் பற்றி ('அது ஏன் கூடாது' என்று) நான் உங்களுக்குச் சொல்கிறேன்; பல்லோ எலும்பாகும்; நகங்களோ அபிசீனியர்களின் (எத்தியோப்பியர்களின்)கத்திகளாகும் என்று கூறினார்கள்.

கூட்டாளிகளிடையே பொருள்களுக்கு ஒத்த விலையை நிர்ணயித்தல்.

1134. தன் அடிமையில் தனக்குள்ள பங்கை விடுதலை செய்து விடுகிறவர் (வசதியுடையவராயின்) தன் செல்வத்தைக் கொண்டு அவ்வடிமையை முழுமையாக விடுதலை செய்வது அவரின் மீது கடமையாகும். அவரிடம் செல்வம் இல்லையெனில் அந்த அடிமையின் விலை, (அவனை) ஒத்த (அடிமையின்) விலையைக் கொண்டு மதிப்பிடப்பட்டு அவன் உழைத்துச் சம்பாதிக்க அனுமதியளிக்கப்பட வேண்டும். அவன் மீது தாங்க முடியாத (உழைப்பைச் சுமத்திச்) சிரமத்தை ஏற்படுத்தக் கூடாது ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹூரைரா(ரலி)அறிவித்தார்.

ஒரு பொருளைப் பங்கிடுவதற்காக சீட்டுக் குலுக்கிப் போடலாமா?

1135. ' அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை - ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ்த் தளத்திலும் இடம் கிடைத்தது. கீழ்தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது (அதைக் கொண்டு வர) அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது). அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் (தமக்குள்) 'நாம் (தண்ணீருக்காக) நம்முடைய பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம்; நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம்' என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்) அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற) அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.

(வியாபாரத்திற்காக வாங்கும்) உணவு முதலிய பொருள்களில் கூட்டு.

1136. அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம்(ரலி) அறிவித்தார். என் தாயார் ஸைனப் பின்த்து ஹுமைத்(ரலி) (நான் சிறுவனாயிருக்கும் போது) என்னை அல்லாஹ்வின் தூதரிடம் அழைத்துச் சென்று, 'இறைத்தூதர் அவர்களே! இவனிடம் (இஸ்லாத்தின் படி நடப்பதற்கான) உறுதிப் பிரமாணம் வாங்குங்கள்'' என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'சிறுவனாயிற்றே!'' என்று கூறிவிட்டு, என் தலையைத் தடவிக் கொடுத்து எனக்காக (அருள்வளம் வேண்டி) பிரார்த்தித்தார்கள்.

ஸுஹ்ரா இப்னு மஅபத்(ரஹ்) அறிவித்தார். என்னை என் பாட்டனார் அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம்(ரலி) கடைவீதிக்குக் கொண்டு சென்று உணவுப் பொருளை வாங்குவார்கள். (அப்போது அவர்களை இப்னு உமர்(ரலி) அவர்களும் இப்னு ஸுபைர்(ரலி) அவர்களும் சந்திப்பார்கள். அப்போது அவ்விருவரும், 'எங்களுடன் உணவு வியாபாரத்தில் கூட்டாளியாகி விடுங்கள். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் உங்களுக்காக அருள்வளம் வேண்டி பிரார்த்தித்துள்ளார்கள்'' என்று கூறுவார்கள். அவ்வாறே, என் பாட்டனாரும் அவர்களின் கூட்டாளியாகி விடுவார்கள். சில வேளைகளில், ஓர் ஒட்டகம் முழுக்க அப்படியே (லாபமாக) அவருக்குக் கிடைக்கும். அதை (தம்) வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள்.

Sunday 20 September 2009

[பாடம்-45] அநீதிகளும் அபகரித்தலும்.

அநீதிகளுக்காகப் பழிவாங்கல்.

1113. இறைநம்பிக்கையாளர்கள் நரகத்திலிருந்து தப்பி வரும்போது சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையிலுள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். அப்போது உலகில் (வாழ்ந்தபோது) அவர்களுக்கிடையே நடந்த அநீதிகளுக்கு அந்தப் பாலத்திலேயே ஒருவருக்கொருவர் கணக்குத் தீர்த்துக் கொள்வார்கள். இறுதியில், அவர்கள் பாவங்களிலிருந்து நீங்கித் தூய்மையாகி விடும்போது சொர்க்கத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! அவர்கள் சொர்க்கத்தில் உள்ள தம் வசிப்பிடத்தை, உலகில் அவர்களுக்கிருந்த இல்லத்தை விட எளிதாக அடையாளம் கண்டு கொள்வார்கள் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல்குத்ரி(ரலி) அறிவித்தார்.

1114. ஸஃப்வான் இப்னு முஹ்ரிஸ் அல்மாஸினீ(ரஹ்) அறிவித்தார். நான் இப்னு உமர்(ரலி) அவர்களுடன், அவர்களின் கையைப் பிடித்தபடி சென்று கொண்டிருந்தபோது ஒருவர் குறுக்கிட்டு, '(மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்குமிடையே நடைபெறும்) இரகசியப் பேச்சு பற்றி அல்லாஹ்வின் தூதரிடமிருந்து என்ன செவியுற்றீர்கள்?' என்று கேட்டதற்கு இப்னு உமர்(ரலி), 'அல்லாஹுதஆலா முஃமினைத் தன் பக்கம் நெருங்கச் செய்து, அவன் மீது தன் திரையைப் போட்டு அவனை மறைத்து விடுவான். பிறகு அவனை நோக்கி, 'நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா?' என்று கேட்பான். அதற்கு, அவன் 'ஆம், என் இறைவா!' என்று கூறுவான். (இப்படி ஒவ்வொரு பாவமாக எடுத்துக் கூறி) அவன் (தான் செய்த) எல்லாப் பாவங்களையும் ஒப்புக் கொள்ளச் செய்வான். அந்த இறைநம்பிக்கையாளர், 'நாம் இத்தோடு ஒழிந்தோம்' என்று தன்னைப் பற்றிக் கருதிக் கொண்டிருக்கும்போது இறைவன், 'இவற்றையெல்லாம் உலகில் நான் பிறருக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்து விடுகிறேன்' என்று கூறுவான். அப்போது அவனுடைய நற்செயல்களின் பதிவேடு அவனிடம் கொடுக்கப்படும். நிராகரிப்பாளர்களையும், நயவஞ்சகர்களையும் நோக்கி சாட்சியாளர்கள், 'இவர்கள் தாம், தம் இறைவன் மீது பொய்யைப் புனைந்துரைத்தவர்கள். எச்சரிக்கை! இத்தகைய அக்கிரமக்காரர்களின் மீது இறைவனின் சாபம் உண்டாகும்' என்று கூறுவார்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்'' என்று கூறினார்கள்.

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனைக் கைவிடவும் மாட்டான்.

1115. ' ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறவரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

''உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருந்தாலும் அக்கிரமத்துக்கு உள்ளானவனாக இருந்தாலும் அவனுக்கு உதவி செய்.''

1116. அனஸ்(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், 'உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு உதவி செய்'' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அக்கிரமத்துக்குள்ளானவனுக்கு நாங்கள் உதவுவோம். அக்கிரமக்காரனுக்கு நாங்கள் எப்படி உதவுவோம்?' என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், 'அவனுடைய கைகளைப் பிடித்து (அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து)க் கொள்வாய் (இதுவே, நீ அவனுக்குச் செய்யும் உதவி)'' என்று கூறினார்கள்.

அநீதி, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும்.

1117. அநீதி, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் ஒரு மனிதருக்கு அநீதியிழைத்திருந்து அதை அவர் மன்னிக்க முன்வந்தால் (அப்படி மன்னிக்கும்போது அநீதியிழைத்தவர்) தான் செய்த அநீதியை இன்னதென்று தெளிவாகக் கூற வேண்டுமா?

1118. ஒருவர், தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ, இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெறட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெறட்டும்.) (ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனுடைய அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரின் தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(பிறரின்) நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்தவனின் பாவம்.

1119. பிறரின் நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்தவர் ஏழு நிலங்களை (மறுமையில்) கழுத்தில் மாலையாகக் கட்டித் தொங்க விடப்படுவார் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.

1120. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு நிலத்திலிருந்து ஒரு பகுதியைத் தனக்கு உரிமையின்றி எடுத்துக் கொண்டவன் மறுமை நாளில் ஏழு பூமிகளுக்குக் கீழே அழுந்திப் போய் விடுவான். இதை இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இருவருக்கு (கூட்டு) உரிமையுள்ள ஒரு விசயத்தில் ஒருவர் மற்றவருக்கு சற்று அதிகமாகப் பயன் பெற அனுமதியளித்தால் அது செல்லும்.

1121. ஜபலா இப்னு ஸூஹைம்(ரஹ்) அறிவித்தார். நாங்கள் இராக்வாசிகள் சிலருடன் மதீனாவில் இருந்தோம். எங்களைப் பஞ்சம் தீண்டியது. எனவே, இப்னு ஸுபைர்(ரலி) எங்களுக்குப் பேரீச்சம் பழங்களைக் கொடுத்து வந்தார்கள். (அதை நாங்கள் கூடி அமர்ந்து உண்ணும்போது இப்னு உமர்(ரலி) எங்களைக் கடந்து செல்வார்கள். அப்போது, 'இறைத்தூதர் இரண்டு பேரீச்சம் பழங்களை ஒன்றாகச் சேர்த்து உண்பதைத் தடை செய்தார்கள்; உங்களில் (அப்படிச் சேர்த்து உண்ண விரும்பும்) அந்த மனிதர் தன் சகோதரரிடம் அனுமதி பெற்றாலே தவிர'' என்று கூறுவார்கள்.

1122. அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

அறிந்து கொண்டே தவறுக்காக வழக்காடுபவனின் பாவம்.

1123. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் அறையின் வாசலுக்கருகே (சிலர்) சச்சரவிட்டுக் கொண்டிருந்ததைச் செவியுற்றார்கள். அவர்களிடம் சென்று, 'நான் ஒரு மனிதனே. என்னிடம் வழக்காடுபவர்கள் வருகிறார்கள். உங்களில் ஒருவர் மற்றவரை விட வாக்கு சாதுர்யம். மிக்கவராக இருக்கலாம். அவர்தான் உண்மையைப் பேசியுள்ளார் என்று கருதி, நான் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்து விடுவேனாயின், எவருக்கு ஒரு முஸ்லிமின் உரிமையை எடுத்துக் கொள்ளும்படி (யதார்த்த நிலை அறியாமல்) நான் தீர்ப்பளிக்கிறேனோ (அவருக்கு) அது நரக நெருப்பின் ஒரு துண்டேயாகும். அவன் (விரும்பினால்) அதை எடுத்துக் கொள்ளட்டும்; அல்லது அதை (எடுத்துக் கொள்ளாமல்)விட்டு விடட்டும்'' என்று கூறினார்கள்.

அபகரித்தவனின் பொருள் ஏதேனும் கிடைத்தால், பொருளை இழந்தவன், தான் இழந்த பொருளுக்குப் பதிலாக அதை எடுத்துக் கொள்ளல்.

1124. உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம், 'தாங்கள் எங்களை ஒரு சமூகத்திடம் அனுப்புகிறீர்கள்; நாங்களும் (தங்கள் கட்டளையை ஏற்று) அங்கு செல்கிறோம்; (ஆனால்,) அவர்கள் எங்களுக்கு விருந்துபசாரம் செய்ய மறுக்கிறார்கள் எனில், அது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் ஒரு சமூகத்திடம் சென்று விருந்தினர்களுக்குத் தேவையான வசதிகளை உங்களுக்குச் செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் அப்படிச் செய்யவில்லையென்றால் அவர்களிடமிருந்து விருந்தனரின் உரிமையை (நீங்களாகவே) எடுத்துக்கொள்ளுங்கள்'' என்று எங்களுக்கு பதில் தந்தார்கள்.

''ஒருவர், தன் (வீட்டுச்) சுவரில் தன்னுடைய அண்டை வீட்டுக்காரர் மரக்கட்டையைப் பதிப்பதைத் தடுக்கலாகாது.''

1125. அப்துர் ரஹ்மான் இப்னு ஹுர் முஸ்அல் அஃரஜ்(ரஹ்) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஒருவர், தன் (வீட்டுச்) சுவரில், தன் அண்டை வீட்டுக்காரர் மரக்கட்டை (அல்லது உத்திரம், கர்டர், பரண் போன்ற எதையும்) பதிப்பதைத் தடுக்க வேண்டாம்'' என்று கூறினார்கள் என்று சொல்லிவிட்டு, அபூ ஹுரைரா(ரலி), 'என்ன இது? உங்களை இதை (நபியவர்களின் இந்தக் கட்டளையைப்) புறக்கணிப்பவர்களாக நான் பார்க்கிறேனே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த நபிவாக்கைத் தொடர்ந்து எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருப்பேன்'' என்று கூறுவார்கள்.

வீட்டு முற்றத்தில் அமர்வதும் பாதைகளில் அமர்வதும்.

1126. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். ''நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், 'எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள் சபைகள்'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள், 'பாதையின் உரிமை என்ன?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்'' என்று பதிலளித்தார்கள்.

விசாலமான பொதுப் பாதையில் எவ்வளவு வழிவிடுவது என்ற சச்சரவு எழுமானால், நிலத்தின் உரிமையாளர் அதில் கட்டடம் எதுவும் எழுப்ப விரும்பினால் ஏழு முழங்கள் அளவிற்கு மக்களின் போக்குவரத்துப் பாதைக்காக இடம் விடவேண்டும்.

1127. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நடைபாதை விஷயத்தில் மக்கள் சச்சரவு செய்தபோது, ஏழு முழங்கள் நிலத்தைப் பொதுவழியாக (போக்குவரத்துச் சாலையாக)விட்டுவிட வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.

ஒருவரின் உடைமையை அவரின் அனுமதியின்றி அபகரித்துக் கொள்வது.

1128. அப்துல்லாஹ் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார். கொள்ளையடிப்பதை (பிறர் பொருளை அவரின் அனுமதியின்றி பலவந்தமாக, பகிரங்கமாக அபகரித்துக் கொள்வதை)யும் (போரின்போது அல்லது பகைமையின் காரணத்தால்) ஒருவரின் அங்கங்களைச் சிதைப்பதையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

தன் செல்வத்தைக் காப்பதற்காகப் போராடுதல்.

1129. தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடும்போது கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

அடுத்தவரின் உணவுத் தட்டு முதலிய பொருள்களை உடைத்து விட்டால் (நஷ்ட ஈடு தர வேண்டுமா?)

1130. அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவிமார்களில் ஒருவரிடம் இருந்தார்கள். விசுவாசிகளின் தாய்மார்களின் ஒருவர் (நபியவர்களின் மனைவிமார்களில் ஒருவர்) பணிப்பெண் ஒருவரிடம் உணவுள்ள ஒரு தட்டு ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள். (அவர்கள் உணவு) கொடுத்தனுப்பிய வீட்டிலிருந்த நபி(ஸல்) அவர்களின் (மற்றொரு) மனைவி அந்தப் பணிப் பெண்ணின் கையைத் தட்டி அதை உடைத்து விட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அந்த உடைந்த தட்டை ஒன்று சேர்த்து, உணவை அதில் எடுத்து வைத்து (தம் தோழர்களிடம்), 'உண்ணுங்கள்'' என்று கூறினார்கள். அவர்கள் உண்டு முடிக்கும்வரை தட்டையும் அதைக் கொண்டு வந்த பணிப்பெண்ணையும் அங்கேயே நிறுத்தினார்கள். (அனைவரும் உண்டு முடித்த பின்பு) உடைந்த தட்டைத் தம்மிடமே வைத்துக் கொண்டு (உடையாத) நல்ல தட்டைக் கொடுத்தார்கள்.

Friday 18 September 2009

[பாடம்-44] கண்டெடுக்கப்பட்ட பொருள்.

கண்டெடுக்கப்பட்ட பொருளின் உரிமையாளர் அடையாளம் (சரியாகக்) கூறினால் கண்டெடுத்தவர் அதை அவரிடம் தந்து விடவேண்டும்.

1111. உபை இப்னு கஅப்(ரலி) அறிவித்தார். நான் ஒரு பணப்பையைக் கண்டெடுத்தேன். அதில் நூறு தீனார்கள் இருந்தன. (அதை எடுத்துக் கொண்டு) நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்கள், 'ஓராண்டுக் காலம் அதைப் பற்றி நீ (பொது) அறிவிப்புக் கொடு'' என்று கூறினார்கள். நானும் அதைப் பற்றி அறிவிப்புக் கொடுத்தேன். அதை அடையாளம் புரிந்து கொள்பவர் எவரையும் நான் காணவில்லை. பிறகு, மீண்டும் நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போதும், 'ஓராண்டுக் காலம் அதைப் பற்றி அறிவிப்புக் கொடு'' என்று கூறினார்கள். நானும் அதைப் பற்றி அறிவிப்புக் கொடுத்தேன். அதை அடையாளம் புரிந்து (பெற்றுக்) கொள்பவர் எவரையும் நான் காணவில்லை. பிறகு, மூன்றாவது முறையாக நபி(ஸல்) அவர்கள், 'அதன் பையையும் அதன் எண்ணிக்கையையும் அதன் முடிச்சையும் பாதுகாத்து வைத்திரு. அதன் உரிமையாளர் வந்தால் அவரிடம் ஒப்படைத்து விடு. இல்லையென்றால் நீயே அதைப் பயன்படுத்திக் கொள்'' என்று கூறினார்கள். எனவே, நானே அதைப் பயன்படுத்திக் கொண்டேன்.

பாதையில் ஒரு பேரீச்சம் பழத்தைக் கண்டால்...

1112. நான் என் வீட்டாரிடம் திரும்பி விடுகிறேன். என் படுக்கையின் மீது பேரீச்சம் பழம் விழுந்திருப்பதைப் பார்த்து அதைத் தின்பதற்காக எடுக்கிறேன். அதற்குள் அது சதகாப் பொருளாக இருக்குமோ என்னும் அச்சம் எனக்கு ஏற்படுகிறது. உடனே அதைப் போட்டு விடுகிறேன் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Wednesday 16 September 2009

[பாடம்-43] வழக்குகள் (முறையீடுகள்), தகராறுகள்

(வழக்கில் சம்பந்தப்பட்டவரை) விசாரணைக்காகக் கொண்டு போய் நிறுத்துவது.

1107. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ''ஒருவர் (திருக்குர்ஆனின்) ஒரு வசனத்தை ஓதுவதைக் கேட்டேன். அவர் ஓதியதற்கு மாற்றமாக அந்த வசனத்தை நபி(ஸல்) அவர்கள், ஓத நான் கேட்டிருந்தேன். எனவே, அந்த மனிதரின் கையைப் பிடித்து அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்றேன். (விபரத்தைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் இருவருமே சரியாகத்தான் ஓதியிருக்கிறீர்கள்'' என்று கூறினார்கள்.''நபி(ஸல்) அவர்கள், 'வேற்றுமை கொள்ளாதீர்கள்! ஏனெனில், உங்களுக்கு முன்னிருந்தவர்கள் வேற்றுமை கொண்டு (அதனால்) அழிந்தனர்' என்று கூறினார்கள் என எண்ணுகிறேன்'' என்று அறிவிப்பாளர் ஷுஅபா(ரஹ்) கூறினார்.

1108. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்லிம், 'உலகத்தார் அனைவரை விடவும் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!'' என்று கூறினார். அந்த யூதர், 'உலகத்தார் அனைவரை விடவும் மூஸாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!'' என்று கூறினார். அதைக் கேட்டு (கோபம் கொண்டு) அந்த முஸ்லிம் தன் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்து விட்டார். அந்த யூதர், நபி(ஸல்) அவர்களிடம் சென்று தனக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்த (சச்சர)வையெல்லாம் தெரிவித்தார். நபி(ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை அழைத்து வரச்சொல்லி அது பற்றி அவரிடம் கேட்டார்கள். அவர் விபரத்தைக் கூறினார். (நடந்தவை அனைத்தையும் விசாரித்துத் தெரிந்து கொண்ட பின்) நபி(ஸல்) அவர்கள், 'மூஸாவை விட என்னைச் சிறப்பாக்கி (முதலிடம் தந்து உயர்த்தி) விடாதீர்கள். ஏனெனில், மக்கள் அனைவரும் மறுமை நாளில் மூர்ச்சையாகி விடுவார்கள். நானும் அவர்களுடன் மூர்ச்சையாகி விடுவேன். நானே முதலாவதாக மயக்கம் தெளிந்து எழுவேன். அப்போது, மூஸா(அலை), (அல்லாஹ்வின்) அர்ஷின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார். மக்களோடு சேர்ந்து அவரும் மூர்ச்சையாகி, பிறகு எனக்கு முன்பாகவே மயக்கம் தெளிந்து விட்டிருப்பாரா, அல்லது அல்லாஹ் அவருக்கு மட்டும் (மூர்ச்சையடையத் தேவையில்லையென்று) விதி விலக்கு அளித்திருப்பானா என்று எனக்குத் தெரியாது'' என்று கூறினார்கள்.

1109. அனஸ்(ரலி) அறிவித்தார். யூதன் ஒருவன் சிறுமி ஒருத்தியின் தலையை இரண்டு கற்களுக்கிடையே வைத்து நசுக்கிவிட்டான். அந்தச் சிறுமியிடம் மக்கள், 'உன்னை இப்படிச் செய்தவன் யார்? இன்னாரா? இன்னாரா?' எனறு கேட்டனர். யூதனின் பெயர் கூறப்பட்டவுடன் அச்சிறுமி (''ஆம், அவன்தான்'' என்பதற்கு அடையாளமாகத்) தலையசைத்தாள். யூதன் பிடிக்கப்பட்டு தன் குற்றத்தை ஒப்புக் கொண்டான். நபி(ஸல்) அவர்கள் அவனுடைய தலையை இரண்டு கற்களுக்கிடையே வைத்து நசுக்கும்படி உத்தரவிட, அவ்வாறே அவனுடைய தலை நசுக்கப்பட்டது.

வாதியும் பிரதிவாதியும் ஒருவரைப் பற்றி ஒருவர் ஏதேனும் (குறை) பேசுதல்.

1110. 'ஒருவன் ஒரு முஸ்லிமுடைய செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகப் பொய் சத்தியம் செய்வானாயின், மறுமையில், தன் மீது கோபம் கொண்ட நிலையில் அல்லாஹ்வை, அவன் சந்திப்பான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கும்போது கேட்டுக் கொண்டிருந்த அஷ்அஸ் இப்னு கைஸ்(ரலி) கூறலானார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! என் விவகாரத்தில்தான் இதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். எனக்கும் ஒரு யூதருக்கும் இடையே ஒரு நிலம் தொடர்பான தகராறு இருந்து வந்தது. அந்த யூதர் என் உரிமையை மறுத்து விடவே நான் நபி(ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டு சென்றேன். இறைத்தூதர்(ஸல்), 'உன்னிடம் (உன் வாதத்திற்கான) ஆதாரம் ஏதும் இருக்கிறதா?' என்று கேட்டார்கள். நான், 'இல்லை'' என்றேன். நபி(ஸல்) அவர்கள் யூதரைப் பார்த்து, '(அப்படியென்றால் நிலம் என்னுடையது தான். அதில் இந்த முஸ்லிமுக்கு எந்த உரிமையும் இல்லை' என்று) சத்தியம் செய்'' என்று கூறினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! அவ்வாறென்றால் அந்த யூதன் (பொய்) சத்தியம் செய்து என் சொத்தை அபகரித்துச் சென்று விடுவானே!'' என்று கூறினேன். (அப்போதுதான் நபி(ஸல்) அவர்கள் இதைக் கூறினார்கள்.) உடனே, 'அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்பவிலைக்கு விற்றுவிடுகிறவர்களுக்கு மறுமையில் எந்த நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது' (திருக்குர்ஆன் 03:77) என்னும் திருக்குர்ஆன் வசனத்தை அல்லாஹ் அருளினான்.

Sunday 13 September 2009

[பாடம்-42] கடன்.

திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைக்) கடன் வாங்கியவன் நிலையும்... திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி விடலாம் என்ற எண்ணத்துடன் கடன் வாங்கியவன் நிலையும்...

1102. எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

கடனைத் திருப்பிச் செலுத்துதல்.

1103. அபூதர்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் உஹுது மலையைப் பார்த்தபோது, 'இந்த மலை எனக்காகத் தங்கமாக மாற்றப்பட்டு, அதிலிருந்து ஒரேயொரு தீனாரும் கூட என்னிடம் மூன்று நாள்களுக்கு மேல் தங்கியிருப்பதை நான் விரும்ப மாட்டேன்; கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கிற தீனாரைத் தவிர' என்று கூறினார்கள். பிறகு, '(உலகில் செல்வம்) அதிகமானவர்கள் தாம் (மறுமையில் நற்பலன்) குறைந்தவர்கள்; '(என்) செல்வத்தை இப்படியெல்லாம் செலவு செய்யுங்கள்' என்று கூறிய(துடன் அவ்வாறே செலவும் செய்த)வனைத் தவிர. (இந்த இடத்தில் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ ஷிஹாப்(ரஹ்), 'இப்படியெல்லாம்' என்பதற்கு விளக்கமாக முன் பக்கமாகவும், வலப் பக்கமாகவும், இடப் பக்கமாகவும் சைகை செய்தார்கள். ஆனால், 'அப்படிப்பட்டவர்கள் (எண்ணிக்கையில்) குறைவானவர்களே'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, 'நீ இங்கேயே இரு'' என்று சொல்லி, சிறிது தூரம் முன்னால் சென்றிருப்பார்கள். அதற்குள் நபி(ஸல்) அவர்களுடன் யாரோ உரையாடுவதைப் போன்று) ஏதோ ஒரு குரலைக் கேட்டேன். ஆனால், நபி(ஸல்) அவர்கள், 'நான் திரும்பி வரும்வரை நீ இங்கேயே இரு'' என்று கூறியதும் என் நினைவுக்கு வந்தது. நபி(ஸல்) அவர்கள் திரும்பி வந்தபோது நான், 'இறைத்தூதர் அவர்களே! நான் கேட்ட குரல் என்ன?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(நீங்கள் அந்தக் குரலைச்) செவியுற்றீர்களா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்'' என்றேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னிடம் ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்து, 'உன் சமுதாயத்தில் அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைக்காமல் (வாழ்ந்து) மரணமடைந்து விடுகிறவர் சொர்க்கம் புகுவார்'' என்று கூறினார்கள். நான், 'இப்படி இப்படியெல்லாம் செய்தவருமா (விபச்சாரக் குற்றமும், திருட்டுக் குற்றமும் புரிந்தவருமா) சொர்க்கம் புகுவார்?' என்று கேட்டேன். ஜிப்ரீல்(அலை) அவர்கள், 'ஆம், (அவரும் சொர்க்கம் புகுவார்)'' என்று பதிலளித்தார்கள்.

கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துதல்.

1104. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். ''முற்பகல் நேரத்தில் சென்றேன்'' என்று ஜாபிர்(ரலி) கூறினார் என நினைக்கிறேன்'' என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான மிஸ்அர்(ரஹ்) கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'இரண்டு ரக்அத்துகள் தொழுவீராக!'' என்று கூறினார்கள். என்னிடம் வாங்கிய ஒரு கடனை அவர்கள் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது. (நான் தொழுது முடித்த பின்) எனக்குத் தர வேண்டிய கடனைத் திருப்பிச் செலுத்தியதுடன் எனக்கு அதிகமாகவும் கொடுத்தார்கள்.

1105. நம்பிக்கையாளர் எவராயினும் அவருக்கு இவ்வுலகிலும் மறு உலகிலும் நானே மிக நெருக்கமானவன். நீங்கள் விரும்பினால் திண்ணமாக விசுவாசிகளுக்கு அவர்களின் உயிரை விட நபி தான் நெருக்கமான உரிமையுடையவர் ஆவார் (33:6) என்ற அருள்மறை வசனத்தை ஓதிக் கொள்ளுங்கள். ஒரு விசுவாசி அவர் எவராயிருந்தாலும் சரி மரணித்து ஏதேனும் ஒரு செல்வத்தை அவர் விட்டுச்சென்றால் அவரின் தந்தை வழி உறவினர்கள் அவர்கள் எவ்வகையினரானாலும் சரி அதற்கு வாரிசுகளாகட்டும். எவர் மரணிக்கும்போது ஒரு கடனை வைத்து விட்டு அதை அடைக்காமல் விட்டுச் செல்கிறாரோ அல்லது அவர் தம்மைத்தவிர வேறு திக்கற்ற மனைவி மக்களை விட்டுச் செல்கிறாரோ அவர் என்னிடம் வரட்டும். நானே அவர்களுக்கு பொறுப்பேற்கும் பராமரிப்பவன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூஹூரைரா (ரலி) அறிவித்தார்.

செல்வத்தை வீணடிப்பது தடை செய்யப்பட்டதாகும்.

1106. (பெற்றெடுத்த) தாய்மார்களுக்குத் துன்பம் தருவதையும், பெண் குழந்தைகளை உயிருடன் புதைப்பதையும் (நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ள பிற மனிதர்களின் உரிமைகளை) நிறைவேற்றாமலிருப்பதையும் பிறரின் செல்வத்தை (அநியாயமாக) அபகரித்துக் கொள்வதையும் தேவையற்ற வீண் பேச்சகள் பேசுவதையும் அதிகமாக கேள்விகள் கேட்பதையும், செல்வத்தை வீணாக்குவதையும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஹராமாக (விலக்கப்பட்டதாக) ஆக்கியுள்ளான் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.

Friday 11 September 2009

[பாடம்-41] நீர்ப்பாசன அடிப்படையில் தோப்புகளைக் குத்தகைக்கு விடுதல்.

தண்ணீரை தர்மம் செய்வதும் நன்கொடையாக வழங்குவதும்.

1088. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதிலிருந்து அவர்கள் (பால்) குடித்தார்கள். அப்போது அவர்களின் வலப்பக்கம் மக்களில் மிகக் குறைந்த வயதுடைய சிறுவர் ஒருவரும் இடப்பக்கம் வயது முதிர்ந்தவர்களும் இருந்தனர். எனவே, நபி(ஸல்) அவர்கள் (அச்சிறுவரை நோக்கி), 'சிறுவனே! நான் இதை முதியவர்களுக்குக் கொடுத்துவிட எனக்கு நீ அனுமதியளிக்கிறாயா?' என்று கேட்டார்கள். அதற்கு அச்சிறுவர், 'இறைத்தூதர் அவர்களே! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கக் கூடிய மீதத்தை எவருக்கும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்'' என்று கூறினார். எனவே, நபி(ஸல்) அவர்கள், (அந்தப் பாலில்) தாம் (குடித்து) மீதம் வைத்ததை அந்தச் சிறுவருக்கே கொடுத்து விட்டார்கள்.

1089. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் இருந்த சமயத்தில் பழகிய (நாட்டு) ஆடு ஒன்றின் பாலை அவர்களுக்காகத் கறந்து, என் வீட்டில் இருந்த கிணற்றின் தண்ணீரை அதில் கலந்து, அந்தப் பால் பாத்திரத்தை நபி(ஸல்) அவர்களுக்கு நான் கொடுத்தேன். நபி(ஸல்) அவர்கள் அதிலிருந்து (பாலை) அருந்திவிட்டு, தம் (திரு)வாயிலிருந்து அந்தப் பாத்திரத்தை எடுத்தார்கள். (அப்போது) அவர்களின் இடப்பக்கத்தில் அபூ பக்கர்(ரலி) அவர்களும் வலப் பக்கத்தில் ஒரு கிராமவாசியும் இருந்தனர். எனவே, உமர்(ரலி), நபி(ஸல்) அவர்கள் எங்கே மீதிப் பாலை அந்த கிராமவாசிக்குக் கொடுத்து விடுவார்களோ என்று அஞ்சி, 'உங்களிடம் இருப்பதை அபூ பக்ருக்கு கொடுத்து விடுங்கள், இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் அதைத் தம் வலப்பக்கம் இருந்த கிராமவாசிக்கே கொடுத்துவிட்டு, '(முதலில்) வலப்பக்கம் இருப்பவரிடமே கொடுக்க வேண்டும். வலப்பக்கமிருப்பவரே (இடப் பக்கமிருப்பவரை விட) அதிக உரிமையுடையவர்'' என்றார்கள்.

'தேவைக்கு மேல் எஞ்சியுள்ள தண்ணீரை (பிறர் உபயோகிப்பதைத்) தடுப்பது கூடாது'

1090. '(தேவைக்கு மேல்) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்கலாகாது. (அவ்வாறு) தடுத்தால், அதைச் சுற்றியுள்ள) புல் பூண்டுகளை (மேய விடாமல் கால்நடைகளைத்) தடுத்ததாகி விடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1091. (தேவைக்கு மேல்) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்காதீர்கள். (அவ்வாறு தடுத்தால், அப்பகுதியில்) தேவைக்கு மேல் உள்ள புல் பூண்டுகளைத் தடுத்தவராக நீங்கள் ஆகி விடுவீர்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.

கிணறு தொடர்பான வழக்கும் அதற்கான தீர்ப்பும்.

1092. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ''ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகப் பொய் சத்தியம் செய்பவன் (மறுமையில்) தன் மீது இறைவன் கோபம் கொண்டிருக்கும் நிலையில் அவனைச் சந்திப்பான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே, 'அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகிறவர்களுக்கு மறுமையில் எந்த நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது' (திருக்குர்ஆன் 03:77) என்னும் குர்ஆன் வசனத்தை அல்லாஹ் அருளினான். (இதை நான் மக்களிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது) அஷ்அஸ்(ரலி) வந்து (மக்களை நோக்கி, 'அபூ அப்திர் ரஹ்மான் (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்) உங்களிடம் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்? இந்த வசனம் என் விவகாரத்தில்தான் இறங்கியது. என் தந்தையின் சகோதரர் மகனுடைய நிலத்தில் எனக்குக் கிணறு ஒன்று இருந்தது. (அந்தக் கிணறு தொடர்பாக) எனக்கும் என் ஒன்றுவிட்ட சகோதரருக்கும் இடையே சச்சரவு ஏற்பட்டது. (அதற்காகத் தீர்ப்புக் கேட்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன்.) அப்போது நபி(ஸல்) அவர்கள், '(உன் வாதத்தை நிரூபிக்க) உன்னுடைய சாட்சிகள் (எங்கே)?' என்று கேட்டார்கள். நான், 'என்னிடம் சாட்சிகள் இல்லை' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால், பிரதிவாதி ('அந்த நிலம் என்னுடையது தான்' என்று) சத்தியம் செய்யவேண்டும்' என்றார்கள். நான், 'அப்படியென்றால் அவர் (தயங்காமல் பொய்) சத்தியம் செய்வாரே' என்று கூறினேன். (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் உங்களுக்கு அறிவித்த) இந்த ஹதீஸைக் கூறினார்கள். உடனே, அல்லாஹ் நபியவர்களின் கூற்றை உண்மைப்படுத்தி (மேற்சொன்ன 3:77 ஆம்) குர்ஆன் வசனத்தை அருளினான்'' என்று கூறினார்கள்.

தண்ணீரைப் பயன்படுத்தி விடாமல் வழிப்போக்கரைத் தடுத்தவரின் பாவம்.

1093. மூன்று பேரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மேலும், அவர்களுக்குத் துன்பமிக்க வேதனையும் உண்டு. ஒருவன், (மக்களின் பயணப்) பாதையில், தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பெற்றிருந்தும் வழிப்போக்கர்கள் அதைப் பயன்படுத்த விடாமல் தடுத்து விட்டவன். இன்னொருவன், தன் (ஆட்சித்) தலைவரிடம் உலக ஆதாயத்திற்காகவே விசுவாசப் பிரமாணம் செய்தவன்; அவர் கொடுத்தால் (மட்டுமே) திருப்தியடைந்து, கொடுக்காமல் விட்டால் கோபம் கொள்பவன். மற்றொருவன், அஸர் தொழுகைக்குப் பிறகு (மக்கள் கடைவீதியில் திரளும்போது) தன் வியாபாரப் பொருளைக் காட்டி, 'எவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவனும் இல்லையோ அவன் மீது சத்தியமாக! இந்தப் பொருளுக்காக (இதைக் கொள்முதல் செய்யும்போது) நான் இன்ன (அதிக) விலையைத் தந்தேன் என்று கூறி, அதை ஒருவர் உண்மையென நம்பும்படி செய்தவன் (இப்படி வாடிக்கையாளரிடம் பொய் கூறி அவரை ஏமாற்றி, சொன்ன விலைக்கு அதை விற்றவன்) ஆவான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைக் கூறிவிட்டு, 'அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகிறவர்கள்...'' என்னும் இந்த (திருக்குர்ஆன் 03:77 ஆம்) இறைவசனத்தை ஓதினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நீர் புகட்டுவதின் சிறப்பு (மற்றும் அதற்கான பிரதிபலன்).

1094. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒருவர் (ஒரு பாதையில்) நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு, (கிணற்றிலிருந்து) அவர் வெளியே வந்தபோது, நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்கவிட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனத்திற்குள்) 'எனக்கு ஏற்பட்டதைப் போன்ற(அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கிறது போலும்' என்று எண்ணிக் கொண்டார். உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கித் தண்ணீரைத்) தன்னுடைய காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் அவரின் இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரின் பாவங்களை) மன்னித்தான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், 'இறைத்தூதர் அவர்களே! கால்நடைகள் (மற்ற பிராணிகளுக்கு உதவும்) விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(ஆம்;) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்'' என்று கூறினார்கள்.

தடாகத்தின் (குளம் அல்லது நீர்த்தொட்டியின்) உரிமையாளரும் தோல்பையின் உரிமையாளரும் தம் தண்ணீரைப் பயன்படுத்த (பிறரை விட) அதிக உரிமை பெற்றுள்ளனர்.

1095. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! (தன்னுடைய குளத்தில் நீரருந்த விடாமல்) அந்நிய ஒட்டகத்தை (குளத்தின் உரிமையாளர்) குளத்திலிருந்து விரட்டுவதைப் போன்று நானும் (மறுமையில் சிறப்புப் பரிசாக) எனக்குக் கிடைக்கவிருக்கும் தடாகத்திலிருந்து சில மனிதர்களை (நீரருந்த விடாமல்) விரட்டுவேன் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1096. மூன்று பேர்களுடன் மறுமையில் அல்லாஹ் பேசவும் மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். (அவர்கள் வருமாறு:) (ஒருவன், தன் பொருளை (அதிக விலைக்கு) விற்பதற்காக (அதைக் கொள்முதல் செய்த போது) வாடிக்கையாளர் கொடுக்கும் விலையை விட அதிக விலை கொடுத்து வாங்கியதாக (பொய்) சத்தியம் செய்தவன் ஆவான். மற்றொருவன், அஸர் தொழுகைக்குப் பின் (மக்கள் கூடும் நேரத்தில்) முஸ்லிம் ஒருவரின் செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகப் பொய்சத்தியம் செய்தவன் ஆவான். இன்னொருவன், தன் தேவைக்கு மேல் எஞ்சியிருந்த தண்ணீரை (மக்கள் உபயோகிப்பதைத்) தடுத்தவன் ஆவான். (மறுமையில்) அவனை நோக்கி, 'உன் கரங்கள் உருவாக்காத தண்ணீரின் மீதத்தை மக்கள் உபயோகிக்க விடாமல் தடுத்ததைப் போன்றே இன்று நான் என்னுடைய அருளிலிருந்து உன்னைத் தடுக்கிறேன்'' என்று அல்லாஹ் கூறுவான் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் தவிர பிரத்தியேகமான மேய்ச்சல் நிலம் வைத்துக் கொள்ள வேறெவருக்கும் அனுமதி இல்லை.

1097. நபி(ஸல்) அவர்கள், 'பிரத்தியேகமான மேய்ச்சல் நிலம் வைத்துக் கொள்ள அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் தவிர வேறெவருக்கும் அனுமதி இல்லை'' என்று கூறினார்கள் இதை ஸஅப் இப்னு ஜஸ்ஸாமா(ரலி) கூறினார் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நீர்நிலைகளிலிருந்து மக்கள் தண்ணீர் குடிப்பதும், அவற்றிலிருந்து (கால்நடைகள் மற்றும்) பிராணிகளுக்கு நீர் புகட்டுவதும்.

1098. குதிரை, ஒரு மனிதருக்கு (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத் தருவதாகும்; மற்றொரு மனிதருக்குப் (பொருளாதாரப்) பாதுகாப்பளிக்கக் கூடியதாகும். இன்னொரு மனிதருக்குப் பாவச் சுமையாகும். அதை இறைவழியில் பயன்படுத்துவதற்காக, பசுமையான ஒரு வெட்ட வெளியில் அல்லது ஒரு தோட்டத்தில் ஒரு நீண்ட கயிற்றால் கட்டி வைத்துப் பராமரிக்கிற மனிதருக்கு அது (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத் தரும். அந்த குதிரை, தன்(னைக் கட்டியிருக்கும்) கயிற்றின் நீளத்திற்கு ஏற்ப எந்த அளவு தொலைவிற்குப் பசும்புல் வெளியில் அல்லது தோட்டத்தில் மேயுமோ அந்த அளவிற்கு அவருக்கு நன்மைகள் கிடைக்கும். அதன் கயிறு அறுந்து, அது ஓரிரு முறை குதித்து (அல்லது ஓரிரு மேடுகளைக் கடந்து) சென்றாலும் அதனுடைய (குளம்பின்) சுவடுகளின் அளவிற்கும் அதன் விட்டைகளின் அளவிற்கும் அவருக்கு நன்மைகள் எழுதப்படும். அந்த குதிரை ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது அதிலிருந்து அது தண்ணீர் குடித்தால் அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் அதன் உரிமையாளருக்கு இல்லாமல் இருந்தாலும் அது அவர் செய்த நன்மைகளின் கணக்கில் எழுதப்படும். (இவ்விதம் நல்ல நோக்கங்களுக்காக வளர்க்கப்படும்.) இந்த குதிரை அவருக்கு (மறுமையில்) நற்பலன் கிடைப்பதற்குக் காரணமாக இருக்கும், இன்னொருவர், தன் தேவைகளை நிறைவு செய்து கொள்ளளவும் பிறரிடம் கையேந்துவதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளவும் அதைக்கட்டி, வை(த்துப் பராமரி)க்கிறவராவார். மேலும், அதனுடைய பிடரியின் (ஸகாத்தைச் செலுத்தும்) விஷயத்திலும் (அதனால் தாங்க முடிந்த பளுவை மட்டுமே) அதன் முதுகின் (மீது சுமத்தும்) விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையை (நிறைவேற்றிட) மறக்காதவராவார். இப்படிப்பட்டவருக்கு அந்த (அவருடைய) குதிரை (வறுமையிலிருந்து அவரைக் காக்கும்) திரையாகும். மற்றொருவன் பெருமைக்காகவும் பகட்டுக்காகவும் முஸ்லிம்களுடன் பகைமை பாராட்டுவதற்காகவும் அதனைக் கட்டி வை(த்துப் பராமரி)க்கிறவன் ஆவான். அதன் (தவறான நோக்கத்தின்) காரணத்தால், அது அவனுக்குப் பாவச் சுமையாக ஆகி விடுகிறது ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்களிடம் கழுதைகளைக் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'அவற்றைக் குறித்து எந்த இறைகட்டளையும் எனக்கு அருளப்படவில்லை. 'எவன் அணுவளவும் நன்மை செய்திருந்தானோ அவன் அத(ன் நற்பல)னைக் கண்டு கொள்வான். மேலும், எவன் அணுவளவு தீமை புரிந்திருந்தானோ அவனும் அதனை (அதற்கான தண்டனையைக்) கண்டு கொள்வான்' (திருக்குர்ஆன் 96: 78) என்னும் இந்த ஒருங்கிணைந்த, தனித்தன்மை வாய்ந்த திருக்குர்ஆன் வசனத்தைத் தவிர'' என்று கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1099. அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார். பத்ருப் போரில் கிடைத்த பொருட்களில் (என்னுடைய பங்காக) அல்லாஹ்வின் தூதருடன் சேர்ந்து கூட்டாக ஒரு முதிர்ந்த வயதுடைய ஒட்டகம் எனக்குக் கிடைத்தது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு மற்றொரு (கிழட்டு) ஒட்டகத்தையும் கொடுத்திருக்கிறார்கள். ஒரு நாள், அவ்விரண்டையும் நான் அன்சாரி ஒருவரின் வீட்டு வாசலுக்கருகே அமரச் செய்தேன். 'இத்கிர்' புல்லை, விற்பதற்காக அதன் மீது ஏற்றிக் கொண்டு வர நான் விரும்பியிருந்தேன். அப்போது பனூ கைனுகா குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லன் ஒருவன் (புல் வாங்கி ஏற்றிக் கொண்டு வர உதவியாக) என்னுடன் இருந்தான். ஃபாத்திமாவை மணம் புரிந்த வலீமா விருந்திற்காக அந்தப் புல் விற்ற பணத்தைப் பயன்படுத்த நான் நாடியிருந்தேன். (நான் என் ஒட்டகத்தை வாசலில் அமரச் செய்திருந்த) அந்த வீட்டில் (என் சிறிய தந்தை) ஹம்ஸா இப்னு அப்தில் முத்தலிப் மது குடித்துக் கொண்டிருந்தார். அவருடன் ஓர் அடிமைப் பாடகியும் இருந்தாள். அவள், 'ஹம்ஸாவே! இந்த முதிர்ந்த, பருத்த ஒட்டகங்களைக் கொன்று (உங்கள் விருந்தாளிகளுக்குப் பரிமாறி) விடுங்கள்'' என்று பாடினாள். உடனே ஹம்ஸா அவர்கள் அந்த இரண்டு ஒட்டகங்களின் மீதும் பாய்ந்து அவற்றின் திமில்களை வெட்டி இடுப்பைக் கிழித்தார்கள். பிறகு அவற்றின் ஈரல் குலைகளை வெளியே எடுத்தார்கள். அருவருப்பூட்டிய அந்த பயங்கரக் காட்சியை கண்டேன். உடனே, நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அங்கு நபி(ஸல்) அவர்களிடம் நடந்த (நிகழ்ச்சியின்) செய்தியைக் கூறினேன். உடனே அவர்கள், ஸைத் இப்னு ஹாரிஸா அவர்களுடன் புறப்பட்டார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். ஹம்ஸா அவர்களிடம் சென்று தம் கோபத்தை நபி(ஸல்) அவர்கள் வெளிப்படுத்தினார்கள். ஹம்ஸா அவர்கள் தங்களின் பார்வையை உயர்த்தி, 'நீங்கள் என் முன்னோர்களின் அடிமைகள் தாமே?' என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், அவர்களைவிட்டு அப்படியே (திரும்பாமல்) பின்னோக்கி நடந்து வந்து வெளியேறி வந்துவிட்டார்கள். இந்த நிகழ்ச்சி மதுபானம் தடை செய்யப்படுவதற்கு முன்பு நடந்தது. அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஜுரைஜ்(ரஹ்) கூறினார். நான் அறிவிப்பாளர் இப்னு ஷிஹாப்(ரஹ்) அவர்களிடம், 'திமில்களின் இறைச்சியையுமா (ஹம்ஸா(ரலி)) எடுத்தார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம், அவ்விரண்டின் திமில்களையும் அவர் வெட்டி எடுத்துச் சென்றார்'' என்று கூறினார்.

வருவாய் மானியமாக வழங்கப்படும் நிலங்களை (பட்டயமாக) எழுதிப் பதிவு செய்து கொள்வது செல்லும்.

1100. அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் அன்சாரிகளுக்கு, பஹ்ரைனுடைய நிலங்களை வருவாய் மானியமாக வழங்கிட அவர்களை அழைத்தார்கள். அதற்கு அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! அப்படி நீங்கள் (எங்களுக்கு) வருவாய் மானியம் வழங்குவதாயிருந்தால் எங்களுடைய குறைஷிச் சகோதரர்களுக்கும் அதே போன்று எழுதிக் கொடுங்கள்'' என்று கேட்டார்கள். ஆனால், (அனைவருக்கும் வருவாய் மானியம் தருகிற அளவுக்கு) மானிய நிலங்கள் (அல்லது நிலவரி மூலமாகக் கிடைக்கும் நிதிகள்) நபி(ஸல்) அவர்களிடம் இருக்கவில்லை. எனவே, நபி(ஸல்) அவர்கள், 'எனக்குப் பின்னால் (சிறிது காலத்திற்குள்ளாகவே, ஆட்சியதிகாரத்தில்) உங்களை விட மற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதை நீங்கள் பார்ப்பீர்கள். எனவே, என்னை (மறுமையில்) நீங்கள் சந்திக்கும்வரை பொறுமையைக் கைக்கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.

1101. 'மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட பின்னர் பேரீச்ச மரங்களை வாங்கியவர் (அந்த விளைச்சல் எனக்கே சேர வேண்டும் என்ற) நிபந்தனையிட்டிருந்தாலே தவிர அவற்றின் விளைச்சல் விற்றவருக்கே உரியதாகும். செல்வம் வைத்திருக்கும் ஓர் அடிமையை வாங்கியவர், (அந்த அடிமையின் செல்வம் எனக்கே சேர வேண்டும் என்ற) நிபந்தனையிட்டிருந்தாலே தவிர அவ்வடிமையின் செல்வம் விற்றவருக்கே உரியதாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

Tuesday 8 September 2009

[பாடம்-40] வேளாண்மையும் நிலக்குத்தகையும்.

(பயிரிடப்பட்ட) நிலத்திலிருந்தும் (நடப்பட்ட) மரத்திலிருந்தும் மக்களோ, பிராணிகளோ பறவைகளோ உண்ணும் பட்சத்தில் அந்த விவசாயமும் மரம் நடுவதும் சிறப்புப் பெறுகின்றன.

1071. முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

வேளாண்மைக் கருவிகளைத் துஷ்பிரயோகம் செய்வதால் விளையும் தீமைகளுக்கு அஞ்சுவதும், (வணிகம், வேளாண்மை இவற்றில் ஈடுபடுவதில்) விதிக்கப்பட்டுள்ள வரம்மை மீறுவதால் விளையும் (கேடுகளான இறைவனை மறத்தல், மார்க்கக் கடமைகளைப் புறக்கணித்தல் ஆகிய) தீமைகளுக்கு அஞ்சுவதும் (அவசியம்).

1072. முஹம்மத் இப்னு ஸியாத் அல் அல்ஹானீ(ரஹ்) அறிவித்தார். அபூ உமாமா அல் பாஹிலீ(ரலி), ஒரு வீட்டில் ஏர் கலப்பையையும் மற்றும் சில விவசாயக் கருவிகளையும் கண்டார்கள். உடனே அவர்கள், 'இந்தக் கருவி ஒரு சமுதாயத்தினரின் வீட்டில் புகும்போது அந்த வீட்டில் அல்லாஹ் இழிவைப் புகச் செய்யாமல் இருப்பதில்லை' என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்'' என்று கூறினார்கள்.

விவசாயப் பண்ணையைப் பாதுகாத்திட நாய் வைத்திருப்பது (அனுமதிக்கப்பட்டதாகும்.)

1073. நாய் வைத்திருப்பவரின் நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவிற்கு (அவற்றின் ஊதியம்) குறைந்து போய்விடும்; விவசாயப் பண்ணையையோ கால்நடைகளையோ (திருடு போய் விடாமல்) பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்களைத் தவிர ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1074. ''கால்நடைகளைப் பாதுகாப்பதற்காகவோ, விவசாயப் பண்ணைகளைப் பாதுகாப்பதற்காகவோ, வேட்டையாடுவதற்காகவோ வைத்திருக்கும் நாய்களைத் தவிர' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1075. சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார். 'அஸ்த் ஷனாஆ' குலத்தைச் சேர்ந்த சுஃப்யான் இப்னு அபீ ஸுஹைர்(ரலி) என்னிடம், 'விவசாயப் பண்ணைணையோ, கால்நடைகளையோ பாதுகாக்கும் எவ்விதத் தேவையுமின்றி நாய் வைத்திருப்பவரின் நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவிற்கு (ஊதியம்) குறைந்து விடும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டேன்'' என்றார்கள். நான், 'இதை நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து (நேரடியாகக்) கேட்டீர்களா?' என்று வினவினேன். சுஃப்யான் இப்னு அபீ ஸுஹைர்(ரலி), 'ஆம்; இந்தப் பள்ளிவாசலின் அதிபதி (அல்லாஹ்வின்) மீது ஆணையாக! நபி(ஸல்) அவர்களிடமிருந்து நானே நேரடியாகச் செவியுற்றேன்'' என்று பதிலளித்தார்கள்.

மாடுகளை உழுவதற்காகப் பயன்படுத்துதல்.

1076. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ''ஒருவர் ஒரு மாட்டின் மீது சவாரி செய்து கொண்டிருந்தபோது அந்த மாடு அவரைத் திரும்பிப் பார்த்து, 'நான் இதற்காக (சுமை சுமந்து செல்வதற்காக) படைக்கப்படவில்லை. நிலத்தை உழுவதற்காகவே படைக்கப்பட்டுள்ளேன் என்று கூறியது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைக் கூறிவிட்டு அண்ணலார், 'நானும், அபூ பக்ரும், உமரும் இதை நம்புகிறோம். மேலும், (ஒரு முறை) ஓர் ஓநாய், ஆடு ஒன்றைக் கவ்விக் கொண்டு ஓடலாயிற்று. அந்த ஆட்டை மேய்த்துக் கொண்டிருந்தவர் அந்த ஓநாயைத் துரத்திச் சென்றார். அப்போது ஓநாய் அவரைப் பார்த்து, 'மன் லஹா யவ்மஸ் ஸபுஇ - கொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் (உலக முடிவு) நாளில் இதைப் பாதுகாக்கக் கூடியவர் யார்? அப்போது என்னைத் தவிர இதற்கு மேய்ப்பாளன் (பொறுப்பாளன்) எவனும் இருக்க மாட்டானே' என்று கூறியது. நானும், அபூ பக்ரும் உமரும் இந்த நிகழ்ச்சியை நம்புகிறோம்'' என்று கூறினார்கள். பிறகு, (இதை அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து அறிவித்த) அபூ ஸலமா(ரஹ்), 'நபி(ஸல்) அவர்கள் இதைக் கூறிய அந்நாளில் அபூ பக்ரும் உமரும் அங்கு இருக்கவில்லை என்று கூறினார்கள்.

''என் பேரீச்ச மரங்களை அல்லது மற்ற மரங்களை கவனித்துக் கொள். அதன் விளைச்சலில் (லாபத்தில்) என்னுடன் பங்கு பெற்றுக் கொள்'' என்று ஒருவர் கூறினால் அது செல்லும்.

1077. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (மதீனாவாசிகளான) அன்சாரித் தோழர்கள், நபி(ஸல்) அவர்களிடம், 'எங்களுக்கும் (மக்கா நகரிலிருந்து வந்த) எங்கள் (முஹாஜிர்) சகோதரர்களுக்குமிடையே எங்கள் பேரீச்ச மரங்களைப் பங்கிட்டு விடுங்கள்'' என்றனர். அதற்கு அண்ணலார், 'வேண்டாம்'' என்று கூறிவிட்டார்கள். இதனைக் கேட்ட அன்சாரித் தோழர்கள், முஹாஜிர் சகோதரர்களை நோக்கி, 'அப்படியென்றால், எங்கள் தோட்டத்தை எங்களுக்கு பதிலாக நீங்கள் பராமரித்து வாருங்கள். நாங்கள் உங்களுடன் அதன் வருமானத்தில் பங்கு பெற்றுக் கொள்கிறோம்'' என்று கூறினர். அதற்கு முஹாஜிர்கள், 'செவியேற்றோம்; கீழ்ப்படிந்தோம் (அவ்வாறே செய்கிறோம்)'' என்று கூறினார்கள்.

1078. ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார். மதீனாவாசிகளிலேயே அதிகமாக விவசாய வேலை பார்ப்பவர்களாக நாங்கள் இருந்தோம். (மொத்த விளைச்சலில் இவ்வளவு பங்கு என்றில்லாமல்) 'நிலத்தின் ஒரு பகுதி விளைச்சல் மட்டும் அதன் நிபந்தனையுடன் அதைக் குத்தகைக்கு எடுத்து வந்தோம். சில வேளைகளில் அந்தப் பகுதி விளைச்சல் மட்டும் (பயிர் நோய்களாலும், பயிர்ப் பூச்சிகளின் தாக்குதலாலும்) பாதிக்கப்பட்டு விடும். மீதமுள்ள (எங்கள் வருவாய்க்கான) நிலப்பகுதி (அவற்றின் தாக்குதல்களிலிருந்து) தப்பித்துக் கொள்ளும். இன்னும் சில வேளைகளில் மீதமுள்ள நிலப்பகுதி பாதிக்கப்பட்டு, குறிப்பிட்ட பகுதி தப்பித்துக் கொள்ளும். எனவே, நாங்கள் (நபி(ஸல்) அவர்களால்) இவ்விதம் குத்தகைக்கு எடுக்க வேண்டாமென்று தடை செய்யப்பட்டோம். அந்நாள்களில் தங்கமும், வெள்ளியும் (குத்தகைத் தொகையாகப் பயன்படுத்தப்படும் வழக்கம்) இருக்கவில்லை.

1079. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் கைபரில் இருந்த மக்களுடன், அங்குள்ள மரங்களில் விளையும் கனிகள், நிலத்தில் விளையும் தானியங்கள் ஆகியவற்றில் பாதியைக் கொடுத்து விட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் (கைபரின் நிலங்களையும் மரங்களையும் அம்மக்கள் விவசாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதியளித்து) ஒப்பந்தம் செய்தார்கள். இந்த நிலங்கள் மற்றும் மரங்களின் விளைச்சலிருந்து, நபி(ஸல்) அவர்கள், தம் மனைவிமார்களுக்கு எண்பது வஸக்குகள் பேரீச்சம் பழமும் இருபது வஸக்குகள் வாற்கோதுமையும் ஆக, நூறு வஸக்குகள் கொடுத்து வந்தனர். உமர்(ரலி) (கலீஃபாவாக வந்த போது) கைபர் நிலங்களைப் பங்கிட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்களுக்கு, அவர்கள் தங்கள் பங்காக நிலத்தையும் நீரையும் மட்டும் எடுத்துக் கொள்வது அல்லது முன்பு நடை பெற்று வந்த வழக்கத்தின் படியே, நூறு வஸக்குகளைத் தங்கள் பங்காகப் பெற்றுக் கொள்வது என்ற இரண்டில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமையளித்தார்கள். அவர்களில் சிலர் நிலத்தைத் தமக்காகப் பெற்றனர். சிலர் (முன்பு கிடைத்து வந்தபடி) வஸக்குகளையே தொடர்ந்து பெற்றனர். அன்னை ஆயிஷா(ரலி) நிலத்தைப் பெற்றார்கள்.

1080. அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அறிவித்தார். நான் தாவூஸ்(ரஹ்) அவர்களிடம், '(விளைச்சலில் ஒரு பகுதியைப் பெற்றுக் கொண்டு) நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை நீங்கள் விட்டுவிட்டால் நன்றாயிருக்கும். ஏனென்றால், நபி(ஸல்) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விட வேண்டாமென்று மக்களைத் தடுத்தார்கள் என்று சிலர் எண்ணுகிறார்கள்'' என்றேன். இதைக்கேட்ட தாவூஸ்(ரஹ்) (என்னிடம்) சொன்னார்கள்: அம்ரே! (என்னுடைய நிலத்தை அவர்களுக்குக் குத்தகைக்கு விடுவதால்) அவர்களுக்கு நிலத்தைக் கொடுத்து நான் உதவுகிறேன். ஏனெனில், 'நபி(ஸல்) அவர்கள் அதைத் தடை செய்யவில்லை. மாறாக, 'உங்களில் ஒருவர் தன் நிலத்தைக் குத்தகைக்கு விட்டு, அதிலிருந்து குறிப்பிட்ட குத்தகைத் தொகையை வாங்கிக் கொள்வதை விட, தன் சகோதரனுக்கு (இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி அதைக்) கொடுத்து விடுவது சிறந்ததாகும்' என்றே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என்று மக்களில் பேரறிஞரான இப்னு அப்பாஸ்(ரலி) என்னிடம் தெரிவித்தார்கள்.

நபித்தோழர்களின் வக்ஃபு - அறக்கொடைகளும், 'கராஜ்' நிலத்தை அவர்கள் குத்தகைக்கு விட்டதும், மற்றும் அவர்களின் பிற ஒப்பந்தங்களும்.

1081. அஸ்லம்(ரலி) அறிவித்தார். ''முஸ்லிம்களின் வருங்காலத் தலைமுறைகள் இல்லாதிருந்தால் நபி(ஸல்) அவர்கள் கைபர் நிலங்களைப் பங்கிட்டதைப் போன்று நானும், நான் வெற்றி கொண்ட ஊர்களின் நிலங்களையெல்லாம் (இஸ்லாமியப் படையின் வீரர்களிடையே) பங்கிட்டு விட்டிருப்பேன்'' என்று உமர்(ரலி) கூறினார்.

1082. அன்னை ஆயிஷா(ரலி) கூறினார். ''யாருக்கும் சொந்தமில்லாத ஒரு நிலத்தைப் பயிரிடுகிறவரே அதைச் சொந்தமாக்கிக் கொள்ள அதிக உரிமையுள்ளவராவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நிலத்தின் உரிமையாளர் (குத்தகைக்கு எடுப்பவரிடம்), 'அல்லாஹ் அனுமதியளிக்கும் காலம்வரை இந்த நிலத்தில் பயிரிட உனக்கு நான் அனுமதியளிக்கிறேன்'' என்று கூறி (நிலக்குத்தகைக்கான) குறிப்பிட்ட காலம் எதையும் கூறாவிட்டால் அவ்விருவரும் பரஸ்பரம் இசைந்து போகும் காலம்வரை குத்தகையை நீட்டித்துக் கொள்ளலாம்.

1083. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். உமர் இப்னு கத்தாப்(ரலி) யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் ஹிஜாஸ் மாநிலத்திலிருந்து நாடு கடத்திவிட்டார்கள். இறைத்தூதர் கைபர் பிரதேசத்தை வெற்றி கொண்டபோது (அங்கிருந்த) யூதர்களை நாடு கடத்திட விரும்பினார்கள். (ஏனெனில்,) அந்தப் பிரசேத்தை வெற்றி கொண்டபோது அந்தப் பகுதியிலிருந்த நிலம் முழுவதும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முஸ்லிம்களுக்கும் உரியதாகி விட்டிருந்தது. (அந்த நிலையில்) யூதர்கள் அல்லாஹ்வின் தூதரிடம், 'நாங்கள் இந்த நிலங்களில் பயிரிட்டு உழைக்கிறோம். இவற்றின் விளைச்சலில் 'பாதியைப் பெற்றுக் கொள்கிறோம். (மீதியை இஸ்லாமிய அரசுக்கு நிலவரியாகச் செலுத்தி விடுகிறோம்)'' என்று கேட்டுக் கொண்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நீங்கள் ஒப்புக் கொண்ட இந்த நிபந்தனையின் (நிலக் குத்தகை ஒப்பந்தத்தின்) அடிப்படையில் நாம் விரும்பும்வரை நீங்கள் அதில் பயிரிட்டுக் கொள்ள நாம் அனுமதிக்கிறோம்'' என்று கூறினார்கள். எனவே, உமர்(ரலி), தம் ஆட்சிக் காலத்தில் அந்த யூதர்களை தைமா, அரீஹா, (ஜெரிக்கோ) ஆகிய பகுதிகளுக்கு நாடு கடத்தி அனுப்பும்வரை அவர்கள் அங்கேயே (நிலங்களைப் பயிரிட்டு வரி செலுத்தி) வசித்து வந்தார்கள்.

நபித்தோழர்கள் தங்கள் பண்ணைகளின் விளைச்சலையும் தோட்டங்களில் விளையும் பழங்களையும் விலையில்லாமல் (கைம்மாறு இல்லாமல்) தமக்குள் பங்கிட்டுக் கொள்ளும் வழக்கம் உடையவர்களாயிருந்தனர்.

1084. ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார். ''எங்களுக்கு உதவியாக இருந்த ஒன்றைக் கூடாது என்று இறைத்தூதர் எங்களைத் தடுத்தார்கள்'' என்று (என் தந்தையின் சகோதரர்) ளுஹைர்(ரலி) கூறினார். (உடனே), 'இறைத்தூதர் சொன்னதே சரியானது'' என்று கூறினேன்.(அதற்கு) அவர் சொன்னார்; ஒரு முறை என்னை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அழைத்து, 'நீங்கள் உங்கள் வயல்களை என்ன செய்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். நீரோடைகளின் கரைகளின் ஓரமாக விளைபவற்றை எங்களுக்குக் கொடுத்து விட வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் அல்லது சில வஸக்குகள் பேரீச்சம் பழங்களை அல்லது வாற்கோதுமையை எங்களுக்குக் கொடுத்து விட வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் அவற்றைக் குத்தகைக்கு விட்டு விடுகிறோம்'' என்று நான் பதிலளித்தேன். அதற்கு அண்ணலார், 'அவ்வாறு செய்யாதீர்கள். நீங்களே அவற்றில் வேளாண்மை செய்யுங்கள்; அல்லது பிறருக்கு இலவசமாக (கைம்மாறு பெறாமல்) பயிரிடக் கொடுத்து விடுங்கள்; அல்லது பயிரிடாமல் அப்படியே விட்டுவிடுங்கள்'' என்றார்கள். (இதைக் கேட்ட) நான், 'நாங்கள் செவியேற்றோம்; கீழ்ப்படிந்தோம்'' என்று கூறினேன்.

1085. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்திலும், அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி) ஆகியோரின் ஆட்சிக் காலத்திலும், முஆவியா(ரலி) அவர்களின் ஆட்சியின் ஆரம்பக் காலத்திலும் தம் நிலங்களை இப்னு உமர்(ரலி) குத்தகைக்கு விட்டு வந்தார்கள்.

1086. பின்னர் இப்னு உமர்(ரலி) அவர்களுக்கு (ஹதீஸ் எண் 1084ல்) ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்த, 'நபி(ஸல்) அவர்கள் நிலங்களைக் குத்தகைக்கு விடுவதைத் தடுத்தார்கள்'' என்னும் நபிமொழி எடுத்துரைக்கப்பட்டது. இப்னு உமர்(ரலி) இதைச் செவியுற்றவுடனே ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர்களுடன் நானும் சென்றேன். இப்னு உமர்(ரலி) ராஃபிஉ(ரலி) அவர்களிடம் இது குறித்து விசாரித்தார்கள். ராஃபிஉ(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் விளைநிலங்களைக் குத்தகைக்கு விடுவதைத் தடை செய்தார்கள்'' என்று கூறினார்கள். இதனைச் செவியுற்ற இப்னு உமர்(ரலி) ராஃபிஉ(ரலி) அவர்களிடம், 'நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் நீரோடைகளின் கரையோரமாக உள்ள நிலங்களின் விளைச்சலையும் சிறிது வைக்கோலையும் எங்களுக்குக் கொடுத்துவிடவேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் நிலங்களைக் குத்தகைக்கு கொடுத்து வந்ததைத் தாங்கள் அறிந்திருக்கிறீர்களே'' என்று கூறினார்கள். சாலிம்(ரஹ்) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்களின் காலத்தில் நிலம் குத்தகைக்கு விடப்பட்டு வந்ததை நான் அறிந்திருந்தேன்'' என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார். பிறகு, அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) (மேற்கண்ட ஹதீஸ் எண் 1084ல் ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) கூறியதைக் கேட்ட பின்) நிலக்குத்தகை தொடர்பாக நபி(ஸல்) அவர்கள் (அது கூடாது என்று) புதிய சட்டம் எதனையாவது பிறப்பித்து (பழைய விதிகளை மாற்றியமைத்து) விட்டிருக்க, அதனை நாம் அறியாதிருந்து விட்டோமோ என்று அஞ்சி நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை நிறுத்திவிட்டார்கள்.

1087. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒரு முறை நபி(ஸல்) அவர்கள், கிராமவாசி ஒருவர் தன்னிடம் அமர்ந்திருக்க (பின்வரும் நிகழ்ச்சியை) எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள்:

சொர்க்கவாசிகளில் ஒருவர், தன் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன் அவரிடம், 'நீ விரும்பிய (இன்பகரமான) நிலையில் (இப்போது) நீ வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா?' என்று கேட்பான். அதற்கு அவர், 'ஆம், (நான் விரும்பியபடியே இன்பகரமான நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்) ஆனால், நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன்'' என்று கூறுவார். (இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான்.) அந்த மனிதர் விதை தூவி விடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகி விடும்; மலைகளைப் போல் விளைந்து குவிந்து போய் விடும். அப்போது இறைவன், 'எடுத்துக் கொள். ஆதமின் மகனே! உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாது'' என்று கூறுவான். (நபி(ஸல்) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற) அந்த கிராமவாசி, 'அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த மனிதர் குறைஷியாகவோ (மக்கா வாசியாகவோ) அன்சாரியாகவோ (மதீனாவாசியாகவோ)தான் இருக்க முடியும். அவர்கள் தாம் விவசாயிகள், நாங்களோ விவசாயிகள் அல்லர்'' என்று கூறினார். இதனைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் சிரித்துவிட்டார்கள்.

Sunday 6 September 2009

[பாடம்-39] வக்காலத்.

(ஒருவர் தமது கொடுக்கல் வாங்கலுக்கு மற்றொருவருக்கு அதிகாரம் வழங்குதல்) விநியோகம் செய்வதற்கும் மற்ற காரியங்களுக்கும் இரண்டு பங்காளிகளில் ஒருவர் மற்றவருக்கு அதிகாரம் வழங்குதல்.

1064. உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் சில ஆடுகளைத் தம் தோழர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்குமாறு என்னிடம் கொடுத்தார்கள். (அவ்வாறே நான் பங்கிட்டு முடித்தபின்) ஓர் ஆட்டுக்குட்டி எஞ்சியது. அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் நான் கூறியபோது, 'அதை நீர் (அறுத்து) குர்பானி கொடுப்பீராக!'' எனக் கூறினார்கள்.

ஆடு மேய்ப்பவர் அல்லது ஆட்டை பராமரிக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டவர், சாகும் தருவாயிலுள்ள ஓர் ஆட்டைக் கண்டால் அதை அறுக்கலாம்.

1065. கஅபு இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். 'ஸல்வு' எனுமிடத்தில் மேயக்கூடிய சில ஆடுகள் எங்களுக்குச் சொந்தமாக இருந்தன. அந்த ஆடுகளில் ஒன்று சாகும் தருவாயில் இருப்பதை எங்களின் அடிமைப்பெண் பார்த்துவிட்டு, ஒரு கல்லை (கூர்மையாக) உடைத்து, அதன் மூலம் அந்த ஆட்டை அறுத்தார். 'நபி(ஸல்) அவர்களிடம் இதுபற்றி நான் கேட்கும்வரை சாப்பிடாதீர்கள்!'' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு அதை சாப்பிடுமாறு கூறினார்கள்.
'நபி(ஸல்) அவர்களிடம் இது பற்றி நான் கேட்கும்வரை என்பதற்கு பதிலாக நபி(ஸல்) அவர்களிடம் இது பற்றி நான் ஆளனுப்பிக் கேட்கும்வரை' என்று கூட கஅபு(ரலி) சொல்லியிருக்கலாம்!' என்று அறிவிப்பாளர் (சந்தேகத்துடன்) கூறுகிறார்.

கடனை திருப்பிக் கொடுபபதற்குப் பிறருக்கு அதிகாரம் வழங்குதல்.

1066. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களுக்கு கொடுத்த கடனை வாங்குவதற்காக வந்து கடினமான வார்த்தையைப் பயன்படுத்தினார். நபித்தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர். அவரைவிட்டு விடுங்கள். கடன் கொடுத்தவருக்கு இவ்வாறு கூற உரிமையுள்ளது' என்று கூறிவிட்டு அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தின் வயதுடைய ஓர் ஒட்டகத்தைக் கொடுங்கள் என்றார்கள். நபித்தோழர்கள், 'அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தவிர வேறு இல்லை' என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அதையே கொடுங்கள். அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர் என்றார்கள்.

ஒரு சமுதாயத்தின் பிரதிநிதியாக அல்லது அதற்காகப் பரிந்துரை செய்பவராக வந்திருப்பவருக்கு அன்பளிப்புச் செய்தால் அது செல்லும்.

1067. மர்வான் இப்னு ஹகம்(ரலி) மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்கள்: ஹவாஸின் தூதுக் குழுவினர் முஸ்லிம்களாகி நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். (போரில் தங்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட) தங்கள் செல்வத்தையும் கைதிகளையும் திரும்பத் தருமாறு நபி(ஸல்) அவர்களிடம் கேட்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உண்மை பேசுவது எனக்கு மிகவும் விருப்பமானது! கைதிகள் அல்லது செல்வங்கள் இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்! நான் உங்களை எதிர்பார்த்துக் கொண்டுதானிருந்தேன்! எனக்கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் தாயிஃபிலிருந்து திரும்பிய முதல் பத்து நாள்களாக அவர்களை எதிர்பார்(த்துக் காத்)திருந்தார்கள். இரண்டில் ஒன்றைத்தான் நபி(ஸல்) அவர்கள் தமக்குத் திருப்பித் தருவார்கள் என்பது அவர்களுக்குத் தெளிவானபோது, 'நாங்கள் கைதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம்!' எனக் கூறினார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்ப புகழ்ந்து, 'உங்களுடைய இந்தச் சகோதரர்கள் திருந்தி, நம்மிடம் வந்துள்ளனர். அவர்களின் கைதிகளை அவர்களிடமே ஒப்படைத்து விடுவதை நான் உசிதமாகக் கருதுகிறேன். உங்களில் (கைதிகளைப் பெற்றவர்களில்) மனப்பூர்வமாக இதைச் செய்ய விரும்புகிறவர் இதைச் செய்யட்டும்! தம் பங்கு(க்குரிய கைதிகள்) தம்மிடமே இருக்க வேண்டுமென விரும்புபவர். அல்லாஹ் நமக்குக் கொடுக்க விருக்கும் முதலாவது (வெற்றி கொள்ளப்படும் நாட்டின்) செல்வத்திலிருந்து நாம் அவருக்குக் கொடுக்கும்வரை. அவ்வாறே செய்யட்டும்! (கைதிகளைத் தம்மிடமே வைத்திருக்கட்டும்!) என்றார்கள். இதற்கு மக்கள், 'அல்லாஹ்வின் தூதருக்காக மனப்பூர்வமாக நாங்கள் (கைதிகளையே) அவர்களுக்குக் கொடுத்து விடுகிறோம்! என்றனர். நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் இதற்குச் சம்மதிக்காதவர் யார் என்று நாம்அறிய மாட்டோம்! எனவே, நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்! உங்களில் பொறுப்புள்ளவர்கள் இது பற்றி உங்களிடம் (தனியாகக்) கலந்து பேசிவிட்டு, நம்மிடத்தில் உங்கள் முடிவைக் கூறட்டும்! என்றார்கள். மக்கள் திரும்பிச் சென்றனர். அவர்களில் பொறுப்புள்ளவர்கள் அவர்களுடன் பேசினார்கள். பிறகு அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் திரும்பிவந்து, (கைதிகளைத் திருப்பிக் கொடுப்பதற்கு) தாங்கள் மனப்பூர்வமாக சம்மதிப்பதாகத் தெரிவித்தார்கள்.

ஒருவர் இவ்வளவு கொடுக்க வேண்டும் என்று தெளிவு படுத்தாமல், ஏதேனும் கொடுக்குமாறு இன்னொருவருக்கு அதிகாரம் வழங்கினால் மக்களின் வழக்கத்திற்கேற்ப அவர் கொடுக்கலாம்.

1068. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ரமளானுடைய (ஃபித்ரா) ஜகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள். அப்போது ஒருவர் வந்து உணவுப் பொருட்களை அள்ளலானார். அவரை நான் பிடித்து, 'உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்!' என்று கூறினேன். அதற்கவர், 'நான் ஓர் ஏழை!' எனக்குக் குடும்பம் இருக்கிறது. கடும் தேவையும் இருக்கிறது! என்று கூறினார். அவரை நான் விட்டு விட்டேன். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள், 'அபூ ஹுரைராவே! நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவர் விசயம் என்ன என்று வினவ நான், 'இறைத்தூதர் அவர்களே! தாம் கடுமையான வறுமையில் இருப்பதாகவும் தமக்குக் குடும்பம் இருப்பதாகவும் அவர் முறையிட்டார். எனவே, இரக்கப்பட்டு அவரைவிட்டு விட்டேன்! என்றேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நிச்சயமாக அவன் பொய் சொல்லியிருக்கிறான்! மீண்டும் அவன் வருவான்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று நம்பி அவனுக்காக(அவனைப் பிடிப்பதற்காக) காத்திருந்தேன். அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கியபோது அவனைப் பிடித்தேன். 'உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்! என்று கூறினேன். அதற்கவன், 'என்னைவிட்டுவிடு! நான் ஓர் ஏழை! எனக்குக் குடும்பமிருக்கிறது! இனிநான் வரமாட்டேன்! என்றான். அவன் மேல் இரக்கப்பட்டு அவனைவிட்டு விட்டேன். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் அபூ ஹுரைராவே! உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்! என்று கேட்டார்கள். நான் 'இறைத்தூதர் அவர்களே! அவன் (தனக்குக்) கடும் தேவையும் குடும்பமும் இருப்பதாக முறையிட்டான். எனவே, அவன் மேல் இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்! என்றேன். 'நிச்சயமாக அவன் உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான். திரும்பவும் உம்மிடம் வருவான்! என்றார்கள். மூன்றாம் முறை அவனுக்காகக் காத்திருந்தபோது, அவன் வந்து உணவு பொருட்களை அள்ளத் தொடங்கினான். அவனைப் பிடித்து, 'உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன்! (ஒவ்வொரு முறையும்) 'இனிமேல் வரமாட்டேன்! என்று சொல்லிவிட்டு, மூன்றாம் முறையாக நீ மீண்டும் வந்திருக்கிறாய்! என்று கூறினேன். அதற்கவன் 'என்னை விட்டுவிடும்! அல்லாஹ் உமக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்!' என்றான். அதற்கு நான் 'அந்த வார்த்தைகள் என்ன? என்று கேட்டேன். 'நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸியை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஓதும்! அவ்வாறு செய்தால், விடியும்வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான்!' என்றான். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் 'நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்? என்று கேட்டார்கள். 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருவதாக அவன் கூறினான்; அதனால் அவனைவிட்டு விட்டேன்!' என்றேன். 'அந்த வார்த்தைகள் என்ன? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸியை ஆரம்பம் முதல் கடைசிவரை ஓதும்! அவ்வாறு ஓதினால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான்! என்று என்னிடம் அவன் கூறினான்' எனத் தெரிவித்தேன். நபித்தோழர்கள் நன்மையான(தைக் கற்றுக் கொண்டு செயல் படுத்துவதில் அதிக ஆர்வமுடையவர்களாக இருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும் அவன் உம்மிடம் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறான்! மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசி வருகிறீர் என்று உமக்குத் தெரியுமா? என்று கேட்டனர். 'தெரியாது'' என்றேன். 'அவன்தான் ஷைத்தான்!' என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

விற்பதற்கு அதிகாரம் வழங்கப்பட்டவர், விற்கக் கூடாத முறையில் விற்றால் அந்த விற்பனை ரத்து செய்யப்படும்.

1069. அபூ ஸயீத் குல் குத்ரீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் பிலால்(ரலி) 'பர்னீ' எனும் (மஞ்சளான, வட்ட வடிவமான) உயர் ரக பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்களிடம் 'இது எங்கிருந்து கிடைத்தது?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிலால்(ரலி) 'என்னிடம் மட்டரக பேரீச்சம் பழம் இருந்தது. நபி(ஸல்) அவர்களுக்கு உண்ணக் கொடுப்பதற்காக அதில் இரண்டு ஸாவைக் கொடுத்து இதில் ஒரு ஸாவு வாங்கினேன்! என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அடடா! இது வட்டியேதான்! இது வட்டியேதான்! நீர் (உயர்ரக பேரீச்சம் பழத்தை) வாங்க விரும்பினால் உம்மிடம் இருக்கும் பேரீச்சம் பழத்தை விற்றுவிட்டு, பிறகு அதை விற்ற பணத்தில் வாங்குவீராக! என்றார்கள்.

அல்லாஹ்வின் தண்டனைகளை நிறைவேற்றும் அதிகாரத்தை ஒருவரிடம் வழங்குதல்.

1070. உக்பா இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார். ''நுஐமான் அல்லது அவரின் மகன் மது அருந்திய நிலையில் நபி(ஸல்) அவர்கள் முன்னிலையில் கொண்டு வரப்பட்டபோது, வீட்டில் இருப்பவர்கள் (வெளியே வந்து) அவரை அடிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அவரை அடித்தவர்களில் நானும் ஒருவன்! நாங்கள் செருப்புகளாலும் பேரீச்ச மட்டையாலும் அவரை அடித்தோம்.''

Friday 4 September 2009

[பாடம்-38] ஹவாலா. (ஒருவரின் கடனை மற்றவருக்கு மாற்றுதல் ஹவாலா எனப்படும்.)

ஹவாலாவை ஏற்றவர் பிறகு மாறலாமா?

1060. ''செல்வந்தன் (வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தாமல் தவணை கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும்! உங்களில் ஒருவரின் கடன் ஒரு செல்வந்தன் மீது மாற்றப்பட்டால் அவர் (அதற்கு) ஒத்துக் கொள்ளட்டும்! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறந்தவர் கொடுக்க வேண்டிய கடனுக்கு இன்னொருவர் பொறுப்பேற்றால் அது செல்லும்.

1061. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது ஒரு ஜனாஸா வந்தது. 'நீங்கள் இவருக்குத் தொழுகை நடத்துங்கள்'' என்று நபி(ஸல்) அவர்களிடம் தோழர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இவர் கடனாளியா?' என்று கேட்டபோது நபித்தோழர்கள் 'இல்லை' என்றனர். 'ஏதேனும் (சொத்தை) இவர் விட்டுச் சென்றிருக்கிறாரா?' என்று நபி(ஸல்) கேட்டபோது 'இல்லை' என்றனர். நபி(ஸல்) அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது 'இறைத்தூதர் அவர்களே! இவருக்குத் தொழுகை நடத்துங்கள்' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு 'நபி(ஸல்) அவர்கள் 'இவர் கடனாளியா?' என்று கேட்டபோது 'ஆம்' எனக் கூறப்பட்டது. 'இவர் ஏதேனும் விட்டுச் சென்றிருக்கிறாரா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டபோது 'இல்லை' என்றனர். 'இவர் கடனாளியா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டபோது 'மூன்று தங்கக் காசுகள் கடன் வைத்திருக்கிறார்' என்று நபித்தோழர்கள் கூறினார். நபி(ஸல்) அவர்கள் 'உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்' என்றனர். அப்போது அபூ கதாதா(ரலி) 'இவரின் கடனுக்கு நான் பொறுப்பு. தொழுகை நடத்துங்கள்' என்று கூறியதும் நபி(ஸல்) அவர்கள் அவருக்குத் தொழுகை நடத்தினார்கள்.

1062. ஆஸிம்(ரஹ்) அறிவித்தார். ''இஸ்லாத்தில் (மனிதர்களாக) ஏற்படுத்திக் கொள்கிற உறவுமுறை இல்லை!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உங்களுக்குச் செய்தி கிடைத்ததா?' என்று அனஸ்(ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கவர்கள், 'என்னுடைய வீட்டில் வைத்து முஹாஜிர்களுக்கும் அன்ஸாரிகளுக்குமிடையே நபி(ஸல்) அவர்கள் உறவுமுறைகளை ஏற்படுத்தினார்களே!'' என்று பதிலளித்தார்கள்.

1063. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். ''பஹ்ரைன் நாட்டிலிருந்து (ஸகாத்) பொருள்கள் வந்தால் உனக்கு இன்னின்ன பொருட்களைத் தருவேன்!'' என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறியிருந்தார்கள். அவர்கள் மரணிக்கும்வரை பஹ்ரைனிலிருந்து பொருள்கள் வரவில்லை. அபூ பக்ர்(ரலி) அவர்களின் ஆட்சியில் பஹ்ரைனியிலிருந்து பொருள்கள் வந்தபோது, 'நபி(ஸல்) அவர்கள் யாருக்காவது வாக்களித்திருந்தால் அல்லது யாரிடமாவது கடன்பட்டிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும்!'' என்று அபூ பக்ர்(ரலி) பிரகடனப்படுத்தினார்கள். நான் அவர்களிடம் சென்று 'நபி(ஸல்) அவர்கள் எனக்கு இன்னின்ன பொருட்களைத் தருவதாகக் கூறியிருந்தார்கள்!'' என்றேன். அபூ பக்ர்(ரலி) எனக்குக் கை நிறைய நாணயங்களை அள்ளித் தந்தார்கள். அதை நான் எண்ணிப் பார்த்தபோது ஐநூறு நாணயங்கள் இருந்தன. 'இதுபோல் இன்னும் இரண்டு மடங்குகளை எடுத்துக் கொள்வீராக!'' என்று அபூ பக்ர்(ரலி) கூறினார்.

Wednesday 2 September 2009

[பாடம்-37] வாடகை மற்றும் கூலிக்கு ஆள் அமர்த்துதல்.

நல்ல மனிதரைக் கூலிக்கு அமர்த்துதல்.

1054. அபூ மூஸா(ரலி) அறிவித்தார். நானும் அஷ்அரீ குலத்தைச் சேர்ந்த மற்றும் இருவரும் நபி(ஸல்) அவர்கள் அவர்களிடம் சென்றோம்; (அவர்கள் இருவரும் நபி(ஸல) அவர்களிடம் பதவி கேட்டார்கள்;) நான் நபி(ஸல்) அவர்களிடம்), 'இவ்விருவரும் பதவி கேட்பார்கள் என்று நான் அறிந்திருக்கவில்லை! (முன்பே நான் இதை அறிந்திருந்தால் இவர்களைத் தங்களிடம் அழைத்து வந்திருக்கவே மாட்டேன்!)'' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள் 'பதவியை விரும்புகிறவருக்கு நாம் பதவி கொடுக்கமாட்டோம்!'' என்று பதிலளித்தார்கள்.

சில கீராத் கூலிக்காக ஆடு மேய்த்தல்.

1055. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ''அல்லாஹ் அனுப்பிய எந்த நபியும் ஆடு மேய்க்காமல் இருந்ததில்லை!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்;. அப்போது நபித்தோழர்கள், 'நீங்களுமா?' என்று கேட்டார்கள். 'ஆம்! மக்காவாசிகளின் சில கீராத் கூலிக்காக ஆடு மேய்ப்பவனாக நான் இருந்தேன்!'' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அஸரிலிருந்து இரவுவரை ஒருவரைக் கூலிக்கு அமர்த்துவது.

1056. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் ஆகியோரின் உவமை, குறிப்பிட்ட கூலிக்கு, ஒரு நாள் முழுக்க இரவுவரை, தனக்காக வேலை செய்யும்படி ஒரு மனிதரால் அமர்த்தப்பட்டவர்கள் ஆவர்! அவர் (முதலில்) ஒரு கூட்டத்தாரை கூலிக்கு அமர்த்தினார். அவர்கள் நடுப்பகல்வரை வேலை செய்துவிட்டு, 'நீர் எங்களுக்குத் தருவதாகக் கூறிய கூலி எங்களுக்குத் தேவையில்லை. எங்கள் வேலை வீணாகட்டும்!' எனக் கூறினார்கள். அப்போது கூலிக்கு அமர்த்தியவர் அவர்களிடம், 'இவ்வாறு செய்யாதீர்கள்! உங்கள் எஞ்சிய வேலைகளையும் பூர்த்தி செய்யுங்கள்! கூலியையும் முழுமையாகப் பெறுங்கள்!' எனக் கூறினார். அவர்கள் (ஏற்க) மறுத்து வேலையை விட்டுவிட்டனர். அவர்களுக்குப் பின், மற்றும் சில கூலியாட்களை அவர் வேலைக்கு அமர்த்தினார். அவர்களிடம் அவர், 'இன்று எஞ்சியுள்ள நேரத்தைப் பூர்த்தியாக்குங்கள்! அவர்களுக்குத் தருவதாகக் கூறிய கூலியை உங்களுக்குத் தருகிறேன்!'' என்றார். அவர்கள் அஸர் தொழுகைவரை வேலை செய்துவிட்டு 'உமக்காக நாங்கள் வேலை செய்தது வீணாகட்டும்! எங்களுக்காக நீர் நிர்ணயித்த கூலியையும் நீரே வைத்துக் கொள்ளும்!'' என்றனர். அவர் 'உங்கள் எஞ்சிய வேலையைப் பூர்த்தி செய்யுங்கள்! பகலில் இன்னும் சிறிது நேரமே மிச்சமுள்ளது!'' என அவர்களிடம் கூறினார். அவர்கள் (வேலை செய்ய) மறுத்துவிட்டனர். பிறகு, அன்றைய பொழுதில் எஞ்சிய நேரத்தில் வேலை செய்வதற்காக மற்றொரு கூட்டத்தாரை அவர் வேலைக்கு அமர்த்தினார். அவர்கள் சூரியன் மறையும்வரை உள்ள எஞ்சிய நேரத்தில் வேலை செய்தனர். இதனால், அவர்கள் முதலிரண்டு கூட்டத்தினரின் கூலியையும் சேர்த்து முழுமையாகப் பெற்றனர். இதுதான் (முஸ்லிம்களாகிய) இவர்களுக்கும் இவர்கள் ஏற்றுள்ள பிரகாசத்திற்கும் உரிய உவமையாகும்! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

கூலிக்கு அமர்த்தப்பட்டவர் கூலியை வாங்காமல் சென்ற பிறகு, கூலிக்கு அமர்த்தியவர் அதைக் கொண்டு உழைத்து அதைப் பெருகச் செய்திருந்தால் அல்லது ஒருவர் பிறரின் செல்வத்தைக் கொண்டு உழைத்து அதில் லாபம் பெற்றிருந்தால்...

1057. உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் மூன்று பேர் (ஒன்றாக) நடந்து சென்றனர். இறுதியில் (மலையில் இருந்த) குகையொன்றில் இரவைக் கழிப்பதற்காக தஞ்சம் புகுந்தனர். அதில் அவர்கள் நுழைந்தவுடன் மலையிலிருந்து பெரும் பாறையொன்று உருண்டு வந்து குகைவாசலை அடைத்துவிட்டது. அப்போது அவர்கள் 'நீங்கள் செய்த நற்செயலைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் தவிர நீங்கள் தப்ப முடியாது!'' என்று தமக்குள் கூறினர். அவர்களில் ஒருவர் 'இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் அவர்களுக்குப் பால் (கறந்து) கொடுப்பதற்கு முன் என் குடும்பத்தினருக்கோ குழந்தைகளுக்கோ பால் கொடுப்பதில்லை! ஒரு நாள் எதையோ தேடிச் சென்றதால் தாமதமாக வந்தேன். என்னுடைய தாயும் தந்தையும் (முன்பே) உறங்கி விட்டிருக்க கண்டேன். அவர்களுக்குப் பால் கொடுப்பதற்கு முன், என் குடும்பத்தினருக்கோ என் அடிமைகளுக்கோ பால் கொடுப்பதை நான் விரும்பாததால் அவர்கள் விழிப்பதை எதிர்பார்த்து என் கைகளில் பாத்திரத்தை வைத்துக் கொண்டு காத்திருந்தேன். ஃபஜ்ர் நேரம் வந்ததும் அவ்விருவரும் விழித்துத் தமக்குரிய பாலைக் குடித்தனர். எனவே இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!' எனக் கூறினார். உடனே, அவர்கள் வெளியேற முடியாத அளவிற்குப் பாறை சற்று விலகியது!. மற்றொருவர், 'இறைவா! என் தந்தையின் சகோதரரின் மகள் ஒருத்தி இருந்தாள்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தாள். நான் அவளை அடைய விரும்பினேன்; அவள் என்னிடமிருந்து விலகிச் சென்றாள். அவளுக்குப் பஞ்சம் நிறைந்த ஆண்டு ஒன்று வந்தபோது (பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு) என்னிடம் வந்தாள்; நான் அவளை அடைந்திட அவள் எனக்கு வழிவிட வேண்டும் என்ற நிபந்தனையில் பேரில் நூற்றி இருபது தங்கக்காசுகளை அவளுக்குக் கொடுத்தேன். அவளை என் வசப்படுத்தி (உறவு கொள்ள முனைந்து)விட்டபோது, 'முத்திரையை அதற்கான (மணபந்தத்தின்) உரிமையின்றி உடைப்பதற்கு உனக்கு நான் அனுமதி தரமாட்டேன்!'' என்று அவள் கூறினாள். உடனே, அவளுடன் உறவு கொள்ளும் பாவத்(தைச் செய்வ)திலிருந்து விலகிக் கொண்டேன்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தும் அவளைவிட்டுத் திரும்பி விட்டேன். நான் அவளுக்குக் கொடுத்த தங்க நாணயத்தை அவளிடமே விட்டு விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!' எனக் கூறினார். பாறை விலகியது. ஆயினும் அவர்களால் வெளியேற முடியவில்லை.

மூன்றாமவர், 'இறைவா! நான் சில ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி அவர்களின் கூலியையும் கொடுத்தேன். ஒரே ஒருவர் மட்டும் தம் கூலியை விட்டுவிட்டுச் சென்றார். அவரின் கூலியை நான் முதலீடு செய்து அதனால் செல்வம் பெருகியிருந்த நிலையில் சிறிது காலத்திற்குப் பின் அவர் என்னிடம் வந்தார். 'அல்லாஹ்வின் அடியாரே! என்னுடைய கூலியை எனக்குக் கொடுத்துவிடும்!'' என்று கூறினார். 'நீர் பார்க்கிற இந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் எல்லாம் உம் கூலியிலிருந்து கிடைத்தவைதாம்!'' என்று கூறினேன். அதற்கவர் 'அல்லாஹ்வின் அடியாரே! என்னை கேலி செய்யாதீர்!'' என்றார். 'நான் உம்மை கேலி செய்யவில்லை!'' என்று கூறினேன். அவர் அனைத்தையும் ஒன்று விடாமல் ஓட்டிச் சென்றார். 'இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!' எனக் கூறினார். பாறை முழுமையாக விலகியது. உடனே, அவர்கள் வெளியேறிச் சென்றுவிட்டனர்! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அறிவித்தார்.

அல் ஃபாத்திஹா (அல்ஹம்து) ஸூராவால் ஓதிப்பார்ப்பதற்காக வழங்கப்படும் கூலி.

1058. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். நபித்தோழர்களில் சிலர் ஒரு பயணத்தில் சென்றிருந்தபோது, ஓர் அரபிக் குலத்தினரிடம் தங்கினார்கள். அவர்களிடம் விருந்து கேட்டபோது அவர்களுக்கு விருந்தளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். அப்போது அக்குலத்தாரின் தலைவனை தேள் கொட்டிவிட்டது. அவனுக்காக அவர்கள் எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தனர்; எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அப்போது அவர்களில் சிலர், 'இதோ! இங்கே வந்திருக்கக் கூடிய கூட்டத்தினரிடம் நீங்கள் சென்றால் அவர்களிடம் (இதற்கு) ஏதேனும் மருத்துவம் இருக்கலாம்!'' என்று கூறினர். அவ்வாறே அவர்களும் நபித் தோழர்களிடம் வந்து 'கூட்டத்தினரே! எங்கள் தலைவரைத் தேள் கொட்டிவிட்டது! அவருக்காக அனைத்து முயற்சிகளையும் செய்தோம்; (எதுவுமே) அவருக்குப் பயன் அளிக்கவில்லை. உங்களில் எவரிடமாவது ஏதேனும் (மருந்து) இருக்கிறதா?' என்று கேட்டனர். அப்போது நபித்தோழர்களில் ஒருவர், 'ஆம்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் ஓதிப் பார்க்கிறேன்; என்றாலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உங்களிடம் விருந்து கேட்டு நீங்கள் விருந்து தராததால் எங்களுக்கென்று ஒரு கூலியை நீங்கள் தராமல் ஓதிப் பார்க்க முடியாது!'' என்றார். அவர்கள் சில ஆடுகள் தருவதாகப் பேசி ஒப்பந்தம் செய்தனர். நபித்தோழர் ஒருவர், தேள் கொட்டப்பட்டவர் மீது (இலேசாகத் துப்பி) ஊதி, 'அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்..'' என்று ஓதலானார். உடனே பாதிக்கப்பட்டவர், கட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவர் போல் நடக்க ஆரம்பித்தார். வேதனையின் அறிகுறியே அவரிடம் தென்படவில்லை! பிறகு, அவர்கள் பேசிய கூலியை முழுமையாகக் கொடுத்தார்கள். 'இதைப் பங்கு வையுங்கள்!'' என்று ஒருவர் கேட்டபோது, 'நபி(ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறி, அவர்கள் என்ன கட்டளையிடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவ்வாறு செய்யக்கூடாது!'' என்று ஓதிப் பார்த்தவர் கூறினார். நபி(ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அது (அல்ஹம்து சூரா) ஓதிப் பார்க்கத் தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்?' என்று கேட்டுவிட்டு, 'நீங்கள் சரியானதையே செய்திருக்கிறீர்கள். அந்த ஆடுகளை உங்களுக்கிடையே பங்கு வைத்து கொள்ளுங்கள்! உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்! என்று கூறிவிட்டுச் சிரித்தார்கள்.

ஆண் விலங்குகளைப் பெண் விலங்குகளுடன் இணையச் செய்வதற்கு கட்டணம் பெறுதல்.

1059. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஆண் விலங்குகளைப் பெண் விலங்குகளுடன் இணையச் செய்வதற்கு (பொலிப் பிராணியைக் கொண்டு பெண் விலங்குகளுக்கு சினையூட்டுவதற்கு) கட்டணம் பெறுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.