Sunday 29 November 2009

[பாடம்-75] விதி.

இறைவனின் தீர்மானத்தை எழுதிய பேனா(வின் மை) உலர்ந்துவிட்டது.

2137. இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார் : ஒருவர் 'இறைத்தூதர் அவர்களே! சொர்க்கவாசிகள் யார்? நரகவாசிகள் யார்? என்று (முன்பே அல்லாஹ்வுக்குத்) தெரியுமா?' எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'ஆம் (தெரியும்)'' என்றார்கள். அவர் 'அவ்வாறாயின் ஏன் நற்செயல் புரிகிறவர்கள் நற்செயல் புரியவேண்டும்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'ஒவ்வொருவரும் 'எ(தை அடைவ)தற்காகப் படைக்கப்பட்டார்களோ' அல்லது 'எ(தை அடைவ)தற்கு வாய்ப்பளிக்கப்பட்டார்களோ' அதற்காகச் செயல்படுகிறார்கள்'' என்று பதிலளித்தார்கள்.

அல்லாஹ்வின் கட்டளை (முன்பே) தீர்மானிக்கப் பெற்ற விதியாக இருக்கின்றது. (திருக்குர்ஆன் 33:38)

2138. ஹுதைபா அல்யமான்(ரலி) அறிவித்தார் : (ஒரு முறை) எங்களிடையே நபி(ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அந்த உரையில், மறுமை ஏற்படும் வரையிலான எந்தத் தகவலையும் அவர்கள் குறிப்பிடாமல் விடவில்லை. அதனை அறிந்தவர்கள் அறிந்து கொண்டார்கள். அதனை அறியாதவர்கள் அறியாமலானார்கள். (அதில்) ஏதேனும் ஒன்றை நான் மறந்து விட்டிருந்தாலும் அதை (நேரில்) காணும்போது அறிந்துகொள்வேன். தம்மைவிட்டு மறைந்துவிட்ட ஒருவரை (மீண்டும்) பார்க்கும்போது அவரை ஒருவர் அடையாளம் கண்டுகொள்வதைப் போன்று.

நேர்த்திக்கடன் மனிதனை விதிக்கே கொண்டு செல்கிறது.

2139. (அல்லாஹ் கூறினான்:) நேர்த்திக் கடனானது, நான் விதியில் எழுதியிராத எந்தவொன்றையும் மனிதனிடம் கொண்டு வந்துவிடாது. மாறாக, விதிதான் அவனை (நேர்த்திக்கடன் பக்கம்) கொண்டு செல்கிறது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வத்தை) வெளிக்கொணர்வதென நான் (முன்பே) விதியில் எழுதிவிட்டேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(பாவங்களிலிருந்து) அல்லாஹ்வால் பாதுகாக்கப் பெற்றவரே மாசற்றவராவார்.

2140. (இப்புவியின் ஆட்சிக்கு இறைவனுடைய) பிரதிநிதியாக ஆக்கப்படும் எவருக்கும் இரண்டு நெருக்கமான ஆலோசகர்கள் இருக்கவே செய்வார்கள். ஓர் ஆலோசகர், அவரை நன்மை செய்யும்படி ஏவி அதற்குத் தூண்டு கோலாக இருப்பார். அல்லாஹ் (குற்றங்களிலிருந்து) யாரை பாதுகாத்தானோ அவரே மாசற்றவராக இருப்பார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

அல்லாஹ் மனிதனையும் அவனுடைய உள்ளத்தையும் சூழ்ந்து நிற்கிறான்.

2141. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் (சத்தியம் செய்வதாக இருந்தால்) 'இல்லை. உள்ளங்களைப் புரட்டக்கூடியவன் மீதாணையாக!'' என்றே பெரும்பாலும் சத்தியம் செய்வார்கள்.

Friday 27 November 2009

[பாடம்-74] நெகிழ்வூட்டும் அறிவுரைகள்.

ஆரோக்கியம் மற்றும் ஓய்வு குறித்தும் மறுமையின் வாழ்வைத் தவிர வேறு (நிலையான) வாழ்வில்லை என்பது குறித்தும் வந்துள்ளவை.

2091. மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு நேரம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

''உலகத்தில் நீ அந்நியனைப் போன்று இரு. அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு".

2092. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு 'உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு'' என்றார்கள்.(அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) ''நீ மாலை நேரத்தை அடைந்தால் காலைவேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உன்னுடைய இறப்பு(க் குப் பிந்திய நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு'' என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள்.

எதிர்பார்ப்புகளும் அவை அளவு கடந்து போவதும்.

2093. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார் : (ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் (நிலத்தில்) ஒரு சதுரக் கட்டம் வரைந்தார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்: (நடுவிலுள்ள மையப் புள்ளியான) இதுதான் மனிதன். இந்தச் சதுரம் தான் அவனைச் 'சூழ்ந்துள்ள' அல்லது 'சூழ்ந்து கொண்டுவிட்ட' வாழ்நாளாகும். (நடுவிலிருந்து) வெளியே செல்லும் கோடுதான் அவனுடைய எதிர்பார்ப்புகளாகும். இதோ இந்தச் சிறிய கோடுகள் (மனிதனை வந்தடையும்) சோதனைகளாகும். (சோதனைகளில்) ஒன்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் மற்றொன்று அவனைத் தீண்டவே செய்யும். (இடையில் ஏற்படும் சோதனைகளான) இவற்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் இ(யற்கை மரணமான)து அவனைத் தீண்டவே செய்யும்.

2094. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் (முந்தைய ஹதீஸில் உள்ளபடி) சில கோடுகள் வரைந்தார்கள். பிறகு '(சதுரத்தின் நடுவிலுள்ள கோட்டைக் காட்டி) இதுதான் (மனிதனின்) எதிர்பார்ப்புகள் (என்றும், சதுரத்தைக் காட்டி) இதுதான் அவனுடைய ஆயுள் (என்றும் கூறிவிட்டு,) இவ்வாறு அவன் (எதிர்பார்ப்புகளில்) இருந்து கொண்டிருக்கும்போது அருகிலுள்ள (மரணம் - ஆயுள் முடிவு எனும்) கோடு அவனை வந்தடைகிறது'' என்று கூறினார்கள்.

ஒருவர் அறுபது வயதை அடைந்தால் அதற்கு மேல் அவர் வாழ்நாள் குறித்து கூறும் சாக்குப் போக்குகளை அல்லாஹ் ஏற்பதில்லை.

2095. ஒரு மனிதனின் வயது அறுபது ஆண்டுகளை எட்டும் வரை வாழ்நாளைத் தள்ளிப் போட்ட பிறகு அவன் (ஆயுள் விஷயத்தில்) கூறும் சாக்குப்போக்குகளை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

2096. முதியவரின் மனம் கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்துவரும். 1. இம்மை வாழ்வின் (-செல்வத்தின்) மீதுள்ள பிரியம். 2. நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசை என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

2097. (தொடர்ந்து) மஹ்மூத் இப்னு ரபீஉ(ரலி) அறிவித்தார் : இத்பான் இப்னு மாலிக் அல்அன்சாரி(ரலி) அவர்கள் (பின்வருமாறு) சொல்ல கேட்டேன்.(ஒருநாள்) அதிகாலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் வந்திருந்தபோது 'அல்லாஹ்வின் திருப்தியை நாடி 'லா இலாஹ இல்லல்லாஹ்' (வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று கூறியவாறு மறுமை நாளில் ஓர் அடியார் வந்தால் அவரின் மீது நரகத்தை அல்லாஹ் தடை செய்யாமல் இருப்பதில்லை'' என்று கூறினார்கள்.

2098. அல்லாஹ் கூறினான்: இறைநம்பிக்கையுள்ள என் அடியார், அவருக்குப் பிரியமான ஒருவரின் உயிரை நான் கைப்பற்றி விடும்போது நன்மையை நாடிப் பொறுமை காத்தால், சொர்க்கமே அவருக்கு நான் வழங்கும் பிரதிபலனாக இருக்கும் என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நல்லோர்களின் மறைவு.

2099. நல்லவர்களில் முதன்மையானவர்கள் முதலாவதாகவும் அவர்களுக்கு அடுத்த (படித்தரத்திலுள்ள)வர்கள் அடுத்ததாகவும் (இவ்வுலகை விட்டுப்) போய்விடுவார்கள். (இவ்வாறு நல்லவர்கள் மறைந்த பின் இப்புவியில்) 'மட்டமான வாற்கோதுமை போன்ற', அல்லது 'மட்டமான பேரீச்சம் பழம் போன்ற' தரம் வாய்ந்த மக்களே எஞ்சியிருப்பார்கள். அவர்களை அல்லாஹ் சற்றும் பொருட்படுத்தமாட்டான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிர்தாஸ் இப்னு மாலிக் அல் அஸ்லமீ(ரலி) அறிவித்தார்.

2100. ஆதமின் மகனக்கு (மனிதனுக்கு) இரண்டு நீரோடைகள் (நிறைய) செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. (பாவங்களிலிருந்து) பாவமன்னிப்புக் கோரி மீண்டு விட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான் என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் தம் செல்வத்திலிருந்து எதை (அறவழியில்) செலவிட்டாரோ அதுதான் அவருக்குரிய (நன்மை பயக்கும்) செல்வமாகும்.

2101. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார் : (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் 'உங்களில் யாருக்காவது தம் செல்வத்தை விடத் தம் வாரிசுகளின் செல்வம் விருப்பமானதாக இருக்குமா?' என்று கேட்டார்கள். தோழர்கள் 'இறைத்தூதர் அவர்களே! எங்கள் அனைவருக்குமே (வாரிசுகளின் செல்வத்தை விட) எங்களின் செல்வமே விருப்பமானதாகும்'' என்று பதிலளித்தார்கள். 'அவ்வாறாயின், ஒருவர் (இறப்பதற்கு முன் அறவழியில்) செலவிட்டதே அவரின் செல்வமாகும். (இறக்கும் போது) விட்டுச் செல்வது அவரின் வாரிசுகளின் செல்வமாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் மற்றும் நபித் தோழர்களின் பிழைப்பு எவ்வாறு இருந்தது என்பது குறித்தும், அவர்கள் இவ்வுலகி(ன் இன்பங்களி)லிருந்து விலகியிருந்தது குறித்தும்.

2102. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : எவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லையோ அத்தகைய அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் (கடும்) பசியினால் என் வயிற்றைத் தரையில் வைத்து அழுத்திக்கொண்டு படுத்திருக்கிறேன். மேலும், (கடும்) பசியினால் வயிற்றில் நான் கல்லை வைத்துக் கட்டிக் கொண்டதுமுண்டு. ஒரு நாள் நான் நபி(ஸல்) அவர்களும் தோழர்களும் (பள்ளிவாசலுக்குச்) செல்லும் பாதையில் அமர்ந்துகொண்டேன். அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்கள் (என்னைக்) கடந்து சென்றார்கள். உடனே நான் இறைவேதத்திலுள்ள ஒரு வசனத்தைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். என் வயிற்றை அவர்கள் நிரப்புவார்கள் என்பதற்காகவே (அது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் கடந்து சென்றார்கள்; (என் பசி நீங்க எதுவும்) அவர்கள் செய்யவில்லை. பிறகு உமர்(ரலி) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். உடனே நான் அவர்களிடமும் இறைவேதத்திலுள்ள ஒரு வசனம் குறித்துக் கேட்டேன். அவர்கள் என் வயிற்றை நிரப்புவார்கள் என்பதற்காகவே (அது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அவர்களும் (என் பசியைப் போக்க) ஒன்றும் செய்யாமல் போய்விட்டார்கள். பிறகு அபுல்காசிம் (நபி-ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். என்னைக் கண்டு, எனக்கு ஏற்பட்டுள்ள (பசி) நிலையையும் என் முகமாற்றத்தையும் அவர்கள் புரிந்துகொண்டு புன்னகைத்தார்கள். பிறகு, 'அபூ ஹிர்ரே! (அபூ ஹுரைராவே!) என்று அழைத்தார்கள். நான் 'இதோ காத்திருக்கிறேன்; இறைத்தூதர் அவர்களே!'' என்றேன். '(என்னைப்) பின்தொடர்ந்து வா!'' என்று சொல்லிவிட்டு நடந்தார்கள். நான் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். நபி(ஸல்) அவர்கள் (தம் இல்லத்தில்) நுழைந்தார்கள். நான் (உள்ளே செல்ல) அனுமதி கோர, எனக்கு அனுமதியளித்தார்கள். நான் உள்ளே சென்றேன். அப்போது (வீட்டில்) ஒரு கோப்பையில் பாலைக் கண்டார்கள். உடனே (தம் துணைவியாரிடம்) 'இந்தப் பால் எங்கிருந்து வந்தது?' என்று கேட்டார்கள். அவர்கள் 'இன்ன 'ஆண்' அல்லது 'பெண்' தங்களுக்கு இதை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்'' என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் 'அபூ ஹுர்' என அழைத்தார்கள். நான் 'இதோ வந்துவிட்டேன்; இறைத்தூதர் அவர்களே!'' என்றேன். 'திண்ணைவாசிகளிடம் சென்று என்னிடம் அவர்களை அழைத்து வாருங்கள்'' என்றார்கள். திண்ணைவாசிகள் (அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா) இஸ்லாத்தின் விருந்தினர்கள் ஆவர். அவர்கள் புகலிடம் தேட அவர்களுக்குக் குடும்பமோ செல்வமோ கிடையாது. வேறு யாரிடமும் செல்லவுமாட்டார்கள். நபி(ஸல்) அவர்களிடம் ஏதேனும் தானப்பொருள்கள் வந்தால் அதனை இவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் அனுப்பி விடுவார்கள். அதிலிருந்து தாம் எதையும் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். தம்மிடம் ஏதேனும் அன்பளிப்புப் பொருள்கள் வந்தால் இவர்களைத் தம்மிடம் அழைத்துவரும்படி ஆளனுப்பி விடுவார்கள். (அவர்கள் வந்தவுடன்) அவர்களுடன் சேர்ந்து தாமும் உண்பார்கள். இப்போது நபி(ஸல்) அவர்கள் (திண்ணைவாசிகளை அழைத்துவரச்) சொன்னதால் எனக்குக் கவலைதான் ஏற்பட்டது. '(இருப்பதோ சிறிதளவு பால்.) திண்ணைவாசிகளுக்கு இந்தப் பால் எம்மாத்திரம்? இதைச் சிறிதளவு பருகி என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு நானே பொருத்தமானவன். திண்னை வாசிகள் வந்தால், நபியவர்கள் எனக்கு உத்தரவிட, நானே அவர்களுக்குக் கொடுத்துவிட்டு (இறுதியில்) எனக்கு இந்தப் பாலில் ஒன்றும் கிடைக்காமல் போகலாம். இருப்பினும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியாமல் இருக்க இயலாது'' என (மனத்துக்குள்) சொல்லிக் கொண்டேன்.

பிறகு, நான் திண்ணைவாசிகளிடம் சென்று அவர்களை அழைத்தேன். அவர்களும் (அழைப்பை ஏற்று) வந்து (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கோரினார்கள். நபி(ஸல்) அவர்கள் திண்ணைவாசிகளுக்கு அனுமதி வழங்கினார்கள். அவர்கள் அந்த வீட்டில் ஆங்காங்கே இடம்பிடித்து அமரலானார்கள். நபி(ஸல்) அவர்கள் 'அபூ ஹிர்' என அழைத்தார்கள். நான் 'இதோ காத்திருக்கிறேன்; கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே!'' என்றேன். நபி(ஸல்) அவர்கள் 'இதை எடுத்து இவர்களுக்குக் கொடுங்கள்'' என்றார்கள். நான் அந்தக் கோப்பையை எடுத்து ஒரு மனிதருக்குக் கொடுத்தேன். அவர் தாகம் தணியும் வரை குடித்தார். பிறகு அவர் என்னிடம் அந்தக் கோப்பையைத் திருப்பித் தந்தார். நான் அதை இன்னொரு மனிதரிடம் கொடுத்தேன். அவரும் தாகம் தீரும் வரை குடித்துவிட்டுக் கோப்பையை என்னிடம் தந்தார். பிறகு இன்னொருவர் தாகம் தீரும் வரை குடித்தார். பிறகு என்னிடம் அதைத் திருப்பித் தந்தார். இறுதியில் நான் நபி(ஸல்) அவர்களிடம் அதைக் கொண்டு சென்றேன். அப்போது மக்கள் அனைவரும் தாகம் தணிந்திருந்தினர். நபி(ஸல்) அவர்கள் அந்தக் கோப்பையை வாங்கித் தம் கையில் வைத்துக்கொண்டு என்னைக் கூர்ந்துப் பார்த்துப் புன்னகைத்தார்கள். பிறகு 'அபூ ஹிர்!' என்று அழைத்தார்கள். நான் 'இதோ காத்திருக்கிறேன்; கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே!'' என்று சொன்னேன். அதற்கவர்கள் 'நானும் நீங்களும் (மட்டும் தான்) எஞ்சியுள்ளோம் (அப்படித்தானே?)'' என்று கேட்டார்கள். நான் 'இறைத்தூதர் அவர்களே! (ஆம்.) உண்மைதான்'' என்றேன். நபி(ஸல்) அவர்கள் 'உட்கார்ந்து (இதைப் பருகுங்கள்'' என்றார்கள். நான் உட்கார்ந்து பருகினேன். 'இன்னும் பருகுங்கள்'' என்றார்கள். பருகினேன். இவ்வாறு அவர்கள் 'பருகுங்கள்' என்று சொல்லிக் கொண்டேயிருக்க, நான் பருகிக் கொண்டேயிருந்தேன். இறுதியில் 'இல்லை. சத்திய (மார்க்க)த்தைக் கொண்டு தங்களை அனுப்பிவைத்த (இறை)வன் மீது ஆணையாக! இனிப் பருகுவதற்கு வழியே இல்லை'' என்றேன். நபி(ஸல்) அவர்கள் '(சரி) அதை எனக்குக் காட்டுங்கள்'' என்றார்கள். எனவே, நான் அவர்களிடம் அந்தக் கோப்பைக் கொடுத்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனுடைய (திருப்)பெயர் கூறி எஞ்சியதைப் பருகினார்கள்.

2103. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : ''அல்லாஹ்வே! முஹம்மதின் குடும்பத்தாருக்கு(ப் பசிக்கு) உணவு வழங்குவாயாக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.

2104. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : ''இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உங்களில் யாரையும் அவரின் நற்செயல் ஒருபோதும் காப்பாற்றாது. (மாறாக, அல்லாஹ்வின் தனிப் பெரும் கருணையாலேயே எவரும் காப்பாற்றப்படுவார்)'' என்று கூறினார்கள். மக்கள் 'அல்லாஹ்வின் தூதரே! தங்களையுமா (தங்களின் நற்செயல் காப்பாற்றாது?)'' என்று வினவினார்கள். நபி(ஸல்) அவர்கள் '(ஆம்) என்னையும்தான்; அரவணைத்துக் கொண்டால் தவிர'' என்று கூறிவிட்டு, '(எனவே, நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாக நடந்து கொள்ளுங்கள். (வரம்பு மீறி விடாதீர்கள்.) காலையிலும், மாலையிலும், இரவில் சிறிது நேரமும் நற்செயல் புரியுங்கள். (எதிலும்) நடுநிலை (தவறாதீர்கள்) நடுநிலை(யைக் கடைபிடியுங்கள்.) (இவ்வாறு செய்தால் இலட்சியத்தை) நீங்கள் அடைவீர்கள்'' என்றார்கள்.

2105. ஆயிஷா(ரலி) அறிவித்தார் : ''நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது எது?' என்று நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் '(எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே'' என்று விடையளித்தார்கள். மேலும், 'நற்செயல்கள் புரிவதில் இயன்றவரை அதன் எல்லையைத் தொடமுயலுங்கள்'' என்றும் கூறினார்கள்.

2106. அல்லாஹ் அன்பையும் கருணையையும் படைத்தபோது அதனை நுறு வகைகளாக அமைத்தான். அவற்றில் தொண்ணூற்று ஒன்பது வகைகளைத் தன்னிடமே வைத்துக் கொண்டான். (மீதியுள்ள) ஒரு வகையை மட்டுமே தன் படைப்புகள் அனைத்துக்கும் வழங்கினான். எனவே, இறைமறுப்பாளன் அல்லாஹ்வின் கருணை முழுவதையும் அறிந்தால், சொர்க்கத்தின் மீது அவநம்பிக்கை கொள்ளமாட்டான். (இதைப்போன்றே) இறைநம்பிக்கையாளர் அல்லாஹ் வழங்கும் வேதனை முழுவதையும் அறிந்தால் நரகத்தைப் பற்றிய அச்சமில்லாமல் இருக்க மாட்டார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நாவைப் பேணிக் காத்தல்.

2107. தம் இரண்டு தாடைகளுக்கு இடையே உள்ளத( நாவி)ற்கும், தம் இரண்டு கால்களுக்கு இடையே உள்ளத (மர்ம உறுப்பி)ற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிப்பவருககு நான் சொர்க்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறேன என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

2108. ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாவங்களை விட்டொழிதல்.

2109. எனக்கும் என்னை அல்லாஹ் எ(ந்த மார்க்கத்)தைக் கொண்டு அனுப்பியுள்ளானோ அதற்கும் எடுத்துக்காட்டாகிறது. ஒரு மனிதரின் நிலையைப் போன்றதாகும். அவர் ஒரு சமூகத்தாரிடம் சென்று 'நான் (இன்ன பெரும்) படையை என் கண்களால் பார்த்தேன். (எந்நேரமும் அப்படை உங்களைத் தாக்கலாம். அதை எதிர்கொள்ளும் ஆற்றல் உங்களிடம் இல்லை.) நான், 'நிர்வாணமாக (ஓடி வந்து) எச்சரிக்கை செய்ப(வனைப்) போன்றவன் ஆவேன். எனவே, (ஓடுங்கள்;) தப்பித்துக் கொள்ளுங்கள். தப்பித்துக் கொள்ளுங்கள்'' என்று கூறினார். அப்போது ஒரு பிரிவினர் அவருக்குக் கீழ்ப்படிந்து இரவோடு இரவாக மெல்ல வெளியேறித் தப்பிவிட்டனர். ஆனால், இன்னொரு பிரிவினர் அவரை நம்ப மறுத்தனர். பிறகு அதிகாலையில் அப்படையினர் வந்து அவர்களைத் தாக்கிப் பூண்டோடு அழித்தனர் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது.

2110. மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

சொர்க்கம் உங்களின் செருப்பு வாரைவிட மிக அருகில் உள்ளது. நரகமும் அதைப்போன்றுதான்.

2111. சொர்க்கம் உங்களின் செருப்பு வாரைவிட உங்களுக்கு மிக அருகில் உள்ளது. நரகமும் அதைபோன்றே (மிக அருகில் உள்ளது.) என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

(செல்வத்தில்) தன்னைவிடக் கீழ் நிலையில் இருப்பவரை (மனிதன்) பார்க்கட்டும்; தன்னை விட மேல் நிலையில் இருப்பவரைப் பார்க்க வேண்டாம்.

2112. செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழனாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நன்மை அல்லது தீமை செய்ய எண்ணுவது.

2113. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் : (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்யவேண்டும் என (மனத்தில்) எண்ணிவிட்டாலே அதைச் செயல்படுத்தா விட்டாலும் அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும் விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழு நூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால் ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கைவிட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான்.

நம்பகத் தன்மை (மக்களிடமிருந்து) அகன்று விடல்.

2114. ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களுக்கு (நம்பகத்தன்மை தொடர்பாக) இரண்டு செய்திகளைக் கூறினார்கள். அவற்றில் ஒன்றை நான் (என் வாழ்நாளிலேயே) பார்த்துவிட்டேன். மற்றொன்றை எதிர்பார்த்திருக்கிறேன். ஒரு செய்தி யாதெனில், (இயற்கையாகவே) மனிதர்களின் ஆழ்மனதில் ('அமானத்' எனும்) நம்பகத்தன்மை இடம் பிடித்தது. பின்னர் அவர்கள் குர்ஆனிலிருந்தும் (அதை) அறிந்து கொண்டார்கள். பிறகு (என்னுடைய வழியான) சுன்னாவிலிருந்தும் (அதை)அறிந்து கொண்டார்கள். (நபியவர்கள் கூறிய இதை நான் பார்த்துவிட்டேன்.) இரண்டாவது செய்தி, நம்பகத்தன்மை அகற்றப்படுவது தொடர்பானதாகும். மனிதன் ஒரு முறை உறங்குவான். (உறக்கத்திலேயே) அவனுடைய உள்ளத்திலிருந்து நம்பகத்தன்மை (சிறிது) கைப்பற்றப்படும். அதையடுத்து அ(து அகற்றப்பட்ட)தன் அடையாளம் சிறு (கரும்) புள்ளி அளவுக்கு (அவனில்) தங்கிவிடும். பிறகு மீண்டும் ஒரு முறை அவன் உறங்குவான். அப்போது (மறுபடியும்) அது கைப்பற்றப்படும். இம்முறை அ(து அகற்றப்பட்ட) தன் அடையாளம் (கடின உழைப்பால் கையில் ஏற்படும்) காய்ப்பு அளவுக்கு (அவனில்) நிலைத்துவிடும். (இவ்வாறு முதலில் 'நம்பகத் தன்மை' எனும் ஒளி உள்ளத்தில் ஏற்றப்பட்டுப் பிறகு சிறிது சிறிதாக அது அணைக்கப்படுவதானது) காலில் தீக்கங்குகளை உருட்டிவிட்டு, அதனால் கால் கொப்பளித்து உப்பிவிடுவதைப் போன்றதாகும். பார்வையில் அது உப்பிப் பெரிதாகத் தெரியுமேதவிர, அதனுள் ஒன்றும் இருக்காது. பின்னர் காலையில் மக்கள் தங்களிடையே கொடுக்கல் வாங்கல் செய்து கொள்வார்கள். (ஆனால், அவர்களில்) யாருமே நம்பிக்கையைக் காப்பாற்ற எத்தனிக்கமாட்டார்கள். இன்னாருடைய மக்களில் நம்பிக்கையான ஒருவர் இருக்கிறார் என்று (தேடிக் கண்டுபிடித்து) சொல்லப்படும் (அளவுக்கு நம்பிக்கையாளர்கள் அரிதாகிவிடுவார்கள். மேலும், ஒருவரைப் பற்றி, 'அவரின் அறிவுதான் என்ன? அவரின் விவேகம்தான் என்ன? அவரின் வீரம்தான் என்ன?' என்று (சிலாகித்துக்) கூறப்படும். ஆனால், அந்த மனிதருடைய இதயத்தில் கடுகளவு கூட நம்பிக்கை இருக்காது. (அறிவிப்பாளர்: ஹுதைஃபா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) என் மீது ஒரு காலம் வந்திருந்தது. அக்காலத்தில் நான் உங்களில் யாரிடம் கொடுக்கல் வாங்கல் செய்கிறேன் என்று பொருட்படுத்தியதில்லை. (ஏனெனில்,) முஸ்லிமாக இருந்தால், இஸ்லாம் (என்னுடைய பொருளை அவரிடமிருந்து) என்னிடம் திருப்பித் தந்துவிடும். கிறிஸ்தவராக இருந்தால் அவருக்கான அதிகாரி என்னுடைய பொருளை அவரிடமிருந்து எனக்கு மீட்டுத் தந்துவிடுவார். ஆனால், இன்றோ நான் இன்னார், இன்னாரிடம் மட்டுமே கொடுக்கல் வாங்கல் செய்கிறேன்.

2115. மனிதர்கள் (பொதி சுமக்கும்) நூறு ஒட்டகங்கள் போன்றவர்கள். அவற்றில் பயணத்திற்குப் பயன்படும் ஒட்டகத்தை நீ காண்பது அரிது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

முகஸ்துதியும் விளம்பரமும்.

2116. ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார் : நான் நபி(ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் 'விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறவரை அல்லாஹ் (மறுமை நாளில்) அம்பலப்படுத்துவான்'' என்று கூறியதைக் கேட்டேன். அறிவிப்பாளர் ஸலமா இப்னு குஹைல்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : இந்த ஹதீஸை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜுன்துப்(ரலி) அவர்கள் தவிர வேறு யாரிடமும் நான் கேட்டதில்லை.

பணிவு.

2117. அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிற கையாக, அவன் நடக்கிற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எச்செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அல்லாஹ்வை தரிசிக்க விரும்புகிறவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான்.

2118. உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வை தரிசிக்க விரும்புகிறவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். அல்லாஹ்வை தரிசிப்பதை வெறுக்கிறவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்'' என்று கூறினார்கள். அப்போது 'ஆயிஷா(ரலி) அவர்கள்' அல்லது 'நபி(ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர்' 'நாங்கள் மரணத்தை வெறுக்கிறோம்'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் '(அல்லாஹ்வின் தரிசனம் என்பதற்குப் பொருள்) அதுவல்ல. மாறாக, இறைநம்பிக்கையாளருக்கு இறப்பு நேரம் வரும்போது, அவரைப் பற்றி அல்லாஹ் திருப்தி அடைந்திருப்பதாகவும் அவரைக் கௌரவிப்பதாகவும் அவருக்கு நற்செய்தி கூறப்படும். அப்போது இறப்புக்குப் பின்னால் உள்ள (மறுமை) வாழ்வைவிட விருப்பமானதாக வேறெதுவும் அவருக்கு இராது. எனவே, அவர் அல்லாஹ்வை தரிசிக்க விரும்புவார். அல்லாஹ்வும் அவரைச் சந்தி(த்து உபசரி)க்க விரும்புவான். இறைமறுப்பாளனுக்கு மரணவேளை வரும்போது, அல்லாஹ் வழங்கும் வேதனை குறித்தும் தண்டனை குறித்தும் அவனுக்கு அறிவிக்கப்படும். அப்போது மரணத்திற்குப் பின்னால் உள்ள (மறுமை) வாழ்வை விட வெறுப்பானதாக வேறெதுவும் அவனுக்கு இராது. எனவே, அவன் அல்லாஹ்வை தரிசிப்பதை வெறுப்பான்; அல்லாஹ்வும் அவனைச் சந்தி(த்து அருள் பாலி)ப்பதை வெறுப்பான்'' என்று (விளக்கம்) சொன்னார்கள். இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

மரணத்தின் வேதனைகள்.

2119. ஆயிஷா(ரலி) அறிவித்தார் : கடின சுபாவம் படைத்த கிராமவாசிகள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'மறுமை நாள் எப்போது?' என்று கேட்பார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவர்களிலேயே வயதில் சிறியவரான ஒருவரை நோக்கி 'இவர் உயிர் வாழ்ந்தால், இவரை முதுமை அடைவதற்கு முன்பே உங்களின் மீது மறுமை சம்பவித்து விடும்'' என்று கூறுவார்கள். இங்கு 'மறுமை' (ஸாஅத்) என்பது மரணத்தைக் குறிக்கும் என (அறிவிப்பாளர்) ஹிஷாம் இப்னு உர்வா(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

மறுமை நாளில் அல்லாஹ் பூமியைக் கைப்பற்றிக் கொள்வான்.

2120. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் 'மறுமை நாளில் இந்த பூமி (அடுப்பில் இருக்கும்) ஒரு ரொட்டியைப் போன்று (சமதளமாக) மாறிவிடும். பயணத்திலுள்ள உங்களில் ஒருவர் தம் ரொட்டியை (அடுப்பிலிருந்து எடுத்துக் கையில் வைத்து)ப் புரட்டுவதைப் போன்று, சர்வ வல்லமை படைத்த (இறை)வன் பூமியைத் தன்னுடைய கரத்தால் புரட்டிப்போடுவான். (அதையே) சொர்க்கவாசிகளுக்கு விருந்தாக்குவான்'' என்று கூறினார்கள். அப்போது யூதர்களில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'அபுல் காசிமே! அளவற்ற அருளாளன் உங்களுக்கு சுபிட்சம் அளிக்கட்டும். மறுமை நாளில் சொர்க்கவாசிகளின் விருந்துணவு என்னவென்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'சரி' என்றார்கள். அவர் நபி(ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே 'மறுமை நாளில் இந்த பூமி ஒரேயொரு ரொட்டியைப் போன்று இருக்கும்'' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களைக் கூர்ந்து பார்த்துவிட்டு, தம் கடைவாய்ப் பற்கள் தெரிய சிரித்தார்கள். பிறகு 'உங்களுக்கு சொர்க்கவாசிகளின் குழம்பு எது எனத் தெரிவிக்கட்டுமா?' என்று அந்த யூதர் கேட்டுவிட்டு அவர்களின் குழம்பு 'பாலாம்' மற்றும் 'நூன்' என்றார். மக்கள் 'இது என்ன?' என்று கேட்டார்கள். அந்த யூதர் '(அவை) காளைமாடும் மீனும் ஆகும். அந்த இரண்டின் ஈரல்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் தனித் துண்டை (மட்டுமே சொர்க்கவாசிகளில்) எழுபதாயிரம் பேர் புசிப்பார்கள்'' என்று கூறினார்.

2121. (உமியோ தவிடோ கலக்காத) சுத்தமான மாவினாலான ரொட்டியைப் போன்று தூய வெண்மையான (சம) தளத்தின் மீது மறுமை நாளில் மனிதர்கள் ஒன்று திரட்டப்படுவார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதன் அறிவிப்பாளரான ஸஹ்ல்(ரலி) அவர்கள், அல்லது மற்றொருவர் 'அந்த பூமியில் (மலை, மடுவு, காடு, வீடு என) எந்த அடையாளமும் யாருக்கும் இருக்காது'' என்று (கூடுதலாக) அறிவித்தார்கள்.

(மறுமையில் மக்கள்) ஒன்று திரட்டப்படுவது எப்படி?

2122. (மறுமை நாள் ஏற்படுவதற்கு சற்று முன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி) மக்கள் மூன்று பிரிவினராக ஒன்று திரட்டப்படுவார்கள். (அதில் முதல் பிரிவினர்) அச்சத்துடனும் ஆர்வத்துடனும் செல்வார்கள். (இரண்டாவது பிரிவினர்) (வாகனப் பற்றாக்குறையினால் தாமதித்துப் பின்னர்) ஒரே ஒட்டகத்தின் மீது இரண்டு பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது மூன்று பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது நான்கு பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது பத்துப் போராகச் செல்வார்கள். அவர்களில் எஞ்சியவர்(களே மூன்றாவது பிரிவினராவர். அவர்)களை (பூமியில் ஏற்படும் ஒரு பெரும்) தீ (விபத்து) ஒன்று திரட்டும். அவர்கள் மதிய ஓய்வெடுக்கும்போதும், இரவில் ஓய்வெடுக்கும் போதும், காலை நேரத்தை அடையும்போதும், மாலை நேரத்தை அடையும் போதும் (இப்படி எல்லா நேரங்களிலும்) அந்தத் தீ அவர்களுடனேயே இருக்கும்.

2123. ஆயிஷா(ரலி) அறிவித்தார் : ''நீங்கள் மறுமைநாளில் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்று திரட்டப் படுவீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நான் 'இறைத்தூதர் அவர்களே! (நிர்வாணமான) ஆண்களும் பெண்களும் சிலரை சிலர் பார்ப்பார்களே?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அந்த எண்ணம் அவர்களுக்கு ஏற்படாத அளவுக்கு (அங்குள்ள) நிலைமை மிகக் கடுமையானதாக இருக்கும்'' என்று கூறினார்கள்.

2124. மறுமைநாளில் மனிதர்களுக்கு (அவர்களின் தலைக்கருகில் நெருங்கி வரும் சூரியனால்) வியர்வை ஏற்படும். அவர்களின் வியர்வை தரையினுள் எழுபது முழம் வரை சென்று, (தரைக்கு மேல்) அவர்களின் வாயை அடைந்து, இறுதியில் அவர்களின் காதையும் அடையும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

மறுமைநாளில் பழிதீர்க்கப்படுதல்.

2125. மறுமை நாளில் மனிதர்களுக்கிடையே முதன் முதலில் தீர்ப்பளிக்கப்படுவது (உலகில் சிந்தப்பட்ட) இரத்தங்கள் (கொலைகள்) குறித்துதான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

2126. சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்கும், நரகவாசிகள் நரகத்திற்கும் சென்று சேர்ந்த பிறகு 'மரணம்' (ஓர் ஆட்டின் உருவத்தில்) கொண்டு வரப்பட்டு, சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே நிறுத்தப்படும். பின்னர் அது அறுக்கப்படும். பிறகு அறிவிப்பாளர் ஒருவர் 'சொர்க்கவாசிகளே! (இனி) மரணம் என்பதே கிடையாது. நரகவாசிகளே! (இனி) மரணம் என்பதே கிடையாது'' என அறிவிப்பார். அப்போது சொர்க்கவாசிகளுக்கு மகிழ்ச்சிக்கு மேல் மகிழ்ச்சி அதிகமாகும். நரகவாசிகளுக்குக் கவலைக்கு மேல் கவலை அதிகமாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

2128. (நரகத்தில்) இறைமறுப்பாளனின் இரண்டு தோள் புஜங்களுக்கிடையே உள்ள தூரம், துரிதமாகப் பயணிப்பவர் மூன்று நாள்கள் கடக்கும் தூரமாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

2129. சிலர் (நரக நெருப்பு தீண்டியதால்) தம் சருமத்தின் நிறம் மாறிய பின் நரகத்திலிருந்து வெளியேறி, சொர்க்கத்துக்குள் நுழைவார்கள். அவர்களை சொர்க்கவாசிகள் 'ஜஹன்னமியயூன்' (நரக விடுதலை பெற்றோர்) எனப் பெயரிட்டு அழைப்பார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

2130. மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிகவும் இலேசாக வேதனை செய்யப்படுபவர் ஒரு மனிதராவார். அவரின் உள்ளங்கால்களின் நடுவில் இரண்டு நெருப்புக் கங்குகள் வைக்கப்படும். (அடுப்பில் வைக்கப்பட்டுள்ள) செம்புப் பாத்திரம் (அல்லது) பன்னீர் பாத்திரம் கொதிப்பதைப் போன்று அவற்றால் அவரின் மூளை கொதிக்கும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹூரைரா(ரலி)அறிவித்தார்.

2131. (சொர்க்கவாசிகளில்) எவரும், (உலக வாழ்வில்) தாம் பாவம் புரிந்திருந்தால் நரகத்தில் தம் இருப்பிடம் எதுவாக இருந்திருக்கும் என்று காட்டப்படாமல் சொர்க்கத்தில் நுழையமாட்டார். அவர் அதிகமாக (மகிழ்ச்சியடைந்து இறைவனுக்கு) நன்றி செலுத்துவதற்காகவே (இவ்வாறு காட்டப்படும்). (நரகவாசிகளில்) எவரும், (உலக வாழ்வில்) தாம் நன்மை புரிந்திருந்தால் சொர்க்கத்தில் தம் இருப்பிடம் எதுவாக இருந்திருக்கும் என்று காட்டப்படாமல் நரகத்தில் நுழையமாட்டார். இது அவருக்கு (பெரும்) துயரமாக அமையவேண்டும் என்பதற்காகவே (காட்டப்படுகிறது.) என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

2132. (மறுமை நாளில் என்னுடைய 'அல்கவ்ஸர்' எனும்) தடாகம் உங்களுக்கு முன்னால் இருக்கும். (அதன் விசாலமானது, அன்றைய ஷாம் நாட்டின்) 'ஜர்பா' மற்றும் 'அத்ருஹ்' ஆகிய இடங்களுக்கிடையேயான தூரமாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

2133. ('அல்கவ்ஸர்' எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலை விட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியை விட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகிறார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

2134. என் தடாகத்தின் (பரப்பு) அளவு யமனிலுள்ள 'ஸன்ஆ' நகரத்திற்கும் (ஷாம் நாட்டை ஒட்டியிருந்த) 'அய்லா' நகரத்திற்கும் இடையேயான (தொலை தூரத்)தைப் போன்றதாகும். மேலும், அதில் விண்மீன்களின் எண்ணிக்கையைப் போன்று (கணக்கிடலங்கா) கோப்பைகள் (வைக்கப்பட்டு) இருக்கும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

2135. நான் உறங்கிக்கொண்டிருந்தேன். அப்போது (கனவில்) நான் (அல்கவ்ஸர் தடாகத்தினருகில்) நின்று கொண்டிருக்கிறேன். அப்போது ஒரு குழுவினரை நான் அடையாளம் கண்டுகொள்கிறேன். எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு(வான)வர் தோன்றி (அந்தக் குழுவினரை நோக்கி), 'வாருங்கள்' என்று அழைக்கிறார். உடனே நான் (அவரிடம் 'எங்கே (இவர்களை அழைக்கிறீர்கள்)?' என்றேன். அவர் 'அல்லாஹ்வின் மீதாணையாக! நரகத்திற்கு'' என்றார். நான் 'இவர்கள் என்ன செய்தார்கள்?' என்றேன். அவர் 'உங்களுக்குப் பின்னால் இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறிச் சென்றார்கள்'' என்றார். பிறகு மற்றொரு குழுவினரையும் நான் அடையாளம் கண்டு கொள்கிறேன். எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு (வான)வர் தோன்றி, 'வாருங்கள்' என (அவர்களிடம்) கூறுகிறார். நான் '(இவர்களை) எங்கே (அழைக்கிறீர்கள்)?' என்றேன். அவர் 'அல்லாஹ்வின் மீதாணையாக! நரகத்திற்குத்தான்'' என்றார். நான் 'இவர்கள் என்ன செய்தார்கள்?' என்று கேட்டேன். அவர் 'இவர்கள் உங்களுக்குப் பின்னால் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறிப் போய்விட்டார்கள்'' என்று பதிலளித்தார். அவர்களில் காணாமல் போன ஒட்டகத்தைப் போன்று ஒரு சிலரைத் தவிர வேறெவரும் தப்பித்துக் கொள்வார்கள் என நான் கருதவில்லை என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

2136. ஹாரிஸா இப்னு வஹ்ப்(ரலி) அறிவித்தார் : (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் ('அல்கவ்ஸர்') எனும் தடாகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது '(அதன் பரப்பளவானது,) மதீனாவுக்கும் (யமனிலுள்ள) 'ஸன்ஆ' நகரத்துக்கும் இடையேயான தூரமாகும்'' என்று கூறினார்கள்.

Wednesday 25 November 2009

[பாடம்-73] பிரார்த்தனைகள்.

ஒவ்வோர் இறைத் தூதருக்கும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பிரார்த்தனை உண்டு.

2069. ஒவ்வோர் இறைத்தூதருக்கும் அவர் (தம் சமுதாயத்தாருக்காகப்) பிரார்த்தித்துக் கொள்ள அங்கீகரிக்கப்பட்ட பிரார்த்தனை ஒன்று (வழங்கப்பட்டு) உள்ளது. நான் என்னுடைய பிரார்த்தனையை, மறுமையில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகப் பத்திரப்படுத்தவே விரும்புகிறேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாவமன்னிப்புக் கோரலில் சிறந்தது.

2070. ''அல்லாஹும்ம! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கல்க்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து. அபூ உ லக்க பி நிஅமத்திக்க அலய்ய, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த்த'' என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரலாகும். (பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை. நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்றவரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட் கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக்கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.) இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறப்பவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்து விடுகிறவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார் என ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவித்தார்.

பகலிலும் இரவிலும் நபி(ஸல்) அவர்கள் கேட்ட பாவமன்னிப்புக் கோரல் (உடைய அளவு).

2071. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : ''அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது முறைக்கு மேல் 'அஸ்தஃக் ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி' என்று கூறுகிறேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன். (பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்புகிறேன்.)

பாவத்தைக் கைவிட்டு இறைவன் பக்கம் திரும்புவதே (தவ்பா).

2072. ஹாரிஸ் இப்னு சுவைத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் எங்களுக்கு இரண்டு ஹதீஸ்களை அறிவித்தார்கள். அவற்றில் ஒன்றை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் குறிப்பிட்டார்கள். மற்றொன்றைக் தாமாகக் கூறினார்கள். (அவையாவன:) 1. இறைநம்பிக்கையாளர் தம் பாவங்களை மலைகளைப் போன்று (பாரமாகக்) கருதுவார். அவர் ஒரு மலை அடிவாரத்தில் உட்கார்ந்திருப்பதைப் போன்றும், அந்த மலைத் தம் மீது விழுந்துவிடுமோ என அஞ்சுபவரைப் போன்றும் அவர் இருப்பார். ஆனால், பாவியோ தன் பாவங்களைத் தன்னுடைய மூக்கின் மேல் பறந்து செல்லும் ஈயைப் போன்று (அற்பமாகக்) காண்பான் - இதைக் கூறியபோது இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் தங்களின் மூக்குக்கு மேலே (ஈயை) விரட்டுவது போன்று தம் கையால் சைகை செய்தார்கள். பிறகு அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் (பின்வருமாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனச்) சொன்னார்கள்: 2. ஒரு மனிதன் (பயணத்தினிடையே) ஓய்வெடுக்க ஓரிடத்தில் இறங்கினான். அந்த இடத்தில் அவனுக்கு (உணவோ தண்ணீரோ கிடைக்காது என்பதால்) ஆபத்து (காத்து) இருந்தது. அவனுடைய உணவும் பானமும் வைக்கப்பட்டிருந்த அவனுடைய வாகனப் பிராணியும் அவனுடன் இருந்தது. அப்போது அவன் தலையைக் கீழேவைத்து ஒரு (குட்டித்) தூக்கம் தூங்கி எழுந்தான். அப்போது அவனுடைய வாகனப் பிராணி (தப்பி ஒடிப்) போயிருந்தது. (எனவே அவன் அதைத் தேடிப் புறப்பட்டான்.) அப்போது அவனுக்குக் 'கடுமையான வெப்பமும் தாகமும்' அல்லது 'அல்லாஹ் நாடிய (கஷ்டம்) ஒன்று' ஏற்பட்டது. அவன், 'நான் முன்பிருந்த அதே இடத்திற்குத் திரும்பிச் செல்கிறேன்'' என்று கூறியவாறு (அங்கு) திரும்பிச் சென்றான். பிறகு ஒரு (குட்டித்) தூக்கம் தூங்கினான். பிறகு தன் தலையை உயர்த்தினான். அப்போது தப்பிப்போன தன்னுடைய பிராணி தன்னருகில் இருப்பதைக் கண்டான். (இப்போது அவன் எந்த அளவுக்கு மகிழ்வான்!) அந்த மனிதன் மகிழ்ச்சி அடைவதை விடத் தன் அடியான் தவ்பா - பாவமன்னிப்புக் கோரித் தன்னிடம் திரும்புவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்கிறான். இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

உறங்கச் செல்லும்போது ஓத வேண்டியது.

2073. ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது, 'பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா'' ( (இறைவா!) உன் பெயர் கூறியே இறக்கிறேன்; உயிர் வாழவும் செய்கிறேன்) என்று கூறுவார்கள். (உறக்கத்திலிருந்து) எழும்போது 'அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்'' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச் செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும், (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்லவேண்டியுள்ளது) என்று கூறுவார்கள்.

வலப் பக்கத்தில் சாய்ந்து உறங்குவது.

2074. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் படுக்கைக்குச் சென்றால், வலப் பக்கத்தில் சாய்ந்து உறங்குவார்கள். பிறகு, 'அல்லாஹும்ம அஸ்லமத்து நஃப்ª இலைக்க, வ வஜ்ஜஹ்த்து வஜ்ஹீ இலைக்க. வ ஃபவ்வள்த்து அம்ரீ இலைக்க. வ அல்ஜஃத்து ழஹ்ரி இலைக்க, ரஃக்பத்தன் வ ரஹ்பத்தன் இலைக்க. லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க்க இல்லா இலைக்க. ஆமன்த்து பி கித்தாபிக்கல்லதீ அன் ஸல்த்த. வபி நபிய்யிக்கல்லதீ அர்சல்த்த'' என்று ஓதுவார்கள். (பொருள்: இறைவா! உனக்கு நான் அடிபணிந்தேன். என்னுடைய முகத்தை உன்னை நோக்கித் திரும்பினேன். என்னுடைய காரியம் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்தேன். என் விவகாரங்கள் அனைத்திலும் உன்னையே சார்ந்திருக்கிறேன். உன் மீதுள்ள ஆவலாலும் (அதே நேரத்தில்) உன் மீதுள்ள அச்சத்தாலும் (இதை நான் செய்கிறேன்). உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடமில்லை. நீ அருளிய உன் வேதத்தையும், நீ அனுப்பிவைத்த உன் நபியையும் நான் நம்பினேன்) மேலும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'இவற்றைக் கூறிவிட்டு அன்னைறய இரவே இறந்து விடுகிறவர் (இஸ்லாம் எனும்) இயற்கை மரபில் இறந்தவராவார்'' என்று கூறினார்கள்.

இரவில் (இடையே) விழிக்கும்போது ஓத வேண்டியது.

2075. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் : நான் (என் சிறிய தாயாரும் நபியவர்களின் துணைவியாருமான) மைமூனா(ரலி) அவர்களிடம் (அவர்கள் இல்லத்தில்) இரவில் தங்கியிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் (இரவில்) எழுந்து தம் இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்றார்கள். (பிறகு வந்து) தம் முகத்தையும் கைகளையும் கழுவினார்கள். பிறகு உறங்கினார்கள். பின்னர் எழுந்து தண்ணீர் பையை நோக்கிச் சென்று அதன் (சுருக்கிக்) கயிற்றை அவிழ்த்தார்கள். பின்னர் (ஒன்றுக்கும்) அதிகமான முறைகள் உறுப்புகளைக் கழுவிடாமல், நடுநிலையாக அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். அதை நிறைவாகச் செய்தார்கள். பிறகு தொழுதார்கள். நானும் (மெல்ல) எழுந்தேன். நான் அவர்களை நோட்டமிட்டுக் கொண்டிருப்பதை அவர்கள் காண்பது எனக்கு விருப்பமில்லாததால் மெதுவாக எழுந்து அங்கசுத்தி செய்தேன். அப்போது அவர்கள் தொழுவதற்காக நின்றார்கள். நான் அவர்களின் இடப்பக்கத்தில் நின்றேன். உடனே அவர்கள் என் காதைப்பிடித்துச் சுற்றி அப்படியே என்னைத் தம் வலப் பக்கத்திற்குக் கொண்டு வந்தார்கள். பிறகு (தொழத் தொடங்கி) பதிமூன்று ரக்அத்களுடன் தம் தொழுகையை முடித்துக் கொண்டார்கள். பின்னர் குறட்டைவிட்டபடி உறங்கினார்கள். (பொதுவாக) அவர்கள் உறங்கும்போது குறட்டை விடுவார்கள். அப்போது அவர்களை பிலால்(ரலி) அவர்கள் தொழுகைக்காக அழைத்தார்கள். எனவே, அவர்கள் (எழுந்து புதிதாக) அங்கசுத்தி செய்யாமலேயே தொழுதார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் பிரார்த்தனையில் (பின்வருமாறு) கூறிக் கொண்டிருந்தார்கள். 'அல்லாஹும்மஜ்அல் ஃபீ கல்பீ நூரன். வ ஃபீ பஸரீ நூரன். வ ஃபீ ஸம்ஈ நூரன். வ அன் யமீனீ நூரன். வ அன் யஸாரீ நூரன். வ ஃபவ்க்கீ நூரன். வ தஹ்த்தீ நூரன். வ அமாமீ நூரன். வ கல்ஃபீ நூரன். வஜ்அல் லீ நூரன். (பொருள்: இறைவா! என் இதயத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் செவியிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் வலப் பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் இடப்பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு மேலேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு முன்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குப் பின்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு (எல்லாத் திசையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக.)(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) குறைப்(ரலி) கூறினார் : (உடல் எனும்) பேழையிலுள்ள வேறு ஏழு பொருட்களிலும் ஒளியை ஏற்படித்திடுமாறு நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அப்பாஸ்(ரலி) அவர்களின் புதல்வர்களில் ஒருவரைச் சந்தித்தபோது அவற்றை எனக்கு அன்னார் அறிவித்தார்கள். என் நரம்பிலும் என் சதையிலும் என் இரத்தத்திலும் என் ரோமத்திலும் என் சருமத்திலும் (ஒளியை ஏற்படுத்துவாயாக.) இவ்வாறு கூறிவிட்டு, மேலும் (மனம் மற்றும் நாவு ஆகிய) இரண்டையும் குறிப்பிட்டார்கள்.

2076. நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் கீழங்கியின் ஓரத்தால் விரிப்பைத் தட்டி விடுங்கள். ஏனெனில், அதில் என்ன (விஷ ஜந்து) ஒளிந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. பிறகு (பின்வருமாறு) பிரார்த்தியுங்கள்: பிஸ்மிக்க ரப்பீ வளஅத்து ஜன்பீ. வ பிக்க அர்ஃபஉஹு இன் அம்ஸக்த்த நஃப்ஸீ ஃபர்ஹம்ஹா வ இன் அர்ஸல்த் தஹா ஃபஹ்ஃபழ்ஹா பிமா தஹ்ஃபழு பிஹி இபாதக்கஸ் ஸாலிஹீன். (பொருள்: என் அதிபதியே! உன் பெயரால் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால், அதற்கு நீ கருணை புரிவாயாக. அதை நீ (கைப்பற்றாமல்) விட்டுவிட்டால், உன் நல்லடியார்களை எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக) என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த நபிமொழி வந்துள்ளது.

கேட்பதை வலியுறுத்திக் கேட்க வேண்டும். (இது, இறைவனை நிர்பந்திப்பதாகாது.) ஏனெனில், அவனை யாராலும் நிர்ப்பந்திக்க முடியாது.

2077. நீங்கள் இறைவா! நீ நினைத்தால் என்னை மன்னிப்பாயாக. இறைவா! நீ நினைத்தால் என் மீது அருள்புரிவாயாக'' என்று பிரார்த்திக்க வேண்டாம். மாறாக, கேட்பதை வலியுறுத்திக் கேளுங்கள். (இது, இறைவனைக் கட்டாயப்படுத்துவதாகாது.) ஏனெனில், அவனைக் கட்டாயப்படுத்துபவர் யாருமில்லை என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அவசரப்படாத வரையில் அடியானின் பிரார்த்தனை ஏற்கப்படும்.

2078. ''நான் பிரார்த்தித்தேன். ஆனால், என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை'' என்று கூறி நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

துன்பம் நேரும்போது பிரார்த்திப்பது.

2079. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் துன்பம் நேரும்போது 'லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வல்அர்ளி வ ரப்புல் அர்ஷில் அழீம்'' என்று பிரார்த்திப்பார்கள். (பொருள்: கண்ணியம் வாய்ந்தோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் மாபெரும் அரியாசனத்தின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.)

தாங்க முடியாத சோதனையிலிருந்து பாதுகாப்புக் கோருவது.

2080. அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தாங்கமுடியாத சோதனை, அழிவில் வீழ்வது, விதியின் கேடு, எதிரிகளால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோரிவந்தார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த அறிவிப்பில் மூன்று மட்டுமே உள்ளது. நான்தான் ஒன்றை அதிகபட்சமாக அறிவித்துள்ளேன். இவற்றில் அது எதுவென எனக்குத் தெரியவில்லை. (மறந்து விட்டேன்.)

''இறைவா என்னால் எவரேனும் மனவேதனை அடைந்திருந்தால் அதை அவருக்குப் பாவப் பரிகாரமாகவும் அருளாகவும் மாற்றிவிடுவாயாக'' என்று நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது.

2081. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! நான் எந்த இறைநம்பிக்கையாளரையாவது (கடிந்து கொண்டு) ஏசியிருந்தால், அதையே மறுமை நாளில் உன்னிடம் அவருக்கு நெருக்கத்தை ஏற்படுத்தும் அம்சமாக மாற்றி விடுவாயாக!'' என்று கூறியதை செவியுற்றேன். இதை ஸயீத் இப்னு முசய்யப்(ரஹ்) அறிவித்தார்.

மண்ணறையின் (கப்றின்) வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருதல்.

2082. முஸ்அப் இப்னு ஸஅத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : (என் தந்தை) ஸஅத் இப்னு அபீ வாக்காஸ்(ரலி) அவர்கள் ஐந்து விஷயங்களிலிருந்து பாதுகாப்புக் கோரும்படி கூறி நபி(ஸல்) அவர்கள் அந்த ஐந்து விஷயங்களையும் குறிப்பிட்டு அவற்றிலிருந்து பாதுகாப்புக் கோருமாறு கட்டளையிட்டுவந்தார்கள் என்று கூறுவார்கள். (அவை:) அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் புக்லி, வ அஊது பிக்க மினல் ஜுப்னி, வ அஊது பிக்க அக் உறத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வ அஊது பிக்க மின் அதாபில் கப்ற். (இறைவா! உன்னிடம் நான் கருமித்தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். கோழைத் தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். தள்ளாத வயதுக்கு நான் தள்ளப்படுவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக்கோருகிறேன். இம்மையின் சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், மண்ணறையின் வேதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்)'' இம்மையின் சோதனையென்பது தஜ்ஜாலின் சோதனையைக் குறிக்கிறது.

பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருதல்.

2083. ஆயிஷா(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக்க மினல் கஸலி வல்ஹரமி வல்மஃஸமி வல் மஃக்ரமி, வ மின் ஃபித்னத்தில் கப்றி வ அதாபில் கப்றி, வ மின் ஃபித்னத்திந் நாரி வஅதாபிந் நாரி, வ மின் ஷர்ரி ஃபித்னத்தில் ஃகினா. வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால், அல்லாஹும்மஃக்ஸில் அன்னீ கத்தாயாய பி மாயிஸ் ஸல்ஜி வல்பரத். வ நக்கி கல்பீ மினல் கத்தாயா கமா நக்கைத்தஸ் ஸவ்பல் அப்யள மினத் தனஸ். வ பாஇத் பைனீ வ பைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல் மஃக்ரிப்'' என்று பிரார்த்தித்து வந்தார்கள். (பொருள்: இறைவா! உன்னிடம் நான் சோம்பலிலிருந்தும், தள்ளாமையிலிருந்தும் பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும், மண்ணறையின் சோதனையிலிருந்தும், அதன் வேதனையிலிருந்தும், நரகத்தின் சோதனையிலிருந்தும், அதன் வேதனையிலிருந்தும், செல்வத்தின் தீமைகளிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், நான் உன்னிடம் வறுமையின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். (பெருங்குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளை என்னிலிருந்து கழுவுவாயாக! மேலும், அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப் படுத்துவதைப் போன்று தவறுகளிலிருந்து என் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ இடைவெளியை ஏற்படுத்துவாயாக)

எங்கள் இறைவா எங்களுக்கு இம்மையிலும் நன்மையருள்வாயாக எனப் பிரார்த்திப்பது.

2084. அனஸ்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் 'ரப்பனா ஆத்தினா ஃபித் துன்யா ஹஸனத்தன் வ ஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வக்கினா அதாபந் நார்'' என்றே அதிகமாகப் பிரார்த்தித்து வந்தார்கள். (பொருள்: எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் நன்மை அருள்வாயாக. மறுமையிலும் நன்மை அருள்வாயாக. நரகத்தின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக

''இறைவா! நான் முன்னால் செய்த பாவங்களையும், பின்னால் செய்த பாவங்களையும் மன்னித்திடுவாயாக!'' என்று நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது.

2085. அபூ மூஸா அல் அஷ்அரீ(ரஹ்) அவர்கள் கூறினார்: நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தித்து வந்தார்கள். அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ கத்தீஅத்தீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபீ ஃபீ அம்ரீ, வமா அன்த்த அஉலமு பிஹி மின்னீ, அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ ஹஸ்லீ, வ ஜித்தீ, வ கத்தயீ, வ அம்தீ, வ குல்லு தாலிக்க இந்தீ. (பொருள்: இறைவா! என் குற்றங்களையும் என் அறியாமையையும், என் செயல்களில் நான் மேற்கொண்ட விரயத்தையும், மேலும், என்னை விட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக! இறைவா! நான் விளையாட்டாகச் செய்ததையும், வினையாகச் செய்ததையும், தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றேச் செய்ததையும் மன்னித்திடுவாயாக! இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை.)

''லாயிலாஹ இல்லால்லாஹ்'' ('அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை' என்று) கூறுவதன் சிறப்பு.

2086. ''லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து. வஹ்வ அலா குல்லி ஷையின் கதீர் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கு புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றின் மீதும் வலிமையுள்ளவன்)'' என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமாமா(க நற்பலன் பெற்றுக்கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து (அவர் செய்த) நூறு தவறுகள் அழிக்கப்படும். மேலும், அந்த நாளின் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிலிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது அவருக்கு இருக்கும். மேலும், அவர் புரிந்த இந்த நற்செயலைவிடச் சிறந்ததை வேறு யாரும் செய்திட முடியாது. ஒருவர் இதைவிட அதிகமான (முறை இதை ஓதினால், அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

2087. அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அவர்கள் கூறியாதாவது: (மேற்கண்ட வாக்கியங்களை) பத்து முறை ஓதுகிறவர், இஸ்மாயீல்(அலை) அவர்களின் சந்ததியினரில் ஒருவரை விடுதலை செய்ததைப் போன்றவராவார். (என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்). (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உமர் இப்னு அபீ ஸாயிதா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இதே நபிமொழி இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. நான் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ரபீஉ இப்னு குஸைம்(ரஹ்) அவர்களிடம், 'இதை யாரிடமிருந்து தாங்கள் செவியுற்றீர்கள்?' என்று கேட்டேன். அதற்கவர்கள், 'அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அவர்களிடமிருந்து (இதைச் செவியுற்றேன்)'' என்றார்கள். எனவே, நான் அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அவர்களிடம் சென்று, 'இதை யாரிடமிருந்து தாங்கள் செவியுற்றீர்கள்?' என்று கேட்டேன். அதற்கவர்கள், 'இப்னு அபீ லைலா(ரஹ்) அவர்களிடமிருந்து (செவியுற்றேன்)'' என்றார்கள். எனவே, நான் இப்னு அபீ லைலா(ரஹ்) அவர்களிடம் சென்று, 'இதை யாரிடமிருந்து தாங்கள் செவியுற்றீர்கள்?' என்று கேட்டேன். அதற்கவர்கள், 'இதை நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக அபூ அய்யூப் அல்அன்சாரி(ரலி) அவர்களிடமிருந்து (செவியுற்றேன்)'' என்றார்கள். இன்னும் பல அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த நபிமொழி வந்துள்ளது. அபூ அய்யூப்(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், 'இஸ்மாயீல்(அலை) அவர்களின் சந்ததிகளில் ஓர் அடிமையை விடுதலை செய்தவரைப் போன்றவராவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என வந்துள்ளது.

'சுப்ஹானல்லாஹ்' ('அல்லாஹ் தூயவன்' என்று) கூறுவதன் சிறப்பு.

2088. 'சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி' (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டு விடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவதன் சிறப்பு.

2089. தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றுகிறவரின் நிலை உயிருள்ளவரின் நிலைக்கும், தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றாதவரின் நிலை உயிரற்றவரின் நிலைக்கு ஒத்திருக்கிறது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

2090. அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடியவண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக்கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால் 'உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள்'' என்று அவர்கள் (தம்மில்) ஒருவரை ஒருவர் அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகிறவர்களைத் தம் இறக்கைகளால் முதல் வானம்வரை சூழ்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வானவர்களிடம் அவர்களின் இறைவன் 'என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்?' என்று கேட்கிறான். அவ்வானவர்களை விட அவனே தம் அடியார்களை நன்கறிந்தவனாவன் என்று கூறி துதிக்கின்றனர். உன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டும், உன்னைப் புகழ்ந்து கொண்டும், உன்னைப் போற்றிக் கொண்டும் இருக்கின்றர்'' என்று வானவர்கள் கூறுகின்றனர். அதற்கு இறைவன், 'அவர்கள் என்னைப் பார்த்திருக்கிறார்களா?' என்று கேட்பான். அதற்கு வானவர்கள், 'இல்லை. உன் மீதாணையாக! அவர்கள் உன்னைப் பார்த்ததில்லை'' என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், 'என்னைப் பார்த்திருந்தால் எப்படியிருப்பார்கள்?' என்று கேட்பான். வானவர்கள், 'உன்னை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னை வழிபடுவார்கள்; இன்னும் கூடுதலாக உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிப்பார்கள்'' என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், 'என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகிறார்கள்?' என்று (தனக்குத் தெரியாதது போன்று) கேட்பான். வானவர்கள், 'அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கின்றனர்'' என்பார்கள். அதற்கு இறைவன், 'அவர்கள் அதைப் பார்த்ததுண்டா?' என்று கேட்பான். அதற்கு வானவர்கள், 'இல்லை. உன் மீதாணையாக! அதிபதியே! அவர்கள் அதனைப் பார்த்ததில்லை'' என்பர். அதற்கு இறைவன், 'அவ்வாறாயின் அதனை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?' என்று கேட்பான். வானவர்கள், 'சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதன் மீது ஆசைகொண்டு, அதிக வேட்கையுடன் தீவிரமாக அதைத் தேடுவார்கள்'' என்று பதிலளிப்பார்கள். இறைவன், 'அவர்கள் எதிலிருந்து (என்னிடம்) பாதுகாப்புக் கோருகின்றனர்?' என்று வினவுவான். வானவர்கள், 'நரகத்திலிருந்து (பாதுகாப்புக் கோருகின்றனர்)'' என்று பதிலளிப்பார். இறைவன், 'அதனை அவர்கள் பார்த்திருக்கிறார்களா?' என்று கேட்பான். வானவர்கள், 'இல்லை. உன் மீதாணையாக! அதனை அவர்கள் பார்த்தில்லை'' என்பர். அதற்கு இறைவன், 'அவ்வாறாயின் அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்கள் நிலை என்னவாக இருந்திருக்கும்?' என்று கேட்பான் வானவர்கள், 'நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் நிச்சயம் அதிலிருந்து கடுமையாக வெருண்டோடுபவர்களாகவும் அதனை மிகவும் அஞ்சுபவர்களாகவும் இருப்பார்கள்'' என்பர். அப்போது இறைவன், 'எனவே (வானவர்களே!) அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சிகளாக ஆக்குகிறேன்'' என்று கூறுவான். அந்த வானவர்களிடையே உள்ள ஒரு வானவர், '(அந்தக் குழுவினரிடையே அமர்ந்திருந்த) இன்ன மனிதன், உன்னைப் போற்றுகிற அவர்களில் உள்ளவன் அல்லன். அவன் ஏதோ தேவை நிமித்தமாகவே அங்கு வந்தான்'' என்பார். அதற்கு இறைவன், 'அவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்களுடன் வந்து அமர்ந்த ஒருவன் அவர்களால் (பாக்கியம் பெறுவானே தவிர,) பாக்கியமற்றவனாக ஆகமாட்டான்'' என்று கூறுவான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த நபிமொழி வந்துள்ளது.

Monday 23 November 2009

[பாடம்.-72] அனுமதி வேண்டுதல்.

சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கு (முதலில்) சலாம் சொல்வது.

2057. சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் (முகமன்) சொல்லட்டும் என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கு (முதலில்) சலாம் சொல்வது.

2058. வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் சொல்லட்டும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அறிமுகமானவருக்கு அறிமுகமில்லாதவருக்கும் சலாம் சொல்வது.

2059. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார் : ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், '(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் சலாம் சொல்வதுமாகும்'' என்று பதிலளித்தார்கள்.

(பார்க்கக் கூடாததைப்) பார்க்க நேரும் என்பதாலேயே (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கோருதல் (சட்டமாக்கப்பட்டது).

2060. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றினுள் ஒரு துவாரத்தின் வழியாக ஒருவர் எட்டிப்பார்த்தார். நபி(ஸல்) அவர்களுடன் ஈர்வலிச் சீப்பு ஒன்று இருந்தது. அதனால் தம் தலையை அவர்கள் கோதிக் கொண்டிருந்தார்கள். (அவர் எட்டிப் பார்த்ததைக் கண்ட) நபி(ஸல்) அவர்கள், 'நீ (துவாரத்தின் வழியாகப்) பார்க்கிறாய் என்பதை நான் (முன்பே) அறிந்திருந்தால் இந்தச் சீப்பினால் உன் கண்ணில் குத்தியிருப்பேன். (அடுத்தவர் வீட்டுப் பெண்களைப்) பார்க்க நேரிடும் என்பதற்காகவே அனுமதி கேட்பது சட்டமாக்கப்பட்டது'' என்றார்கள்.

மர்ம உறுப்பு அல்லாத (மற்ற) உறுப்புகளின் விபச்சாரம்.

2061. விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபச்சாரம் மட்டுமல்ல. கண்ணும் நாவும் கூட விபச்சாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது. இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது அல்லது பொய்யாக்குகிறது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

சிறுவர்களுக்கு சலாம் சொல்வது.

2062. ஸாபித் அல்புனானீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : (ஒரு முறை) அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்றபோது அவர்களுக்கு சலாம் சொன்னார்கள். மேலும், 'நபி(ஸல்) அவர்கள் இவ்வாறுதான் செய்து வந்தார்கள்'' என்று கூறினார்கள்.

(கதவைத் தட்டுபவரிடம் வீட்டுக்காரர்) 'யார் அது?' என்று கேட்க, அவர் 'நானே'' என்று கூறுவது.

2063. ஜாபிர்(ரலி) அறிவித்தார் : என் தந்தை (ஒரு யூதருக்குக்) கொடுக்க வேண்டியிருந்த ஒரு கடன் விஷயமாக நபி(ஸல்) அவர்களிடம் நான் சென்று கதவைத் தட்டினேன். அப்போது அவர்கள், 'யார் அது?' என்று கேட்டார்கள். அதற்கு நான், 'நான்தான்'' என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'நான் நான் என்றால்...?' என அதை விரும்பாதவர்களைப் போன்று கூறினார்கள்.

''இறைநம்பிக்கையாளர்களே! சபைகளில் 'நகர்ந்து இடம் கொடுங்கள்'' என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், நகர்ந்து இடம் கொடுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு இடம் கொடுப்பான். மேலும், (சபையிலிருந்து) கலைந்து சென்றுவிடுங்கள் என்று கூறப்பட்டால், அவ்வாறே கலைந்து விடுங்கள்' எனும் (திருக்குர்ஆன் 58:11 வது) இறைவசனம்.

2064. இப்னு உமர்(ரலி) கூறினார்: ஒருவர், அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பி விடப்பட்டு, அந்த இடத்தில் மற்றொருவர் அமர்வதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். இதற்கு மாறாக, 'நகர்ந்து உட்கார்ந்து மற்றவர்களுக்கும் இடம் கொடுங்கள்'' என்று கூறினார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறினார்:) ஒருவர் தம் இடத்திலிருந்து எழுந்து கொண்டு, அந்த இடத்தில் (மற்றவரை) உட்காரவைப்பதை இப்னு உமர்(ரலி) அவர்கள் வெறுத்தார்கள்.

முழங்காலில் கையைக் கட்டிக்கொண்டு குத்துக்காலிட்டு அமர்தல். இதுவே ('அல்இஹ்திபா' அல்லது) 'குர்ஃபுஸா' எனப்படும்).

2065. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் முற்றத்தில் தம் கையை (முழங்காலில்) கட்டிக்கொண்டு குத்துக்காலிட்டு இவ்வாறு அமர்ந்திருந்ததைக் கண்டேன்.

மூன்று பேரை விட அதிகமானோர் இருக்கும்போது (இருவர்) இரகசியம் பேசுவதும் உரையாடுவதும் தவறாகாது.

2066. நீங்கள் மூன்று பேர் இருக்கும்போது மூன்றாமவரை விட்டுவிட்டு இரண்டு பேர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம்; நீங்கள் மூவரும் மக்களுடன் கலக்கும் வரை! ஏனெனில், (அவ்வாறு மூன்று பேர் இருக்கும்போது இருவர் மட்டும் பேசுவது) மூன்றாமவரை வருத்தமடையச் செய்யும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

உறங்கச் செல்லும்போது வீட்டிலுள்ள (அடுப்பு மற்றும் விளக்கின்) நெருப்பை (அணைக்காமல்) விட்டுவிடலாகாது.

2067. அபூ மூஸா(ரலி) அறிவித்தார் : மதீனாவில் இரவு நேரத்தில் ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் வீட்டுக்காரர்களும் இருந்தனர். அவர்களின் நிலை குறித்து நபி(ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது 'நிச்சயமாக இந்த நெருப்பு உங்களுக்கு ஆபத்தானது ஆகும். எனவே, நீங்கள் உறங்கச் செல்லும்போது நெருப்பை அணைத்து விடுங்கள்'' என்றார்கள்.

கட்டடங்கள் தொடர்பாக வந்துள்ளவை.

2068. இப்னு உமர்(ரலி) அறிவித்தார் : நான் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மழையிலிருந்து என்னைக் காக்கின்ற, வெயிலிருந்து எனக்கு நிழல் தருகிற ஒரு வீட்டை நானே என் கரத்தால் கட்டியதை (இப்போதும்) நினைத்துப் பார்க்கிறேன். அந்த வீட்டைக் கட்ட அல்லாஹ்வின் படைப்புகளில் யாரும் எனக்கு உதவவில்லை.

Saturday 21 November 2009

[பாடம்-71] நற்பண்புகள்.

அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதை உள்ளவர் யார்?

2007. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்: இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்'' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்'' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். 'உன் தாய்'' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'பிறகு, உன் தந்தை'' என்றார்கள். இதே ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவரும் தம் பெற்றோரை ஏசக் கூடாது.

2008. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார் : ''ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது 'இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?' என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)'' என்றார்கள்.

உறவை முறிக்கும் பாவத்திற்கான தண்டனை.

2009. உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.

உறவைப் பேணி வாழ்பவருடன் அல்லாஹ்வும் உறவு பாராட்டுகிறான்.

2010. உறவு (ரஹிம்) என்பது, அளவிலா அருளாளன் (ரஹ்மான்) இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும். எனவே, இறைவன் (உறவை நோக்கி) 'உன்னோடு ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவு பாராட்டுவேன். உன்னை முறித்துக் கொள்பவனை நானும் முறித்துக் கொள்வேன்'' என்று கூறினான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

உறவைப் பசுமையாக்க வேண்டும்.

2011. அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அறிவித்தார் : இன்னாரின் தந்தையின் குடும்பத்தார் என் நேசர்கள் அல்லர்; என் நேசர்கள் யாரெனில், அல்லாஹ்வும் நல்ல இறை நம்பிக்கையாளர்களும் தாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் ஒளிவு மறைவின்றி பகிரங்கமாகவே கூறினார்கள். அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அவர்களின் வழியாக வரும் அன்பஸா இப்னு அப்தில் வாஹித்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், நபி(ஸல்) அவர்கள், 'ஆயினும் அவர்களுடன் எனக்கு இரத்த உறவு உண்டு. அதை நான் (காய்ந்து போகவிடாமல்) பசுமையாக்குவேன்'' என்று கூறினார்கள் என அதிகபட்சமாக இடம்பெற்றுள்ளது. அதாவது, 'அவர்களின் உறவைப் பேணி நடந்து கொள்வேன்'' என்றார்கள்.

பதிலுக்கு பதில் உறவு கொண்டாடுபவர் உறவைப் பேணுகிறவர் அல்லர்.

2012. பதிலுக்கு பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

(ஒருவர் தம்) குழந்தைகளின் மீது அன்பு காட்டுவதும் அவர்களை முத்தமிட்டு அணைத்துக் கொள்வதும்.

2010. ஆயிஷா(ரலி) அறிவித்தார் : ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை'' என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் உம்முடைய இதயத்திலிருந்து அன்பைக் கழற்றிவிட்ட பின்னர் உமக்காக நான் என்ன செய்ய முடியும்?' என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் கருணை அளவிடவியலாது.

2011. உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார் : (ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத் தேடினாள்). குழந்தை கிடைக்கவில்லை. எனவே), கைதிகளில் எந்தக் குழந்தையைக் கண்டாலும், அதை (வாரி) எடுத்து(ப் பாலூட்டினாள். தன் குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்து)த் தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது 'எங்களிடம் நபி(ஸல்) அவர்கள், 'இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள்!'' என்றார்கள். நாங்கள், 'இல்லை, எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது'' என்று சொன்னோம். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்களின் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்'' என்று கூறினார்கள்.

அல்லாஹ் தன் அன்பை நூறு பாகங்களாகப் பங்கிட்டான்.

2012. அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக்கொண்டான். (மீதிமிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன. எந்த அளவிற்கென்றால், மிதித்து விடுவோமோ என்ற அச்சத்தினால் குதிரை தன்னுடைய குட்டியை விட்டுக் கால்குளம்பைத் தூக்கிக் கொள்கிறது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

தொடையின் மீது சிறு குழந்தையை வைத்துக்கொள்வது.

2013. (நபி(ஸல்) அவர்களின் வளர்ப்புப் பேரரான) உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (சிறுவனாக இருந்த) என்னைப் பிடித்துத் தம் ஒரு தொடையின் மீதும் (தம் சொந்தப் பேரரான) ஹஸன் இப்னு அலீ(ரலி) அவர்களைப் பிடித்து தம் இன்னொரு தொடையின் மீதும் அமர்த்திக்கொண்டு பிறகு எங்கள் இருவரையும் கட்டியணைத்தவாறு, 'இறைவா! இவர்கள் இருவர் மீதும் நான் அன்பு செலுத்துகிறேன். நீயும் இவர்களின் மீது அன்பு செலுத்துவாயாக!'' என்றார்கள்.

மனிதர்களிடமும் மிருகங்களிடமும் அன்பு காட்டுவது.

2017. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : (ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையில் நின்றார்கள். அவர்களுடன் நாங்கள் நின்றோம். அப்போது தொழுகையில் ஈடுபட்டிருந்த ஒரு கிராமவாசி, 'இறைவா! எனக்கும் முஹம்மது அவர்களுக்கும் (மட்டும்) அருள் புரிவாயாக! எங்களுடன் வேறு யாருக்கும் அருள் புரியாதே!'' என்று பிரார்த்தித்தார். (தொழுது முடித்து) நபி(ஸல்) அவர்கள் சலாம் கொடுத்தபோது அந்தக் கிராமவாசியிடம், 'விசாலமானதை, அதாவது இறைவனின் அருளை நீ குறுக்கி விட்டாயே!'' என்று கூறினார்கள்.

2018. ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டு விடுகிறது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் இதை நுஅமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.

2019. ஒரு முஸ்லிம் மரம் ஒன்றை நட்டு அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது (மற்ற) உயிரினமோ உண்டால் (அதன் காரணத்தால்) ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்காமல் இருப்பதில்லை என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

2020. (படைப்பினங்களின் மீது) கருணை காட்டாதவர் (படைத்தவனால்) கருணை காட்டப்பட மாட்டார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

2021. அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டாருக்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அவனுடைய பாவத்தின் நிலை.

2022. அபூ ஷுரைஹ்(ரலி) அறிவித்தார் : ''அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்'' என்று (மூன்று முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'அவன் யார்? இறைத்தூதர் அவர்களே!'' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்'' என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் இன்னும் பல அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம்.

2023. அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நற்செயல்கள் அனைத்தும் தர்மமே.

2024. 'எல்லா நற்செயலும் தர்மமே' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

எல்லா விஷயங்களிலும் நளினத்தைக் கையாளுதல்.

2025. நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) கூறினார்: யூதர்களில் ஒரு குழுவினர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'அஸ்ஸாமு அலைக்கும்' (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி சலாம்) கூறினர். அவர்கள் கூறியதைப் புரிந்துகொண்ட நான் அவர்களுக்கு 'வ அலைக்கும் அஸ்ஸாமு வல்லஅனா (-அவ்வாறே உங்களின் மீது மரணமும் சாபமும் உண்டாகட்டும்)'' என்றேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'ஆயிஷா! நிதானம்! எல்லா விஷயங்களிலும் நளினத்தைக் கையாளுவதையே அல்லாஹ் விரும்புகிறான்'' என்று கூறினார்கள். அப்போது நான், 'இறைத்தூதர் அவர்களே! அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான்தான் 'வ அலைக்கும்' (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்லி விட்டேனே! (அதை நீ கவனிக்கவில்லையா?)'' என்று கேட்டார்கள்.

இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பது.

2026. (ஒரு சமயம்) நபி(ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் 'யாசித்தபடி' அல்லது 'ஒரு தேவை நிமித்தமாக' வந்தார். நபி(ஸல்) அவர்கள் எங்களை நோக்கி '(இவருக்காக என்னிடம்) பரிந்துரையுங்கள். அதனால் உங்களுக்கும் நற்பலன் அளிக்கப்படும். அல்லாஹ், தான் நாடியதை தன்னுடைய தூதரின் நாவினால் நிறைவேற்றுவானாக'' என்றார்கள் என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ அருவருப்பாகப் பேசும் பழக்கமுடையவராக இருக்கவில்லை.

2027. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் ஏசுபவராகவோ, கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ சாபமிடுபவராகவோ இருக்கவில்லை. எங்களில் ஒருவரைக் கண்டிக்கும்போது கூட 'அவருக்கென்ன நேர்ந்தது? அவரின் நெற்றி மண்ணில் படட்டும்'' என்றே கூறுவார்கள்.

நற்பண்பும், தயாளகுணமும், வெறுக்கப்பட்ட கருமித்தனமும்.

2028. முஹம்மத் இப்னு முன்கதிர்(ரஹ்) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்களிடம் எது கேட்கப்பட்டாலும் ஒருபோதும் அவர்கள் 'இல்லை' என்று சொன்னதில்லை என ஜாபிர்(ரலி) கூறக் கேட்டேன்.

2029. அனஸ்(ரலி) அறிவித்தார் : நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் சேவகம் புரிந்தேன். (மனம் வேதனைப்படும்படி) என்னை 'ச்சீ'' என்றோ, '(இதை) ஏன் செய்தாய்'' என்றோ, 'நீ (இப்படிச்) செய்திருக்கக் கூடாதா?' என்றோ அவர்கள் சொன்னதில்லை.

ஏசுவதற்கும் சபிப்பதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடை.

2030. ஒருவர் மற்றவரை 'பாவி' என்றோ, 'இறைமறுப்பாளன்' என்றோ அழைத்தால் அவர் (உண்மையில்) அவ்வாறு (பாவியாக, இறைமறுப்பாளனாக) இல்லையாயின் அவர் சொன்ன சொல் சொன்னவரை நோக்கியே திரும்பிவிடுகிறது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ தர்(ரலி) அறிவித்தார்.

2031. இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் மீது சத்தியம் செய்கிறவர், தாம் சொன்னதைப் போன்றே ஆகிவிடுகிறார். தனக்கு உடைமையில்லாத ஒன்றில் நேர்ச்சை செய்வது(ம், அந்த நேர்ச்சையை நிறைவேற்றுவதும்) எந்த மனிதனுக்கும் தகாது. எதன் மூலம் தம்மைத்தாமே தற்கொலை செய்துகொள்ளும் ஒருவர் அதன் மூலம் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார். ஓர் இறைநம்பிக்கையாளரை ஒருவர் சபிப்பது அவரைக் கொலை செய்வது போன்றதாகும். இறைநம்பிக்கையாளர் ஒருவரை இறைமறுப்பாளர் என்று அவதூறு சொல்வதும் அவரைக் கொலை செய்வது போன்றதேயாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் இதை அந்த மரத்தினடியில் (பைஅத்துர் ரிள்வான்) உறுதிமொழி அளித்தவர்களில் ஒருவரான ஸாபித் இப்னு ளஹ்ஹாக்(ரலி) அறிவித்தார்.

கோள் சொல்வது பெரும்பவாங்களில் ஒன்றாகும்.

2032. ஹம்மாம் இப்னு ஹாரிஸ்(ரஹ்) அறிவித்தார் : நாங்கள் ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்களிடம் '(இங்குள்ள) ஒருவர் (நமக்கிடையே நடக்கும்) உரையாடல்களை (கலீஃபா) உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களிடம் போய்ச் சொல்கிறார்'' என்று கூறப்பட்டது. அப்போது ஹுதைஃபா(ரலி) 'கோள் சொல்கிறவன் சொர்க்கம் செல்லமாட்டான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டுள்ளேன் என்று கூறினார்கள்.

(யாரையும் அளவு கடந்து) புகழ்வது வெறுக்கப்படட செயலாகும்.

2033. அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார் : ஒரு மனிதரைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் அருகில் பேசப்பட்டது. அப்போது ஒருவர் அவரைப் பற்றிப் புகழ்ந்துரைத்தார். உடனே நபி(ஸல்) அவர்கள், 'உனக்குக் கேடுதான். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீரே!'' என்று பல முறை கூறினார்கள். பிறகு, 'உங்களில் ஒருவர் (தம் சகோதரரைப்) புகழ்ந்தேயாக வேண்டும் என்றிருந்தால், '(அவர் குறித்து) நான் இன்னின்ன விதமாக எண்ணுகிறேன்' என்று (மட்டும்) அவர் கூறட்டும். அதுவும் அவர் அவ்வாறு இருப்பதாகச் கருதினால் மட்டுமே கூறட்டும். அல்லாஹ்வே அவரைக் குறித்து விசாரணை (செய்து முடிவு) செய்பவன் ஆவான். அல்லாஹ்வை முந்திக் கொண்டு யாரையும் தூய்மையானவர் என்று (யாரும்) கூற வேண்டாம். காலித் இப்னு மஹ்ரான்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், '(நபி(ஸல்) அவர்கள் தம் முன் புகழ்ந்தவரைப் பார்த்து) உனக்கு அழிவுதான்'' என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.

பொறாமையும் பிணக்கும் தடை செய்யப்பட்டவையாகும்.

2034. (ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகப்படுவது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது மிகப் பெரிய பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

2035. ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

அனுமதிக்கப்பட்ட சந்தேகம்.

2036. ஆயிஷா(ரலி) அறிவித்தார் : ''இன்னாரும் இன்னாரும் நம்முடைய மார்க்கத்தில் எதையும் அறிந்ததாக நான் கருதவில்லை'' என்று (இருவரைப் பற்றி) இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) லைஸ்(ரஹ்) கூறினார்: அவர்கள் இருவரும் நயவஞ்சகர்களாய் இருந்தனர். ஒருநாள் நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, 'ஆயிஷா! இன்னாரும் இன்னாரும் நாம் எந்த மார்க்கத்தில் இருக்கிறோமோ அதை அறிந்திருப்பவர்களாக நான் கருதவில்லை'' என்று கூறினார்கள்.

இறைநம்பிக்கையாளர் தாம் புரிந்துவிட்ட பாவங்களை (பகிரங்கப்படுத்தாமல்) மறைப்பது.

2037. என் சமுதாயத்தாரில் (பாவம் செய்த) அனைவரும் (இறைவனால்) மன்னிக்கப்படுவர்; (தம் பாவங்களைத்) தாமே பகிரங்கப்படுத்துகிறவர்களைத் தவிர ஒருவர் இரவில் ஒரு (பாவச்) செயல் புரிந்துவிட்டுப் பிறகு காலையானதும் அல்லாஹ் அவனுடைய பாவத்தை (பிறருக்குத் தெரியாமல்) மறைத்துவிட்டிருக்க, 'இன்னாரே! நேற்றிரவு நான் (பாவங்களில்) இன்னின்னதைச் செய்தேன்'' என்று அவனே கூறுவது பகிரங்கப்படுத்துவதில் அடங்கும். (அவன் செய்த பாவத்தை) இரவில் (பிறருக்குத் தெரியாமல்) இறைவன் மறைத்துவிட்டான். (ஆனால்,) இறைவன் மறைத்ததைக் காலையில் அந்த மனிதன் தானே வெளிச்சமாக்கி விடுகிறான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(மனஸ்தாபம் கொண்டு) பேசாமல் இருப்பதும், 'தம் சகோதரிடம் மூன்று நாள்களுக்கு மேல் ஒருவர் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று'

2038. ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.) ஸலாமை முதலில் தொடங்குகிறவர்தாம் இவர்கள் இருவரில் சிறந்தவராவார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ அய்யூப் அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்.

பொய் தடை செய்யப்பட்டிருப்பது.

2039. உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும், நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒருவர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் 'வாய்மையாளர்' (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்) ஆகிவிடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒருவர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் 'பெரும் பொய்யர்' எனப் பதிவு செய்யப்பட்டு விடுவார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார்.

மன வேதனையின்போது பொறுமை காப்பது.

2040. மன வேதனைக்குள்ளாக்கும் செய்தி கேட்டும் (உடனே தண்டித்து விடாமல்) மிகவும் பொறுமை காப்பவர் அல்லாஹ்வை விட வேறு 'யாருமில்லை' அல்லது 'ஏதுமில்லை' மனிதர்கள் (சிலர்) அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகின்றனர். (ஆனால் அவனோ அவர்களுக்கு உடல் நலத்தையும் உணவு வளத்தையும் வழங்கிக் கொண்டிருக்கிறான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

கோபத்தைத் தவிர்த்தல்.

2041. மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

2042. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'எனக்கு அறிவுரை கூறுங்கள்'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'கோபத்தைக் கைவிடு'' என்று (அறிவுரை) கூறினார்கள். அவர் (''அறிவுரை கூறுங்கள்'' எனப்) பல முறை கேட்டபோதும் நபி(ஸல்) அவர்கள் 'கோபத்தைக் கைவிடு'' என்றே சொன்னார்கள்.

நாணம்.

2043. அபுஸ் ஸவ்வார் அல்அதவீ(ரஹ்) அவர்கள் கூறினார்: இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அவர்கள், 'நாணம் நன்மையே தரும்'' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று கூறினார்கள். அப்போது புஷைர் இப்னு கஅப்(ரஹ்) அவர்கள், 'நாணத்தில் தான் கம்பீரம் உண்டு; நாணத்தில் தான் மன அமைதி உண்டு எனத் தத்துவ(ப் புத்தக)த்தில் எழுதப்பட்டுள்ளது'' என்று கூறினார். அப்போது அவரிடம் இம்ரான்(ரலி) அவர்கள் 'நான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (கூறியது) பற்றி உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் உங்கள் ஏட்டில் உள்ளவை குறித்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே! என்று கேட்டார்கள்.

நாணம் இல்லையேல் நாடியதைச் செய்து கொள்.

2044. மக்கள் முந்தைய இறைத்தூதர்களின் (முது) மொழிகளிலிருந்து அடைந்து கொண்ட ஒன்றுதான். 'உனக்கு நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்'' என்பதும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மஸ்ஊத் உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.

மக்களுடன் மலர்ச்சியாகப் பழகுவதும் குடும்பத்தாருடன் நயமாக நடந்து கொள்வதும்.

2045. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் எங்களுடன் (இனிமையாகப்) பழகுவார்கள். எந்த அளவிற்கென்றால், சிறுவனாக இருந்த என் தம்பியிடம் 'அபூ உமைரே! பாடும் உன்னுடைய சின்னக்குருவி (புள்புள்) என்ன ஆயிற்று?' என்று கூடக் கேட்பார்கள்.

இறை நம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்பட மாட்டார்.

2046. இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

கவிதை, யாப்பிலக்கணப் பாடல் (ரஜஸ்), ஒட்டகப் பாட்டு (ஹுதாஃ) ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டதும் வெறுக்கப் பட்டதும்.

2047. நிச்சயமாகக் கவிதையிலும் ஞானம் (ஹிக்மத்) உண்டு என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உபை இப்னு கஅப்(ரலி) அறிவித்தார்.

இறை தியானம், கல்வி, இறை வேதம் ஆகியவற்றிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் அளவுக்கு மனிதன் மீது கவிதையின் ஆக்கிரமிப்பு இருப்பது வெறுக்கப்பட்டதாகும்.

2048. உங்களில் ஒருவரின் வயிறு கவிதையால் நிரம்பியிருப்பத விடச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நேசிப்போருடன் மறுமையில்...

2049. அனஸ்(ரலி) அறிவித்தார்: கிராமவாசிகளில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! மறுமை நாள் எப்போது சம்பவிக்கும்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உனக்கென்ன கேடு! அதற்காக நீ என்ன முயற்சி செய்துள்ளாய்?' என்று கேட்டார்கள். அவர் 'நான் அதற்காக (ஏதும்) முன்முயற்சி செய்யவில்லை. ஆயினும், நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன்'' என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், '(அப்படியானால்,) நீ யாரை நேசிக்கிறாயோ அவர்களுடன் (மறுமையில்) இருப்பாய்!'' என்றார்கள். உடனே நாங்கள், 'நாங்களும் அவ்வாறுதானா?' என்று கேட்டோம். நபி(ஸல்) அவர்கள், 'ஆம்'' என்றார்கள். (இதைக் கேட்டு) அன்று நாங்கள் மிகவும் மகிழ்ந்தோம்.-அப்போது முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அவர்களின் அடிமை (எங்களைக்) கடந்து சென்றார்கள். அவர் என் வயதொத்த (சிறு)வராக இருந்தார். ''இவர் உயிர் வாழ்ந்தால், இவரை முதுமை அடைவதற்கு முன்பே மறுமை சம்பவிக்கும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அதாவது அவ்வளவு நெருக்கத்தில் மறுமை நாளை எதிர்பார்க்கலாம்.)இந்த ஹதீஸை ஷுஅபா(ரஹ்) அவர்கள் கத்தாதா(ரஹ்) அவர்கள் வழியாக அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து சுருக்கமாக அறிவித்தார்கள்.

(மறுமையில்) மனிதர்கள் தம் தந்தையர் பெயருடன் (இணைத்து) அழைக்கப்படுவர்.

2050. மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நட்டப்பட்டு 'இது இன்னாருடைய மகன் இன்னோரின் மோசடி (யைக் குறிக்கும் கொடி)'' என்று கூறப்படும் என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

''கண்ணியத்திற்குரியது ('அல்கர்ம்') இறைநம்பிக்கையாளரின் இதயமே'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியது.

2051. மக்கள் (திராட்சைப் பழத்திற்கு) 'அல்கர்ம்' (கண்ணியமானது) என்று சொல்கின்றனர். உண்மையில் இறைநம்பிக்கையாளரின் இதயமே 'அல்கர்ம்' (கண்ணியத்திற்குரியது) ஆகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஒரு பெயரை அதைவிடச் சிறந்த பெயராக மாற்றியமைப்பது.

2052. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : ஸைனப்(ரலி) அவர்களுக்கு (முதலில்) பர்ரா (நல்லவள்) என்ற பெயர் இருந்தது. அப்போது 'அவர் தம்மைத் தாமே பரிசுத்தப்படுத்திக் கொள்கிறார்'' என்று (மக்களால்) சொல்லப்பட்டது. எனவே, அவருக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'ஸைனப்' என்று பெயர் சூட்டினார்கள்.

நண்பரின் பெயரில் சில எழுத்துக்களைக் குறைத்து (சுருக்கமாக) அழைப்பது.

2053. அனஸ்(ரலி) அறிவித்தார் : (ஒரு பயணத்தில் என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்கள் பயணப் பொருட்களுடன் (அவற்றின் காவலராக) இருந்தார்கள். நபி(ஸல்) அவர்களின் அடிமையான 'அன்ஜஷா' (நபியவர்களுடைய) துணைவியரின் ஒட்டகங்களைப் பாட்டுப் பாடி ஓடச் செய்து கொண்டிருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அன்ஜஷ்! நிதானமாக ஓட்டிச் செல்! (ஒட்டகச் சிவிகைக்குள் இருக்கும்) கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்து விடாதே!'' என்றார்கள்.

அல்லாஹ்வின் கோபத்திற்குரிய பெயர்.

2054. மறுமை நாளில் அல்லாஹ்விடம் மிகவும் அருவருப்பான பெயர், (உலகில்) ஒருவர் தமக்கு 'மன்னாதி மன்னன்' (மலிக்குல் அம்லாக்) என்று பெயர் சூட்டிக் கொண்டதாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

தும்மியவர் 'அல்ஹம்துலில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்வது.

2055. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்களுக்கருகில் இரண்டு மனிதர்கள் தும்மினர். அப்போது அவர்களில் ஒருவருக்கு நபி(ஸல்) அவர்கள் ('யர்ஹமுகல்லாஹ் - அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக' என்று) மறுமொழி கூறினார்கள். மற்றொருவருக்கு மறுமொழி கூறவில்லை. அப்போது அவர்களிடம் (இது குறித்துக்) கேட்கப்பட்டது. அதற்கவர்கள், 'இவர் (தும்மியவுடன்) 'அல்ஹம்துலில்லாஹ்' என்று இறைவனைப் புகழ்ந்தார். அவர், 'அல்ஹம்துலில்லாஹ்' என்று இறைவனைப் புகழவில்லை. (எனவே, இவருக்கு மறுமொழி பகர்ந்தேன். அவருக்கு மறுமொழி பகரவில்லை)'' என்று பதிலளித்தார்கள்.

தும்மல் விரும்பத்தக்கது கொட்டாவி விரும்பத்தகாதது.

2056. அல்லாஹ் தும்மலை விரும்புகிறான்; கொட்டாவியை வெறுக்கிறான். எனவே, ஒருவர் தும்மியவுடன் 'அல்ஹம்துலில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால், அதைக் கேட்கும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அவருக்கு ('யர்ஹமுக்கல்லாஹ் - அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்' என்று) மறுமொழி கூறுவது அவசியமாகும். ஆனால், கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் கொட்டாவி விட்டால் முடிந்தவரை அதைக் கட்டுப்படுத்தட்டும். ஏனெனில், யாரேனும் (கட்டுப்படுத்தாமல்) 'ஹா' என்று (கொட்டாவியால்) சப்தமிட்டால் ஷைத்தான் சிரிக்கிறான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Thursday 19 November 2009

[பாடம்-70] ஆடை அணிகலன்கள்.

கணுக்கால்களுக்குக் கீழே தொங்கும் ஆடை நரகம் செல்லும்.

1984. கணுக்கால்களுக்குக் கீழே தொங்கும் (வகையில்) கீழங்கி(யை அணிகிறவர்) நரகத்தில் (புகுவார்) என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். கர்வத்தோடு தன்னுடைய கீழாடையை(த் தரையில் படும்படி) இழுத்துச் சென்றவனை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களுக்கு பிடித்த ஆடை.

1985. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் : அணிவதற்கு (பருத்தியாலான) யமன் நாட்டுச் சால்வையே நபி(ஸல்) அவர்களுக்கு மிகவும் பிரியமான ஆடையாக இருந்தது.

1986. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார்: ''இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்தபோது அவர்களின் உடல் (பருத்தியாலான) யமன் நாட்டுப் போர்வையால் போர்த்தி மூடப்பட்டது'' என்று நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்.

1987. அபூ தர்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் வெள்ளை ஆடை அணிந்தபடி உறங்கிக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். பிறகு அவர்கள் விழித்துக்கொண்டபோது (மீண்டும்) அவர்களிடம் சென்றேன். அப்போது, 'லா இலாஹ இல்லல்லாஹ்'' (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை) என்று சொல்லி, பிறகு அதே நம்பிக்கையில் இறந்துவிடும் மனிதர் எவராயினும், அவர் சொர்க்கம் புகுந்தே தீருவார்'' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான், 'அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலுமா?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்)'' என்றார்கள். நான் (மீண்டும்) 'அவர் விபச்சார புரிந்தாலும் திருடினாலுமா?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்)'' என்றார்கள். நான் (மூன்றாவது முறையாக) 'அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலுமா?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்). அபூ தர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! (அதாவது நீர் இதை விரும்பாவிட்டாலும் சரியே)'' என்று கூறினார்கள். அறிவிப்பாளர் அபுல் அஸ்வத் அத்துஅலீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அபூ தர்(ரலி) அவர்கள் இதை அறிவிக்கும்போது 'அபூ தர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வினாலும் சரியே'' என்று கூறி வந்தார்கள்.

ஆண்கள் பட்டாடை அணிவதும் பட்டில் பயன்படுத்த அனுமதிக்கப் பட்ட அளவும்.

1988. அபூ உஸ்மான் அந்நஹ்தீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்: நாங்கள் உத்பா இப்னு ஃபர்கத்(ரலி) அவர்களுடன் (ஈரானிலுள்ள) ஆதர்பைஜானில் இருந்தபோது எங்களிடம் உமர்(ரலி) அவர்களின் கடிதம் வந்தது. (அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பட்டு அணிவதை (ஆண்களுக்கு)த் தடை செய்தார்கள்; இந்த அளவைத் தவிர. (இதைக் கூறியபோது) பெருவிரலை அடுத்துள்ள (சுட்டுவிரல், நடுவிரல் ஆகிய) இரண்டு விரல்களால் நபி(ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள். அறிவிப்பாளர் அபூ உஸ்மான்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் அறிந்தவரை (அவர்கள் குறிப்பிட்ட 'இந்த அளவு' என்பது, ஆடைகளின் கரைகளில் செய்யப்படும்) வேலைப்பாட்டைக் குறிக்கிறது.

1989. அபூ உஸ்மான்(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : நாங்கள் உத்பா இப்னு ஃபர்கத்(ரலி) அவர்களுடன் (ஆதர்பைஜானில்) இருந்தோம். அப்போது அவர்களுக்கு உமர் (ரலி) அவர்கள் எழுதிய கடிதத்தில் (நபி(ஸல்) அவர்கள், 'இம்மையில் (ஆண்கள்) பட்டு அணிந்தால் மறுமையில் அதிலிருந்து சிறிதளவும் அணியவே முடியாது'' என்றார்கள் எனக் குறிப்பிடப் பட்டிருந்தது. மற்றோர் அறிவிப்பில், 'அபூ உஸ்மான்(ரஹ்) அவர்கள் தங்களின் சுட்டுவிரலாலும் நடுவிரலாலும் சைகை செய்தார்கள்'' என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

பட்டுத் துணியை விரிப்பாகப் பயன்படுத்துதல்.

1990. ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் பருக வேண்டாமென்றும், அவற்றில் உண்ண வேண்டாமென்றும், (ஆண்கள்) சாதாரண பட்டையும் அலங்கார பட்டையும் அணிய வேண்டாமென்றும், பட்டின் மீது அமர வேண்டாமென்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.

ஆண்கள் (தங்களின் மேனியில்) குங்குமப் பூச் சாயமிட்டுக் கொள்வது தடை செய்யப்பட்டதாகும்.

1991. அனஸ்(ரலி) அறிவித்தார்: ஆண்கள் (தங்களின் மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக் கொள்வதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

(முடி அகற்றப்பட்ட) தோல் காலணிகளும் மற்றவைகளும்.

1992. ஸயீத் அபூ மஸ்லமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்: நான் அனஸ்(ரலி) அவர்களிடம், 'நபி(ஸல்) அவர்கள் தம் காலணிகளுடன் தொழுது வந்தார்களா?' என்று கேட்டேன். அவர்கள், 'ஆம் (தொழுது வந்தார்கள்)'' என்றார்கள்.

முதலில் இடது கால் காலணியைக் கழற்ற வேண்டும்.

1993. நீங்கள் காலணி அணியும்போது முதலில் வலது காலில் அணியுங்கள்; அதைக் கழற்றும்போது முதலில் இடது காலில் இருந்து கழற்றுங்கள். வலது காலே அணிவதில் முதலாவதாகவும், கழற்றுவதில் இறுதியாகவும் இருக்கட்டும்! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஒரேயொரு காலணியில் நடக்கலாகாது.

1994. நீங்கள் ஒரேயொரு காலணியில் நடக்க வேண்டாம். ஒன்று, இரண்டு காலணிகளையும் ஒரு சேரக் கழற்றி விடுங்கள்; அல்லது இரண்டையும் ஒரு சேர அணிந்து கொள்ளுங்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹூரைரா (ரலி) அறிவித்தார்.

''என்னுடைய மோதிரத்தின் இலச்சினை போன்று வேறு யாரும் இலச்சினை பொறிக்க வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியது.

1995. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைச் செய்து, அதில் 'முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' (இறைத்தூதர் முஹம்மது) என்று இலச்சினை பொறித்தார்கள். மேலும், 'நான் வெள்ளி மோதிரம் ஒன்றைச் செய்து, அதில் 'முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' என இலச்சினை பொறித்துள்ளேன். எனவே, வேறு யாரும் அதைப் போன்று இலச்சினை பொறிக்க வேண்டாம்'' என்று கூறினார்கள்.

பெண்களைப் போன்று நடந்துகொள்பவர்(களான அலி)களை வீட்டிலிருந்து வெளியேற்றுதல்.

1996. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள். மேலும், 'அவர்க(ளில் அலிக)ளை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள்'' என்றார்கள். அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் இன்னாரை வெளியேற்றினார்கள். உமர்(ரலி) அவர்கள் இன்னாரை வெளியேற்றினார்கள்.

இணைவைப்போருக்கு மாறுசெய்தல்.

1997. இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள். தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இப்னு உமர்(ரலி) அவர்கள் ஹஜ் அல்லது உம்ராச் செய்தால் தம் தாடியைப் பிடிப்பதுப் பார்ப்பார்கள். (ஒரு பிடிக்கு) மேலதிகமாக உள்ளதை (கத்தரித்து) எடுத்து விடுவார்கள்.

(நரை முடிக்குச்) சாயமிடுதல்.

1998. யூதர்களும் கிறிஸ்தவர்களும் (முடிகளுக்குச்) சாயமிடுவதில்லை. எனவே, நீங்கள் (முடிகளுக்குச் சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் தலைமுடி.

1999. கத்தாதா(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (தலை) முடி பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (தலை) முடி அலையலையானதாக இருந்தது. படிந்த முடியாகவும் இல்லை. சுருள் முடியாகவும் இல்லை. அவர்களின் காது மடல்களுக்கும் அவர்களின் தோளுக்கும் இடையே தொங்கிக் கொண்டிருந்தது'' என்று பதிலளித்தார்கள்.

2000. அனஸ்(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் பருத்த கைகளும் பருத்த பாதங்களும் உடையவர்களாகவும், முகம் அழகானவர்களாகவும் இருந்தார்கள். நான் அவர்களுக்கு முன்போ அவர்களுக்குப் பின்போ அவர்களைப் போன்று (வேறு யாரையும்) பார்க்கவில்லை. அவர்களின் உள்ளங்கைகள் விசாலமானவையாக இருந்தன.

தலைமுடியில் சிறிதளவு மழித்துவிட்டு சிறிதளவு மழிக்காமல் விட்டுவிடுவது (குடுமி வைப்பது.)

2001. இப்னு உமர்(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதைத் தடை செய்தார்கள்.

தலைக்கும் தாடிக்கும் நறுமணம் பூசுவது.

2002. ஆயிஷா(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு, அவர்களிடம் இருந்தவற்றிலேயே நல்ல மணமுடைய வாசனைப் பொருளை நான் பூசிவந்தேன். எந்த அளவிற்கென்றால் அந்த நறுமணப் பொருளின் மினுமினுப்பை அவர்களின் தலையிலும் அவர்களின் தாடியிலும் என்னால் காணமுடிந்தது.

நறுமணப் பொருளை மறுக்காமல் ஏற்றுக் கொள்வது.

2003. ஸுமாமா இப்னு அப்தில்லாஹ் இப்னி அனஸ்(ரஹ்) அறிவித்தார்: அனஸ்(ரலி) (தமக்கு அன்பளிப்பாகத் தரப்படும்) நறுமணப் பொருளை மறுக்காமல் ஏற்றுக்கொள்வார்கள். மேலும், அவர்கள் 'நபி(ஸல்) அவர்கள் (தமக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்ட) நறுமணப் பொருளை மறுத்ததில்லை'' என்று கூறினார்கள்.

('தரீரா' எனும்) வாசனைத் தூள்.

2004. ஆயிஷா(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜத்துல் வதா) 'விடைபெறும்' ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியபோதும் இஹ்ராமிலிருந்து விடுபட்டபோதும் நான் என் இரண்டு கைகளால் அவர்களுக்கு ('தரீரா' எனும்) வாசனைத் தூளைப் பூசிவிட்டேன்.

உருவங்களைப் படைப்போருக்கு மறுமை நாளில் கிடைக்கும் வேதனை.

2005. இந்த உருவங்களைப் படைப்போர் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள். அவர்களிடம், 'நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் (பார்க்கலாம்)'' என (இடித்து)க் கூறப்படும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

உருவப் படங்களைச் சிதைத்தல்.

2006. அபூ ஸுர்ஆ இப்னு அம்ர் இப்னி ஜரீர்(ரஹ்) கூறினார்: நான் அபூ ஹுரைரா(ரலி) அவர்களுடன் மதீனாவில் ஒரு வீட்டினுள் நுழைந்தேன். அதன் மேல் தளத்தில் உருவப் படங்களை வரைவபவர் ஒருவர் உருவங்களை வரைந்து கொண்டிருந்தார். அப்போது அபூ ஹுரைரா(ரலி), 'என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனை விட அக்கிரமக்காரன் வேறு யார் இருக்கமுடியும்? அவர்கள் ஒரு தானிய விதையையாவது படைத்துக் காட்டட்டும். ஓர் அணுவையாவது படைத்துக் காட்டட்டும் என்று (அல்லாஹ் கூறுவதாக) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொல்ல கேட்டேன்'' என்றார்கள். பிறகு (அங்கசுத்தி செய்வதற்காகத்) தண்ணீருள்ள பாத்திரம் ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி தம் இருகைகளையும் அக்குள் வரை கழுவினார்கள். நான், 'அபூ ஹுரைரா அவர்களே! இது (அக்குள் வரை கையைக் கழுவுவது), அல்லாஹ்வின் தூதரிடமிருந்து நீங்கள் செவியுற்ற விஷயமா?' எனக் கேட்க, அவர்கள், '(அங்கசுத்தி செய்யப்படும் உடலுறுப்புகள் மறுமையில் வெண்மையாகும்போது அக்குள்வரை) வெண்மை பரவும்'' (என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்) என்றார்கள்.