Friday 11 December 2009

[பாடம்-81] இழப்பீடுகள்.

''யார் ஓர் இறைநம்பிக்கையாளரை வேண்டுமென்றே கொலை செய்கிறானோ அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும்'' எனும் (திருக்குர்ஆன் 04:93 வது) இறைவசனம்.

2168. புனிதம் வாய்ந்ததாகக் கருதப்படும் (மனித) உயிர் எதனையும் கொலை செய்யாமல் இருக்கும்வரை ஓர் இறைநம்பிக்கையாளர் தம் மார்க்கத்தின் தாராள குணத்தைக் கண்டவண்ணமிருப்பார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

2169. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் மிக்தாத்(ரலி) அவர்களிடம், 'இறைமறுப்பாளர்களான சமூகத்தாரிடையே தம் இறைநம்பிக்கையை (மனதிற்குள்) மறைத்து வைத்துக் கொண்டிருந்த ஒருவர் தம் இறைநம்பிக்கையை வெளிப்படுத்தும் தருவாயில் அவரை நீர் கொன்றுவிட்டீரே! அவ்வாறாயின், இதற்கு முன்னர் நீரும் இவ்வாறுதானே மக்காவில் உம்முடைய இறைநம்பிக்கையை (மனத்தில்) மறைத்து வைத்துக்கொண்டிருந்தீர்?' என்று கேட்டார்கள்.

2170. நமக்கெதிராக எவன் ஆயுதம் ஏந்துகிறானோ அவன் நம்மைச் சார்ந்தவனல்லன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ மூஸா(ரலி) அவர்களும் இதை அறிவித்தார்கள்.

''அவர்களுக்கு நாம் அ(ந்த வேதத்)தில், உயிருக்கு உயிர் கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாகப் பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம். எனினும், ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவரின் பாவங்களுக்குப் பரிகாரமாகும். யார் அல்லாஹ் அருளிய (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே!'' எனும் (திருக்குர்ஆன் 05:45 வது) இறைவசனம்.

2171. 'அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவருமில்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்' என உறுதி மொழி கூறிய முஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை. (அவை:) 1. ஒரு மனிதரைக் கொலை செய்ததற்கு பதிலாகக் கொலை செய்வது. 2. திருமணமானவன் விபசாரம் செய்வது. 3. 'ஜமாஅத்' எனும் சமூகக் கூட்டமைப்பைக் கைவிட்டு, மார்க்கத்திலிருந்தே வெளியேறி விடுவது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹூரைரா (ரலி) அறிவித்தார்.

நியாயமின்றி ஒரு மனிதனைக் கொலை செய்யத் தூண்டுவது.

2172. மனிதர்களிலேயே அல்லாஹ்வின் (கடுமையான) கோபத்திற்கு ஆளானோர் மூவர் ஆவர். 1. (மக்கா) புனித எல்லைக்குள் பெரும் பாவம் புரிகிறவன். 2. இஸ்லாத்தில் இருந்துகொண்டு அறியாமைக் காலக் கலாசாரத்தை விரும்புகிறவன். 3. ஒரு மனிதனின் இரத்தத்தைச் சிந்தச் செய்வதற்காக நியாயமின்றி அவனைக் கொலை செய்யத் தூண்டுகிறவன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் ஆட்சியாளரிடம் (வழக்கைக் கொண்டு) செல்லாமல் தம் உரிமையைத் தாமே மீட்டெடுப்பதும் (தம் உறவினருக்காகத்) தாமே பழிவாங்குவதும்.

2173. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் அனுமதியின்றி ஒருவர் உங்கள் வீட்டுக்குள் எட்டிப் பார்த்தபோது அவரின் மீது நீங்கள் சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரின் கண்ணைப் பறித்துவிட்டால் உங்களின் மீது எந்தக் குற்றமும் இல்லை. இதை அபூஹூரைரா(ரலி) அறிவித்தார்.

விரல்களுக்கான இழப்பீடுகள் (சமமானவையா? மாறுபட்டவையா?)

2174. இதோ இந்த மோதிர விரலும் கட்டை விரலும் (இழப்பீட்டில்) சமமானவையே என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

0 comments:

Post a Comment