Monday 8 June 2009

[பாடம்-8] தொழுகை.

மிஃராஜின்போது தொழுகை எவ்வாறு கடமையாக்கப்பட்டது?

228. 'நான் மக்காவில் இருந்தபோது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அது வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கி என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். அதை ஸம்ஸம் தண்ணீரால் கழுவினார்கள். பின்னர் ஈமான் எனும் இறைநம்பிக்கை மற்றும் ஞானத்தினால் நிரப்பப்பட்ட ஒரு தங்கத் தட்டைக் கொண்டு வந்து என்னுடைய நெஞ்சில் கொட்டிவிட்டு, அதை மூடி கையைப் பிடித்து முதல் வானத்திற்கு என்னை ஏற்றிச் சென்றார்கள். முதல் வானத்தை அடைந்ததும் அந்த வானத்தின் காவலரிடம் 'திற' என்றார்கள். அவ்வானவர், 'யார் அவர்?' என்று வினவியதற்கு 'நானே ஜிப்ரீல்' என்று பதில் கூறினார். அதற்கு அவ்வானவர், 'உம்முடன் எவரேனும் இருக்கிறார்களா?' எனக் கேட்டார். ஜிப்ரீல் ஆம்! என்னுடன் முஹம்மத் இருக்கிறார்கள்' என்று கூறினார்கள். அதற்கு வானவர் 'அவர் அழைக்கப்பட்டிருக்கிறாரா?' எனக் கேட்டார். ஜிப்ரீல் 'ஆம்' என்றார்கள். வானவர், முதல் வானத்தைத் திறந்ததும் நாங்கள் அவ்வானத்தில் ஏறினோம். அப்போது அங்கு ஒருவர் அமர்ந்திருந்தார். அவரின் வலப்பக்கம் சில மனிதர்களும் இடது மக்களும் சில மனிதர்களும் காணப்பட்டார்கள். அவர் தங்களின் வலப்பக்கமுள்ள மனிதர்களைப் பார்த்தால் சிரிக்கிறார். தங்களின் இடப்பக்கமுள்ளவர்களைப் பார்த்தால் அழுகிறார். இந்நிலையிலுள்ள அவர் 'நல்ல நபியே! வருக! நல்ல மகனே வருக!' என்றார். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் இவர் யார்? என கேட்டேன். 'இவர் தாம் ஆதம். அவரின் வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ளவர்கள் அவரின் சந்ததிகளிலுள்ள மனிதர்கள். வலப்பக்கமுள்ளவர்கள் சுவர்க்கவாசிகள்; இடப்பக்கமுள்ளவர்கள் நரகவாசிகள். (எனவேதான்) அவர் தங்களின் வலப்பக்கம் பார்த்துச் சிரிக்கிறார்; தங்களின் இடப்பக்கம் பார்த்து அழுகிறார்' என்று கூறினார்கள். பின்னர், ஜிப்ரீல்(அலை) என்னை இரண்டாவது வானத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த வானத்தில் காவலரிடம் 'திற' எனக் கூறினார். முதல் வானத்தின் காவலர் கேட்ட கேள்விகளைப் போன்றே இவரும் கேட்டுவிட்டுத் திறந்தார். இந்த ஹதீஸை அறிவிக்கும் அனஸ்(ரலி), 'வானங்களில் ஆதம், இத்ரீஸ், மூஸா, ஈஸா, இப்ராஹீம்(அலை) ஆகிய நபிமார்களைக் கண்டதாக நபி(ஸல்) குறிப்பிட்டார்கள். முதல் வானத்தில் ஆதம்(அலை) அவர்களையும் ஆறாவது வானத்தில் இப்ராஹீம்(அலை) அவர்களையும் கண்டதாகக் குறிப்பிட்டார்கள். மற்ற நபிமார்களைக் கண்ட இடத்தைக் கூறவில்லை' என்று கூறினார்.

'ஜிப்ரீல்(அலை) என்னை அழைத்துக்கொண்டு இத்ரீஸ்(அலை) பக்கமாகச் சென்றபோது 'நல்ல நபியே! வருக! நல்ல சகோதரரே வருக!' என இத்ரீஸ்(அலை) கூறியபோது இம்மனிதர் யார்? என நான் கேட்டதற்கு, 'இவர் இத்ரீஸ்(அலை)' என ஜிப்ரீல்(அலை) பதில் கூறினார்கள். பின்னர் மூஸா(அலை) பக்கமாக நான் சென்றபோது 'நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே வருக!' எனக் கூறினார்கள். இவர் யார்? என நான் கேட்டதற்கு, 'இவர்தான் மூஸா(அலை)' என ஜிப்ரீல் கூறினார்கள். பின்னர் ஈஸா(அலை) பக்கமாகச் சென்றபோது 'நல்ல நபியே! வருக! நல்ல சகோதரரே வருக!' எனக் கூறினார்கள். இவர் யார்? என நான் கேட்டதற்கு, 'இவர் ஈஸா(அலை)' என ஜிப்ரீல்(அலை) கூறினார்கள். பின் இப்ராஹீம்(அலை) பக்கமாக நான் சென்றபோது 'நல்ல நபியே வருக! நல்ல மகனே வருக!'' என்றார்கள். இவர் யார்? என ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் நான் கேட்டதற்கு, 'இவர் இப்ராஹீம்(அலை)' என்று கூறினார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) அபூ ஹப்பா அல் அன்ஸாரி(ரலி) ஆகியோர் அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், 'பின்னர் நான் மேலே கொண்டு செல்லப்பட்டேன். நான் ஏணியில் ஏறிச் சென்றபோது எழுது கோல்களால் எழுதும் சப்தத்தை செவியுற்றேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (தொடர்ந்து)''அல்லாஹ் என்னுடைய உம்மத்தின் மீது ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான். (அதை ஏற்று) திரும்பி வந்து கொண்டிருந்தபோது, மூஸா(அலை) அவர்களின் பக்கமாகச் நான் சென்றபோது 'உங்கள் சமுதாயத்திற்கு அல்லாஹ் எதைக் கடமையாக்கினான்?' என அவர்கள் கேட்டார்கள். ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான் என்றேன். 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு சக்தி பெறாது' என மூஸா(அலை) கூறினார்கள். நான் திரும்பச் சென்றபோது அதில் கொஞ்சத்தை அல்லாஹ் குறைத்தான். (அதை ஏற்றுக் கொண்டு) நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்து கொஞ்சம் குறைத்துள்ளான் என்றேன். 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு(ம்) சக்தி பெறாது' என்றார்கள். நான் திரும்பிச் சென்றேன். அதில் (இன்னும்) கொஞ்சம் குறைத்தான். நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்தேன். (இன்னும் கொஞ்சம் குறைத்தான் என்றேன்). 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்களின் சமூகம் அதற்கு சக்தி பெறாது' என்றார்கள். நாம் திரும்பச் சென்றபோது 'ஐந்து நேரத் தொழுகையைக் கடமையாக்குகிறேன். அது ஐம்பதிற்கு சமம்; என்னுடைய சொல்லில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை' என்று அல்லாஹ் கூறினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்தபோது 'உங்களுடைய இறைவனிடம் சென்று இதையும் குறைக்குமாறு கூறுங்கள்' என்றார்கள். இனிமேல் என்னுடைய இறைவனிடம் (குறைத்துக் கேட்பதற்கு) வெட்கப்படுகிறேன் என்று கூறினேன். பின்னர் ஜிப்ரீல்(அலை) என்னை 'ஸித்ரதுல் முன்தஹா' என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அதைப் பல வண்ணங்கள் சூழந்திருந்தன. அது என்ன என்பது எனக்குப் புலப்படவில்லை. பின்னர் சுவர்க்கத்தில் புகுத்தப்பட்டேன். அதில் முத்துக்களால் உள்ள கயிறுகளைப் பார்த்தேன். சுவர்க்கத்தின் மண் கஸ்தூரியாக இருந்தது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ தர்(ரலி) அறிவித்தார்.

229. 'அல்லாஹ் தொழுகையைக் கடமையாக்கியபோது ஊரிலிருந்தாலும் பயணத்திலிருந்தாலும் இரண்டிரண்டு ரக்அத்துகளாகக் கடமையாக்கினான், பயணத்தில் தொழுகை இரண்டு ரகஅத்தாகவே ஆக்கப்பட்டுப் பயணம் அல்லாத போதுள்ள தொழுகை அதிகரிக்கப்பட்டது'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ஒரே ஆடையை (உடலில்) சுற்றிக் கொண்டு தொழுதல்.

230. 'நபி(ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து, அதன் இரண்டு ஓரத்தையும் இரண்டு தோள்களின் மீது மாற்றிப் போட்டு தொழுதார்கள்'' என உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) அறிவித்தார்.

231. 'மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டு, நான் நபி(ஸல்) அவர்களிடம் நான் சென்றிருந்தபோது அவர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் மகள் ஃபாத்திமா(ரலி) நபி(ஸல்) அவர்களுக்குத் திரையிட்டார். நான் நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொன்னேன். அப்போது, 'யாரவர்?' எனக் கேட்டார்கள். 'நான் அபூ தாலிபின் மகள் உம்முஹானி' என்றேன். உடனே, 'உம்முஹானியே! வருக!' என்றார்கள். நபி(ஸல்) குளித்து முடித்த பின்னர் ஒரே ஆடையைச் சுற்றியவர்களாக எட்டு ரக்அத்துகள் தொழுதார்கள் என உம்முஹானி (ரலி) அறிவித்தார்.

232. நபி(ஸல்) குளித்து முடித்த பின்னர் ஒரே ஆடையைச் சுற்றியவர்களாக எட்டு ரக்அத்துகள் தொழுதார்கள். அவர்கள் தங்கள் தொழுகையை முடித்ததும் 'இறைத்தூதர் அவர்களே! என்னுடைய சகோதரர் நான் அடைக்கலம் அளித்திருக்கும் ஹுபைராவின் மகனைக் கொலை செய்ய எண்ணியுள்ளார்' என்று நான் கூறியபோது 'உம்மு ஹானியே! நீ அடைக்கலம் அளித்திருப்பவருக்கு நாங்களும் அடைக்கலம் அளிக்கிறோம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இச்சம்பவம் முற்பகலில் நடந்தது'' என உம்மு ஹானி(ரலி) அறிவித்தார்.

233. 'ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் ஒரே ஆடையை அணிந்து தொழுவதைப் பற்றிக் கேட்டதற்கு, 'உங்களில் ஒவ்வொருவருக்கும் இரண்டு ஆடைகள் இருக்கின்றனவா?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கேட்டார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஒரு ஆடை மட்டும் அணிந்து தொழும்போது அதைத் தோளின் மீது போட்டுக் கொள்ள வேண்டும்.

234. 'உங்களில் ஒருவர் தன்னுடைய தோளின் மீது எதுவும் இல்லாதிருக்க ஓர் ஆடையை மட்டும் அணிந்து தொழ வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

235. 'ஓர் ஆடையை மட்டும் அணிந்து தொழுபவர் அந்த ஆடையின் இரண்டு ஓரத்தையும் மாற்றி அணியட்டும்' (அதாவது வலப்புற ஓரத்தை இடது தோளிலும் அணியட்டும்)' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஆடை இறுக்கமாக இருந்தால் என்ன செய்வது?

236. 'நாங்கள் ஓர் ஆடை மட்டும் அணிந்து தொழுவது பற்றி ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு, 'நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றிருந்தேன். ஒரு நாள் இரவு என்னுடைய ஒரு வேலைக்காக நபி(ஸல்) அவர்களை நான் சந்தித்தபோது அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். என் மீது ஒரே ஓர் ஆடை மட்டுமே இருந்தது. அதை நான் சேர்த்து நெருக்கமாகச் சுற்றிக் கொண்டு நபி(ஸல்) அவர்களின் அருகில் நின்று தொழுதேன். அவர்கள் தொழுகையை முடித்ததும், 'ஜாபிரே! என்ன இரவு நேரத்தில் வந்திருக்கிறீர்?' என்று கேட்டார்கள். நான் வந்த நோக்கத்தை அவர்களிடம் சொன்னேன். சொல்லி முடித்ததும் 'இது என்ன? கை கால்கள் வெளியே தெரியாமல் (துணியால்) நெருக்கமாகச் சுற்றியிருப்பதைப் பார்க்கிறேன்' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் இது இறுக்கமான ஆடை என்று நான் கூறியதும் நபி(ஸல்) அவர்கள், 'ஆடை விசாலமானதாக இருந்தால் அதன் ஓர் ஓரத்தை வலது தோளிலும் மற்றொரு ஒரத்தை இடது தோளிலுமாக அணிந்து கொள்ளுங்கள். ஆடை சிறிதாக இருந்தால் அதை இடுப்பில் அணிந்து கொள்ளுங்கள்' என்றார்கள்' என்று ஜாபிர்(ரலி) விடையளித்தார்கள்'' என ஸயீத் இப்னு அல்ஹாரிஸ் அறிவித்தார்.

237. 'சில ஆண்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் சிறுவர்களைப் போன்று தங்களின் (சிறிய) வேஷ்டியை தங்களின் கழுத்திலிருந்தே கட்டியிருந்தனர். (இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் ஆண்களின் பின்னால் தொழுது கொண்டிருந்த) பெண்களிடம், 'ஆண்கள் ஸுஜுதிலிருந்து எழுந்து அமரும்வரை நீங்கள் உங்களுடைய தலைகளை ஸுஜுதிலிருந்து உயர்த்த வேண்டாம்' என்று கூறினார்கள்'' என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

ஷாம் (சிரியா) நாட்டுக் குளிர் ஆடையை அணிந்து தொழுதல்.

238. 'நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றபோது, 'முகீராவே! தண்ணீர்ப் பாத்திரத்தை எடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் அதை எடுத்துக் கொண்டேன். நபி(ஸல்) அவர்கள் நடந்து சென்று என் கண்ணுக்குத் தெரியாத மறைவான இடத்திற்குச் சென்று அவர்களின் இயற்கைத் தேவையை நிறைவேற்றினார்கள். அப்போது அவர்கள் ஷாம் (சிரியா) நாட்டுக் குளிர் ஆடையை அணிந்திருந்தார்கள். உளூச் செய்வதற்காக அதிலிருந்து தங்களின் கையை வெளியே எடுக்க முயன்றார்கள். அதன் கை இறுக்கமாக இருந்ததால் தங்களின் கையை அந்த ஆடையின் கீழ்ப்புறமாக வெளியே எடுத்தார்கள். நான் அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தொழுகைக்குரிய உளூவைச் செய்தார்கள். தங்களின் இரண்டு காலுறைகளின் மீதும் (அவற்றைக் கழுவாமல்) ஈரக்கையால் மஸஹ் செய்து (தடவி) தொழுதார்கள்'' என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.

தொழுகையின் போதும் மற்ற நேரங்களிலும் நிர்வாணமாக இருக்கக் கூடாது.

239. 'நபி(ஸல்) அவர்கள், (சிறு வயதில்) கஅபதுல்லாஹ்வின் கட்டுமானப் பணி நடந்தபோது அதைக் கட்டுபவர்களோடு கற்களை எடுத்துச் சென்றார்கள். அப்போது அவர்கள் ஒரு வேஷ்டி அணிந்திருந்தார்கள். நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் 'என் சகோதரனின் மகனே! உன் வேஷ்டியை அவிழ்த்து அதை உன் தோளின் மீது வைத்து அதன் மேல் கல்லை எடுத்துச் சுமந்து வரலாமே' என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அவ்வாறே நபி(ஸல்) வேஷ்டியை அவிழ்த்து அதைத் தங்களுடைய தோளின் மீது வைத்தார்கள். வைத்ததும் அவர்கள் மயக்கமுற்றுக் கீழே விழுந்தார்கள். அதற்கு பின்னர் நபி(ஸல்) அவர்கள் நிர்வாணமாக ஒருபோதும் காட்சியளிக்கவில்லை'' என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

அவசியம் மறைக்க வேண்டிய பகுதிகள்.

240. 'கையை வெளியே எடுக்க இயலாத அளவுக்கு இறுககமாக ஆடையைச் சுற்றிக் கொள்வதையும் ஒரே ஆடையை அணிந்திருக்கும்போது, மர்மஸ்தானம் தெரியும்படியாக இரண்டு முழங்கால்களையும் நாட்டி வைத்து உட்காருவதையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்'' என அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவித்தார்.

241. 'முனாபதா' 'முலாமஸா' எனும் இருவகை வியாபாரங்களையும், கையை வெளியே எடுக்க இயலாத அளவுக்கு இறுக்கமாக ஆடையைச் சுற்றிக் கொள்வதையும், ஒரே ஆடையை அணிந்திருக்கும்போது, இரண்டு முட்டுக் கால்களையும் நாட்டி வைத்து உட்காருவதையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(குறிப்பு: 'முனாபதா' குறிப்பிட்ட ஒரு பொருளை எடுத்து எறியும்போது அது எந்தப் பொருளின் மீது படுகிறதோ அந்தப் பொருளை இவ்வளவு விலைக்குத் தருகிறேன் என்று கூறி விற்பதைக் குறிக்கும்.'முலாமஸா' குவிக்கப்பட்ட பொருட்களைப் பிரித்துப் பார்க்கவிடாமல் அதைத் தொட்டுப் பார்க்க மட்டுமே அனுமதித்து விற்பதைக் குறிக்கும்.)

242. 'ஹஜ்ஜத்துல் வதா'விற்கு முந்திய ஆண்டு அபூ பக்ர்(ரலி) (அவர்களின் தலைமையில் நான் ஹஜ்ஜுக்குச் சென்றபோது) என்னை அறிவிப்புச் செய்பவர்களுடன் துல்ஹஜ் மாதம் பத்தாம் நாள் அனுப்பி வைத்தார்கள். நாங்கள் மினாவில் நின்று, 'அறிந்து கொள்ளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு எந்த முஷ்ரிக்கும் ஹஜ் செய்யக் கூடாது. நிர்வாணமாக யாரும் கஅபாவை வலம் வரக்கூடாது' என்று அறிவித்தோம். பின்னர் நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களை அனுப்பி, திருக்குர்ஆனின் 9-வது அத்தியாயத்தில் ஒப்பந்த முறிவு பற்றிக் கூறப்படும் (முதல் இருபது வசனங்கள்) விஷயத்தை அறிவிக்குமாறு கட்டளையிட்டார்கள். எங்களுடன் அலீ(ரலி) அவர்களும் துல்ஹஜ் மாதம் பத்தாவது நாள் மினாவில் நின்று 'இந்த ஆண்டிற்குப் பிறகு இணைவைப்பாளர் எவரும் ஹஜ் செய்யக்கூடாது; கஅபாவை எவரும் நிர்வாணமாக வலம் வரக் கூடாது' என்று அறிவித்தார்கள்'' அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.

தொடை மறைக்க வேண்டிய பகுதியா?

243. 'நபி(ஸல்) அவர்கள் கைபர் போருக்கு ஆயத்தமானார்கள். அங்கே நாங்கள் அதிகாலைத் தொழுகையை அதிகாலையின் வெண்மை தெரியும் முன்னர் தொழுதோம். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் ஏறினார்கள். அபூ தல்ஹா(ரலி) அவர்களும் ஏறினார். அவர்களுக்குப் பின்னால் நான் ஏறி அமர்ந்தேன். நபி(ஸல்) அவர்கள் கைபர் கணவாயினுள் சென்றார்கள். என்னுடைய மூட்டு நபி(ஸல்) அவர்களின் தொடையைத் தொட்டது. பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் தொடையிலிருந்த வேஷ்டியை நீக்கினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் தொடையின் வெண்மையை பார்த்தேன். நபி(ஸல்) அவர்கள் ஊருக்குள்ளே நுழைந்தபோது 'அல்லாஹ் பெரியவன்! கைபர் வீழ்ந்துவிட்டது! நிச்சயமாக நாம் ஒரு (எதிரிக்) கூட்டத்திடம் பகைமையுடன் இறங்கினால் எச்சரிக்கப்பட்ட அம்மக்களின் காலை நேரம் மோசமானதாகிவிடும்' என்று மும்முறை கூறினார்கள். அவ்வூர் மக்கள் தங்களின் வேலைகளுக்காக வெளியே வந்தபோது நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், 'முஹம்மதும் அவரின் பட்டாளமும் வந்துள்ளார்கள்' என்று (பதட்டமாகக்) கூறினார்கள். நாங்கள் கைபரைப் பலவந்தமாகக் கைப்பற்றினோம். போர்க் கைதிகளெல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டபோது 'திஹ்யா' என்ற நபித்தோழர் வந்து 'இறைத்தூதா அவர்களே! கைதிகளிலுள்ள ஒரு பெண்ணை எனக்குக் கொடுங்கள்' என்று கேட்டார். 'நீர் போய் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் சென்று ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! 'குறைளா' மற்றும் 'நளீர்' என்ற குலத்தின் தலைவி ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணையா திஹ்யாவிற்குக் கொடுத்துள்ளீர்கள். அந்தப் பெண் தங்களுக்கே தகுதியானவள்' என்றார். அப்போது 'அப்பெண்ணையும் திஹ்யாவையும் அழைத்து வாரும்' என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள். அப்பெண் அழைத்து வரப்பட்டார். அப்பெண் வந்ததும் 'நீ கைதிகளிலிருந்து வேறொரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்' என்ற திஹ்யாவிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அப்பெண்ணை விடுதலை செய்து பின்னர் அவரைத் திருமணம் செய்தார்கள்.

இந்த ஹதீஸை அறிவிக்கிற அனஸ்(ரலி) அவர்களிடம் ஸாபித் என்ற தோழர், 'அபூ ஹம்சாவே நபி(ஸல்) அப்பெண்ணுக்கு எவ்வளவு மஹர் கொடுத்தார்கள்?' என்று கேட்டதற்கு 'அவரையே மஹராகக் கொடுத்தார்கள்; அதாவது அவரை விடுதலை செய்து பின்னர் மணந்தார்கள்' எனக் கூறினார்.

நாங்கள் (கைபரிலிருந்து) திரும்பி வரும் வழியில் 'ஸஃபிய்யா' அவர்களை உம்மு ஸுலைம்(ரலி) மணப்பெண்ணாக ஆயத்தப்படுத்தி நபி(ஸல்) அவர்களிடம் இரவில் ஒப்படைத்தார். மறுநாள் காலை நபி(ஸல்) அவர்கள் புது மாப்பிள்ளையாகத் தோன்றினார்கள். அப்போது நபி(ஸல்) ஒரு விரிப்பை விரித்து 'உங்களில் யாரிடமாவது ஏதாவது (சாப்பிடுகிற) பொருள்கள் இருந்தால் கொண்டு வந்து இதில் போடுங்கள்' என்று கூறினார்கள். உடனே ஒருவர் பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார். வேறு ஒருவர் நெய்யைக் கொண்டு வந்தார். ஒருவர் மாவைக் கொண்டு வந்தார். (இப்படி எல்லோரும் கொண்டு வந்த) அவற்றையெல்லாம் சேர்த்து ஒன்றாகக் கலந்தார்கள். அது நபி(ஸல்) அவர்களின் 'வலீமா' எனும் மணவிருந்தாக அமைந்தது'' என அனஸ்(ரலி) அறிவித்தார்.

ஒரு பெண் எத்தனை ஆடைகளை அணிந்தவளாகத் தொழவேண்டும்.

''அவளுடைய உடல் முழுவதையும் மறைக்கும் விதத்தில் ஒரே ஆடையை அணிந்தாலும் அது அவளுக்குப் போதுமானதாகும்'' என இக்ரிமா கூறினார்.

244. 'நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையைத் தொழுவார்கள். இறைநம்பிக்கையுள்ள பெண்கள் ஆடைகளால் தங்களின் உடல் முழுவதையும் சுற்றி மறைத்தவர்களாக அவர்களுடன் தொழுவார்கள். பின்னர் தங்களின் வீடுகளுக்குச் செல்வார்கள். அவர்கள் யார் யார் என்பதை (வெளிச்சமின்மையால்) யாரும் அறியமாட்டார்கள்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

வண்ணங்களுள்ள ஓர் ஆடையை அணிந்து தொழும்போது அந்த வண்ணங்கள் பார்வையை ஈர்த்தால் என்ன செய்வது?

245. 'நபி(ஸல்) அவர்கள் பல வண்ணங்கள் உள்ள ஓர் ஆடையை அணிந்து தொழுதபோது அந்த வண்ணங்களின் பக்கம் பார்வையைச் செலுத்தினார்கள். அவர்கள் தொழுகையை முடித்ததும், 'என்னுடைய இந்த ஆடையை எடுத்துச் சென்று அபூ ஜஹ்மிடம் கொடுத்துவிட்டு, அவரின் (வண்ணங்கள் இல்லாத) ஆடையைக் கொண்டு வாருங்கள். இந்த ஆடை சிறிது நேரத்திற்கு முன்னர் என்னுடைய தொழுகையைவிட்டு என் கவனத்தைத் திருப்பிவிட்டது' என்று கூறினார்கள்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார். மற்றோர் அறிவிப்பின்படி, 'நான் தொழுகையில் நிற்கும்போது அந்த ஆடையின் வண்ணங்களைப் பார்ப்பதால் அது என்னைக் குழப்பி விடுமோ என அஞ்சினேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று உள்ளது.

சிலுவையோ உருவப்படங்களோ பொறிக்கப்பட்ட துணியில் தொழுதால் தொழுகை பாழாகி விடுமா? அதிலிருந்து தடுக்கப்பட்டது எது?

246. 'ஆயிஷா(ரலி) அவர்களிடம் (உருவப் படங்கள் நிறைந்த) ஒரு திரை இருந்தது. அதனால் தங்களின் வீட்டின் ஓர் ஓரத்தை மறைத்திருந்தார்கள். இதைக் கண்ட நபி(ஸல்) ஆயிஷா(ரலி) அவர்களிடம் 'உன்னுடைய இந்தத் திரையை நம்மை விட்டும் அகற்றி விடு. அதிலுள்ள படங்கள் நான் தொழுது கொண்டிருக்கும்போது (என் எண்ணத்தில்) குறுக்கிடுகின்றன' என்று கூறினார்கள்'' என அனஸ்(ரலி) அறிவித்தார்.

பட்டினால் நெய்யப்பட்ட மேல் அங்கியை அணிந்து தொழுதுவிட்டுப் பின்னர் அதைக் கழற்றி விடுதல்.

247. 'நபி(ஸல்) அவர்களுக்குப் பட்டினாலான மேல் அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதை அவர்கள் அணிந்து தொழுதார்கள். தொழுகையை முடித்த பின்னர் அந்த அங்கியில் வெறுப்புற்றவர்களைப் போன்று வேகமாக அதைக் கழற்றி எறிந்துவிட்டுப் 'பயபக்தியுடையவர்களுக்கு இந்த ஆடை உகந்ததன்று' என்று கூறினார்கள்'' என உக்பா இப்னு ஆமிர்(ரலி) கூறினார்.

சிவப்பு நிற ஆடையுடன் தொழுதல்.

248. 'தோலினால் செய்யப்பட்ட சிவப்பு நிற மேலங்கியை நபி(ஸல்) அவர்கள் அணிந்திருக்கப் பார்த்தேன். மேலும் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்த தண்ணீரை பிலால்(ரலி) எடுத்துச் செல்வதையும் அந்தத் தண்ணீரை எடுப்பதில் மனிதர்கள் போட்டி போட்டுக் கொள்வதையும் கண்டேன். அந்தத் தண்ணீரைப் பெற்றவர் அதைத் தங்களின் உடம்பில் தடவினார். அந்தத் தண்ணீர் பெறாதவர் தண்ணீரைப் பெற்ற தம் நண்பரின் கையில் உள்ள ஈரத்தைத் தொட்டு(த் தடவி)க் கொண்டார். பிலால்(ரலி) ஒரு கைத்தடியை எடுத்து நாட்டினார். நபி(ஸல்) அவர்கள் ஒரு சிவப்பு நிற மேல் அங்கியை அணிந்து ஆயத்தமாகி அந்தத் தடியை(த் தடுப்பாக) வைத்து இரண்டு ரக்அத் ஜமாஅத்தாகத் தொழுதார்கள். அந்தக் கம்பிற்கு அப்பால் மனிதர்களும் ஆடு மாடுகளும் குறுக்கே செல்வதைப் பார்த்தேன்'' என அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்.

மாடியிலும், மேடையிலும், மரப் பலகையிலும் தொழுதல்

249. 'ஸஹ்ல் இப்னு ஸஅதிடம் '(நபி(ஸல்) அவர்களின் பிரசங்க) மேடை எதனால் செய்யப்பட்டது?' என்று (மக்கள்) கேட்டார்கள். அவர், '(இப்போது வாழும்) மனிதர்களில் இதுபற்றி என்னை விட அதிகம் தெரிந்தவர்கள் எவருமில்லை. அது ஒரு வகைக் காட்டு மரத்தினால் செய்யப்பட்டது. இன்னாருடைய அடிமையான இன்னார்தாம் அதை நபி(ஸல்) அவர்களுக்குச் செய்து கொடுத்தார். அது செய்யப்பட்டு அதற்குரிய இடத்தில் வைக்கப்பட்டதும் அதன் மீது நபி(ஸல்) அவர்கள் நின்று கிப்லாவை முன்னோக்கி(த் தொழுகைக்குத்) தக்பீர் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னால் மக்களெல்லாம் நின்று தொழுதார்கள். நபி(ஸல்) அவர்கள் ஓதிவிட்டு ருகூவு செய்தார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் ருகூவு செய்தார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தலையை உயர்த்திப் பின்னால் வந்து தரையில் ஸுஜுது செய்தார்கள். பின்னர் மிம்பரின் மீது ஏறி நின்றார்கள். பின்னர் ருகூவு செய்தார்கள். தலையை உயர்த்திப் பின்னால் வந்து தரையில் ஸஜ்தாச் செய்தார்கள். இதுதான் அந்த மேடையின் நிலையாகும் என்றார்'' என அபூ ஹாஸிம் அறிவித்தார்.

பாயில் தொழுதல்.

250. 'என்னுடைய பாட்டியார் முலைக்கா, நபி(ஸல்) அவர்களுக்காக உணவைச் சமைத்து அவர்களை அழைத்தார். நபி(ஸல்) அவர்கள் சாப்பிட்ட பின்னர் 'எழுந்திருங்கள்! உங்களுக்கு நான் தொழுகை நடத்துகிறேன்' என்று கூறினார்கள். நான் புழக்கத்தினால் கறுத்திருந்த எங்களின் ஒரு பாயை எடுத்து அதில் சிறிது தண்ணீர் தெளித்து விரித்தேன். அப்பாயில் நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றார்கள். அவர்களுக்குப் பின்னால் நானும் (எங்களுடன் வாழும்) அனாதையும் நின்றோம். எங்களுக்குப் பின்னால் பாட்டி (முலைக்கா) நிற்குமாறு வரிசைகளை ஒழுங்குபடுத்தினேன். நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு இரண்டு ரக்அத் தொழுகை நடத்திவிட்டுச் சென்றார்கள்'' என அனஸ்(ரலி) அறிவித்தார்.

ஜமுக்காளத்தின் மீது தொழுதல்.

251. 'நான் நபி(ஸல்) அவர்களுக்கு முன்பாகத் தூங்கிக் கொண்டிருப்பேன். என்னுடைய இரண்டு கால்களும் அவர்களை முன்னோக்கியிருக்கும். அவர்கள் ஸுஜுது செய்யும்போது என்னை விரலால் குத்துவார்கள். அப்போது நான் என்னுடைய இரண்டு கால்களையும் மடக்கிக் கொள்வேன். அவர்கள் நிலைக்கு வந்துவிட்டால் இரண்டு கால்களையும் (மறுபடியும்) நீட்டிக் கொள்வேன். அந்த நாள்களில் (எங்களின்) வீடுகளில் விளக்குகள் கிடையாது'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

252. 'நபி(ஸல்) அவர்கள் என்னுடைய படுக்கை விரிப்பில் தொழுதபோது அவர்களுக்கும் கிப்லாவுக்குமிடையில் குறுக்கே ஜனாஸா கிடப்பது போல் நான் கிடப்பேன்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

கடுமையான வெப்ப காலத்தில் துணியின் மீது ஸுஜுது செய்தல்.

253. 'நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழும்போது எங்களில் சிலர் கடுமையான வெயிலின் காரணமாக ஆடையின் ஒரு பகுதியை ஸுஜுது செய்யுமிடத்தில் வைத்துக் கொள்வோம்'' என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

செருப்பணிந்து தொழுதல்.

254. 'நான் நபி(ஸல்) அவர்கள் செருப்பணிந்து தொழுதிருக்கிறார்களா? என்று அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் நான் கேட்டதற்கு, 'ஆம்' என்றார்கள்'' என ஸயீது இப்னு யஸீத் அல் அஸ்தி அறிவித்தார்.

காலுறைகள் அணிந்து தொழுதல்.

255. ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) சிறுநீர் கழித்தப் பின்னர் உளூச் செய்து, தம் இரண்டு காலுறையின் மீது மஸஹ் செய்துவிட்டு எழுந்து தொழுததைக் கண்டேன். இது பற்றி ஜரீர்(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு 'நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வதை பார்த்திருக்கிறேன்' என்று கூறினார்கள்'' என ஹம்மாம் இப்னு ஹாரிஸ் அறிவித்தார்.''காலுறைகளின் மீது மஸஹ் செய்து தொழலாம் என்ற கருத்திலுள்ள அறிஞர்களுக்கு ஜரீர்(ரலி) அவர்களின் இச்செயல் மிகச் சிறந்த சான்றாகும். காரணம் ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி), நபி(ஸல்) அவர்களின் காலத்தில் கடைசியாக இஸ்லாத்தைத் தழுவியவராவார்'' என்று இப்ராஹீம் குறிப்பிடுகிறார்.

ஸுஜுது செய்யும்போது தன் இரண்டு புஜத்தையும் விரித்து விலாவோடு (கைகள்) ஒட்டாமல் வைத்தல்.

256. 'நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் (ஸுஜுது செய்யும் போது) தங்களின் இரண்டு அக்குளின் வெண்மை தெரியும் அளவுக்குத் தங்களின் இரண்டு கைகளையும் விரித்து வைப்பார்கள்'' என மாலிக் இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார்.

கிப்லாவை முன்னோக்குவதன் சிறப்பு.

257. 'நம்முடைய தொழுகையைத் தொழுது, நம்முடைய கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுப்பதைப் புசித்து வருகிறவர்தாம் முஸ்லிம். அப்படிப்பட்டவர் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் பொறுப்பில் இருக்கிறார். எனவே அவரின் பொறுப்பு விஷயத்தில் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை முறிக்காதீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

''இப்ராஹீம் நின்று தொழுத இடத்தைத் தொழும் இடமாக ஆக்கிக் கொள்ளுங்கள்'' (திருக்குர்ஆன் 02:125) என்ற இறைவசனம்.

258. 'உம்ராவிற்காக (இஹ்ராம் அணிந்து) வந்த ஒருவர் கஅபாவைச் சுற்றி வந்தார். ஸஃபா, மர்வாவிற்கிடையில் 'ஸயீ' செய்யவில்லை. இவர் தன்னுடைய மனைவியிடம் உடலுறவு கொள்ளலாமா?' என இப்னு உமர்(ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டதற்கு, 'நபி(ஸல்) அவர்கள் மக்கா வந்தபோது ஏழு முறை கஅபாவை வலம் வந்தார்கள். மகாம் இப்ராஹீம் எனும் இடத்தில் இரண்டு ரகஅத்துகள் தொழுதார்கள். ஸஃபா, மர்வாவிற்கிடையில் 'ஸயீ' செய்தார்கள். உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது' என இப்னு உமர்(ரலி) கூறினார்'' என அம்ர் இப்னு தீனார் அறிவித்தார்.

259. 'நபி(ஸல்) அவர்கள் கஅபாவின் உள்ளே நுழைந்ததும் அதன் எல்லா ஓரங்களிலும் நின்று பிரார்த்தித்தார்கள். அதிலிருந்து வெளியாகும்வரை அவர்கள் தொழவில்லை. வெளியே வந்தபின்பு கஅபாவின் முன்பாக நின்று இரண்டு ரக்அத்துகள் தொழுதுவிட்டு 'இதுதான் கிப்லா' என்று கூறினார்கள்'' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

எங்கிருந்தாலும் (தொழுகையில்) கிப்லாவையே முன்னோக்க வேண்டும்.

260. 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுதார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கஅபாவை நோக்கித் தொழ வேண்டுமென ஆசைப்பட்டார்கள். அப்போது 'நீர் வானத்தை நோக்கி உம்முடைய முகத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருப்பதை அறிவோம்' (திருக்குர்ஆன் 02:144) என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான். உடனே கஅபாவை முன்னோக்கித் தொழ ஆரம்பித்தார்கள். '(யூதர்களின் சில அறிவீனர்கள்) அவர்கள் முன்னர் நோக்கியிருந்த கிப்லாவைவிட்டுத் திருப்பிவிட்டது எது? என்று கேட்கின்றனர். 'கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. தான் நாடியோரை அவன் நேர்வழியில் நடத்துவான்' என்று (நபியே!) கூறும்!' (திருக்குர்ஆன் 02:142) என்ற வசனம் அருளப்பட்டதும் ஒருவர் நபி(ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டு வெளியே வந்து அன்ஸாரிக் கூட்டத்தாரிடம் சென்றார். அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கி அஸர் தொழுது கொண்டிருந்தபோது, 'நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் தொழுதேன். அவர்கள் கஅபாவை முன்னோக்கித் தொழுதார்கள் என்று நான் சாட்சி சொல்கிறேன்' என்று அவர் அவர்களிடம் கூறினார். உடனே தொழுது கொண்டிருந்தவர்கள் கஅபாவை முன்னோக்கித் திரும்பினார்கள்'' என பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.

261. 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களுடைய வாகனத்தின் மீது அமர்ந்து, அது செல்கிற திசையை நோக்கித் தொழுபவர்களாக இருந்தார்கள். கடமையான தொழுகையைத் தொழ விரும்பினால் வாகனத்திலிருந்து கீழே இறங்கி கிப்லாவை முன்னோக்கித் தொழுவார்கள்'' என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

262. 'நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை தொழுதார்கள் - கூட்டினார்களா குறைத்தார்களா என்பது எனக்குத் தெரியாது' என இப்ராஹீம் கூறுகிறார் - தொழுகையை முடித்து ஸலாம் கூறியதும் 'இறைத்தூதர் அவர்களே! தொழுகையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா?' என்று கேட்கப்பட்டது. 'அது என்ன (அப்படியென்றால் என்ன)?' என்று நபி(ஸல்) கேட்டதும், 'நீங்கள் இப்படியல்லவா தொழுதீர்கள்' என அங்கிருந்தவர்கள் கூறினார்கள். (நீட்டியிருந்த) தங்களின் கால்களை நபி(ஸல்) மடக்கி, கிப்லாவை முன்னோக்கி இரண்டு ஸஜ்தாக்கள் செய்துவிட்டுப் பின்னர் ஸலாம் கூறினார்கள். அதன் பின்னர் அவர்கள் எங்களை முன்னோக்கித் திரும்பியமர்ந்து, 'தொழுகையில் ஏதாவது மாற்றங்கள் செய்யப்படுமானால் அதை உங்களுக்குத் தெரிவித்து விடுவேன். என்றாலும் நானும் உங்களைப் போன்ற மனிதன்தான். நீங்கள் மறந்து விடுவதைப் போன்று நானும் மறந்து விடுவேன். நான் (எதையாவது) மறந்துவிட்டால் எனக்கு ஞாபகப்படுத்துங்கள். உங்களில் ஒருவர் தங்களின் தொழுகையில் சந்தேகித்தால் உறுதியானதை அவர் தீர்மானிக்கட்டும். அத்தீர்மானத்தின் அடிப்படையில் தொழுகையைப் பூர்த்தி செய்து ஸலாம் சொல்லிய பின்னர் இரண்டு ஸஜ்தாக்கள் செய்யட்டும்' என்று கூறினார்கள்'' என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

கிப்லாவை முன்னோக்குவதன் அவசியமும் மறதியாகக் கிப்லா அல்லாத திசை நோக்கித் தொழுதவர், தான் தொழுத தொழுகையை மீண்டும் தொழ வேண்டியதில்லை.

263. 'மூன்று விஷயங்களில் இறைவன் என் கருத்துக்கேற்ப 'வஹி' அருளியுள்ளான். அவை, 'இறைத்தூதர் அவர்களே! மகாமு இப்ராஹீம் என்ற இடத்தில் தொழுமிடத்தை நாம் ஆக்கிக் கொள்ளலாமே!' என்று நான் கூறியபோது, 'மகாமு இப்ராஹீமில் நீங்கள் தொழுமிடத்தை ஆக்கிக் கொள்ளுங்கள்!'' (திருக்குர்ஆன் 02:125) என்ற வசனம் அருளப்பட்டது. 'இறைத்தூதர் அவர்களே! தங்களின் மனைவியருடன் உரையாட வருபவர்களில் நல்லவர்களும் கெட்டவர்களும் உள்ளனர். எனவே தங்களை அன்னிய ஆண்களிடமிருந்து மறைத்துக் கொள்ளுமாறு தங்களின் மனைவியருக்கு தாங்கள் உத்திரவிடலாமே!' என்றேன். அப்போது ஹிஜாப் (பர்தா) பற்றிய வசனம் அருளப்பட்டது. நபி(ஸல்) அவர்களின் மனைவியர் அனைவரும் சேர்ந்து நபி(ஸல்) அவர்களுக்கு ஆத்திரமூட்டும் விதமாக நடந்தபோது நபி(ஸல்) அவர்கள் 'உங்களை விவாகரத்துச் செய்தால் உங்களை விடச் சிறந்த மனைவியரை உங்களுக்குப் பதிலாக இறைவன் அவர்களுக்கு ஆக்கிவிடுவான்' என்று கூறினேன். நான் கூறியவாறே (திருக்குர்ஆன் 66:05) வசனம் அருளப்பட்டது'' என உமர்(ரலி) அறிவித்தார்.

பள்ளிவாசலில் (உமிழப்பட்ட) எச்சிலைக் கையால் சுரண்டி அப்புறப்படுத்துவது.

264. கிப்லாத் திசையில் (உள்ள சுவற்றில்) நபி(ஸல்) அவர்கள் சளியைக் கண்டார்கள். இது அவர்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது. அதன் பிரதிபலிப்பு அவர்களின் முகத்திலும் காணப்பட்டது. அவர்கள் எழுந்து தம் கையால் அதைச் சுரண்டினார்கள். 'நிச்சயமாக உங்களில் ஒருவர் தொழுகையில் நிற்கும்போது அவர் தம் இறைவனிடம் அந்தரங்கமாக உரையாடுகிறார். அவருக்கும் கிப்லாவுக்கும் இடையே அவரின் இறைவன் இருக்கிறான். எனவே எவரும் கிப்லாத் திசை நோக்கி உமிழக் கூடாது! தங்களின் இடப்புறமோ, தம் பாதங்களுக்கு அடியிலோ அவர் உமிழ்ந்து கொள்ளட்டும்!'' என்று நபி(ஸல்) கூறிவிட்டுத் தம் மேலங்கியின் ஒரு பகுதியைப் பிடித்து அதில் உமிழ்ந்து அதன் ஒரு பகுதியை மறுபகுதியுடன் கசக்கிவிட்டு 'அல்லது இவ்வாறு அவர் செய்து கொள்ளட்டும்'' என்று கூறினார்கள். என அனஸ்(ரலி) அறிவித்தார்.

பள்ளியில் உமிழப் பட்ட சளியைச் சிறு கற்களால் சுரண்டி அப்புறப்படுத்துதல்.

265. நபி(ஸல்) அவர்கள் பள்ளி வாசலின் சுவற்றில் (உமிழப் பட்டிருந்த) சளியைக் கண்டு சிறு கல்லை எடுத்து அதைச் சுரண்டினார்கள். பின்னர் 'உங்களில் எவருக்கேனும் சளி உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தம் முகத்துக்கு நேராகவோ தம் வலப்புறமாகவோ உமிழலாகாது. தம் இடப்புறமோ தம் இடது பாதத்தின் அடியிலோ அவர் உமிழ்ந்து கொள்ளட்டும்!'' என்று கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பள்ளிவாசலில் உமிழ்ந்ததற்குரிய பரிகாரம்.

266. ''பள்ளிவசாலில் உமிழ்வது குற்றமாகும். அதை மண்ணுக்கடியில் மறைப்பது அதற்கரிய பரிகாரமாகும்.''' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

தொழுகையைக் குறைவின்றிப் பூர்த்தி செய்யுமாறு இமாம் மக்களுக்குப் போதிப்பதும் கிப்லாவை நினைவுபடுத்துவதும்.

267. ''நான் கிப்லாத் திசையில் மட்டும் பார்க்கிறேன் என்று நீங்கள் கருதுகிறீர்களா? அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் அடக்கமாக இருப்பதும் உங்களின் ருகூவும் எனக்குத் தெரியாமலிருப்பதில்லை. நிச்சயமாக என்னுடைய முதுகுக்குப் பின் புறம் உங்களை நான் பார்க்கிறேன் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இன்ன கூட்டத்தினரின் பள்ளிவாயில் என்று ஒரு பள்ளி பற்றிக் கூறலாமா?

268. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் குதிரைகளுக்கிடையே போட்டி நடத்தியபோது, பயிற்சி பெற்ற குதிரைகள் 'ஹஃப்யா' என்ற இடத்திலிருந்து 'ஸனிய்யதுல் வதா' என்ற இடம் வரை ஓட வேண்டும் என்றும் பயிற்சியளிக்கப்படாத குதிரைகள் 'ஸனியதுல் வதா' என்ற இடத்திலிருந்து பனூ ஸுரைக் கூட்டத்தினரின் பள்ளிவாசல்வரை ஓட வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயித்தார்கள். அப்போட்டியில் நானும் பங்கெடுத்துக் கொண்டேன்.

பள்ளி வாசலில் பொருட்களைப் பங்கீடு செய்வதும் பள்ளி வாசலில் பழக் குலைகளைத் தொங்க விடுவதும்.

269. அனஸ்(ரலி) அறிவித்தார். பஹ்ரைன் நாட்டிலிருந்து சில பொருள்கள் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டன. 'அவற்றைப் பள்ளிவாசலிலேயே கொட்டுங்கள்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்ட பொருட்களிலேயே அதுதான் மிக அதிக அளவாக இருந்தது. அதற்கு எந்த மதிப்புமளிக்காமல் நபி(ஸல்) அவர்கள் தொழச் சென்றார்கள். தொழுது முடிந்ததும் அப்பொருட்களின் அருகில் அமர்ந்து கொண்டு காண்பவர்களுக்கெல்லாம் வழங்கி கொண்டிருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ்(ரலி) வந்து 'இறைத்தூதர் அவர்களே! (பத்ருப் போரில் முஸ்லிம்களால் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட) நானும் (என் சகோதரர் அபூ தாலியுடை மகன்) அகீலும் விடுதலை பெறுவதற்காக (நான் பெறும் தொகையை)ப் பணயமாக வழங்கியுள்ளேன். எனவே எனக்கு (தாராளமாக) வழங்குங்கள்!' என்று கேட்டார்கள்.''(உமக்குத் தேவையான அளவுக்கு) அள்ளிக் கொள்வீராக!'' என்று நபி(ஸல்) கூறியதும் அப்பாஸ்(ரலி) தங்களின் துணியில் அது கொள்ளுமளவுக்கு அள்ளினார்கள். பின்னர் அதைத் தூக்க அவர் முயன்றபோது அவரால் இயலவில்லை.

'இறைத்தூதர் அவர்களே! யாரையாவது என் மீது இதைத் தூக்கி விடச் சொல்லுங்களேன்' என்று அவர் கேட்டதற்கு 'முடியாது'' என்று நபி(ஸல்) கூறினார்கள். 'அப்படியானால் நீங்களாவது என் மீது இதைத் தூக்கி வையுங்கள்!' என்று அவர் கேட்க, நபி(ஸல்) அவர்கள் 'முடியாது'' என்றனர். அதில் சிறிதளவை அள்ளி வெளியே போட்டுவிட்டு அவர் தூக்க முயன்றார். அப்போதும் அவரால் இயலவில்லை. 'இறைத்தூதர் அவர்களே! யாரையாவது என் மீது தூக்கி வைக்கச் செய்யுங்கள்!' என்று அவர் கேட்க, நபி(ஸல்) அவர்கள் 'முடியாது'' என்றனர். 'நீங்களாவது தூக்கி விடுங்களேன்' என்று அவர் கேட்க, அதற்கு 'முடியாது'' என்றனர். மேலும் சிறிதளவை அள்ளி வெளியில் போட்டுவிட்டு அதைத் தம் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு அப்பாஸ்(ரலி) நடக்கலானார். அவர் மறையும் வரை நபி(ஸல்) அவர்கள், 'அவரின் பேராசையை எண்ணி வியந்தவர்களாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். நபி(ஸல்) அவர்கள் அவ்விடத்திலிருந்து எழும்போது ஒரு வெள்ளிக் காசு கூட மீதமாக இருக்கவில்லை.

வீடுகளிலேயே பள்ளியை அமைத்துக் கொள்வது.

270. இத்பான் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே! நான் என் சமூகத்தினருக்குத் தொழுகை நடத்துபவனாக இருக்கிறேன். என் பார்வை குறைந்துவிட்டது. மழைக் காலங்களில் எனக்கும் என் சமூகத்தினருக்குமிடையே தண்ணீர் ஓடுவதால் அவர்களின் பள்ளிக்கு சென்று என்னால் தொழுகை நடத்த முடிவதில்லை. எனவே இறைத்தூதர் அவர்களே! தாங்கள் என் இல்லத்திற்கு வந்து ஓர் இடத்தில் தொழ வேண்டும். அவ்விடத்தை (என்னுடைய) தொழுமிடமாக நான் ஆக்கிக் கொள்ள விரும்புகிறேன் என்றேன். ''இன்ஷா அல்லாஹ் செய்கிறேன்'' என்று நபி(ஸல்) கூறிவிட்டு மறு நாள் சூரியன் உயரும்போது அபூ பக்ர்(ரலி) உடன் வந்து (வீட்டின் உள்ளே வர) அனுமதி கோரினர். அனுமதித்தேன். வீட்டில் நுழைந்ததும் உட்காராமலேயே 'உம்முடைய வீட்டில் எந்த இடத்தில் நான் தொழவேண்டுமென விரும்புகிறீர்?' என்று கேட்டார்கள். வீட்டின் ஒரு பகுதியை நான் அவர்களுக்குக் காட்டினேன். நபி(ஸல்) அவர்களுக்குக் காட்டினேன். நபி(ஸல்) அவர்கள் (அவ்விடம் நின்று) தக்பீர் கூறினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் வரிசையாக நின்றோம். இரண்டு ரக்அத்களாக அவர்கள் தொழுகை நடத்திய பின்னர் ஸலாம் கொடுத்தார்கள். மாமிசமும் மாவும் கலந்து நபி(ஸல்) அவர்களுக்காக நாங்கள் தயாரித்திருந்த உணவை உண்டு செல்லுமாறு அவர்களை நாங்கள் வற்புறுத்தினோம். (நபி(ஸல்) வந்ததைக் கேள்வியுற்ற) அப்பகுதியைச் சேர்ந்த பல ஆடவர்கள் என்னுடைய வீட்டில் வந்து குழுமினார்கள். அவர்களில் சிலர் 'மாலிக் இப்னு துகைஷின் எங்கே?' என்று கேட்க, அவர்களில் ஒருவர் 'அவர் ஒரு முனாபிக்; அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்காதவர் (எனவேதான் நபியைக் காணவரவில்லையா)' என்று கூறினார். அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், 'அவ்வாறு கூறாதீர்! அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி அவர் 'லாயிலாஹ இல்லல்லாஹ்' எனக் கூறியிருப்பதை நீர் அறியமாட்டீரா?' என்று கேட்டனர். 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே இதை நன்கறிந்தவர்கள்; அவர் நயவஞ்சகர்களுக்கு நல்லது செய்வதாக நாங்கள் அறிகிறோம்' என்று அவர் கூறினார். ''அல்லாஹ்வின் பொருத்தம் நாடி, லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறியவரின் மீது நரகத்தை இறைவன் விலக்கிவிட்டான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறியாமைக் காலத்தில் வாழ்ந்த இணை வைப்பாளர்களின் கப்ருகள் தோண்டப்பட்டு அவ்விடத்தில் பள்ளிவாசல் கட்டலாமா?

271. ஆயிஷா(ரலி) அறிவித்தார். உம்மு ஹபீபா(ரலி)வும் உம்மு ஸலமா(வும்) தாங்கள் அபீஷீனியாவில் கண்ட உருவங்கள் இடம் பெற்ற கோவிலைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி(ஸல்) 'அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்துவிட்டால் அவரின் அடக்கத் தலத்தின் மேல் வண்ணக்கத்தஸ்லத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வின் சன்னிதியில் அவர்கள் தாம் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்களாவர்'' என்று கூறினார்கள்.

272. அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது மதீனாவின் மேற்புறத்தில் வசித்து வந்த 'பனூ அம்ர் இப்னு அவ்ஃபு' எனும் கோத்திரத்தினருடன் பதினான்கு நாள்கள் தங்கினார்கள். பின்னர் 'பனூ நஜ்ஜார்' கூட்டத்தினரை அழைத்து வருமாறு கூறினார்கள். (தங்கள்) வாள்களைத் தொங்கவிட்டவர்களாக அவர்கள் வந்தனர். நபி(ஸல்) அவர்கள் தம் வாகனத்தின் மீது அமர்ந்திருந்ததும் வாகனத்தில் அவர்களுக்குப் பின்னால் அபூ பக்ரு(ரலி) அமர்ந்திருந்ததும் அவர்களைச் சுற்றி 'பனூ நஜ்ஜார்' கூட்டத்தினர் நின்றதும் இன்னும் என் கண் முன்னே நிழலாடுகிறது. நபி(ஸல்) அவர்களின் ஒட்டகம் அபூ அய்åப்(ரலி) வீட்டுக்கு முன்னாலுள்ள பகுதியில் அவர்களை இறக்கியது. தொழுகையின் நேரத்தை (எப்போது) எங்கே அடைகிறார்களோ அங்கே தொழுவது நபி(ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்தது. ஆடுகள் கட்டுமிடங்களில் கூட தொழக் கூடியவர்களாக நபி(ஸல்) அவர்கள் இருந்தனர். அவர்கள் பள்ளிவாசல் கட்டும் படி ஏவினார்கள்.பனூ நஜ்ஜார் கூட்டத்தினரை அழைத்து வரச் சொல்லி அவர்களிடம் 'உங்களின் இந்தத் தோட்டத்தை எனக்கு விலைக்குத் தாருங்கள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டனர். அதற்கு அவர்கள் இதற்காக விலையை அல்லாஹ்விடமே நாங்கள் எதிர்பார்க்கிறோம்'' என்றனர். (அவ்விடத்தில்) பள்ளிவாசல் கட்டுமாறு நபி(ஸல்) கட்டளையிட்டார்கள்.அவ்விடத்தில் இணை வைப்பவர்களின் சமாதிகள் இருந்தன. அங்கு சில உபயோகமற்ற பொருட்களும் சில பேரீச்ச மரங்களும் இருந்தன. அங்குள்ள கப்ருகளைத் தோண்டி அப்புறப்படுத்துமாறு நபி(ஸல்) கட்டளையிட்டனர். அவ்வாறே அவை தோண்டப்பட்டன.அப்பூமியைச் சமப்படுத்துமாறு கட்டளையிட அதுவும் சமப்படுத்தப்பட்டது. பேரீச்ச மரங்களை வெட்டுமாறு கட்டளையிட அவையும் வெட்டப்பட்டன. பள்ளிவாசலின் கிப்லாத் திசையில் பேரீச்ச மரங்களை வரிசையாக நட்டனர். அதன் இரண்டு ஒரங்களிலும் கற்களை வைத்தனர் பாடிக் கொண்டே (அங்கிருந்த) பாறைகளை அப்புறப்படுத்தினர்.''இறைவா! மறுமையின் நன்மை தவிர வேறு நன்மை இல்லை! அன்ஸார்களுக்கு, முஹாஜிர்களுக்கும் நீ மன்னிப்பளிப்பாயாக!'' என்று கூறியவர்களாக நபி(ஸல்) அவர்களும் (சேர்ந்து பாறைகளை அப்புறப்படுத்துபவர்களாக) அவர்களுடன் இருந்தனர்.

ஒட்டகங்கள் கட்டுமிடங்களில் தொழுதல்.

273. நாஃபிவு அறிவித்தார். இப்னு உமர்(ரலி) தங்களின் ஒட்டகத்தை நோக்கித் தொழுதுவிட்டு, 'நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு தொழுவதை பார்த்திருக்கிறேன்' என்றார்கள்.

தனக்கு முன்னால் அடுப்போ நெருப்போ அல்லது (பிறரால்) வணங்கப்படும் ஏதோ ஒன்று இருக்கும்போது அவற்றுக்கு மதிப்பளிக்காமல் அல்லாஹ்வை எண்ணித் தொழுவது.

274. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். சூரிய கிரகணம் ஏற்பட்ட சமயத்தில் நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். பின்னர் 'இன்று எனக்கு நரகம் எடுத்துக் காட்டப்பட்டது. அது போன்ற (மோசமான) கோரக் காட்சி எதையும் நான் கண்டதில்லை' எனக் கூறினார்கள்.

அடக்க ஸ்தலங்களில் தொழலாகாது.

275. ''உங்கள் இல்லங்களிலும் சில தொழுகைகளைத் தொழுங்கள்! அவற்றை அடக்கஸ்தலங்களாக ஆக்கி விடாதீர்கள்!''' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

276. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மரண வேளை நெருங்கியபோது தங்களின் போர்வையைத் தம் முகத்தின் மீது போடுபவர்களாகவும் மூச்சுத் திணறும்போது அதைத் தம் முகத்தைவிட்டு அகற்றுபவர்களாகவும் இருந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருக்கும்போது 'தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிய யூத கிறிஸ்தவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும்!'' எனக் கூறி அவர்களின் செய்கை பற்றி எச்சரித்தார்கள்.

பெண்கள் பள்ளிவாசலில் உறங்குவது பற்றியது.

277. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஓர் அரபுக் கோத்திரத்திற்கு அடிமையாக இருந்து, பின்னர் அவர்களால் விடுதலை செய்யப்பட்டு, அவர்களுடன் வசித்து வந்த கறுப்பு அடிமைப் பெண் தன் கடந்த கால நிகழ்ச்சியைப் பின் வருமாறு என்னிடம் தெரிவித்தார்.'நான் அவர்களுடனிருக்கும்போது அவர்களைச் சேர்ந்த சிறுமி ஒருத்தி சிவப்புத் தோலில் முத்துப் பதிக்கப் பட்ட ஓர் ஆபரணத்துடன் வந்தாள். அதை அவள் கழற்றி வைத்தாள். அல்லது அது தானாகக் கீழே விழுந்தவிட்டது. அப்போது அவளருகே வந்த சிறு பருந்து ஒன்று, கீழே போடப்பட்ட அந்த ஆபரணத்தை மாமிசம் என எண்ணித் தூக்கிச் சென்றது. அவர்கள் தேடிப் பார்த்தபோது கிடைக்கவில்லை. அவர்கள் என்னைச் சந்தேகிக்கலானார்கள். என்னுடைய மர்மஸ்தானம் உட்படப் பல இடங்களிலும் அவர்கள் தேடிப் பார்த்தார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் அவர்களுடன் நின்றிருந்தபோது அந்தச் சிறிய பருந்து (திரும்பவும்) வந்த அதைக் கீழே போட்டதும் அவர்களுக்கருகில் அது விழுந்தது. எதைப் பற்றி என்னைச் சந்தேகித்தீர்களோ அதுதான் இது. நான் அதைத் திருடுவதைவிட்டுப் பரிசுத்தமானவள் என்று கூறினேன். இதன்பிறகு நபி(ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை தழுவினேன்'அந்தப் பெண்ணுக்குப் பள்ளி வாசலில் கூடாரம் ஒன்று இருந்தது. அதிலிருந்து என்னிடம் வந்து அப்பெண் பேசிக் கொண்டிருப்பாள். என்னைச் சந்திக்கும் போதெல்லாம் பின்வரும் பாடலை அவள் பாடாமலிருந்ததில்லை. 'அந்த ஆபரணம் சம்பந்தப்பட்ட அந்த நாள் நம்முடைய இறைவனின் அற்புதங்களில் ஒன்றாகும். தெரிந்து கொள்ளுங்கள்! அவன்தான், இறைமறுப்பாளர்களின் ஊரிலிருந்து நிச்சயமாக என்னைக் காப்பாற்றினான்'. (இது கவிதையின் பொருள்). இந்தக் கவிதையை அடிக்கடி என்னிடம் கூறுகிறாயே என்ன விஷயம் என்று நான் அப்பெண்ணிடம் கேட்டபோது மேற்கண்ட நிகழ்ச்சியை அவள் என்னிடம் கூறினாள்.

பள்ளியில் ஆண்கள் உறங்குதல்.

278. ஸஹ்ல் பின் ஸஃது(ரலி) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் ஃபாத்திமாவின் இல்லத்திற்கு வந்தபோது அலீ(ரலி)யைக் காணவில்லை. 'உன் பெரிய தந்தையின் மகன் எங்கே?' என்று ஃபாத்திமா(ரலி) விடம் கேட்டார்கள். 'எனக்கும் அவருக்கும் சிறிய மனஸ்தாபம் இருந்தது. கோபித்துக் கொண்டு சென்றார்; என்னிடம் தங்கவில்லை' என்று ஃபாத்திமா(ரலி) கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் 'அவர் எங்கே என்று பார்த்து வாரும்!'' என்று ஒருவரை அனுப்பினார்கள். அவர் வந்து, 'அலி பள்ளிவாசலில் உறங்கிக் கொண்டிருக்கிறார்' என்றார். நபி(ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்தபோது அலீ(ரலி) தங்களின் மேலாடை விலகியவராகவும் மேனியில் மண் படிந்தவராகவும் ஒரு பக்கமாகப் படுத்திருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அவரின் மேனியில் படிந்திருந்த மண்ணைத் தட்டிவிட்டு 'மண்ணின் தந்தையே எழும்! மண்ணின் தந்தையே எழும்!'' எனக் கூறினார்கள்.

பள்ளிவாசலுக்குச் சென்றதும் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும்.

279. ''உங்களில் எவரும் பள்ளிவாசலுக்குச் சென்றால் உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும்!''என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.

நபியின் பள்ளிவாசல் கட்டுமானம்.

280. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் 'மஸ்ஜிதுன்னபவி'யுடைய சுவர்கள் செங்கற்களாலும் அதன் கூரை பேரீச்ச மர ஓலையாலும் தூண்கள் பேரீச்ச மரங்களாலும் அமைந்திருந்தன. அபூ பக்ர்(ரலி) (தம் ஆட்சியின் போது) அதில் எந்த விரிவாக்கமும் செய்யவில்லை என்றாலும் உமர்(ரலி) அதை விரிவுபடுத்தினார்கள். நபி(ஸல்) காலத்தில் இருந்தது போன்றே செங்கல், பேரீச்ச மர ஓலை, பேரீச்ச மரம் ஆகியவற்றைக் கொண்டே விரிவுபடுத்தினார்கள். பின்னர் உஸ்மான்(ரலி) அந்தப் பள்ளியில் அனேக விஷயங்களை அதிகமாக்கினார்கள். சித்திர வேலைகள் செய்யப்பட்ட கற்களாலும் சுண்ணாம்புக் காரையாலும் அதன் சுவர்களைக் கட்டினார்கள். சித்திர வேலைகள் செய்யப்பட்ட கற்களால் அதன் தூண்களை எழுப்பினார்கள். அதன் கூரையைத் தேக்கு மரத்தால் அமைத்தார்கள்.

பள்ளிவாசல் கட்டும் பணியில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பது.

281. இக்ரிமா அறிவித்தார். இப்னு அப்பாஸ்(ரலி) என்னிடமும் அவர் மகன் அலியிடமும் 'நீங்களிருவரும் அபூ ஸயீத்(ரலி) அவர்களிடம் சென்று அவர் அறிவிக்கும் செய்தியைச் செவிமடுத்து வாருங்கள்!' எனக் கூறினார்கள். நாங்கள் சென்றோம். அபூ ஸயீத்(ரலி) தங்களின் தோட்டத்தைச் சரி செய்து கொண்டிருந்தார்கள். (எங்களைக் கண்டதும் தங்களின் மேலாடையைப் போர்த்திக் கொண்டு (பல செய்திகளை) எங்களுக்குக் கூறலானார்கள். பள்ளிவாசல் கட்டப்பட்ட செய்தியைக் கூறும்போது 'நாங்கள் ஒவ்வொரு செங்கல்லாகச் சுமப்பவர்களாக இருந்தோம். (ஆனால்) அம்மார்(ரலி) இரண்டிரண்டு செங்கற்களாகச் சுமக்கலானார். அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அவரின் மேனியில் படிந்த மண்ணைத் தட்டிவிட்டு 'பாவம் அம்மார்! இவரை அக்கிரமக்காரக் கூட்டம் கொலை செய்யும்! இவர் அவர்களைச் சுவர்க்கத்திற்கு அழைப்பார். அவர்களோ இவரை நரகத்திற்கு அழைப்பார்கள்.'' என்று கூறினார்கள். அதற்கு அம்மார்(ரலி) 'அந்தக் குழப்பங்களை விட்டும் அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்று கூறினார்கள்' என அபூ ஸயீத்(ரலி) குறிப்பிட்டார்கள்.

பள்ளிவாசல் கட்டியவருக்குக் கிடைக்கும் வெகுமதி.

282. உபைதுல்லாஹ் அல் கவ்லானி அறிவித்தார். உஸ்மான்(ரலி) பள்ளியை விரிவுபடுத்தியபோது 'நீங்கள் மிகவும் விரிவு படுத்தி விட்டீர்கள்' என்று மக்கள் அவர்களிடம் ஆட்சேபனை செய்தார்கள். அதற்கு 'அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி, பள்ளிவாசல் ஒன்றைக் கட்டியவர் அது போன்ற ஒன்றைச் சுவர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுவான் என்று நபி(ஸல்) கூற செவியுற்றுள்ளேன்' என உஸ்மான்(ரலி) கூறினார்.

பள்ளியினுள் செல்லும்போது அம்பின் முனைப் பகுதியைப் பிடித்துக் கொள்ளுதல்.

283. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். ஒருவர் அம்பை எடுத்துக் கொண்டு பள்ளியில் நடந்ததைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள் 'அதன் (கூரான) முனைப் பகுதியைப் பிடித்துக் கொள்வீராக!'' என்று கூறினார்கள்.

பள்ளி வழியாகக் கடந்து செல்லல்.

284. ''அம்புடன் நம்முடைய பள்ளிவாயில்களிலோ கடை வீதிகளிலோ நடப்பவர்கள் அம்பின் முனைப் பகுதியைப் பிடித்துக் கொள்ள வேண்டும். தம் கையால் எந்த விசுவாசியையும் காயப்படுத்தலாகாது.''இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

பள்ளிவாசலில் கவிதை பாடுதல்.

285. அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்பின் அவ்ஃப் அறிவித்தார்.
ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம் 'அபூ ஹுரைராவே! அல்லாஹ்வை முன்னிறுத்தி நான் உம்மிடம் கேட்கிறேன். நபியவர்கள், 'ஹஸ்ஸானே! இறைத்தூதர் சார்பாக நீர் அவர்களுக்கு (உம் கவிதை மூலம்) பதிலளிப்பீராக!'' என்றும் (இறைவா! ஹஸ்ஸானை ஜிப்ரீல்(அலை) மூலம் வலுப்படுத்துவாயாக!'' என்றும் கூறியதை நீர் செவியுற்றீர் அல்லவா?' என்று கேட்டபோது அபூ ஹுரைரா(ரலி) 'ஆம்' என்றனர்.

பள்ளியில் ஈட்டியுடன் செல்வது.

286. ஆயிஷா(ரலி) அறிவித்தார். அபிஸீனிய(வீர)ர்கள் பள்ளியில் (வீர) விளையாட்டு விளையாடும்போது, என் அறை வாசலில் நபி(ஸல்) அவர்கள் தங்களின் மேலாடையால் என்னை மறைத்த நிலையில் (வீர) விளையாட்டை பார்த்துக் கொண்டிருந்தேன்.

பள்ளிவாசலில் கடனைக் கேட்பதும் அதைத் திருப்பிக் கொடுக்குமாறு பள்ளியிலேயே வற்புறுத்துவதும்.

287. கஃபு இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இப்னு அபீ ஹத்ரத்(ரலி) அவர்களிடம் கொடுத்திருந்த கடனை நான் பள்ளிவாசலில் வைத்துக் கேட்டேன். எங்களிருவரின் குரல்கள் உயர்ந்தன. தங்களின் வீட்டில் இருந்த நபி(ஸல்) அவர்களும் இந்தச் சப்தத்தைக் கேட்டார்கள். உடனே தம் அறையின் திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்து 'கஃபே!'' என்று கூப்பிட்டார்கள். 'இதோ வந்தேன்; இறைத்தூதர் அவர்களே!' என்றேன். 'பாதி' என்பதைக் காட்டும் விதமாகச் சைகை மூலம் காட்டி 'உம்முடைய கடனில் இவ்வளவைத் தள்ளுபடி செய்வீராக!'' என்று கூறினார்கள். 'அவ்வாறே செய்கிறேன்; அல்லாஹ்வின் தூதரே!' என்று கூறினேன். (கடன் பெற்ற) இப்னு அபீ ஹத்ரத்(ரலி) அவர்களிடம் 'எழுவீராக! பாதியை நிறைவேற்றுவீராக!'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.

பள்ளிவாசலைப் பெருக்குவதும் அதில் கிடக்கும் துண்டுத் துணிகள், குச்சிகள் அசுத்தங்களை அப்புறப்படுத்துவதும்.

288. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த ஒரு கறுத்த ஆண் அல்லது கறுத்த பெண்மணி இறந்துவிட்டார். அவரைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் விசாரித்தபோது அவர் இறந்து விட்டதாகக் கூறினார்கள். 'இதை (முன்பே) என்னிடம் நீங்கள் சொல்லியிருக்க வேண்டாமா? அவரின் அடக்கத் தலத்தை எனக்குக் காட்டுங்கள்! என்று நபி(ஸல்) கூறிவிட்டு அவரின் அடக்கத்தலத்துக்கு வந்து அவருக்கு (ஜனாஸா) தொழுகை நடத்தினார்கள்.

மது பானங்கள் விற்பது விலக்கப்பட்டது என்று பள்ளிவாசலில் அறிவிப்பது.

289. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 'பகரா' அத்தியாயத்தில் வட்டி (விலக்கப்பட்டது என்பது) பற்றிய வசனங்கள் இறங்கியபோது நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்குச் சென்று மக்களுக்கு அவ்வசனங்களை ஓதிக் காட்டினார்கள். மதுபானங்கள் விற்பதும் விலக்கப்பட்டது என அறிவித்தார்கள்.

கைதிகளையும் குற்றவாளிகளையும் பள்ளிவாசலில் கட்டிவைப்பது.

290. ''இஃப்ரீத் என்ற ஜின் நேற்றிரவு என் முன் திடீரெனத் தோன்றி என்தொழுகையைக் கெடுக்க முயன்றது. அதைப் பிடிப்பதற்கான சக்தியை இறைவன் எனக்கு வழங்கினான். காலையில் நீங்கள் அனைவரும் அதைக் காண வேண்டுமென இந்தப் பள்ளிவாசலிலுள்ள ஒரு தூணில் அதைக் கட்டி வைக்க எண்ணினேன். 'இறைவா! எனக்குப் பின் வேறு எவருக்கும் நீ வழங்காத ஓர் ஆட்சியை எனக்கு நீ வழங்குவாயாக' (திருக்குர்ஆன் 38:35) என்ற என் சகோதரர் ஸுலைமான் (அலை) அவர்களின் பிரார்த்தனை எனக்கு நினைவு வந்தால் அதை விரட்டி அடித்து விட்டேன்.என்று 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நோயாளிகளுக்காகவும் மற்றவர்களுக்காகவும் பள்ளிவாசலில் கூடாரம் அமைப்பது.

291. ஆயிஷா(ரலி) அறிவித்தார். அகழ்ப் போரின்போது ஸஃது இப்னு முஆத்(ரலி) கை நரம்பில் தாக்கப் பட்டார். அவரை அருகிலிருந்து நோய் விசாரிப்பதற்கு ஏற்பப் பள்ளிலேயே அவருக்குக் கூடாரம் ஒன்றை நபி(ஸல்) ஏற்படுத்தினார்கள். அதற்கு அருகில் கூடாரம் அமைந்திருந்த பனூ கிஃபார் குலத்தினருக்கு ஸஃதுடைய கூடாரத்திலிருந்து பாயும் இரத்தம் அச்சத்தை ஏற்படுத்தியது. 'கூடாரவாசிகளே! உங்கள் தரப்பிலிருந்து எங்களை நோக்கிப் பாய்கின்றதென்ன?' என்று கேட்டுக் கொண்டு அங்கே பார்த்தபோது காயத்திலிருந்து இரத்தம் வடிய ஸஃது(ரலி) இருந்தார்கள். அந்தக் காயத்தினாலேயே மரணமும் அடைந்தார்கள்.

தேவை ஏற்படும்போது பள்ளிக்குள் ஒட்டகத்தைக் கொண்டு செல்வது.

292. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். என் உடல் நலக்குறைவு பற்றி நபி(ஸல்) அவர்களிடம நான் முறையிட்டபோது 'ஜனங்களுக்குப் பின்னால் வாகனத்தில அமர்ந்து கொண்டு நீ தவாஃப் செய்து கொள்!'' என்று கூறினார்கள். நான் அவ்வாறு தவாஃப் செய்யும்போது நபி(ஸல்) அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமின் ஒரு பகுதியில் 'தூர்' என்ற அத்தியாயத்தை ஓதித் தொழுது கொண்டிருந்தார்கள்.

293. அனஸ்(ரலி) அறிவித்தார். நபித்தோழர்களில் இரண்டு மனிதர்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து (பள்ளிவாசலை விட்டும்) இருள் சூழ்ந்த இரவில் (தங்கள் இல்லங்களுக்கு) புறப்பட்டார்கள். அவ்விருவருக்கும் முன்னால் இரண்டு விளக்குகள் போன்று எதுவோ ஒளி வீசிக் கொண்டிருந்தது. (அவ்விருவரும் தத்தம் வழியில் பிரிந்து சென்ற போது) ஒவ்வொருவருடனும் விளக்குபோன்ற ஒன்று அவர்கள் தம் இல்லங்களை அடையும்வரை ஒளி வீசிக் கொண்டிருந்தது.

பள்ளிவாசலில் நுழைவாயில் அமைப்பதும் நடைபாதை ஏற்படுத்துவதும்.

294. அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு சொற்பொழிவில் 'அல்லாஹ், தன்னிடம் உள்ளவை வேண்டுமா? இவ்வுலகம் வேண்டுமா? எனத் தேர்ந்ததெடுக்க ஓர் அடியாருக்குச் சுதந்திரம் அளித்தான். அந்த அடியார் அல்லாஹ்விடம் உள்ளதையே தேர்ந்தெடுத்தார்'' என்றார்கள். (இதைக் கேட்ட) அபூ பக்ர்(ரலி) அழலானார்கள். 'இந்த மனிதர் ஏன் அழுகிறார்? தன்னிடம் உள்ளது வேண்டுமா? இவ்வுலகம் வேண்டுமா என்று ஓர் அடியாருக்குச் சுதந்திரம் அளித்தபோது அந்த அடியார் இறைவனிடம் உள்ளதைத் தேர்ந்தெடுத்தால் அதற்காக அழ வேண்டுமா என்ன?' என்று நான் மனதிற்குள் கூறிக் கொண்டேன். அந்த அடியார் நபி(ஸல்) அவர்கள் தாம். (தங்களின் மரணத்தையே அவ்வாறு குறிப்பிட்டார்கள் என்பதைப் பிறகு அறிந்து கொண்டேன்) அபூ பக்ர்(ரலி) எங்களை விட அறிவில் சிறந்தவராக இருந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.''அபூ பக்ரே! அழ வேண்டாம்! நட்பின் மூலமும் செல்வத்தின் மூலமும் மனிதர்களிலேயே எனக்குப் பேருதவியாக இருந்தவர் அபூ பக்ர் தான். என் உம்மத்தில் யாரையேனும் நான் உற்ற நண்பராக ஏற்றுக் கொள்வதென்றால் அபூ பக்ரையே ஏற்றிருப்பேன். என்றாலும் இஸ்லாம் என்ற அடிப்படையிலான சகோதரத்துவமும் நேசமும்தான் (இஸ்லாத்தில்) உண்டு. பள்ளியில் (என் இல்லத்திற்கு வருவதற்காக) உள்ள அபூ பக்ரின் வாசல் தவிர ஏனைய வாசல்கள் அடைக்கப்பட வேண்டும்.''

295. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் எந்த நோயினால் மரணமடைந்தார்களோ அந்த நோயின்போது தம் தலையில் ஒரு துணியால் கட்டுப் போட்டவர்களாக வெளியே வந்து மேடை மீது அமர்ந்து அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தார்கள். பின்பு 'தம் உயிராலும் பொருளாலும் எனக்கு அபூ குஹாஃபாவின் மகன் அபூ பக்ரை விட வேறெவரும் பேருதவியாக இல்லை. எவரையேனும் உற்ற நண்பராக நான் ஏற்படுத்திக் கொள்வதென்றால் அபூ பக்ரையே ஏற்படுத்திக் கொள்வேன். என்றாலும் (தனிப்பட்ட உதவிகளுக்காக நேசிப்பதை விட) இஸ்லாமிய அடிப்படையிலான நேசமே சிறந்தது. அபூ பக்ரின் வழியைத் தவிர என்னிடம் வருவதற்காகப் பள்ளிவாசலிலுள்ள எல்லா வழிகளையும் அடைத்து விடுங்கள்!'' என்று கூறினார்கள்.

கஅபாவுக்கும் பிற பள்ளிவாசல்களுக்கும் வாசல்கள் ஏற்படுத்துவதும் அதை மூடுவதும்.

296. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) (மக்காவை வெற்றி கொண்டு) மக்காவிற்கு வந்தபோது (கஅபாவின் சாவியை வைத்திருந்த உஸ்மான் இப்னு தல்ஹா(ரலி)வை அழைத்தனர். அவர் (கஅபாவின்) வாசலைத் திறந்தார். நபி(ஸல்) அவர்களும் பிலால்(ரலி), உஸாமாபின் ஸைத்(ரலி), உஸ்மான் இப்னு தல்ஹா(ரலி) ஆகியோரும் (உள்ளே) சென்று கதவை மூடிவிட்டனர். சிறிது நேரம் கழித்து வெளியே வந்தனர். நான்விரைந்து சென்று பிலால்(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் அதில் தொழுதார்களா? என்று கேட்டேன். 'தொழுதார்கள்' என்று பிலால் கூறினார். எந்த இடத்தில்? என்று கேட்டதற்கு 'இரண்டு தூண்களுக்கிடையே' என்று கூறினா. எத்தனை ரக்அத்கள் தொழுதார்கள் என்று கேட்கத் தவறி விட்டேன்.

பள்ளிவாசலில் அமர்வதும் வட்டமாகக் கூடியிருப்பதும்.

297. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மேடை மீது இருக்கும்போது 'இரவுத் தொழுகை பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று ஒருவர் கேட்டார். 'இரண்டிரண்டாகத் தொழ வேண்டும். ஸுப்ஹை தொழ முடியாது என்று அஞ்சினால்ய ஒரு ரக்அத் தொழலாம். அவர் தொழுதது அவருக்கு வித்ராக அமையும். உங்களின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்! என்று நபி(ஸல்) கூறினார்கள்.

பள்ளிவாசலில் மல்லாந்து படுப்பதும் கால்களை நீட்டுவதும்.

298. அப்துல்லாஹ் இப்னு ஸைத் இப்னி ஆஸிம்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு காலின் மேல் இன்னொரு காலைப் போட்டுக் கொண்டு பள்ளிவாசலில் மல்லாந்து படுத்திருந்ததை கண்டேன்.

கடைவீதியிலுள்ள பள்ளிவாசலில் தொழுவது.

299. ''ஒருவர் தன்னுடைய வீட்டில் தொழுவதை விடவும் கடை வீதியில் தொழுவதை விடவும் ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு மதிப்பில் அதிகமானதாகும். உங்களில் ஒருவர் உளூச் செய்து, அதை அழகுறச் செய்து, தொழுகிற ஒரே நோக்கத்தில் பள்ளிவாசலுக்கு வந்தால் அவர் பள்ளிவாசலுக்கு வரும் வரை எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் அவருக்குப் படித்தரத்தை அல்லாஹ் உயர்த்துகிறான்; ஒரு பாவத்தை அவரைவிட்டு நீக்குகிறான். தொழுகையை எதிர் பார்த்து அவர் பள்ளிவாசலில் அமர்ந்திருக்கும்போது அவர் தொழுது கொண்டிருப்பவராகவே கருதப் படுகிறார். தொழுத இடத்திலேயே அவர் இருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். சிறு தொடக்கு மூலம் வானவர்களுக்கத் தொல்லை அளிக்காத வரையில் 'இறைவா! இவரை மன்னித்து விடு! இறைவா இவருக்கு அருள் புரி!' என்று வானவர்கள் கூறுகின்றனர் எனஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

300. அபூ மூஸா(ரலி) அறிவித்தார். ''ஒரு கட்டிடித்தின் ஒரு பகுதி இன்னொரு பகுதியை எப்படி வலுப்படுத்திக் கொண்டிருக்கிறதோ அது போன்றே ஒரு இறைநம்பிக்கையாளர் இன்னொரு இறைநம்பிக்கையாளர் விஷயத்தில் நடக்க வேண்டும்'' என்று நபி(ஸல்) கூறிவிட்டுத் தம் விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள்.

301. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மாலை நேரத் தொழுகைகளில் ஒன்றை இரண்டு ரக்அத்களாக எங்களுக்குத் தொழுகை நடத்திவிட்டு ஸலாம் கொடுத்துவிட்டார்கள். பள்ளியில் நாட்டப்பட்டுள்ள மரத்தினருகே சென்று கோபமுற்றவர்களைப் போல் அதில் சாய்ந்தார்கள். தங்களின் வலது கரத்தை இடது கரத்தின் மேல் வைத்துக் கை விரல்களைக் கோர்த்தார்கள். தம் வலது கன்னத்தை இடக்கையின் மீது வைத்தார்கள். அவசரக் காரர்கள் பள்ளியின் பல வாயில்கள் வழியாக வெளிப்பட்டுத் 'தொழுகை குறைக்கப்பட்டுவிட்டது' என்று பேசிக் கொண்டார்கள். அபூ பக்ரு(ரலி), உம்ர்(ரலி) ஆகியோர் அக்கூட்டத்திலிருந்தனர். (இது பற்றி) நபி(ஸல்) அவர்களிடம் கேட்க அஞ்சினார்கள். அந்தக் கூட்டத்தில் இரண்டு கைகளும் நீளமான ஒருவர் இருந்தார். துல்யதைன் (இரண்டு கைகள் நீளமானவர்) என்று அவர் குறிப்பிடப்படுவார். அவர் 'இறைத்தூதர் அவர்களே! தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதோ? அல்லது தாங்கள் மறந்து விட்டீர்களா? என்று கேட்டார். 'குறைக்கப்படவும் இல்லை. நான் மறக்கவுமில்லை'' என்று நபி(ஸல்) கூறிவிட்டு (மக்களை நோக்கி) 'துல்யதைன் கூறுவது சரிதானா?' என்று கேட்க 'ஆம்' என்றனர் மக்கள்.(தொழுமிடத்திற்குச்) சென்று விடுபட்டதைத் தொழுது ஸலாம் கொடுத்தார்கள். பிறகு தக்பீர் கூறி (தொழுகையில் செய்யும்) ஸஜ்தாவைப் போல் அல்லது அதை விட நீண்ட ஸஜ்தாவைச் செய்து, பின் தலையை உயர்த்தித் தக்பீர் கூறினார்கள். பிறகு தக்பீர் கூறி(த் தொழுகையில் செய்யும்) ஸஜ்தாவைப் போல் அல்லது அதை விட நீண்டதாக ஸஜ்தா செய்து ஸலாம் கொடுத்தார்கள். அபூ ஹுரைரா(ரலி) லுஹர், அஸர் தொழுகை என்று கூறாமல் குறிப்பாக ஒரு தொழுகையைக் கூறினார்கள் என்றும் தாம் அதை மறந்து விட்டதாகவும் இப்னு ஷிரீன் குறிப்பிடுகிறார்.

நபி(ஸல்) அவர்கள் தொழுத பல்வேறு இடங்களும் மதீனாவின் சாலைகளில் அமைந்துள்ள பள்ளிவாயில்களும்.

302. மூஸா இப்னு உக்பா அறிவித்தார். ஸாலிம் இப்னு அப்தில்லாஹ் பாதையோரத்தில் அமைந்த சில இடங்களைத் தேர்ந்தெடுத்து அங்கே தொழுவார்கள். தம் தந்தை இப்னு உமர்(ரலி) அவ்விடங்களில் தொழுததாகவும் அவ்விடங்களில் நபி(ஸல்) தொழுததை அவரின் தந்தை பார்த்திருப்பதாகவும் குறிப்பிடுவார்கள். இப்னு உமர்(ரலி) அவ்விடங்களில் தொழுததாக நாஃபிவு அவர்களும் என்னிடம கூறினார். ஸாலிம், நாஃபிவு இருவரும் அனைத்து இடங்களைப் பற்றியும் ஒரே கருத்தைக் கூறினார்கள் என்றாலும் அவ்விருவரும் ஷரஃபுர் ரவ்ஹா என்று இடத்தில் அமைந்த பள்ளி விஷயத்தில் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்தார்கள்.

303. நாஃபிவு அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஹஜ், உம்ராவுக்காக மக்கள் செல்லும்போது 'துலஹுலைஃபா'வில் பள்ளிவாசல் ஒன்று அமைந்துள்ள இடத்தில் இருந்த முள் மரத்தினடியில் இளைப்பாறுவார்கள். அந்த வழியாக ஹஜ்ஜு, உம்ரா மற்றும் போரிடுதல் போன்றவற்றுக்காகச் செல்லும்போது 'பத்னுல்வாதீ' என்ற பள்ளத்தாக்கு வழியாகப் புறப்பட்டு வந்து அந்தப் பள்ளதாக்கின் மேற்குப் புறஓரத்தில் ஒட்டகையைப் படுக்கச் செய்து ஸுபுஹ் வரை ஓய்வெடுப்பார்கள். ஓய்வெடுக்கும் அந்த இடம் பாறையில் அமைந்துள்ள பள்ளிவாசலும் இல்லை. பள்ளியின் அருகிலுள்ள மணற்குன்றுமில்லை என்று இப்னு உமர்(ரலி) குறிப்பிட்டார்கள்.அங்கு பெரிய பள்ளம் ஒன்று இருந்தது. அவ்விடத்தில் இப்னு உமர்(ரலி) தொழுவார்கள். அதன் உட்புறத்தில் மணற் திட்டு இருந்தது. அங்கு நபி(ஸல்) அவர்கள் தொழுதிருக்கிறார்கள். தற்போது அந்தப் பள்ளத்திற்கு அருகிலிருந்த மணல் மேட்டைத் தண்ணீர் அரித்துக் கொண்டு வந்ததால் அது மூடப்பட்டுவிட்டது.

304. நாஃபிவு அறிவித்தார். 'நபி(ஸல்) அவர்கள் ஷரபுர்ரவ்ஹா எனும் இடத்திலுள்ள பெரிய பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள சின்னப் பள்ளிவாசல் இருக்கும் இடத்தில் தொழுதிருக்கிறார்கள்.' என்று இப்னு உமர்(ரலி) என்னிடம் கூறிவிட்டு, அந்த இடத்தை அடையாளம் கூறும்போது '(நீ மதீனாவிலிருந்து) மக்கா செல்லும வழியில் பாதையின் வலப்புறம் அமைந்த பெரிய பள்ளியில் நீ கிப்லா பக்கம் நோக்கி நின்றால் அந்த இடம், உன் வலப்புறத்தில் இருக்கும். அந்த இடத்திற்கும் நபி(ஸல்) அவர்கள் தொழுத இடத்திற்கும் தூரம் உள்ளது என்று குறிப்பிட்டார்கள்.

305. நாஃபிவு அறிவித்தார். (மதீனாவிலிருந்து மக்கா செல்லும் வழியில்) ரவ்ஹா எனுமிடம் உள்ளது. அவ்விடத்தில் ஒரு பள்ளிவாயில் இருக்கிறது. அப்பள்ளியிலிருந்து பாதையோரமாகப் பார்வை எட்டும் தொலைவின் இறுதியில் 'இரக்' எனும் பகுதி உள்ளது. அப்பகுதியில் இப்னு உமர்(ரலி) தொழுவார்கள். அந்த இடத்தில் பள்ளி ஒன்றும் கட்டப்பட்டிருந்தது. ஆயினும் அந்தப் பள்ளியில் இப்னு உமர்(ரலி) தொழுவதில்லை. தம் இடது புறத்தில் அந்தப் பள்ளிவாசல் இருக்குமாறும் அந்தப் பள்ளியை விட சற்று முன்னால் நின்றும் தொழுவார்கள். நபி(ஸல்) அவர்கள் அந்த இடத்தில் தொழுததால் இப்னு உமர்(ரலி) அவ்வாறு தொழுவார்கள்.'ரவ்ஹா' எனும் இடத்திலிருந்து அவர்கள் புறப்பட்டு (மக்காவுக்கு) வரும்போது இரக்கை அடையுமுன் லுஹா தொழ மாட்டார்கள். இரக்குக்கு வந்து லுஹர் தொழுவார்கள். மக்காவிலிருந்து (மதினாவுக்குத்) திரும்பி வரும்போது ஸுபுஹுக்குச் சற்று முன்னதாக, அல்லது ஸஹர் நேரத்தின் கடைசியில் இரக்கைக் கடக்க நேர்ந்தால் அங்கேயே ஓய்வெடுத்துவிட்டு ஸுபுஹ் தொழுவார்கள்.

306. நாஃபிவு அறிவித்தார். (மதீனாவிலிருந்து மக்கா) செல்லும் வழியில் வலப்புறம் அமைந்த 'ருவைஸா' எனும் சிற்றூருக்கு அருகிலுள்ள பெரிய மரத்தடியில் நபி(ஸல்) அவர்கள் இளைப்பாறுவார்கள். அவ்¥ரின் எல்லையிலிருந்து இரண்டு மைல் தொலைவில் அம்மரம் இருந்தது. அம்மரத்தின் கிளைகள் முறிந்து போய் அடிமரம் மட்டும் உள்ளது. அதன் நடுவில் பொந்து ஏற்பட்டிருந்தது. அதனருகே மணல் திட்டுக்கள் அனேகம் இருக்கின்றன. அந்த இடத்திலுள்ள மிருதுவான, விசாலமான திடலில்தான் நபி(ஸல்) அவர்கள் பயணத்தின்போது இளைப்பாறுவார்கள் என்று இப்னு உமர்(ரலி) என்னிடம் கூறினார்கள்.

307. நாஃபிவு அறிவித்தார். 'அர்ஜ் எனும் ஊருக்குப் பின் புறத்திலுள்ள நீரோடையின் ஓரத்தில் (உள்ள பள்ளிவாயிலில்) நபி(ஸல்) அவர்கள் தொழுவார்கள்' என இப்னு உமர்(ரலி) என்னிடம் கூறினார். அர்ஜ் எனுமிடம் (மதீனாவிலிருந்து) ஹல்பா செல்லும் வழியில் அமைந்துள்ளது. பாதையின் வலப்புறம் அமைந்துள்ள அப்பள்ளிவாயிலினருகில் கற்கள் நாட்டப்பட்ட இரண்டு மூன்று அடக்கத்தலங்கள் உள்ளன. அப்பாதையிலிருந்து பல கிளைப் பாதைகளும் பிரிகின்றன. அக்கிளைப் பாதைகளில் ஒன்றில் அர்ஜ் எனும் ஊருக்குள் நுழைந்து (ஓடைக் கரையில் அமைந்துள்ள) அப்பள்ளி வாயிலில் சூரியன் சாய்ந்து நண்பகலானதும் லுஹர் தொழுவார்கள்.

308. நாஃபிவு அறிவித்தார். 'ஹர்ஷா' எனும் மலைக்கருகில் (மதீனாவிலிருந்து செல்லும்) பாதையின் இடப்புறம் அமைந்த (ஓடையின் அருகிலுள்ள) மரங்களின் கீழ் இளைப்பாறுவார்கள். அந்த ஓடை 'ஹர்ஷா' எனும் மலையை ஒட்டிச் செல்கிறது. அந்த மலைக்கும் நபி(ஸல்) தங்கிய இடத்திற்குமிடையே அம்பு எய்தால் எவ்வளவு தூரமிருக்கும். இப்னு உமர்(ரலி) அம்மரங்களிலேயே மிகப் பெரிய மரத்தினருகில் தொழும் வழக்கமுடையவர்களாயிருந்தார்கள்.

309. நாஃபிவு அறிவித்தார். 'மர்ருள்ளஹ்ரான்' எனும் இடத்திற்கரும்லுள்ள ஓடையில் நபி(ஸல்) அவர்கள் இளைப்பாறுவார்கள். அந்த ஓடை (மக்காவிலிருந்து) மதீனா செல்லும் வழியிலுள்ளது. நீ மக்கா செல்லும் வழியிலுள்ளது. நீ மக்கா செல்லுமபோது 'ஸப்ராவாத்' என்ற இடத்தைக் கடந்ததும் சாலையின் இடப்புறம் அது உள்ளது. அந்தச் சாலைக்கும் நபி(ஸல்) அவர்கள் இளைப்பாறிய இடத்திற்கும் ஒரு கல்லெறியும் தூரமே உண்டு' என இப்னு உமர்(ரலி) என்னிடம் கூறினார்கள்.

310. நாஃபிவு அறிவித்தார். 'நபி(ஸல்) அவர்கள் (மதீனாவிலிருந்து) மக்கா செல்லும் 'தூத்துவா' என்ற இடத்தில் இரவு நேரம் தங்கிவிட்டு அங்கேயே காலையில் ஸுபுஹ் தொழுவார்கள்' என இப்னு உமர்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள் தொழத இடம் அங்குள்ள கெட்டியான மேட்டின் மேல் அமைந்துள்ளது. அது, தற்போது பள்ளிவசால் கட்டப்பட்டுள்ள இடமன்று, அது அந்தப் பள்ளிக்குக் கீழ்ப்புறமாக அமைந்த இடமாகும்.

311. நாஃபிவு அறிவித்தார். நபி(ஸல்)அவர்கள் ஒரு கணவாயிலும் தொழுதிருக்கிறார்கள். உயரமான மலைக்கும் அதன் அருகிலுள்ள மற்றொரு மலைக்கும் இடைப்பட்ட அந்தக் கணவாய் கஅபாவுக்கு நேராக அமைந்திருக்கும். தற்போது அங்குள்ள பள்ளிவாசல் இருக்கும் மேட்டைத் தம் இடதுபுறமாக ஆக்கி, அந்தப் பள்ளியிலிருந்து பத்து முழ தூரத்திலுள்ள கறுப்பு மேட்டில் நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள் என்று இப்னு உமர்(ரலி) என்னிடம் கூறினார்கள்.

இமாம் வைத்துள்ள தடுப்பே பின்பற்றுவோர்க்கும் போதுமானது.

312. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பெருநாள் அன்று (தொழுகை நடத்துவதற்காகத் திடல் நோக்கிச்) செல்லும்போது ஈட்டியை எடுத்து வருமாறு கூறுவார்கள். அவர்களுக்கு முன்னால் அது நாட்டப்பட்டதும் அதை நோக்கித் தொழுவார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னே இருப்பார்கள். பயணத்தின் போதும் இவ்வாறு செய்பவர்களாக இருந்தனர். இதனால்தான் (நம்முடைய) தலைவர்களும் அவ்வாறு செய்கின்றனர்.

313. அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் 'பத்ஹா' எனுமிடத்தில் லுஹரையும் அஸரையும் இரண்டிரண்டு ரக்அத்களாக தொழுகை நடத்தினார்கள்.. அவர்களுக்கு முன்பு கைத்தடி ஒன்று இருந்தது. அதற்கு முனனால் கழுதையும் பெண்களும் நடப்பவர்களாக இருந்தனர்.

தடுப்புக்கும் தொழுபவர்களுக்கும் எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும்.

314. ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தொழுமிடத்துக்கும் சுவற்றுக்குமிடையே ஓர் ஆடு நடக்குமளவுக்கு இடைவெளி இருக்கும்.

கைத்தடியை நோக்கித் தொழுவது.

315. அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார். நண்பகலில் நபி(ஸல்) அவர்கள் எங்களை நோக்கி வந்தனர். தண்¡ர் கொண்டு வரப்பட்டது. உளூச் செய்து எங்களுக்கு லுஹரையும் அஸரையும் தொழுகை நடத்தினார்கள். அவர்களுக்கு முன்னால் கைத்தடி ஒன்று இருந்தது. அந்தக் கைத்தடிக்கு முன்னால் பெண்களும் கழுதைகளும் சென்று கொண்டிருந்தனர்.

தூண்களை நோக்கித் தொழுவது.

316. யஸீத் இப்னு அபீ உபைத் கூறினார். நான் ஸலமா பனீ அல் அக்வஃ(ரலி) உடன் (பள்ளிக்கு) செல்பவர்களாக இருந்தேன். ஸலமா(ரலி) குர்ஆன் வைக்கப்படும் இடத்தில் அமைந்த தூணருகே தொழுவார்கள். அபூ முஸ்லிம் அவர்களே! இந்தத் தூணை தேர்ந்தெடுத்துத் தொழுகிறீர்களே?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இந்த இடத்தில் தொழுவதற்குச் சிரத்தை எடுப்பவர்களாக இருந்ததை பார்த்திருக்கிறேன்' என்று பதிலளித்தார்கள்.

ஜமாஅத் அல்லாத தொழுகைகளைத் தூண்களுக்கிடையே தொழுவது.

317. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களும் உஸாமா இப்னு ஸைத்(ரலி), பிலால்(ரலி), உஸ்மான் இப்னு தல்ஹா(ரலி) ஆகியோரும் கஅபாவுக்குள் நுழைந்தனர். நீண்ட நேரம் உள்ளிருந்துவிட்டு வெளியே வந்தனர். முதல் நபராக அவர்களைப் பின்தொடர்ந்து சென்று நபி(ஸல்) அவர்கள் எந்த இடத்தில் தொழுதனர்?' என்று பிலால்(ரலி) அவர்களிடம் கேட்டேன். 'முதலிலுள்ள இரண்டு தூண்களுக்கு இடையில்' என்று பிலால்(ரலி) விடையளித்தார்கள்.

ஒட்டகம், சாய்மானம், மரம் ஆகியவற்றைத் தடுப்பாக வைத்துத் தொழுதல்.

318. நாஃபிவு அறிவித்தார். 'நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஒட்டகத்தைக் குறுக்கே நிறுத்தி அதை நோக்கித் தொழுவார்கள்' என்று இப்னு உமர்(ரலி) கூறினார். 'ஒட்டகம் மிரண்டு ஓடிவிட்டால்...?' என்று கேட்டேன். 'ஒட்டகத்தின் மீது அமைக்கப்படும் சாய்மானத்தை எடுத்து அதை நோக்கித் தொழுவார்கள்' என்று கூறியதுடன் அவரும் அவ்வாறே செய்வார்.

கட்டிலை நோக்கித் தொழுவது.

319. ஆயிஷா(ரலி) அறிவித்தார். (பெண்கள், நாய்கள், கழுதைகள் தொழுபவருக்குக் குறுக்கே சென்றால் தொழுகை முறிந்து விடும் என்று கூறுவதன் மூலம்) எங்களை நாய்களுக்கும் கழுதைகளுக்கும் சமமாக்கி விட்டீர்களே! நான் கட்டிலில் படுத்திருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் கட்டிலுக்கு நேராக நின்று தொழுவார்கள். அவர்களுக்கு நேராகக் கால்களை நீட்டுவது எனக்குப் பிடிக்காததால் கட்டிலின் கால்கள் வழியாக நழுவிச் சென்று விடுவேன்.

தொழுபவருக்கு முன் நடந்து செல்பவரைத் தொழுபவர் தடுப்பது.

320. அபூ ஸாலிஹ் அறிவித்தார். எவரும் குறுக்கே செல்லாமலிருக்கத் தடுப்பு வைத்துக் கொண்டு அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) ஒரு வெள்ளிக்கிழமையன்று தொழுது கொண்டிருந்தார்கள். பனூ அபூ முயீத் என்ற கூட்டத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் குறுக்கே செல்ல முயன்றார். உடனே அபூ ஸயீத்(ரலி) அவரின் நெஞ்சில் கையால் தள்ளினார்கள். வேறு வழியேதும் உள்ளதா என்று அந்த இளைஞர் கவனித்தபோது, அபூ ஸயீத்(ரலி)யின் குறுக்கே செல்வதைத் தவிர அவருக்கு வேறு வழி தென்படவில்லை. எனவே மீண்டும் அவர்களுக்குக் குறுக்கே செல்ல முயன்றார். முன்பை விடக் கடுமையாக அபூ ஸயீத்(ரலி) அவரைத் தள்ளினார்கள். அதனால் அவருக்குப் பாதிப்பு ஏற்பட்டது. உடனே அவர் (அட்சித் தலைவராக இருந்த) மர்வானிடம் சென்று இது பற்றி முறையிட்டார். அவரைத் தொடர்ந்து அபூ ஸயீத்(ரலி) மர்வானிடம் சென்றார்கள். 'உமக்கும் உம் சகோதரர் மகனுக்குமிடையே என்ன பிரச்சினை?' என்று மர்வான் கேட்டார். 'உங்களில் எவரேனும் தமக்கு முன்னால் 'தடுப்பு' வைத்துத் தொழும்போது, எவரேனும் குறுக்கே செல்ல முயன்றால் அவரைத் தடுக்க வேண்டும்; அதை அவர் எதிர்த்தால் அவருடன் சண்டையிட வேண்டும். ஏனெனில் அவர் நிச்சயம் ஷைத்தானாவார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன்' என அபூ ஸயீத்(ரலி) கூறினார்.

தொழுபவருக்குக் குறுக்கே செல்வது குற்றமாகும்.

321. புஸ்ரு இப்னு ஸயீத் அறிவித்தார். தொழுபவரின் குறுக்கே செல்பவர் பற்றி நபி(ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றதை அறிந்து வருமாறு என்னை அபூ ஜுஹைம்(ரலி) அவர்களிடம் ஸைத் இப்னு காலித்(ரலி) அனுப்பி வைத்தார். 'தொழுபவருக்குக் குறுக்கே செல்பவர், அதனால் தமக்கு ஏற்படும் பாவத்தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்குக் குறுக்கே செல்வதற்குப் பதில் நாற்பது நாள்கள் நின்று கொண்டிருப்பது அவருக்கு நல்லதாகத் தோன்றும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஜுஹைம்(ரலி) விடையளித்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபுன் னழ்ரு என்பவர் 'நாற்பது ஆண்டுகள்'' என்று கூறினார்களா? அல்லது 'நாற்பது மாதங்கள்' அல்லது 'நாற்பது நாள்கள்' என்று கூறினார்களா? என்பது சரியாக தமக்கு நினைவில்லை என்கிறார்.

தூங்குபவரை நோக்கித் தொழுவது.

322. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது நான் அவர்களின் விரிப்பில் அவர்களுக்குக் குறுக்கே உறங்கிக் கொண்டிருப்போன். அவர்கள் வித்ருத தொழ எண்ணும்போது என்னை எழச் செய்வார்கள். அதன்பின்னர் வித்ருத் தொழுவேன்.

தொழும்போது சிறுமியைத் தோளில் தூக்கி வைத்துக் கொள்ளலாமா?

323. அபூ கதாதா அல் அன்ஸாரி(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் மகள் ஸைனப் அவர்களின் குழந்தை 'உமாமா'வைத் (தோளில்) சுமந்த நிலையில் தொழுதிருக்கிறார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லும்போது இறக்கி விடுவார்கள். நிற்கும்போது தூக்கிக் கொள்வார்கள்.

தொழுபவர் மீதுள்ள அசுத்தங்களை ஒரு பெண் அகற்றலாமா?

324. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் கஅபாவினருகில் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது குரை»கள் தங்கள் சபையில் குழுமியிருந்தனர். 'இந்த முகஸ்துதி விரும்பியை நீங்கள் பார்க்கவில்லையா?' என்று அவர்களில் ஒருவன் கேட்டான். இன்னாருடைய (அறுக்கப்பட்ட) ஒட்டகத்தினருகில் சென்று அதன் சாணத்தையும் இரதத்தையும் மற்றும் கருப்பையையும் எடுத்து வந்து இவர் ஸஜ்தாச் செய்யும் வரை காத்திருந்து அதை இவரின் இரண்டு தோள் புஜத்திலும் போட்டுவிட உங்களில் யார் தயார்?' என்று அவன் கேட்டான்.அவர்களில் மிக மோசமான ஒருவன் அதற்கு முன் வந்தான். நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்தபோது அதை அவர்களின் தோள் புஜத்தில் போட்டான். நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாவிலேயே கிடந்தார்கள். ஒருவரின் மீது ஒருவர் சாய்ந்து விடும் அளவுக்குக் குரை»கள் சிரிக்கலானார்கள். சிறுமியாக இருந்த ஃபாத்திமா(ரலி) அவர்களிடம் ஒருவர் சென்று இதைத் தெரிவித்ததும் அவர்கள் ஓடோடி வந்தார்கள். அவர்கள் வந்து அசுத்தங்களை அகற்றும் வரை ஸஜ்தாவிலேயே நபி(ஸல்) அவர்கள் கிடந்தார்கள். பின்பு குரைஷிகளை ஃபாத்திமா(ரலி) ஏச ஆரம்பித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் 'இறைவா! குரைஷிகளை நீ பார்த்துக் கொள்! இறைவா! குரைஷிகளை நீ பார்த்துக் கொள்! இறைவா! குரைஷிகளை நீ பார்த்துக் கொள்!'' என்று கூறிவிட்டு 'அம்ர் இப்னு ஹிஷாம், உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உக்பா, உமய்யா இப்னு கலப், உக்பா இப்னு அபீ முயீத், உமாரா இப்னு வலீத் ஆகியோரை இறைவா! நீ பார்த்துக் கொள்! என்று கூறினார்கள்.அல்லாஹ்வின் மீது ஆணையாக பத்ருப் போரில் இவர்களெல்லாம் வேரற்ற மரங்கள் போல் மாண்டு மடிந்ததையும் பத்ருக்களத்திலுள்ள பாழடைந்த கிணற்றில் இவர்கள் போடப் பட்டதையும் பார்த்தேன்.''பாழடைந்த கிணற்றுவாசிகள் சாபத்திற்கு ஆளானார்கள்'' என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

0 comments:

Post a Comment