Monday 22 June 2009

[பாடம்-9] தொழுகை நேரங்கள்.

தொழுகையின் சிறப்பும் அவற்றின் நேரங்களும்.

325. ஸுஹ்ரி அறிவித்தார். உமர் இப்னு அப்தில் அஜீஸ் ஒரு நாள் தொழுகையைத் தாமதப் படுத்திவிட்டார்கள். அப்போது உர்வா இப்னு ஸுபைர் அவரிடம் வந்து பின்வரும் நிகழ்ச்சியைக் கூறி (அவரின் செயலைக் கண்டிக்கலா)னார்கள்.

இராக்கில் இருக்கும்போது ஒரு நாள் முகீரா இப்னு ஷுஅபா(ரலி) தொழுகையைத் தாமதப் படுத்திவிட்டார்கள். அப்போது அபூ மஸ்வூத் அல் அன்ஸாரி(ரலி), அவரிடம் வந்து, 'முகீராவே! இது என்ன? ஜிப்ரீல்(அலை) அவர்கள் இறங்கி (ஃபஜ்ருத்) தொழ, நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (லுஹர்) தொழ, நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (அஸர்) தொழ நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (மக்ரிப்) தொழ நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின் இஷா தொழ, நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்னர் நபியிடம் ''இந்நேரங்களில் தொழ வேண்டும் என்றே உமக்குக் கட்டளையிடப் பட்டுள்ளது' என்றும் ஜிப்ரீல்(அலை) அவர்கள் கூறினார்கள். இதை நீர் அறியவில்லையா?' என்று கேட்டார்கள்.

தொழுகை (பாவங்களின்) பரிகாரம்.

326. ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். நாங்கள் உமர்(ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது, 'நபி(ஸல்) அவர்கள் ஃபித்னாவைப் பற்றிக் கூறியதை உங்களில் அறிந்திருப்பவர் யார்? என்று கேட்டார்கள். (ஃபித்னா என்ற வார்த்தைக்குச் சோதனைகள், துன்பங்கள் என்று பொருளும் குழப்பங்கள் என்ற பொருளும் உண்டு.) நபி(ஸல்) அவர்கள் கூறிய மாதிரியே நான் அதை அறிந்திருக்கிறேன் என்றேன். அதற்கு உமர்(ரலி) 'நீர் அதற்குத் தகுதியானவர் தாம்' என்றனர். ஒரு மனிதன் தம் குடும்பத்தினரிடமும் தம் சொத்துக்களிலும் தம் குழந்தைகளிடமும் தம் அண்டை வீட்டாரிடமும் (அளவு கடந்த நேசம் வைப்பதன் மூலம்) ஃபித்னாவில் (சோதனையில்) ஆழ்த்தப்படும்போது, தொழுகை, நோன்பு, தர்மம், (நல்லதை) ஏவுதல், (தீமையை) விலக்குதல் ஆகிய காரியங்கள் அதற்குப் பரிகாரமாகும் என்றும் நான் விடையளித்தேன்.அதற்கு உமர்(ரலி), 'நான் இதைக் கருதவில்லை' என்றனர். 'கடலலை போல் அடுக்கடுக்காக ஏற்படும் (நபிகளால் முன்னறிவிக்கப்பட்ட) ஃபித்னா (குழப்பங்கள்) பற்றியே கேட்கிறேன்' என்று கூறினார்கள். இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அந்தக் குழப்பங்களுக்கும் உங்களுக்கும் யாதொரு சம்மந்தமுமில்லை. உங்களுக்கும் அந்தக் குழப்பங்களுக்கு மிடையே மூடப்பட்ட கதவு உள்ளது என கூறினேன். 'அக்கதவு திறக்கப்படுமா? உடைக்கப்படுமா?' என உமர்(ரலி) கேட்டார்கள். நான் உடைக்கப்படும் என்றேன். 'அப்படியாயின் அது ஒருக்காலும் மூடப்படாது' என்று உமர்(ரலி) கூறினார்.ஷகீக் கூறினார். அந்தக் கதவு எதுவென உமர்(ரலி) அறிவார்களா? என்று ஹுதைஃபா(ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். 'ஆம்! பகலுக்குப் பின்னர் இரவு என்பதை அறிவது போல் அதை உமர்(ரலி) அறிவார்கள். பொய்கள் கலவாத செய்தியையே நான் அவர்களுக்கு அறிவித்தேன்' என்று ஹுதைஃபா(ரலி) கூறினார். அந்தக் கதவு எதுவென ஹுதைஃபா(ரலி) அவர்களிடம் கேட்க நாங்கள் அஞ்சி, மஸ்ரூக்கைக் கேட்கச் செய்தோம். அதற்கு ஹுதைஃபா(ரலி) 'அந்தக் கதவு உமர்(ரலி) தாம்' என்றார்கள்.

327. இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ஒருவர் அன்னியப் பெண்ணை முத்தமிட்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்து (பரிகாரம் கேட்டு) இந்த விபரத்தைக் கூறினார். 'பகலின் இரண்டு ஓரங்களிலும் இரவின் ஒரு பகுதியிலும் தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக நல்ல காரியங்கள் தீய காரியங்களை அகற்றிவிடும்'' (திருக்குர்ஆன் 11:114) என்ற வசனத்தை இறைவன் அருளினான். அப்போது அந்த மனிதர் 'இறைத்தூதர் அவர்களே! இது எனக்கு மட்டுமா?' என்று கேட்டதற்கு 'என் சமுதாயம் முழுமைக்கும்'' என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

328. இப்னு மஸ்ஊத்(ரலி) கூறினார். ஒருவர் (அன்னியப்) பெண் ஒருத்தியை முத்தமிட்டுவிட்டார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் வந்து (பரிகாரம் கேட்டு), இந்த விவரத்தைக் கூறினார். அப்போது 'பகலின் இரண்டு ஓரங்களிலும் இரவின் நிலைகளிலும் தொழுகையை நிலை நாட்டுங்கள். திண்ணமாக, நன்மைகள் தீமைகளைக் களைந்து விடுகின்றன. அல்லாஹ்வை நினைவு கூர்கிறவர்களுக்கு இது ஒரு நினைவூட்டி ஆகும்'' எனும் (திருக்குர்ஆன் 11:114 வது) இறைவசனம் அருளப்பட்டது. அந்த மனிதர், 'இது எனக்கு மட்டுமா? (அல்லது அனைவருக்குமா?)'' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'என் சமுதாயத்தினரில் இதன்படி செயல்படும் அனைவருக்கும்தான்'' என்று பதிலளித்தார்கள்.

தொழுகையை உரிய நேரத்தில் தொழுவதன் சிறப்பு.

329. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, 'தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்'' என்று பதில் கூறினார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். 'பெற்றோருக்கு நன்மை செய்தல்'' என்றார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். 'இறைவழியில் அறப்போர் புரிதல்'' என்றனர். எனக்கு இவற்றை நபி(ஸல்) அவர்கள் அறிவித்தனர். (கேள்வியை) மேலும் நான் அதிகப்படுத்தியிருந்தால் நபி(ஸல்) அவர்களும் மேலும் சொல்லியிருப்பார்கள்.

ஐவேளைத் தொழுகைகள் பாவங்களின் பரிகாரங்களாகும்.

330. அபூஹுரைரா (ரலி) அறிவித்தார். ''உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள்'' என்று தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது' என நபித் தோழர்கள் கூறினர். 'இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தொழுபவர் தம் இறைவனுடன் உரையாடுகிறார்.

331. ''ஸஜ்தாவில் நடுநிலையைக் கடைப்பிடியுங்கள்! கைகளை நாய் விரிப்பது போல் விரிக்கலாகாது! துப்பும்போது தமக்கு முன்புறமோ தம் வலப்புறமோ துப்பலாகாது! ஏனெனில் அவர் தம் இறைவனுடன் தனிமையில் உரையாடிக் கொண்டிருக்கிறார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''என அனஸ்(ரலி) அறிவித்தார்.

கடுமையான வெப்பத்தில் லுஹரைத் தாமதப் படுத்துவது.

332. ''வெப்பம் கடுமையாகும்போது (வெப்பம் தணியும் வரை) லுஹரைத் தாமதப் படுத்துங்கள்! ஏனெனில் கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்படாகும். ''இறைவா! என்னுடைய ஒரு பகுதி, மறுபகுதியைச் சாப்பிட்டு விட்டது என்று நரகம் இறைவனிடம் முறையிட்டது. கோடையில் ஒரு மூச்சு விடுவதற்கும் குளிரில் ஒரு மூச்சு விடுவதற்கும் இறைவன் அதற்கு அனுமதி வழங்கினான். கோடை காலத்தில் நீங்கள் காணும் கடுமையான வெப்பமும் குளிர் காலத்தில் நீங்கள் உணரும் கடும் குளிரும் அதன் வெளிப்பாடுகள் தாம் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

பயணத்தில் லுஹரைத் தாமதப் படுத்துவது.

333. அபூதர் (ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்திலிருந்தோம். முஅத்தின் லுஹருக்கு பாங்கு சொல்ல முனைந்தபோது, 'கொஞ்சம் பொறு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் மீண்டும் பாங்கு சொல்ல அவர் முனைந்தபோது 'கொஞ்சம் பொறு' என்றனர். மணல் திட்டுகளின் நிழலை நாங்கள் பார்க்கும்வரை தாமதப்படுத்தினார்கள். 'கடுமையான வெப்பம், நரக வெப்பத்தின் வெளிப்பாடாகும். எனவே வெப்பம் கடுமையாகும்போது (லுஹர்) தொழுகையைத் தாமதப் படுத்துங்கள்! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

சூரியன் சாய்ந்த பின்பே லுஹர் நேரம் ஆரம்பமாகிறது.

334.
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் சூரியன் சாய்ந்தபோது வெளியே வந்து லுஹர் தொழுதார்கள். மிம்பர் (மேடை) மீது ஏறி உலக முடிவு நாள் பற்றியும் குறிப்பிட்டார்கள். அந்நாளில் பயங்கரமான பல காரியங்கள் நிகழும் என்றும் குறிப்பிட்டார்கள். 'எதைப் பற்றியேனும் எவரேனும் கேட்க விரும்பினால் அவர் என்னிடம் கேட்கலாம். இந்த இடத்தில் நான் இருக்கும் வரை நீங்கள் எதைப் பற்றிக் கேட்டாலும் உங்களுக்கு அறிவிக்காதிருக்க மாட்டேன்'' என்றும் குறிப்பிட்டார்கள். மக்கள் மிகுதியாக அழலானார்கள். நபி(ஸல்) அவர்கள் 'என்னிடம் கேளுங்கள்'' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஹுதாபா' என்பவரின் மகன் அப்துல்லாஹ் என்பவர் எழுந்து 'என் தந்தை யார்?' என்று கேட்டார். 'உன் தந்தை ஹுதாபா'' என்று நபி(ஸல்) கூறிவிட்டு 'என்னிடம் கேளுங்கள்'' என்று மிகுதியாகக் குறிப்பிட்டார்கள். (இந்நிலையைக் கண்ட) உமர்(ரலி) மண்டியிட்டமர்ந்து 'அல்லாஹ்வை இரட்சகனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத்(ஸல்) அவர்களை நபி என்றும் நாங்கள் திருப்தியுடன் ஏற்றோம்' என்று கூறியதும் நபி(ஸல்) அவர்கள் மவுனமானார்கள். பின்னர் 'சற்று முன் இந்தச் சுவற்றின் நடுவில் சுவர்க்கமும் நரகமும் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டன. (அவ்விடத்தில் கண்டது போல்) நல்லதையும் கெட்டதையும் நான் கண்டிருக்கவில்லை'' என்றார்கள்.

335. அபூ பர்ஸா(ரலி) அறிவித்தார். எங்களில் ஒருவர் தம் அருகிலிருப்பவரை அறிந்து கொள்ளும் (அளவில் வெளிச்சம் ஏற்படும்) சமயத்தில் நபி(ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுபவர்களாக இருந்தனர். அறுபது (வசனங்கள்) முதல் நூறு வரை ஸுப்ஹில் ஓதுவார்கள். சூரியன் (உச்சியிலிருந்து) சாயும்போது லுஹர் தொழுபவர்களாக இருந்தனர். அஸரையும் தொழுவார்கள். (அஸர் தொழுகையை நிறைவேற்றிய) எங்களில் ஒருவர் மதீனாவின் கடைக் கோடிக்குச் சென்றுவிட்டுத் திரும்பி வந்தால் சூரியன் உயிருடன் (அதாவது ஒளி குன்றாமல்) இருந்து கொண்டிருக்கும். இந்த ஹதீஸை அபூ பர்ஸாவிடமிருந்து அறிவிக்கும் அபுல் மின்ஹால், 'மக்ரிப் பற்றி அபூ பர்ஸா(ரலி) கூறியதை நான் மறந்து விட்டேன். இஷாவை இரவின் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்வரை அல்லது இரவின் பாதிவரை தாமதப் படுததுவது பற்றிப் பெருட்படுத்த மாட்டார்கள் என அபூ பர்ஸா(ரலி) குறிப்பிட்டார்கள்' என்கிறார்.

லுஹரை அஸர் வரை தாமதப் படுத்துவது.

336. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் மக்ரிப், இஷாவை ஏழு ரக்அத்களாகவும் லுஹர் அஸரை எட்டு ரக்அத்களாகவும் தொழுகை நடத்தினார்கள்.

அஸர் நேரம்.

337. ஸய்யார் இப்னு ஸலாமா கூறினார். நானும் என்னுடைய தந்தையும் அபூ பர்ஸா(ரலி) அவர்களிடம் சென்றோம். 'கடமையான தொழுகையை நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுவார்கள்?' என்று என் தந்தை கேட்டார். நீங்கள் முதல் தொழுகை என்று கூறக்கூடிய நண்பகல் தொழுகையை (நடுவானிலிருந்து) சூரியன் சாயும்போது நபி(ஸல்) அவர்கள் தொழுவார்கள். எங்களில் ஒருவர் (அஸர் தொழுதுவிட்டு) மதீனாவின் கடைக் கோடியிலுள்ள தம் இடத்திற்குத் திரும்பும்போது சூரியன் உயிருடன் (ஒளி குன்றாமல்) இருந்து கொண்டிருக்கும்' என்றார்கள். மக்ரிப் பற்றி அபூ பர்ஸா(ரலி) கூறியதை நான் மறந்து விட்டேன். 'கடைசித் தொழுகை என்று நீங்கள் குறிப்பிடக் கூடிய இஷாவைப் பிற்படுத்துவதை விரும்புபவர்களாக நபி(ஸல்) அவர்கள் இருந்தனர். இஷாவுக்குப் பின் பேசிக் கொண்டிருப்பதையும் நபி(ஸல்) அவர்கள் வெறுப்பவர்களாக இருந்தனர். அறுபது முதல் நூறு வசனங்கள் வரை ஓதி நபி(ஸல்) அவர்கள் வைகறைத் தொழுகையைத் தொழுது முடிக்கும்போது ஒருவர் தம் அருகில் அமர்ந்திருப்பவரை அறிந்து கொள்ள முடியும்' என அபூ பர்ஸா(ரலி) கூறினார்.

338. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நாங்கள் அஸர் தொழுதுவிட்டு, மதீனாவிலுள்ள (குபா-பகுதியில் இருந்த) பனூ அம்ர் இப்னு அவ்பு குலத்தாரிடம் சென்றால் அவர்கள் அஸர் தொழுது கொண்டிருப்பதைக் காண்போம்.

339. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். சூரியன் உயரத்தில் ஒளி வீசிக் கொண்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுபவர்களாக இருந்தனர். மேட்டுப் பாங்கான பகுதிக்குச் செல்பவர் அங்கே சென்றடையும்போது சூரியன் உயரத்திலேயே இருக்கும். சில மேட்டுப் பாங்கான பகுதிகள் மதீனாவிலிருந்து நான்கு மைல் அல்லது கிட்டததட்ட அந்த அளவு தூரத்தில் அமைந்திருந்தன.

அஸர் தொழுகை தவறி விட்டவனின் பாவம்.

340. ''யாருக்கு அஸர் தொழுகை தவறிவிட்டதோ அவன் குடும்பமும் சொத்துக்களும் அழிக்கப் பட்டவனைப்போன்று இருக்கிறான' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

அஸர் தொழுகையை விட்டவனின் நிலை.

341. அபுல் மலீஹ் அறிவித்தார். மேகம் சூழ்ந்த ஒரு நாளில் புரைதா(ரலி)வுடன் ஒரு போரில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். அப்போது அவர்கள், 'அஸர் தொழுகையை முன் வேளையில் நிறைவேற்றுங்கள். ஏனெனில் 'அஸர் தொழுகையை விட்டு விடுகிறவரின் செயல்கள் நிச்சயமாக அழிந்து விடுகின்றன'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்' என்று குறிப்பிட்டார்கள்.

அஸர் தொழுகையின் சிறப்பு.

342. ஜரீர்(ரலி) அறிவித்தார். நாங்கள் முழு நிலவுள்ள இரவில் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் முழு நிலவை நோக்கி 'இந்த நிலவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பது போல் நிச்சயமாக உங்களுடைய இறைவனைக் காண்பீர்கள்! சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்!'' என்று கூறிவிட்டு, 'சூரியன் உதிக்கும் முன்னரும் மறையும் முன்னரும் உம்முடைய இறைவனின் புகழைத் துதிப்பீராக!'' (திருக்குர்ஆன் 50:39) என்ற இறைவசனத்தையும் ஓதிக் காண்பித்தார்கள்.

343. ''இரவு நேரத்து வானவர்களும் பகல் நேரத்து வானவர்களும் தொடர்ந்து உங்களிடம் ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருப்பார்கள். பஜ்ருத் தொழுகையிலும் அஸர் தொழுகையிலும் இரண்டு சாராரும் சந்திக்கின்றனர். பின்னர் உங்களுடன் இரவு தங்கியவர்கள் மேலேறிச் செல்கின்றனர். 'என் அடியார்களை எந்த நிலையில்விட்டு வந்தீர்கள்?' என்று அவர்களிடம் இறைவன் இதுபற்றி தெரிந்து கொண்டே விசாரிப்பான். 'அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போதே அவர்களிடம் சென்றோம். அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போதே அவர்களை விட்டுவிட்டு வருகிறோம்'' என்று அவர்கள் விடையளிப்பார்கள' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

சூரியன் மறையும் முன் அஸர் தொழுதல்.

344. சூரியன் மறைவதற்கு முன் அஸர் தொழுகையில் ஒரு ஸஜ்தாவை (ஒரு ரக்அத்தை) அடைந்தால் அவர் தம் தொழுகையை முழுமைப் படுத்தட்டும்! ஸுப்ஹுத் தொழுகையில் ஒரு ஸஜ்தாவை (ஒரு ரக்அத்தை) சூரியன் உதிக்கு முன் அடைந்தால் அவர் தம் தொழுகையை முழுமைப்படுத்திக் கொள்ளட்டும்!''என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

345. ''உங்களுக்கு முன் சென்ற சமுதாயத்துடன் நீங்கள் வாழும் காலத்தை ஒப்பிடும்போது நீங்கள் (இவ்வுலகில்) வாழ்ந்து அஸரிலிருந்து சூரியன் மறையும்வரை உள்ள நேரம் போன்றதேயாகும். தவ்ராத்திற்குரியவர்கள் தவ்ராத் வழங்கப்பட்டார்கள். நடுப்பகல் வரை அவர்கள் வேலை செய்து ஓய்ந்தார்கள். (ஒவ்வொருவரும்) ஒவ்வொரு 'கீராத்' கூலி கொடுக்கப்பட்டார்கள். பின்னர் இஞ்ஜீல் உடையவர்கள் இஞ்ஜீல் வழங்கப்பட்டார்கள். அவர்கள் (நண்பகலிலிருந்து) அஸர் வரை வேலை அவர்களும் ஓய்ந்தார்கள். அவர்களும் ஒவ்வொரு 'கீராத்' கூலி வழங்கப்பட்டார்கள். பின்னர் நாம் குர்ஆன் வழங்கப்பட்டோம். (அஸரிலிருந்து) சூரியன் மறையும்வரை நாம் வேலை செய்தோம். இரண்டிரண்டு 'கீராத்' வழங்கப்பட்டோம்.'எங்கள் இறைவா! இவர்களுக்கு மாத்திரம் இரண்டிரண்டு 'கீராத்'கள் வழங்கியுள்ளாய். எங்களுக்கோ ஒவ்வொரு 'கீராத்' வழங்கி இருக்கிறாய். நாங்கள் அவர்களை விடவும் அதிக அளவு அமல் செய்திருக்கிறோமே! என்று இரண்டு வேதக்காரர்களும் கேட்பார்கள். அதற்கு இறைவன் 'உங்களின் கூலியில் எதையும் நான் குறைத்திருக்கிறேனா?' என்று கேட்பான். அவர்கள் 'இல்லை' என்பர். 'அது என்னுடைய அருட்கொடை! நான் விரும்பியவர்களுக்கு அதனை வழங்குவேன்' என்று இறைவன் விடையளிப்பான் என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

(குறிப்பு: கீராத்' என்பது உஹது மலையளவு தங்கம்; என்று வேறு ஹதீஸ்களில் விளக்கம் கூறப்படுகிறது.)

மஃரிபு நேரம் பற்றியது.

346. ராபிவு இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுடன் மஃரிபைத் தொழுதுவிட்டு எங்களில் ஒருவர் திரும்பி அம்பு எய்தால் அவர் அம்பு விழும் இடத்தைப் பார்க்க முடியும். (அதாவது அந்த அளவு வெளிச்சம் இருக்கும்.)

347. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார். ''நபி(ஸல்) அவர்கள் நண்பகலில் லுஹர் தொழுவார்கள். சூரியன் தெளிவாக இருக்கும்போது அஸர் தொழுவார்கள். சூரியன் மறைந்ததும் மக்ரிப் தொழுவார்கள். இஷாவை சில நேரம் முன்னேரத்திலும் சில நேரம் பின்னேரத்திலும் தொழுவார்கள். அதாவது மக்கள் ஒன்று சேர்ந்துவிட்டால் முற்படுத்துவார்கள். மக்கள் வருவதற்கு தாமதமானால் தாமதப் படுத்துவார்கள். ஸுப்ஹைக் காலை வெளிச்சம் வருவதற்கு முன்னால் தொழுபவர்களாக இருந்தனர்.

மக்ரிப் தொழுகையை இஷாத் தொழுகை எனக் கூறலாகாது.

348. 'மக்ரிப் தொழுகையை இஷா (இரவுத் தொழுகை) என நாட்டுப்புற அரபிகள் குறிப்பிடுகின்றனர். நீங்கள் மக்ரிப் எனக் கூறும் விஷயத்தில் உங்களை அவர்கள் வென்று விட வேண்டாம் என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார் என அப்துல்லாஹ் அல்முஸ்னீ(ரலி) அறிவித்தார்.

இஷாவின் சிறப்பு.

349. ஆயிஷா(ரலி) அறிவித்தார். இஸ்லாம் நன்கு பரவுவதற்கு முன்னர் நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவு இஷாவைப் பிற்படுத்தினார்கள். 'பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர்' என உமர்(ரலி) தெரிவிக்கும் வரை நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்த வரவில்லை. அதன் பின்னர் வந்து பள்ளியிலுள்ளவர்களை நோக்கி 'இப்பூமியிலுள்ளவர்களில் உங்களைத் தவிர வேறு எவரும் இதை எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை'' என்றார்கள்.

350. அபூ மூஸா(ரலி) அறிவித்தார். நானும் என்னுடன் கப்பலில் வந்த என் தோழர்களும் 'புத்ஹான்' எனும் தோட்டத்தில் தங்கினோம். நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் இருந்தனர். ஒவ்வொரு இரவும் இஷாத் தொழுகைக்கு எங்களில் ஒரு (சிறு) கூட்டத்தினர் முறை வைத்து நபி(ஸல்) அவர்களிடம் செல்பவர்களாக இருந்தோம். நானும் என் தோழர்களும் (எங்கள் முறையின் போது) நபி(ஸல்) அவர்களைச் சந்தித்தோம். அவர்கள் தங்களின் காரியத்தில் ஈடுபட்டிருந்ததால் நள்ளிரவு நேரம் வரும்வரை இஷாவைத் தாமதப் படுத்தினார்கள். பின்னர் புறப்பட்டு வந்து மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் வந்திருந்தோரை நோக்கி 'அப்படியே இருங்கள்! இந்த நேரத்தில் உங்களைத் தவிர வேறு எவரும் தொழவில்லை. இது அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடைகளில் ஒன்றாகும்' எனக் குறிப்பிட்டார்கள். நபி(ஸல்) அவாகளிடமிருந்து இதைக் கேட்டதனால் நாங்கள் மகிழ்வுற்றோம்.

இஷாவுக்கு முன்னர் தன்னை மீறி உறங்குதல்.

351. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.நபி(ஸல்) அவர்கள் இஷாவைத் தாமதப் படுத்தினார்கள். 'சிறுவர்களும் பெண்களும் உறங்கிவிட்டனர்; தொழுகை நடத்த வாருங்கள் என்று உமர்(ரலி) அழைக்கும் வரை நபி(ஸல்) அவர்கள் வரவில்லை. பிறகு வந்து 'உங்களைத் தவிர இப்பூமியிலுள்ளவர்களில் வேறு எவரும் இந்தத் தொழுகைக்காகக் காத்துக் கொண்டிருக்கவில்லை' எனக் குறிப்பிட்டார்கள். அன்றைய தினத்தில் மதீனாவைத் தவிர வேறு எங்கும் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருக்கவில்லை. செம்மேகம் மறைந்தது முதல் இரவின் மூன்று பாகத்தில் முந்திய பகுதி முடியும் வரை இஷாத் தொழுபவர்களாக இருந்தனர்.

இப்னு அப்பாஸ்(ரலி)அவர்கள் அறிவிக்கும் மற்றொரு நபிமொழியில் நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவு இஷாவைத் தாமதப் படுத்தினார்கள். மக்கள் எல்லாம் உறங்குவதும் விழிப்பதும் மீண்டும் உறங்குவதும் விழிப்பதுமாக இருந்தனர். அப்போது உமர்(ரலி) எழுந்து 'தொழுகை' எனக் கூறினார்கள். உடன் நபி(ஸல்) அவர்கள் தலையிலிருந்து நீர் சொட்டத் தம் கையைத் தலையில் வைத்தவர்களாகப் புறப்பட்டதை இன்று பார்ப்பது போலுள்ளது. 'என் சமுதாயத்திற்குச் சிரமமாகாது என்றால் அவர்களை இந்த நேரத்தில் தொழுமாறு கட்டளையிட்டிருப்பேன்'' என்று அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

352. நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு தம் கைகளைத் தலையில் வைத்தார்கள் என்று நான் 'அதா' அவர்களிடம் விளக்கம் கேட்டபோது அவர்கள் தம் விரல்களைச் சற்று விரித்து, விரல்களின் முனைகளைத் தலை உச்சியில் வைத்து அவர்களின் பெருவிரல், காது ஓரங்கள், நெற்றிப் பொட்டு, தாடியின் ஓரங்கள் ஆகியவற்றில் படுமாறு அழுத்தித் தடவி, இப்னு அப்பாஸ்(ரலி) செய்து காட்டியது போல் செய்து காட்டினார்கள் என்று இப்னு ஜுரைஜ் குறிப்பிடுகிறார்.

இஷா நேரம் பாதி இரவு வரை உள்ளது.

353. அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையைப் பாதி இரவுவரை பிற்படுத்தினார்கள். பின்பு தொழுதுவிட்டு உறங்கிவிட்டனர். தொழுகைக்காகக் காத்துக் கொண்டிருக்கும் வரை நீங்கள் தொழுகையிலேயே இருக்கிறீர்கள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அன்றிரவு அவர்கள் அணிந்திருந்த மோதிரத்தின் பிரகாசத்தை இப்போது பார்ப்பது போலுள்ளது.

ஃபஜ்ருத் தொழுகையின் சிறப்பு.

354. 'பகலின் வெப்பம் குறைந்த இரண்டு நேரத் தொழுகைகளை (அதாவது பஜ்ரு, அஸர் தொழுகைகளை முறையாகத்) தொழுகிறவர் சுவர்க்கத்தில் நுழைவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

ஃபஜ்ருடைய நேரம்.

355. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் ஸஹர் செய்துவிட்டுப் பின்னர் (ஃபஜ்ர்) தொழுகைக்குத் தயாரானோம்.) 'ஸஹருக்கும் தொழுகைக்குமிடையே எவ்வளவு இடைவெளி இருக்கும்?' என்று கேட்டேன். அதற்கு ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ஐம்பது அல்லது அறுபது வசனங்கள் (ஓதும்) நேரம்' என்று பதிலளித்தார்கள் என அனஸ்(ரலி) கூறினார்.

356. ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) அறிவித்தார். நான் என் இல்லத்தில் ஸஹர் செய்துவிட்டு, நபி(ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் கலந்து கொள்வதற்காக அவசரமாகப் புறப்படுபவனாக இருந்தேன்.

சூரியன் உதிக்கும் வரை ஃபஜ்ருக்குப் பின் தொழலாகாது.

357. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஸுப்ஹுக்குப் பிறகிலிருந்து சூரியன் உதிக்கும் வரை தொழுவதையும் அஸருக்குப் பிறகிலிருந்து சூரியன் மறையும் வரை தொழுவதையும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என நம்பிக்கைக்குரிய பலர் என்னிடம் கூறியுள்ளனர். அவர்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர் உமர்(ரலி) ஆவார்.

358. ''சூரியன் உதிக்கும் நேரத்தையோ மறையும் நேரத்தையோ உங்கள் தொழுகைக்காக நாடாதீர்கள் என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

359. ''சூரியன் உதிக்கத் துவங்கும்போது அது (முழுமையாக) உயரும் வரை தொழுவதைத் தாமதப்படுத்துங்கள்! சூரியன் மறையத் துவங்கும்போது அது முழுமையாக மறையும் வரை தொழுகையைப் பிற்படுத்துங்கள்! ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

360. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இரண்டு வியாபாரங்களை விட்டும் ஆடை அணியும் இரண்டு முறைகளை விட்டும் இரண்டு தொழுகைகளை விட்டும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள். (இரண்டு தொழுகைகளாவன) ஃபஜ்ருக்குப் பிறகிலிருந்து சூரியன் உதிக்கும்வரை தொழுவதையும் அஸருக்குப் பிறகிலிருந்து சூரியன் மறையும்வரை தொழுவதையும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள். (ஆடை அணியும் இரண்டு முறைகளாவன) ஓர் ஆடை மட்டும் உள்ளபோது தம் கைகள் உள்ளே இருக்குமாறு சுற்றி அதை அணிந்து கொள்வதையும் மர்ம உறுப்பு வானுக்குத் தெரியுமாறு ஓர் ஆடையை முழங்காலைச் சுற்றிக் கட்டிக் கொள்வதையும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள். 'முனாபதா', 'முலாமஸா' என்ற இரண்டு வியாபாரங்களை விட்டும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

(குறிப்பு: இந்தக் கல் எந்தப் பொருளின் மீது விழுகிறதோ அந்தப் பொருளை இவ்வளவு விலைக்குத் தருகிறேன் என்று கூறி விற்பது முனாபதா எனப்படும். குவிக்கப்பட்ட பொருட்களைப் பிரித்துப் பார்க்கவிடாமல் அதைத் தொட்டுப் பார்க்க மட்டுமே அனுமதிக்கும் வியாபாரம் முலாமஸா எனப்படும்)

சூரியன் மறையும் முன் தொழுவதை நாடலாகாது.

361. முஆவியா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் தோழமை கொண்டிருந்தோம். அவர்கள் தொழுது நாங்கள் பார்க்காத ஒரு தொழுகையை நீங்கள் தொழுகிறீர்கள். நபி(ஸல்) அவர்கள் அதைத் தடுத்துமிருக்கிறார்கள். அதுதான் அஸருக்குப் பின் இரண்டு ரக்அத்கள்.

விடுபட்ட தொழுகைகள் போன்றவற்றை அஸருக்குப் பின் தொழலாம்.

362. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களைக் கொண்டு சென்றவன் மேல் ஆணையாக! அஸருக்குப் பின் இரண்டு ரக்அத்களை இறைவனைச் சந்திக்கும்வரை நபி(ஸல்) அவர்கள்விட்டு விடவில்லை. தொழுவதற்குச் சிரமப்படும் நிலையை அடைந்த பிறகே மரணம் அடைந்தார்கள். அஸருக்கு பின்னுள்ள இரண்டு ரக்அத்களை பெரும்பாலும் உட்கார்ந்தே தொழுபவர்களாக இருந்தனர். தம் உம்மத்தினருக்குச் சிரமத்தை ஏற்படுத்துவதை அஞ்சிப் பள்ளியில் அந்த இரண்டு ரக்அத்களை தொழ மாட்டார்கள். தம் உம்மத்தினருக்கு இலேசானதையே நபி(ஸல்) அவர்கள் விரும்புவார்கள்.

363. ஆயிஷா(ரலி) அறிவித்தார். இரண்டு தொழுகைகளை இரகசியமாகவோ பகிரங்கமாகவோ நபி(ஸல்) அவர்கள் விட்டதேயில்லை. அவை ஸுப்ஹுத் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள், அஸர் தொழுகைக்குப் பின் இரண்டு ரக்அத்கள்.

நேரம் சென்ற பிறகும் பாங்கு சொல்வது.

364. அபூ கதாதா(ரலி) அறிவித்தார். நாங்கள் இரண்டு இரவு நபி(ஸல்) அவர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது சிலர் 'இறைத்தூதர் அவர்களே! எங்களைச் சற்று இளைப்பாறச் செய்யலாமே!'' என்று கேட்டனர். 'நீங்கள் தொழுகையைவிட்டும் உறங்கி விடுவீர்களோ என அஞ்சுகிறேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது பிலால் 'நான் உங்களை எழுப்பி விடுகிறேன்' என்று கூறியதும் அனைவரும் படுத்தனர். பிலால்(ரலி) தம் முதுகைத் தம் கூடாரத்தின் பால் சாய்த்தார். அவரையும் மீறி உறங்கிவிட்டார். சூரியனின் ஒரு பகுதி உதித்த பின்பே நபி(ஸல்) அவர்கள் விழித்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'பிலாலே! நீர் சொன்னது என்னவாயிற்று?' என்று கேட்டார்கள். 'இது போன்ற தூக்கம் எனக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை' என்று பிலால்(ரலி) கூறினார். 'நிச்சயமாக இறைவன் உங்கள் உயிர்களை அவன் விரும்பியபோது கைப்பற்றிக் கொள்கிறான்; அவன் விரும்பியபோது திரும்பவும் ஒப்படைக்கிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு (பிலாலை நோக்கி) 'பிலாலே! எழுந்து தொகைக்கு பாங்கு சொல்வீராக!'' என்றார்கள். (பின்னர்) உளூச் செய்துவிட்டுச் சூரியன் உயர்ந்து பிரகாசம் ஏற்பட்டபோது தொழுதார்கள்.

தொழுகை நேரம் முடிந்த பிறகு மக்களுக்கு ஜமாஅத் தொழுகை நடத்துவது.

365. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். அகழ்ப்போரின்போது சூரியன் மறைந்த பின் உமர்(ரலி) குரை»க் இறைமறுப்பாளர்களை ஏசிக் கொண்டே வந்து 'இறைத்தூதர் அவர்களே! சூரியன் மறையும் வரை நான் அஸர் தொழவில்லையே' என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக நானும் அஸர் தொழவில்லை'' என்று கூறினார்கள். நாங்கள் 'புத்ஹான்' எனும் பள்ளத்தாக்கை நோக்கிச் சென்றோம். நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுகைக்காக உளூச் செய்தார்கள். நாங்களும் அதற்காக உளூச் செய்தோம். சூரியன் மறைந்த பின் அஸர் தொழுதார்கள். அதன் பின்னர் மக்ரிப் தொழுதார்கள்.

ஒரு தொழுகையை ஒருவன் மறந்துவிட்டால் நினைவு வந்ததும் அதைத் தொழ வேண்டும். அந்தத் தொழுகையைத் தவிர (கூடுதலாக) வேறு எதையும் தொழ வேண்டியதில்லை.

366. ''யாரேனும் ஒரு தொழுகையை மறந்துவிட்டால் நினைவு வந்ததும் அவர் அதைத் தொழட்டும்! இதைத் தவிர அதற்கு வேறு பரிகாரம் எதுவுமில்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''என்னைத் தியானிப்பதற்காகத் தொழுகையை நிலை நிறுத்துவீராக'' (திருக்குர்ஆன் 20:14) என்ற வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.

367. 'நாங்கள் ஓர் இரவு நபி(ஸல்) அவர்களை எதிர்பார்த்துக கொண்டிருந்தோம். பாதி இரவாகும்போது நபி(ஸல்) அவர்கள் வந்து எங்களுக்கு (இஷா) தொழுகை நடத்தினார்கள். பிறகு எங்களுக்குச் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். 'அறிந்து கொள்க! மக்களெல்லாம் தொழுதுவிட்டு உறங்கிவிட்டனர். தொழுகையை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் வரை நீங்கள் தொழுகையிலே இருக்கிறீர்கள்'' என்றும் குறிப்பிட்டார்கள். இதை அனஸ்(ரலி) அறிவித்ததாக ஹஸன் குறிப்பிட்டார். 'நன்மையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் மக்கள் நன்மையிலே இருக்கின்றனர்' என்றும் ஹஸன் குறிப்பிட்டார்.

368. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தம் கடைசிக் காலத்தில் இஷாத் தொழுகை நடத்தினார்கள். ஸலாம் கொடுத்ததும் நபி(ஸல்) அவர்கள் எழுந்து 'இந்த இரவைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? (இன்றிலிருந்து) நூறாம் ஆண்டின் துவக்கத்தில் இன்று பூமியில் இருக்கும் எவரும் எஞ்சியிருக்க மாட்டார்கள்'' என்று குறிப்பிட்டார்கள். நூறு ஆண்டுகளுக்குப் பின் நடப்பது பற்றி (உலகம் அழிந்து விடுமோ என்று) தவறான முறையில் மக்கள் விளங்கினர். நபி(ஸல்) அவர்கள் கூறியது இன்று பூமியில் இருப்பவர்களில் எவரும் நூறு ஆண்டுகளுக்குப் பின் இருக்க மாட்டார்கள் என்பதைத் தான். இதன் மூலம் அன்று இருந்த சமுதாயம் நூறு ஆண்டுகளுக்குள் முடிந்து போவர் என்பதையே நபி(ஸல்) அவர்கள் கருதினார்கள்.

விருந்தினருடனும் குடும்பத்தினருடன் இரவில் பேசிக் கொண்டிருத்தல்.

369. அப்துர்ரஹ்மான் இப்னு அபீ பக்ரு(ரலி) அறிவித்தார். திண்ணைத் தோழர்கள் ஏழ்மை வயப்பட்ட மனிதர்களாக இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் 'இருவருக்குரிய உணவு யாரிடம் உள்ளதோ அவர் மூன்றாமவ(ராக திண்ணைத் தோழர் ஒருவ)ரை அழைத்துச செல்லட்டும்! நான்கு பேருக்குரிய உணவு இருந்தால் ஐந்தாவது, ஆறாவது நபர்களாக திண்ணைத் தோழர்களை அழைத்துச் செல்லட்டும்!' எனக் கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) மூன்று நபர்களை அழைத்துச் சென்றனர். நபி(ஸல்) அவர்கள் பத்து நபர்களை அழைத்துச் சென்றனர். (வீட்டில்) நானும் என் தந்தை (அபூ பக்ரும்) தாயும் என்னுடைய வீட்டிற்கும் (என் தந்தை) அபூ பக்ருடைய வீட்டிற்கும் கூட்டாகப் பணி செய்து வரும் வேலையாளும இருந்தோம் என் மனைவியும் என்று அவர் குறிப்பிட்டாரா இல்லையா என்று அடுத்த அறிவிப்பாளர் சந்தேகம் தெரிவிக்கிறார்.அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களுடன் இரவு உணவு அருந்திவிட்டு, இஷாத் தொழும் வரை அங்கேயே தங்கிவிட்டு இரவில் அல்லாஹ் நாடிய அளவு கழிந்த பின் (வீட்டிற்கு) வந்தனர்.'உங்கள் விருந்தினரைவிட்டுவிட்டு எங்கே தங்கி விட்டீர்?' என்று அவர்களின் மனைவி கேட்டனர். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'அவர்களுக்கு இன்னும் நீ இரவு உணவு அளிக்கவில்லையா?' என்று திருப்பிக் கேட்டார்கள். 'உணவை முன் வைத்த பின்பும் நீங்கள் வருவது வரை அவர்கள் உண்ண மறுத்துவிட்டனர்' என்று மனைவி கூறினார். (என் தந்தை கோபிப்பார் என்பதை அறிந்த) நான் சென்று ஒளிந்து கொண்டேன்.

'அறிவிலியே!' 'மூக்கறுபடுவாய்!' என ஏசினார்கள். பிறகு மகிழ்வற்ற நிலையில் 'சாப்பிடுங்கள்! அல்லாஹ்வின் மேல் ஆணையாக ஒருபோதும் நான் சாப்பிட மாட்டோம்' என்று (தம் குடும்பத்தினரை நோக்கிக்) கூறினார்கள்.நாங்கள் உணவின் ஒவ்வொரு கவளத்தையும் எடுத்துச் சாப்பிடும்போது அதன் அடிப்புறத்திலிருந்து அதை விட அதிகமாக வளர்ந்து கொண்டே இருந்தது. அனைவரும் வயிறு நிரம்ப உண்டார்கள். அதற்கு முன்னிருந்ததை விட உணவு அதிகமாக இருந்தது. முன்பிருந்த அளவு அல்லது அதை விட அதிகமாக உணவு இருப்பதைக் கண்ட அபூ பக்ரு(ரலி) 'பனூ ஃபிராஸ் சகோதரியே! இது என்ன?' என்று (தம் மனைவியிடம்) வினவினார்கள்.அதற்கவர் 'என் கண் குளிர்ச்சியின் மேல் ஆணை! இதன் காரணம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் முன்பிருந்ததை விட மூன்று மடங்கு இப்போது அதிகமாக உணவு உள்ளது என்றார். பிறகு அபூ பக்ரும் சாப்பிட்டார்கள். சாப்பிட மாட்டேன் என்று சத்தியம் செய்தது ஷைத்தானிடமிருந்து ஏற்பட்டுவிட்டது ஒரு கவளத்தை எடுத்து உண்டார்கள். பின்பு நபி(ஸல்) அவர்களிடம் எஞ்சிய உணவை எடுத்துச் சென்றார்கள். காலை வரை அது அங்கேயே இருந்தது.

எங்களுக்கும் ஒரு கூட்டத்தினருக்குமிடையே உடன் படிக்கை ஒன்று இருந்தது. அந்தக் கெடு முடிந்துவிட்டது. (அது சம்பந்தமாக நபி(ஸல்) அவர்களிடம் வந்திருந்தவர்களை) பன்னிரெண்டு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு தலைவரின் கீழ் அமைத்தோம். அவர்களில் ஒவ்வொருவருடனும் எத்தனை பேர் இருந்தனர் என்பதை அல்லாஹ்வே அறிவான். அவர்கள் அனைவரும் அந்த உணவிலிருந்து சாப்பிட்டார்கள்.

0 comments:

Post a Comment