Tuesday 1 December 2009

[பாடம்-76] சத்தியங்களும் நேர்த்திகடன்களும்.

சத்தியத்தை முறித்தால்...

2142. அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்), 'அப்துர் ரஹ்மான் இப்னு சமுராவே! ஆட்சிப் பொறுப்பை நீயாக (ஆசைப்பட்டு)க் கேட்காதே! ஏனெனில், (நீ) கேட்டதால் அது உனக்கு அளிக்கப்பட்டால் அதோடு நீ (தனிமையில்) விடப்படுவாய். (இறைவனின் உதவி கிட்டாது.) கேட்காமல் அது உனக்கு அளிக்கப்பட்டால் அது தொடர்பாக உனக்கு (இறைவனின்) உதவி அளிக்கப்படும். நீ ஒரு சத்தியம் செய்து, அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாக நீ கருதினால் உன்னுடைய சத்தியத்(தை முறித்துவிட்டு முறித்த)துக்கான பரிகாரத்தைச் செய்துவிடு. சிறந்தது எதுவோ அதைச் செயல்படுத்து'' என்றார்கள்.

2143. நாம்தாம் மறுமை நாளில் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் (அந்தஸ்தால்) முந்தியவர்களாகவும் இருப்போம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். மேலும் அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் ஒருவர் தம் குடும்பத்தார் (துன்புறும் வகையில் அவர்கள்) தொடர்பாகத் தாம் செய்த சத்தியத்தில் பிடிவாதமாக இருப்பது, (அந்தச் சத்தியத்தை முறித்துவிட்டு) அதற்காக அவரின் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ள பரிகாரத்தைச் செய்வதைவிடப் பெரும் பாவமாகும் என்று கூறினார்கள் என அபூஹூரைரா (ரலி) அறிவித்தார்.

2144. அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம்(ரலி) அறிவித்தார் : இரண்டு பேர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு வழக்கைக் கொண்டு வந்தனர். அவர்களில் ஒருவர், 'எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்'' என்று கூறினார். அவர்கள் இருவரில் விவரம் தெரிந்தவரான மற்றொருவர் 'ஆம். இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் சட்டப்படி எங்களுக்கிடையே தீர்ப்பளியுங்கள்! என்னைப் பேச அனுமதியுங்கள்'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'பேசுங்கள்'' என்றார்கள். அந்த மனிதர், 'என் மகன் இவரிடம் 'அஸீஃப்' ஆக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். 'அஸீஃப் என்பதற்குக் 'கூலியாள்' என்று பொருள் என மாலிக்(ரஹ்) அவர்கள் கூறினார்கள். (அப்போது) இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். எனவே, மக்கள் என்னிடம், 'உன் மகனுக்குக் கல்லெறி தண்டனை உண்டு'' என்று கூறினர். ஆனால், நான் அவனுக்காக நூறு ஒட்டகங்களையும் ஓர் அடிமைப் பெண்ணையும் பிணைத் தொகையாக வழங்கினேன். பிறகு நான் அறிஞர்களிடம் (இது குறித்துக்) கேட்டேன். அவர்கள், '(திருமணமாகாத நிலையில் விபசாரம் புரிந்துவிட்ட) என் மகனுக்கு நூறு கசையடிகள் கொடுக்க வேண்டும் என்றும், ஓராண்டுக் காலத்திற்கு அவனை நாடு கடத்த வேண்டும் என்றும், கல்லெறி தண்டனை (விபசாரம் புரிந்த) அவரின் மனைவிக்குத்தான் என்றும் தெரிவித்தார்கள்'' என்றார். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன்: 'உங்கள் ஆடுகளும் அடிமைப் பெண்ணும் உங்களிடமே திருப்பித் தரப்படும்'' என்று கூறிவிட்டு, அவரின் மகனுக்கு நூறு கசையடிகள் வழங்கச் செய்து ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தவும் செய்தார்கள். மேலும், உனைஸ் அல்அஸ்லமீ(ரலி) அவர்கள் அந்த நபரின் மனைவியிடம் சென்று, அவள் குற்றத்தை ஒப்புக்கொண்டால் அவளுக்குக் கல்லடி தண்டனை வழங்கிடுமாறு உத்தரவிடப்பட்டார்கள். அவ்வாறே, (உனைஸ் அப்பெண்ணிடம் சென்றார்.) அவள் குற்றத்தை ஒப்புக்கொண்டார். எனவே, அவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்கினார்.

2145. அபூ தர்(ரலி) அறிவித்தார் : நான் நபி(ஸல்) அவர்களிடம் போய்ச் சேர்ந்தேன். அப்போது அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் நிழலில் இருந்தவாறு, 'கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக! அவர்கள் நஷ்டவாளிகள். கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக அவர்கள் நஷ்டவாளிகள் என்று சொல்லத் தொடங்கினார்கள். நான், 'என் நிலை என்ன? என் தொடர்பாக அவர்களுக்கு ஏதேனும் காட்டப்படுகிறதா? (அப்படியானால்) என் நிலை என்னாவது?' என்று (மனத்துக்குள்) சொல்லிக்கொண்டே அவர்கள் அருகில் அமர்ந்தேன். அப்போது நபியவர்கள் 'என்னால் பேசாமலிருக்க இயலவில்லை. அல்லாஹ் நாடிய ஏதோ ஒன்று என்னைச் சூழ்ந்து கொண்டது'' என்று கூறினார்கள். உடனே நான் 'என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அவர்கள் யார், இறைத்தூதர் அவர்களே?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'அதிகச் செல்வம் படைத்தவர்கள். ஆனால் (நல்வழியில் செல்வத்தைச் செலவிட்ட) சிலரைத் தவிர'' என்று கூறியவாறு இவ்வாறு இவ்வாறு இவ்வாறு (என்று தம் பக்கம் வலப் பக்கம் இடப் பக்கம்) கைகளால் சைகை செய்தார்கள்.

2146. ஒரு முஸ்லிமுடைய மக்களில் மூவர் (பருவ வயதுக்கு முன்பே) இறந்தால், (தந்தையான) அவரை நரகம் தீண்டாது. ('உங்களில் யாரும் நரகத்தைக் கடக்காமல் செல்ல முடியாது' என்று அல்லாஹ் செய்துள்ள) சத்தியத்தைச் செயல்படுத்துவதற்காக (நரகத்தின் வழியே செல்வதை)த் தவிர என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

மறந்து சத்தியத்தை முறித்துவிட்டால்...?

2147. என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை, அவர்கள் அதன்படி செயல்படாதவரை, அல்லது அதை (வெளிப்படுத்தி)ப் பேசாதவரை அல்லாஹ் (அவற்றுக்குத் தண்டனை வழங்குவதில்லை) மன்னித்து விடுகிறான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறைவனுக்கு வழிப்படுவதில் தான் நேர்த்திக்கடன்.

2148. அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் (அதை நிறைவேற்றும் (முகமாக) அவனுக்கு அவர் வழிப்படட்டும்! அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக ஒருவர் நேர்ந்துகொண்டால் (அதை நிறைவேற்றுவதற்காக) அவனுக்கு அவர் மாறு செய்திட வேண்டாம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நேர்த்திக்கடன் உள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் (அவருக்காக மற்றவர்கள் அதை நிறைவேற்ற வேண்டுமா?)

2149. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் : ஸஅத் இப்னு உபாதா அல் அன்சாரி(ரலி) அவர்கள், நேர்ந்துகொண்டு அதை நிறைவேற்றுவதற்கு முன்பே இறந்துவிட்ட தம் தாயின் நேர்த்திக்கடன் குறித்து நபி(ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், அவர் தம் தாயாருக்காக நேர்த்திக்கடனை நிறைவேற்றிடுமாறு தீர்ப்பளித்தார்கள். அதுவே பின்னர் வழிமுறையாக ஆகிவிட்டது.

தமக்கு உடைமையில்லாத ஒன்றிலும் பாவச் செயலிலும் ஒருவர் நேர்ந்துகொள்வது (கூடாது.)

2150. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் (வெள்ளிக்கிழமை) உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருவர் (வெயிலில்) நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர் குறித்து (மக்களிடம்) கேட்டார்கள். மக்கள், '(இவர் பெயர்) அபூ இஸ்ராயீல். இவர், நின்று கொண்டே இருப்பேன்; உட்காரமாட்டேன் என்றும், நிழலில் ஒதுங்கமாட்டேன் (வெயிலில் தான் இருப்பேன்) என்றும், (யாரிடமும்) பேசமாட்டேன்; நோன்பு நோற்பேன் என்றும் நேர்ந்து கொண்டுள்ளார்'' என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், 'அவருக்கு உத்தரவிடுங்கள்: அவர் பேசட்டும். நிழல் பெறட்டும். உட்காரட்டும் நோன்பை (மட்டும்) நிறைவு செய்யட்டும்'' என்றார்கள். மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

0 comments:

Post a Comment