Friday 18 December 2009

[பாடம்-85] தீர்ப்புகள்.

இறைவனுக்கு மாறு செய்வதாக அமையாதவரை ஆட்சித் தலைவரின் சொல்லைக் கேட்டுக் கீழ்ப்படிவது (அவசியமாகும்).

2199. உலர்ந்த திராட்சை போன்ற (சுருங்கிய) தலையுடைய அபிசீனிய (கறுப்பு நிற) அடிமையொருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் (அவரின் சொல்லைக்) கேளுங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.

ஆட்சியதிகாரத்தை அடைய ஆசைப்படுவது வெறுக்கப்பட்டதாகும்.

2200. நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை (தாம் சுகங்)களிலேயே பதவி(ப் பால்) தான் இன்பமானது. பாலை மறக்க வைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி(ப் பாலை நிறுத்துவது)தான் மோசமானது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

குடிமக்களின் பொறுப்பு அளிக்கப்பெற்ற ஒருவர், அவர்களுக்கு நலம் நாடவில்லை என்றால்...?

2201. ஹஸன் அல்பஸ்ரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : (நபித் தோழர்) மஅகில் இப்னு யஸார்(ரலி) அவர்கள் இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அன்னாரை(ச் சந்தித்து) நலம் விசாரிப்பதற்காக (அன்றைய பஸ்ரா நகர ஆட்சியர்) உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் சென்றார். அவரிடம் மஅகில்(ரலி) அவர்கள் 'நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன். நபி(ஸல்) அவர்கள், 'ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களின் நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக் கூட அவன் பெறமாட்டான்' என்று சொல்ல கேட்டேன்'' எனக் கூறினார்கள்.

2202. ஹஸன் அல்பஸ்ரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : நாங்கள் மஅகில் இப்னு யஸார்(ரலி) அவர்களை நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது (பஸ்ராவின் ஆட்சியர்) உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் உள்ளே வந்தார். அவரிடம் மஅகில்(ரலி) அவர்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன் என்று சொல்லிவிட்டு(ப் பின்வருமாறு) கூறினார்கள்: 'முஸ்லிம் குடிமக்களின் நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் ஒருவர் அவர்களுக்கு மோசடி செய்த நிலையில் இறந்துவிடுவாரனால், சொர்க்கத்தை அவருக்கு அல்லாஹ் தடை செய்துவிடுகிறான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(மக்களை) சிரமப்படுத்துகிறவரை அல்லாஹ் சிரமத்திற்குள்ளாக்குவான்.

2203. தரீஃப் அபீ தமீமா இப்னு முஜாலித் அல்ஹுஜைமீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்: ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ் அல்பஜலீ(ரலி) அவர்கள், ஸஃப்வான் இப்னு முஹ்ரிஸ்(ரஹ்) அவர்களுக்கும் அவர்களின் தோழர்களுக்கும் உபதேசம் செய்துகொண்டிருந்த இடத்தில் நான் இருந்தேன். அப்போது ஸஃப்வானும் அவர்களின் தோழர்களும், 'நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து (ஹதீஸ்) எவையேனும் செவியுற்றீர்களா?' என்று கேட்க ஜுன்தப்(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூற கேட்டேன் என்றார்கள்: விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறவரை (அவரின் நோக்கத்தை) அல்லாஹ் மறுமைநாளில் விளம்பரப்படுத்துவான். (மக்களைச்) சிரமப்படுத்துகிறவரை அல்லாஹ் மறுமைநாளில் சிரமத்திற்குள்ளாக்குவான். அப்போது நண்பர்கள் 'எங்களுக்கு உபதேசம் செய்யுங்கள்'' என்று கேட்க, ஜுன்தப்(ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: (இறந்த பிறகு) மனிதனின் உறுப்புகளிலேயே முதல்முதலாக (அழுகி) துர்நாற்றமெடுப்பது அவனுடைய வயிறுதான். எனவே, (அனுமதிக்கப்பட்ட) நல்ல உணவை மட்டுமே உண்ண சக்தி படைத்தவர் அவ்வாறே செய்யட்டும். (அநியாயமாகத்) தம்மால் சிந்தப்பட்ட கையளவு இரத்தம், தாம் சொர்க்கம் செல்வதிலிருந்து தடுக்காமல் இருக்கும்படி செய்ய முடிந்தவர் அவ்வாறே செய்யட்டும்.

நீதிபதி கோபமாக இருக்கும்போது தீர்ப்போ மார்க்க விளக்கமோ அளிக்கலாமா?

2204. அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ரா(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : (என் தந்தை) அபூ பக்ரா(ரலி) அவர்கள் தம் புதல்(வரும் என் சகோதரருமான உபைதுல்லாஹ் என்ப)வருக்குக் கடிதம் எழுதினார்கள். -அவர் (ஈரான் - ஆப்கன் எல்லையிலிருந்த) சிஜிஸ்தான் பகுதியில் (நீதிபதியாக) இருந்தார். 'நீ கோபமாக இருக்கும்போது இருவரிடையே தீர்ப்பளிக்க வேண்டாம். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், நீதிபதி எவரும் கோபமாக இருக்கும்போது இருவருக்கிடையே தீர்ப்பளிக்க வேண்டாம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்'' (என்று அக்கடிதத்தில் எழுதினார்கள்).

ஆட்சித் தலைவர் ஆளுநர்களுக்கும், நீதிபதி சட்ட ஒழுங்கு அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதுவது.

2205. ஸஹ்ல் இப்னு அபீ ஹஸ்மா(ரலி) அவர்களும் அவர்களின் சமூகத்தைச் சேர்ந்த சில பிரமுகர்களும் அறிவித்தார்கள் : அப்துல்லாஹ் இப்னு ஸஹ்ல்(ரலி) அவர்களும் முஹய்யிஸா இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களும் தங்களுக்கு ஏற்பட்டிருந்த கடுமையான வறுமையின் காரணத்தால் (பேரீச்சங் கனிகள் பறிப்பதற்காக) கைபரை நோக்கிப் புறப்பட்டனர். (வழியில் இருவரும் பிரிந்து விட்டனர்.) அப்போது 'அப்துல்லாஹ் இப்னு ஸஹ்ல்(ரலி) அவர்கள் கொல்லப்பட்டு ஒரு 'குழியில் அல்லது 'நீர்நிலையில்' போடப்பட்டு விட்டார்'' என்ற செய்தி முஹய்யிஸா(ரலி) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. எனவே, முஹய்யிஸா(ரலி) அவர்கள் (அப்பகுதி மக்களான) யூதர்களிடம் சென்று, 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள்தாம் அவரைக் கொன்று விட்டீர்கள்'' என்று கூறினார்கள். அதற்கு யூதர்கள், 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவரை நாங்கள் கொல்லவில்லை'' என்றார்கள். பிறகு முஹய்யிஸா(ரலி) அவர்கள் தம் சமூகத்தாரிடம் சென்று (அதைப்பற்றி) அவர்களிடம் சொன்னார்கள். பின்னர் அவரும் அவரின் சகோதரர் ஹுவய்யிஸா(ரலி) அவர்களும் - இவர் வயதில் மூத்தவர் (கொல்லப்பட்டவரின் சகோதரரான) அப்துர் ரஹ்மான் இப்னு ஸஹ்ல்(ரலி) அவர்களும் (இறைத்தூதர்(ஸல்) அவர்களை) நோக்கி வந்தனர். உடனே கைபரில் (இறந்தவருடன்) இருந்த முஹய்யிஸா(ரலி) அவர்கள் (முந்திக்கொண்டு அல்லாஹ்வின் தூதரிடம்) பேசப்போனார். அப்போது நபி(ஸல்) அவர்கள், முஹய்யிஸா(ரலி) அவர்களிடம், 'வயதில் மூத்தவரை (முதலில்) பேசவிடு; என்றார்கள். எனவே, ஹுவய்யிஸா(ரலி) அவர்கள் பேசினார்கள். பிறகு (இளையவரான) முஹய்யிஸா(ரலி) அவர்கள் பேசினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஒன்று உங்களுடைய நண்பருக்கான இழப்பீட்டுத் தொகையை அவர்கள் (யூதர்கள்) வழங்கட்டும்; அல்லது (எம்முடன் போரிட) அவர்கள் போர் பிரகடனம் செய்யட்டும்'' என்று கூறினார்கள். பிறகு இ(ந்தக் கருத்)தைக் குறிப்பிட்டு யூதர்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கடிதம் எழுதினார்கள். 'நாங்கள் அவரைக் கொல்லவில்லை'' என்று (யூதர்கள் தரப்பிலிருந்து பதில் கடிதம்) எழுதப்பட்டது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹுவய்யிஸா(ரலி), முஹய்யிஸா(ரலி) மற்றும் அப்துர் ரஹ்மான் இப்னு சஹ்ல்(ரலி) ஆகியோரிடம், '(யூதர்கள் தாம் கொலை செய்தார்கள் என்று) நீங்கள் சத்தியம் செய்துவிட்டு, உங்கள் நண்பருக்கான உயிரீட்டுத் தொகையைப் பெறுகிறீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் 'இல்லை (நாங்கள் சத்தியம் செய்யமாட்டோம்)'' என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், 'அவ்வாறாயின் (தாங்கள் அவரைக் கொல்லவில்லை என்று) யூதர்கள் உங்களிடம் சத்தியம் செய்யட்டுமா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் (மூவரும்), 'யூதர்கள் முஸ்லிம்கள் இல்லையே! (பொய்ச் சத்தியம் செய்யவும் அவர்கள் தயங்க மாட்டார்களே)'' என்று கூறினர். எனவே, கொல்லப்பட்டவருக்கான இழப்பீடாக நூறு ஒட்டகங்களை நபி(ஸல்) அவர்களே தம் தரப்பிலிருந்து வழங்கினார்கள். இறுதியில் (அவர்கள் கூடியிருந்த) அந்த வீட்டுக்குள் அந்த ஒட்டகங்கள் கொண்டுவரப்பட்டன. அப்போது அதில் ஓர் ஒட்டகம் என்னை மிதித்துவிட்டது.

ஆட்சித் தலைவர் மக்களிடம் பெறும் விசுவாசப் பிரமாண (வாசக)ம் எவ்வாறு அமையவேண்டும்?

2206. உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அவர்கள் (தொடர்ந்து) அறிவித்தார் : நாங்கள் ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களுடன் சண்டையிட மாட்டோம் என்றும், நாங்கள் எங்கிருந்தாலும் அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்பவர்களின் பழிப்புரைக்கு அஞ்சாமல் 'உண்மையே கடைப்பிடிப்போம்' அல்லது 'உண்மையே பேசுவோம்' என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம்.

2207. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் : நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (அவர்களின் கட்டளைகளைச்) செவியேற்றுக் கீழ்ப்படிந்து நடப்போம் என உறுதிமொழி (பைஅத்) அளிக்கும்போது அவர்கள், 'உங்களால் முடிந்த விஷயங்களில்'' என்று சொல்வது வழக்கம்.

ஆட்சித் தலைவர் (தமக்குப் பிறகு ஓர் ஆட்சித் தலைவரையோ, அவரைத் தேர்ந்தெடுக்கும் ஒரு குழுவையோ) நியமிப்பது.

2208. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் : உமர்(ரலி) அவர்களிடம் (அன்னார் தாக்கப்பட்டபோது) 'நீங்கள் உங்களுக்குப் பின் யாரையாவது உங்கள் பிரதிநிதியாக (ஆட்சித் தலைவராக) நியமிக்கக் கூடாதா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'நான் எவரையேனும் எனக்குப் பின் ஆட்சித் தலைவராக நியமித்தால் (அது தவறாகாது); ஏனென்றால், (எனக்கு முன்பு) என்னைவிடச் சிறந்தவரான அபூ பக்ர்(ரலி) அவர்கள் அவ்வாறு ஆட்சித் தலைவரை (என்னை) நியமித்துச் சென்றிருக்கிறார்கள். (எவரையும் ஆட்சித் தலைவராக நியமிக்காமல்) அப்படியே நான் விட்டுவிட்டாலும் (அதுவும் தவறாகாது); ஏனெனில், என்னைவிடச் சிறந்தவர்களான இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவ்விதம் தான் (யாரையும் நியமிக்காமல்) விட்டுச் சென்றிருக்கிறார்கள்'' என்றார்கள். உடனே நபித்தோழர்கள் உமர்(ரலி) அவர்களைப் பாராட்டினார்கள். அப்போது உமர்(ரலி) அவர்கள், '(என் கருத்து) பிடித்தோ பிடிக்காமலோ (என்னை நீங்கள் பாராட்டுகிறீர்கள். நான் வகித்த இந்தப் பதவி இறைவனிடம்) எனக்குச் சாதகமாகவும் வேண்டாம்; பாதகமாகவும் வேண்டாம்; சரிக்குச் சமமாக அமைந்த நிலையில் இதிலிருந்து நான் தப்பித்தாலே போதும் என்றே விரும்புகிறேன். நான் உயிரோடு இருக்கும்போது (தான் பதவியைச் சுமந்தேன் என்றால், எனக்குப் பின் ஒருவரை நியமிப்பதன் மூல)ம் இறந்த பிறகும் இதைச் சுமக்க நான் தயாராயில்லை'' என்று கூறினார்கள்.

2209. ஜாபிர் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார் : (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், 'பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் வருவார்கள்'' என்று சொல்ல கேட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், நான் (சரிவரக்) கேட்காத ஒரு சொல்லையும் சொன்னார்கள். (அது என்னவென்று விசாரித்த போது) என் தந்தை (சமுரா (ரலி) அவர்கள், 'அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள்'' என்று (நபி(ஸல்) அவர்கள்) சொன்னார்கள் எனக் கூறினார்கள்.

0 comments:

Post a Comment