Monday 7 December 2009

[பாடம்-79] குற்றவியல் தண்டனைகள்.

பேரீச்ச மட்டையாலும் காலணியாலும் (குடிகாரரை) அடித்தல்.

2159. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : மது அருந்திய ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டபோது அவர்கள் 'இவரை அடியுங்கள்'' என்றார்கள். எங்களில் சிலர் கையால் அடித்தனர். சிலர் காலணியால் அடித்தனர். இன்னும் சிலர் (முறுக்கப்பட்ட) தம் துணியால் அடித்தனர். (தண்டனை முடிந்து அவர்) திரும்பியபோது மக்களில் சிலர், அல்லாஹ் உம்மைக் கேவலப்படுத்துவானாக!'' என்று கூறி (சாபமிட்ட)னர். நபி(ஸல்) அவர்கள், 'இவ்வாறு கூறி, இவருக்கெதிராக ஷைத்தானுக்கு ஒத்தாசை செய்யாதீர்கள்'' என்றார்கள்.

2160. அலீபின் அபீ தாலிப்(ரலி) அறிவித்தார் : நான் தண்டனை நிறைவேற்றியதால் எவரேனும் இறந்தால் (அதற்காக) நான் கவலை அடையப் போவதில்லை. குடிகாரரைத் தவிர! ஏனெனில், (தண்டனை வழங்கப்பட்டதால்) குடிகாரர் இறந்தால் அவருக்காக நான் உயிரீட்டுத் தொகை வழங்கிடுவேன். இதற்குக் காரணம், (மது அருந்தியவனுக்குத் தண்டனையாக) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (குறிப்பிட்ட எதையும்) வழிமுறையாக்கவில்லை.

குடிகாரணை சபிப்பது வெறுக்கப்பட்டதாகும். மேலும், அவன் மார்க்கத்திலிருந்து வெளியேறியவன் அல்லன்.

2161. உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் 'அப்துல்லாஹ்' என்றொருவர் இருந்தார். அவர் 'ஹிமார்' (கழுதை) என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்டு வந்தார். அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களை சிரிக்க வைப்பார். மது அருந்தியதற்காக அவரை நபி(ஸல்) அவர்கள் அடித்துள்ளார்கள். (போதையிலிருந்த) அவர் ஒருநாள் (நபி(ஸல்) அவர்களிடம்) கொண்டு வரப்பட்டார். அவரை அடிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர் அடிக்கப்பட்டார். அப்போது (அங்கிருந்த) மக்களில் ஒருவர், 'இறைவா! இவர் மீது உன் சாபம் ஏற்படட்டும்! இவர் (குடித்ததற்காக) எத்தனை முறை கொண்டு வரப்பட்டுள்ளார்!'' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இவரை சபிக்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார் என்றே நான் அறிந்துள்ளேன்'' என்று கூறினார்கள்.

திருடனைப் பெயர் குறிப்பிடாமல் (பொதுவாக) சபித்தல்.

2162. அல்லாஹ்வின் சாபம் திருடன் மீது ஏற்படட்டும்! அவன் (விலை மதிப்புள்ள) தலைக்கவசத்தைத் திருடுகிறான்; அதனால் அவனுடைய கை வெட்டப்படுகிறது. (விலை மலிவான) கயிற்றையும் அவன் திருடுகிறான்; அதனாலும் அவனுடைய கை துண்டிக்கப்படுகிறது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அஃமஷ்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 'தலைக்கவசம்' என்பது இரும்பாலான தலைக்கவசத்தையும் 'கயிறு' என்பது ஒரு சில திர்ஹம்கள் (வெள்ளிக்காசுகள்) பெறுமானமுள்ள கயிற்றையும் குறிக்கும் என்று (இதன் அறிவிப்பாளர்கள்) கருதுகிறார்கள்.

''திருடிய ஆண், திருடிய பெண் ஆகியோரின் கரங்களைத் துண்டித்து விடுங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 05:38 வது) வசனத் தொடரும், எந்த அளவு திருடினால் (கை) வெட்ட வேண்டும்? என்பது பற்றியும்.

2163. கால் தீனார்(பொற் காசு), அல்லது அதற்கு மேல் திருடியதற்காகக் கை வெட்டப்படும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார். இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

2164. ஆயிஷா(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்களின் காலத்தில் 'தோல் கேடயம்' அல்லது 'தோல் கவசத்தின்' விலை (மதிப்புள்ள பொருளு)க்காகவே தவிர, திருடனின் கை துண்டிக்கப்பட்டதில்லை. இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

2165. இப்னு உமர்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் மூன்று திர்ஹங்கள் (வெள்ளிக்காசுகள்) விலைமதிப்புள்ள தோல் கேடயத்திற்காக (அதைத் திருடியவரின் கரத்தை)த் துண்டித்தார்கள்.

0 comments:

Post a Comment